Wednesday 14 May 2014

ஆதிசங்கரர் இறைமறுப்பாளரல்ல- அவர் உலக மறுப்பாளர்

       ஆதிசங்கரரை இறைமறுப்பாளர் என்று கூறுவது தவறாகும்.

      ஆதிசங்கரரை இறைமறுப்பாளர் என்றுரைப்பதை, மார்க்சிய விளக்கமாக கூறுவது அபத்தமானதாகும்.

      ஆதிசங்கரர் கடவுளை (பிரம்மத்தை) அகத்தில் கண்டவர், அவரது தத்துவமான அத்வைதம் அகநிலைக் கருத்துமுதல்வாதமாகும்.

      துவைதம் கடவுளை (பிரம்மத்தை) புறத்தில் காண்கிறது. அதனால் துவைதத்தின் தத்துவம் புறநிலை கருத்துமுதல்வாதமாகும்.

      தோழர் இ.எம்.எஸ் போன்றோர்கள் கூறுகின்ற, கடவுளை மறுக்கின்ற வகையில் பொருள்படும்படும் அளவுக்கு ஆதிசங்கரர் பிரம்மம் பற்றிய தன்னுடைய போதனையை வளர்த்தார் என்ற வாதம் ஆதிசங்கரரின் கருத்துக்குப் புறம்பானதாகும்

      ஆதிசங்கரரை இறைமறுப்பாளராக பார்ப்பது, அத்வைதத்தின் கருத்துமுதல்வாதத் தன்மையை புரிந்து கொள்ளாமையின் வெளிப்பாடாகும்.

      ஆதிசங்கரர் புறஉலகை மறுத்து, அதனை மாயை என்கிறார். கடவுளை (பிரம்மத்தை) மறுக்கவில்லை. தத்துவமசி -நீயே அது- அதாவது நீயே பிரம்மம் (கடவுள்) என்ற கோட்பாட்டை வலியுறுத்துகிறார். இது எப்படி கடவுள் மறுப்பாகும். மனிதனில் இருந்து அப்பால் பிரம்மத்தை (கடவுளை) காண்கிற போக்கை மறுத்து, அந்த பிரம்மத்தை (கடவுளை) அகத்தில் காணவேண்டும் என்றார்.

ஆதிசங்கரர் தமது விவேகசூடாமணி என்ற நூலின், பாடல் 252ல் கூறுகிறார்:-
"உறக்கத்தில் கற்பிக்கப்பட்ட இடம், காலம், பொருள், அறிபவன் முதலிய எல்லாம் எங்ஙனம் பொய்யோ அங்ஙனமே இங்கும் விழிப்பு நிலையில் உலகு உனது அஞ்ஞானத்தால் ஆக்கட்டிருப்பதால்-பொய்யே.

எக்காரணத்தால் இந்த உடல், இந்திரியங்கள், பிராணன், அகங்காரம் முதலியவையும் பொய்யோ அக்காரணத்தால் அமைதி நிறைந்ததும் மாசற்றதும் இரண்டற்றதுமான எந்த பொருளுண்டோ -தத்துவமசி- அதுவாக நீ உளாய்"

ஆதிசங்கரர் பிரம்மம் உண்மையானது உலகம் பொய்யானது என்கிறார். இதுவே அவரது அத்வைதத்தின் அடிப்படை. 20வது பாடலில் அவர் கூறுகிறார், “பிரம்மம் மெய் உலகம் பொய் (பிரம்மம் சத்தியம் ஜகத் மித்யா) என்றிவ்வடிவான திடமான நிச்சய புத்தி எதுவோ அந்த நிச்சய புத்தி நித்யா நித்ய வஸ்து விவேகம் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது

86வது பாடல், உடல், மனைவி, மக்கள் ஆகியவற்றில் மதிமயக்கமாகிற கொடிய எமனை வெல்லுவாயாக. அவனை வென்றே முனிவர்கள் விஷ்ணுவின் பரமபதம் எனப்படும் அந்நிலைமை அடைகிறார்கள்

415வது பாடல், கற்பனையற்றதும் என்றுமுள்ள இயல்புடைய ஆத்மாவாவதுமான பிரம்மாகிய அக்கினியில், இந்தப் பிரபஞ்சத்தை வேருடன் நன்கு எரித்துவிட்டு பிறகு சிறந்த ஞானியானவன் தான் தானாகவே என்றும் பரிசுத்த அறிவு வடிவினனும் ஆனந்த வடிவின்னுமாய் நிலை பெற்று நிற்கிறான்.

246வது பாடல், "இந்த ஸ்தூல பிரபஞ்சம் உண்மையன்று, இந்த சூக்குமப் பிரபஞ்சம் உண்மையன்று, கயிறில் காணப்பட்ட பாம்பு போலும் கனவில் கண்ட காட்சிபோலும் கற்பனை செய்யப்பட்ட காரணத்தால் அவை உண்மையாகா"

இப்படி பிரபஞ்சத்தை மறுக்கின்ற அவரது கருத்தை முன்வைத்து பேசாமல், அவர் இறைமறுப்பாளர் என்றும், மார்க்சியத்துடன் அவரை முடிச்சுப்போடுவதும் வேடிக்கையான தத்துவ விவாதமாகும்.

      புறஉலகை மட்டும் ஏற்றுக் கொள்கிற மார்க்சியமும், புறவுலகை மறுக்கிற அத்வைதமும் இணைப்பதற்கு எந்த வித ஒற்றுமையும் இல்லாத நேரெதிர் துருவங்களாகும்.

      மதத்தில் கடவுள் என்று குறிப்பிடுவதும், தத்துவத்துறையில் பிரம்மம் என்று குறிப்பிடுவதும் கருத்துமுதல்வாதப் போக்கேயாகும். கடவுளும் பிரம்மமும் பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்ற அனுமானித்தில் ஒன்றுபடுகிறது.

      ஆதிசங்கரரை கடவுள் மறுப்பாளராக முன்வைக்கும் வாதங்கள், கருத்துமுதல்வாதம் மற்றும் பொருள்முதல்வாதம் பற்றிய கருத்துத் தெளிவின்மையையே வெளிப்படுத்துகிறது.

தோழர் இ.எம்.எஸ்:-
"இந்தியாவின் கருத்துமுதல்வாதப் பிரிவை, ஆதிசங்கரர், தன்னுடைய அத்வைத வேதாந்தத் தத்துவத்தைக் கொண்டு, மிக அற்புதமாக மிகவும் சாதுர்யமான நுண்ணறிவுடன் விளக்கியவராவார் (பிரம்மத்தைத் தவிர அனைத்தையும்) கடவுளையும் கூட மறுக்கின்ற வகையில் பொருள்படும் அளவிற்கு அவர் "பிரம்மம்" பற்றிய தன்னுடைய போதனைகளை வளர்த்தார்." (ஆதிசங்கரரும் அவரது தத்துவமும் ஒரு மார்க்சியப் பார்வை)

உலகத்தைப் படைத்தவராக மதம், உருவக் கடவுளைக் குறிப்பிடுகிறது.

உலகத்தைப் படைத்தவராக தத்துவம், பிரம்மம் என்ற சக்தியைக் குறிப்பிடுகிறது.

கடவுள் பிரம்மம் பற்றிய குழப்பமான கருத்தை தோழர் .எம்.எஸ் முன்வைத்துள்ளார்.

பிரம்மத்தை இறைவன் (ஈஸ்வரன்) என்று கூறுவதில் ஆதிசங்கரருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, விவேகசூடாமணியின் 232ஆம் பாடலில், "இந்த உலகு உண்மையாக இருக்குமேயானால் ஆத்மாவின் அளவற்ற தன்மைக்கு அழிவு ஏற்படும், வேதமும் பிரமாணமில்லாமல் போகும், ஈசுவரனுக்கு பொய் பேசிய குற்றம் ஏற்படும், மஹாத்மாக்களுக்கு இம்மூன்றும் நல்லதெனச் சம்மதிக்கக் கூடியவையாகா"

233ஆம் பாடலில், "பொருட்களின் உண்மை உணர்ந்தவரான பகவான் "நான் அவற்றினிடம் இருப்புடையவனும் அல்லன், மேலும் பொருட்கள் என்னிடம் இருப்புடையனவும் அல்ல" என்று இங்ஙனமே கூறியுள்ளார்". இங்கே ஆதிசங்கரர் கீதைக் கிருஷ்ணனைக் குறிப்பிடுகிறார்.

கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் பற்றியும் கதம்பமான கருத்துடையவராகவே தோழர் .எம்.எஸ் காணப்படுகிறார்.

"கருத்துமுதல்வாதமும் பொருள்முதல்வாதமும் இரு நேரெதிர் துருவங்கள் என்றும், அவை எங்கும், எப்போதும் ஒன்றையொன்று எதித்துக் கொண்டுதான் இருக்கும் என்றும் இக்கேள்வி பாவித்துக் கொள்கின்றது. யதார்த்த வாழ்விலும், மனிதனின் சிந்தனையிலும் உள்ள மற்ற எதிரிடைகளைப் போல, கருத்துமுதல்வாத மற்றும் பொருள்முதல்வாத தத்துவார்த்தப் போக்குகளும், மாயாவாத (metaphysics) ரீதியாக அல்லாமல், இயக்கவியல் ரீதியாக ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதை அது கவனிக்கத் தவறுகின்றது.

கருத்துமுதல்வாதமோ அல்லது பொருள்முதல்வாதமோ இயங்காமல் இருப்பவை அல்ல, இரண்டுமே எப்போதும் ஒன்றையொன்று மறுத்தவண்ணம் முன்னேறிக் கொண்டே இருக்கின்றன, இரண்டிற்கும் இடையில் புதுப்புது வடிவங்களில் நிகழும் போராட்டம் மனிதசிந்தனையின் வளர்ச்சி விதியாகும். ஆதலால், பொருள்முதல்வாதம் தன்னளவிலேயே கருத்துமுதல்வாதத்தை விட மேலானது அல்லது கருத்துமுதல்வாதம் தன்னளவிலேயே கீழானது என்கின்ற கேள்விக்கே இடமில்லை." (ஆதிசங்கரரும் அவரது தத்துவமும் ஒரு மார்க்சியப் பார்வை)

தோழர் இ.எம்.எஸ்-யின், பாட்டாளி வாக்கத்தின் தத்துவப் போக்கு பொருள்முதல்வாத அடிப்படையிலானது என்பதையே மறுத்திடுகிற இந்தக் குழப்பமான கருத்து, கதம்பப் போக்காக காட்சியளிக்கிறது.

எங்கெல்ஸ், கருத்துமுதல்வாதம் மற்றும் பொருள்முதல்வாதம் என்பது தமது அடிப்படை கருத்தால் இரண்டு முகாமாகப் பிரிந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறார்;-

"எது முதன்மையானது, ஆன்மாவா இயற்கையா என்னும் பிரச்சினை அப்பிரச்சினை கிறிஸ்துவத் திருச்சபையைப் பொறுத்தவரை இப்படியொரு கேள்வியாய் கூர்மையாக்கி முன்வைக்கப்பட்டது: கடவுள் உலகத்தைப் படைத்தாரா அல்லது உலகம் எப்போதுமே நிரந்தரமாக இருந்து வருகிறதா?

இந்தக் கேள்விக்குத் தத்துவவாதிகள் அளித்த பதில்கள் அவர்களை இரண்டு மாபெரும் முகாம்களாகப் பிரித்தன. இவர்களுள் இயற்கையைவிட ஆன்மாவின் முதன்மையை வலியுறுத்தி, அதன்காரணமாக, இறுதி நிலையில், ஏதோ ஒரு விதத்தில் உலகம் படைக்கப்பட்டது என்று அனுமானித்துக் கொண்டவர்கள் கருத்துமுதல்வாத முகாமைச் சேர்ந்தவர்கள். இந்த முகாமைச் சேர்ந்த தத்துவவாதிகளிடயே, எடுத்துக்காட்டாக ஹெகல் போன்றவர்களிடையே, உலகத்தின் உருவாக்கம் பற்றிய கருத்து கிறிஸ்துவ மதத்தில் இருப்பதைக் காட்டிலும் மேலும் சிக்கலானதாகவும் அபத்தமானதாகவும் இருக்கிறது. இயற்கையை முதன்மையாகக் கருதிய மற்றவர்கள் பொருள்முதல்வாத முகாமின் பல்வேறு கருத்துப்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்.

கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் என்னும் இவ்விரண்டு கூற்றுகளும் தொடக்கத்தில் இதைத் தவிர வேறு எதையும் குறிக்கவில்லை. இந்த நூலிலும் வேறு எந்தப் பொருளிலும் அவை பயன்படுத்தப்படவில்லை." (லுத்விக் ஃபாயர்பாக்கும் செவ்வியல் ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்)

அதே போல் பொருள்முதல்வாதம் ஒன்றே பாட்டாளி வர்க்கத்தின் தத்துவம் என்பதையும் அதிலிருந்து விலகிச் செல்லும ஒவ்வொரு திரிபும் மிகவும் தவறானது என்று மார்க்சும் எங்கெல்சும் கருதினர் என்பதோடு, பொருள்முதல்வாதத்தை மிகுந்த மனத்திண்மையோடு பாதுகாத்தனர் என்பதை, லெனின் சுட்டிக்காட்டுகிறார்:-
"மார்க்சும் எங்கெல்சும் தத்துவஞானப் பொருள்முதல்வ்தத்தை மிகுந்த மனத்திண்மையோடு ஆதரித்துப் பாதுகாத்தனர். இந்த அடிப்படையிலிருந்து விலகிச் செல்லும் ஒவ்வொரு திரிபும் மிகவும் தவறாயிருப்பதை அவர்கள் அடிக்கடி விளக்கி வந்தார்கள்.

எங்கெல்ஸ் எழுதிய லுத்விக் ஃபாயர்பாக், டூரிங்குக்கு மறுப்பு என்கிற நூல்களில் அவர்களுடைய கருத்துக்கள் மிகத் தெளிவாகவும் முழுமையாகவும் விரித்துரைக்கப்பட்டுள்ளன. கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை என்கிற நூலைப் போலவே இவ்விரண்டு நூல்களும் வர்க்க உணர்வு பெற்ற ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவசியமான கையேடாகும்" (மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்)

வர்க்க உணர்வு பெறுகிற மற்றும் வர்க்க உணர்வு பெற்ற பாட்டாளிகளுக்கு, அவர்கள் பொருளமுதல்வாதத்தை உறுதியாக பின்பற்றுவதற்கு கதம்பவாதம் மிகவும் கேடுவிளைவிக்கும்.

மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோர் கருத்துமுதல்வாதம் வழங்கியுள்ள பங்களிப்பை உயர்வாக மதித்தனர் என்று தவறான கருத்தை நம்முன்வைக்கிறார் தோழர் .எம்.எஸ்:-
"வரலாற்றின் மகத்தான தத்துவார்த்த கருத்துமுதல்வாதியான ஹெகலின் சீடர்களான மார்க்சையும், எங்கெல்சையும் போலவே, மனித அறிவுக்கு கருத்துமுதல்வாதம் வழங்கியுள்ள கொடையை லெனின் மிக உயர்வாக மதித்தார்" (ஆதிசங்கரரும் அவரது தத்துவமும் ஒரு மார்க்சியப் பார்வை

ஹெகலின் கருத்துமுதல்வாதத்தின் சீடராக மார்க்ஸ், தம்மை அழைத்துக் கொள்ளவில்லை. ஹெகலின் இயக்கவியலின் சீடராகவே கூறியுள்ளார். அதுவும் ஹெகலின் கருத்துமுதல்வாத மாயாவாத வடிவத்திலான இயக்கவியலை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மார்க்ஸ் ஹெகலின் இயக்கவியலைப் பற்றியும், தமது இயக்கவியல் ஹெகலின் இயக்கவியல் வழிமுறையிலிருந்து வேறுபட்டது என்பதையும் வலியுறுத்தியுள்ளார்:-
"ஹெகலிய இயக்கவியலின் மாயாவாத அமிசத்தை, சுமார் முப்பது ஆண்டுகள் முன்னரே, அது மோகத்துக்குரிய மோஸ்தராக இருந்து வந்த காலத்திலேயே, நான் கண்டன விமர்சனத்துக்குள்ளாக்கினேன்.
..
..அந்த மாபெரும சிந்தனையாளரின் மாணவன் நான் என்று பகிரங்கமாகப் பறைசாற்றினேன்,..

ஹெகலின் கையில் இயக்கவியல் மாயாவாதத் தன்மைக்கு உள்ளாகிறதென்றாலும், அதன் பொதுவான செயற்பாட்டு வடிவத்தை விரிவாகவும் உணர்வுபூர்வமாகவும் முதன்முதலாக முன்வைத்தவர் அவரே. அவரிடம் இயக்கவியல் தலைகீழாக நின்று கொண்டிருக்கிறது. மாயாவாதச் சிப்பிக்குள் மறைந்துள்ள அறிவார்ந்த முத்தைக் காண வேண்டுமானால், அதனை நேராகத் திருப்பி நிறுத்த வேண்டும்."

"எனது இயக்கவியல் வழிமுறை ஹெகலிய வழிமுறையில் இருந்து வேறுபட்டது மட்டுமன்று, அதற்கு நேர் எதிரானதுமாகும். ஹெகலுக்கு, மனித மூளையின் உயிர் நிகழ்முறையானது, அதாவது, சிந்தனை நிகழ்முறையானது- இதனை அவர் "கருத்து" என்ற பெயரில் சுயேச்சையான கர்த்தாவாகவே மாற்றி விடுகிறார்- எதார்த்த உலகத்தின் படைப்பாளி ஆகும், எதார்த்தஉலகம் "கருத்தின்" புற வடிவமே, புலப்பாட்டு வடிவமே அன்றி வேறில்லை. மாறாக எனக்கு, கருத்துலகம் என்பது மனித உள்ளத்தால் பிரதிப்பலிக்கப்பட்டு, சிந்தனை வடிவங்களாக மாற்றப்படுகிற பொருளுலகமே அன்றி வேறில்லை" (மூலதனம் முதல் தொகுதி- இரண்டாம் ஜெர்மன் பதிப்புக்குப் பின்னுரை)

இவைகளை முன்வைத்தே மார்க்சும் எங்கெல்சும், பொருள்முதல்வாதத்தை மிகுந்த மனத்திண்மையோடு ஆதரித்துப் பாதுகாத்தனர் என்கிறார் லெனின். தோழர் .எம்.எஸ் அவர்களின் கதம்பப் போக்கு, பொருள்முதல்வாதத்தை ஆதரிக்கவோ பாதுகாக்கவோ திறமற்றதாகிறது.

பாட்டாளி வாக்கத்துக்கு, பொருள்முதல்வாதமே என்றும் பயன்படும், சுரண்டல் வர்க்கத்துக்கு கருத்துமுதல்வாதம் துணையுரியும்.

இப்போதைக்கு லெனின் கூறிவற்றோடு முடித்துக் கொள்வோம்:-
"மார்க்சின் தத்துவம் முழுநிறைவு பெற்ற தத்துவப் பொருள்முதல்வாதமாகும். இந்தப் பொருள்முதல்வாதம் மனித குலத்திற்கு, குறிப்பாக தொழிலாளி வர்க்கத்துக்கு, மகத்தான அறிவுச் சாதனங்களை வழங்கியிருக்கிறது." (மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்)

லெனின் கூறுகிறபடி பாட்டாளி வர்க்கத்துக்கு அறிவுச் சாதனங்களை பொருள்முதல்வாதமே வழங்கும். பாட்டாளி வர்க்கத்தினர் தமது விடுதலைக்கு பொருள்முதல்வாதத்தை பின்பற்றி வெற்றி நடைபோடட்டும். பாட்டாளிகளுக்கு பொருள்முதல்வாதம் என்பது அறிவுச் சாதனங்களை வழங்குகிற, முழுநிறைவு பெற்ற தத்துவமாகும். இந்த வகையில் பொருள்முதல்வாதம் பாட்டாளிகளுக்கு தன்னளவில் முழுமைப்பெற்ற மேலான தத்துவமாகும்.