Sunday 26 August 2018

உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயான இயக்கவியல் தொடர்பு


உற்பத்திமுறையில் இரண்டு இன்றியமையாத தன்மை உற்பத்தி சக்திகளும், உற்பத்தி உறவுகளும் ஆகும்.  இவற்றில் ஒன்றை தனியே பிரித்து பார்க்க முடியாது. இவை இரண்டும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

உற்பத்திச் சக்திகளின் இயல்புக்கு பொருத்தமாக, உற்பத்தி உறவுகள் அமைந்திருப்பது, சமூக வளர்ச்சிக்கு, இன்றியமையாதவையாகும். ஆனால் இந்த பொருத்தம் தற்காலிகமானதே. உற்பத்தி வளர்ச்சியின் தொடக்க கட்டத்தில் மட்டுமே இசைவான முறையில் உற்பத்தி உறவுகள் நிலவுகிறது. வளர்ச்சி முதிரும் போது முரணும் பெருகுகிறது.

உற்பத்தியின் வளர்ச்சி என்பது உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியிலிருந்தே தொடங்குகிறது. உழைப்புச் சக்தியின் வளர்ச்சி, முதன்மையாய் உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியால் தோன்றுகிறது. உற்பத்தியைப் பெருக்குவதற்கு, உற்பத்திக் கருவிகளை செம்மைப்படுத்துவதும், தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் கூடவே மனிதர்களின் உழைப்புத் திறன் தேர்ச்சி பெறுகிறது, உற்பத்தி அனுபவம் வளமை அடைகிறது.

      உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி குறிப்பிட்ட கட்டம் வரை, உற்பத்தி உறவுகளை பெரிய அளவிற்கு பாதிக்கப்படாமல் கட்டுப்பட்டே காணப்படுகிறது. ஆனால் உற்பத்தி சக்திகள் வளர்ச்சியடைந்த காலகட்டத்தில் பழைய உற்பத்தி உறவோடு முரண்பட வைக்கிறது. உற்பத்திச் சக்திகள் உற்பத்தி உறவுகளைக் காட்டிலும் விரைவாக மேம்பாடடைகிறது, பழைய உற்பத்தி உறவுகளோ, அந்த புதிய வளாச்சியடைந்த உற்பத்திச் சக்தியுடன் முரண்படுகிறது.

பழைய உற்பத்தி உறவுகள், புதிய உற்பத்திச் சக்தியை மந்தப்படுத்த முயற்சிக்கிறது, புதிய உற்பத்தி உறவுகள் வளர்ச்சியை முன்னோக்கி எடுத்துச் செல்கிறது.

சமூக உற்பத்தி முறையின் முரண்பாடு, பழைய உற்பத்தி முறையை மறுதலித்து, புதிய உற்பத்தி முறைக்கு மாற்றுகிறது.  புதிய உற்பத்தி சக்திகளுக்கு, பொருத்தமான உற்பத்தி உறவுகள் பழைய அமைப்பின் உள்ளிருந்தே தோன்றுகிறது. உற்பத்திச் சக்திகள், உற்பத்தி உறவுகள் ஆகியவற்றின் இயக்கவியல் வளர்ச்சி என்பது ஒர் உற்பத்திமுறையிலிருந்து, மற்றொரு உற்பத்திமுறைக்கு மாற்றம் அடைவதாகும். அதாவது கீழ்நிலை உற்பத்திமுறையிலிருந்து, மேல்நிலை உற்பத்திமுறைக்குச் சென்றடைவதாகும்.

தனிச்சொத்துடைமையின் தோற்றத்திலிருந்து, சமூகம் வர்க்கமாக மாறியது. வர்க்க சமூகத்தின் வளர்ச்சிக்கும், மாற்றத்திற்கும் உந்து விசையாக இருப்பது வர்க்கப்போராட்டமே ஆகும். 


உற்பத்தி உறவுகள் (Relation of Production)


உற்பத்தியை நிகழ்த்தும் போது இயற்கையை மாற்றுகிற அதே நேரத்தில் மக்கள் ஒருவருடன் ஒருவர் இணைந்து செயல்படுகின்றனர், அப்போது  உறவுகள் ஏற்படுகிறது. அத்தகைய உற்பத்தி தொடர்பாக நடைபெறும் உறவுகள் தான் உற்பத்தி உறவுகளாகும். சமூகத்தில் நிகழும் உறவுகளில் இதுவே முதன்மை பெற்றவையாக இருக்கிறது. மற்ற உறவுகளை  இதுவே தீர்மானிக்கிறது.

தனக்குத் தேவையானவைகளை மனிதன் தன்னந்தனியாக அனைத்தையும் தோற்றுவிக்க முடியாது. தான் உற்பத்தி செய்ததை பிறருக்குக் கொடுத்தும், தனக்கு தேவைப்படும், ஆனால் தன்னால் உருவாக்கப்படாத பொருளை பிறரிடம் பெற்றும் வாழவேண்டியிருக்கிறது. இந்தச் செயற்பாடுகள், மனிதர்களிடையே குறிப்பிட்ட சமூகப் பிணைப்புகளை உருவாக்குகிறது. இந்த பிணைப்புகள், புறநிலையானவை, அதாவது மனிதனின் உணர்வுநிலையை சாராமல் இருப்பவையாகும். 

உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கு, ஏற்பவே உற்பத்தி உறவுகள் தோன்றுகிறது. புதிய தலைமுறையினர் தமது முதல் அடியினை, முந்திய தலைமுறையினர் தோற்றுவித்திருக்கும் வாழ்நிலைமைகளின் வளர்ச்சி நிலையின,் தொடர்ச்சியாகத் தான் எடுத்துவைக்கின்றனர்.

உற்பத்தி நிகழும்போது ஏற்படும் அனைத்து உறவுகளும், உற்பத்தி உறவு எனப்பதில்லை. இதில் உள்ள பொருளாரரதார உறவுகளே, உற்பத்தி உறவுகள் என்றழைக்கப்படுகிறது. குறிப்பாகச் சொன்னால் உற்பத்தி, வினியோகம், பரிவர்த்தனை மற்றும் நுகர்வு ஆகியவற்றின் போது ஏற்படும் நிகழ்வுப்போக்கின் தொடர்பே, உற்பத்தி உறவுகள் எனப்படும்.

உற்பத்தி உறவுகளில் முதன்மையாக விளங்குவது, உற்பத்திச் சாதனங்களிடையே மனிதர்களுக்கு உள்ள உறவுகள், அதாவது உற்பத்திச் சாதனங்கள் யாருக்கு உடைமையாய் இருக்கின்றன, என்பதை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. உற்பத்திச் சாதனங்கள் முதலாளிகளுக்கு சொந்தமாக இருப்பதால், அப்போது உற்பத்தியின் விளைபொருட்கள் முதலாளிக்குச் சொந்தமாகிவிடுகிறது. உற்பத்திச் சாதனங்கள் யாருக்கு உடைமையாக இருக்கின்றன என்பதே, உற்பத்தி உறவுகளை நிர்ணயிக்கின்றன. அதன்படி, உற்பத்திப் பொருட்களின் வினியோகம் தனிச்சொத்து அடிப்படையில் சுரண்டல் கூட்டத்தின் நலன்களுக்கு ஏற்ப நடைபெறுகிறது. சமூகம் சுரண்டல் சமூகமாக நிலவுகிறது. சமூகத்தில் தனியுடைமை நிலவினால், அங்கே ஆதிக்கம், கீழ்படிதல் என்ற சுரண்டல் உறவுகள் செயல்படுகிறது.

முதலாளித்துவ சமூகத்தில் உடைமைகள் முதலாளிகளுக்கு தனியுடைமையாய் இருக்கின்றன. சட்டப்படியான பெயரளவுக்கு சுதந்திரமாக உள்ள தொழிலாளி வேலைக்கு அமர்த்தப்படுகிறான். எந்த உடைமையும் அவனுக்கு சொந்தமில்லை, இந்த நிர்பந்த நிலைமையில் அவன் தனது உழைப்புச் சக்தியை விற்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆட்படுகிறான்.

உற்பத்தி சக்திகளுக்கும், உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயான ஒற்றுமையே குறிப்பிட்ட சமூக பொருளாதார அமைப்பாக  நிலவுகிறது. உழைப்பு கருவிகளிலும், உழைப்பு திறமைகளிலும் ஏற்படும் படிப்படியான வளர்ச்சி உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியை பெருக்குகின்றன. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிகளில் ஏற்படும் மாற்றங்களை ஒட்டி, உற்பத்தி உறவுகளிலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும், ஆனால் உற்பத்திச் சக்திகளில் குறிப்பிடும்படியான மாற்றங்கள் ஏற்படும் பொழுது, சொத்துடைமை வர்க்கம் பழைய உற்பத்தி உறவுகளில் மாற்றம் ஏற்படுவதற்கு தடையாய் நிற்கிறது. இந்த உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயான மோதல், சமூகப் புரட்சிக்கு வித்திடுகிறது. இதனைத் தொடர்ந்து பழைய சமூகப் பொருளாதார அமைப்பு மறுதலிக்கப்பட்டு, புதிய சமூக பொருளாதார அமைப்பாக உருவெடுக்கிறது.

உற்பத்திச் சாதனங்கள் (Means of Production)


உழைப்பின் குறிப்பொருள், உழைப்புக் கருவிகள் இரண்டும் சேர்ந்து உற்பத்திச் சாதனங்கள்  (Means of Production) என்றழைக்கப்படும். இவைகள் கடந்த கால உழைப்பின் விளைபொருளாகும். இவை இரண்டும் தாமே பொருட்களை உற்பத்தி செய்திட முடியாது. உழைப்பைப் பயன்படுத்தாத உற்பத்திச் சாதனங்கள் உயிரற்ற பொருட் குவியலாக, பயனற்று வீணாய்க்கிடக்கும். மக்களின் உழைப்புச்சக்தி இதனோடு இணைந்து செற்பட்டால் தான் உற்பத்தியை நிகழ்த்த முடியும்.

உற்பத்தி அனுபவமும் திறமையும் கொண்ட மக்களின் உழைப்பு சக்தியும், உற்பத்திச் சாதனங்களும்  சேர்ந்து உற்பத்திச் சக்திகள் (Productive Forces) என அழைக்கப்படும்.  மக்கள் தான் சமூகத்தின்  முதன்மையான உற்பத்திச் சக்தியாகும். உற்பத்திச் சக்திகள் எப்போதும் சமூகத் தன்மை கொண்டவையாக இருக்கிறது.

கனிம வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டால் மட்டும், அவைகள் உற்பத்திச் சக்தியாகிவிடாது, அதே போல் வனங்களில் வனச்செல்வங்கள் நிறைந்து இருந்தால் மட்டும் போதாது, மனித உழைப்பு அதில் செலுத்தப்பட்டால் தான், அவை உற்பத்திச் சக்தியாகிறது.

அறிவியலும், தொழில் நுட்பமும் மேம்பாடு அடைவதைத் தொடர்ந்து, உற்பத்திக் கருவிகள் செம்மையுறுகிறது. இதனோடு மக்களின் திறமை தேர்ச்சியும், அனுபவமும் விரிவடைகிறது. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி, சமூகத்தின் வளர்ச்சியை விரிவாக்குகிறது.

உழைப்பு


இயந்திரமோ, கச்சாப்பொருளோ தானாகவே எதையும் உற்பத்தி செய்திட முடியாது. அதில், மனிதனது உழைப்பு நடவடிக்கை செலுத்தும் போதுதான் உற்பத்தி நடைபெறுகிறது. உழைப்பு என்பது இயற்கையிடமிருந்து கிடைக்கும் பொருட்களை, மனிதத் தேவைகளை நிறைவு செய்ய முற்படும் நடவடிக்கையாகும்.

மனிதயினம் தமக்குத் தேவையான வாழ்க்கைச் சானதங்களை உற்பத்திச் செய்துகொள்கிறது, இதுவே விலங்கினத்திடமிருந்து மனிதயினத்தைப் பிரித்துக் காட்டுவதாக இருக்கிறது.

உழைப்பு ஒருவகையில் மனிதனையே படைத்தது எனலாம். மனிதன் உழைப்பில் ஈடுபடும்போது திறமையும் தேர்ச்சியும் பெறுகிறான். உழைப்பு செற்பாட்டில் புதுப்புது மேம்பாட்டை புகுத்துகிறான்.

உழைப்பைப் பற்றி மார்க்ஸ்  மூலதனத்தில்  எழுதுகிறார்:-
உழைப்பு என்பது, முதலாவதாக, மனிதனும் இயற்கையும் பங்குபெறுகிற, மனிதன் தனக்கும் இயற்கைக்கும் இடையிலான பொருளாயதப் பிரதிச் செயல்களைத் தானாகவே தொடங்கி, முறைப்படுத்தி கட்டுப்படுத்துகிற நிகழ்முறையாகும். மனிதன் இயற்கையின் சக்திகளில் தானும் ஒருவன் என்ற முறையில் தன்னையே இயற்கைக்கு எதிராக நிறுத்திக் கொள்கிறான். இயற்கையின் உற்பத்திகளைத் தன் சொந்தத் தேவைகளுக்குத் தகவமைந்த வடிவத்தில் தனதாக்கி கொள்ளும் பொருட்டு, தோளையும், காலையும், தலையையும், கையையும் அதாவது தன் உடலின் இயற்கைச் சக்திகளை இயங்கச் செய்கிறான். புறவுலகின் மீது இவ்வாறு செயல்பட்டு, அதனை மாற்றுவதன் மூலம் அவன் அதே நேரத்தில் தனது தன்மையையும் மாற்றிக் கொள்கிறான்.

..... முழுக்க முழுக்க மனிதனுக்கே உரியதான உழைப்பு வடிவத்தையே நாம் மனத்தில் கொண்டுள்ளோம். ஒரு நெசவாளரின் செயல்முறைகளை ஒத்தவற்றை சிலந்தி செய்திடுகிறது. கட்டக் கலைஞர்கள் பலரும் வெட்கித் தலைகுனியும் படி தேனீ, தேன் கூட்டை அமைத்திடுகிறது. ஆனால், கட்டடக் கலைஞர் தன் கட்டட அமைப்பை எதார்த்தத்தில் எழுப்பு முன்பே மனத்தில் எழுப்பிக் கொண்டு விடுகிறார், படுமோசமான கட்டடக் கலைஞரையும் தலைசிறந்த தேனீயிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவது இதுவே.

உழைப்பு நிகழ்முறை ஒவ்வொன்றின் முடிவிலும் கிடைக்கும் விளைவு, அந்நிகழ்முறையின் தொடக்கத்திலேயே உழைப்பாளியின் மனத்தில் இருந்ததுதான். அவர் தாம் வேலை செய்கிற மூலப் பொருளில் வடிவ மாற்றத்தை உண்டாக்குவதோடு தமது குறிக்கோளையும் நிறைவேற்றிக் கொள்கிறார்.

இந்தக் குறிக்கோள் அவரது வேலை முறையின் நெறியை நிர்ணயிக்கிறது. அவர் இக் குறிக்கோளுக்குத் தமது சித்தத்தைக் கீழ்ப்படுத்திக் கொண்டாக வேண்டும். இப்படிக் கீழ்ப்படுத்துவது கண நேரத்துக்கு மட்டுமான செயலன்று. உடல் உறுப்புகளை வருத்திக் கொள்வதன்னியில், வேலையின் போது ஆரம்பம் முதல் கடைசி வரை உழைப்பாளியின் சித்தம் அவரது குறிக்கோளுக்குத் தொடர்ந்து இசைவாயிருப்பதையும் நிகழ்முறை அவசியமாக்குகிறது, வேலையில் உன்னிப்பாய் கவனம் செலுத்த வேண்டும் என்பது இதன் பொருள்.
(மூலதனம் தொகுதி 1 பக்கம் 244-245)

உழைப்புக் கருவிகள் (Instruments of Labour)


கருவிகளைப் பயன்படுத்தாமல், உழைப்பை உற்பத்தியில் செலுத்த முடியாது. மனிதன், உழைப்புக் கருவிகளை, உழைப்பின் குறிப்பொருளின் மீது செயல்படுத்தியே பொருட்களை உற்பத்தி செய்கிறான். தொடக்க காலத்தில் கற்கோடாரி, மண்வெட்டி, வில் அம்பு ஆகியவையும், இன்றைய காலத்தில் இயந்திரம், சாலைகள், போக்குவரத்துச் சாதனங்கள்,  தொழில்நுட்பம் போன்றவையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். உழைப்புக் கருவிகளோடு சேர்ந்து இந்த தொழில்கூடம், கிடங்கு, ரயில்வே, கால்வாய், மின்சாரம் போன்ற சாதனங்களும் சேர்ந்து உழைப்புக் கருவிகளாகிறது.

உழைப்புக் கருவிகளை தோற்றுவிப்பதிலிருந்து, மனித உழைப்பு தொடங்குகிறது எனலாம். ஒவ்வொரு சமூக பொருளாதார அமைப்பையும், அன்றைய உழைப்புக் கருவிகளின் வளர்ச்சியின் அளவைக் கொண்டே, அதன் வளர்ச்சி நிலையை அறிந்து கொள்ளலாம். உற்பத்தி சக்தியின் வளர்ச்சிக்கு உழைப்புக் கருவிகள் பெரும் பங்காற்றுகின்றன. உற்பத்தி முறையின் மாற்றம் என்பது உழைப்புக் கருவியின் வளர்ச்சியின் அடிப்படையில் அமைகிறது. உற்பத்தி முறையின் மாற்றம் சமூக மாற்றமாக காட்சித்தருகிறது.

பண்டைய கூட்டுவாழ் சமூகத்தில் கற்கோடாரி, தடித்த கழிகள் போன்றவற்றை உழைப்புக் கருவிகளாகப் பயன்படுத்தினர். அதனால் அச் சமூகம் கொண்டுள்ள எளிய கருவிகளால் இயற்கையை வெல்வதற்கு சக்தி குறைந்தவர்களாகவே காணப்பட்டனர். அடிமைச் சமூகத்தில் இரும்பாலன கருவிகள் வளர்ச்சியடைந்திருந்தது. நிலப்பிரபுத்துவ சமூகத்தில் இரும்பை உருக்கும் முறையின் தொடர்ச்சியாக, பட்டறைக்குத் தேவையான கருவிகள் வளர்ச்சியடைந்தது, இன்றைய முதலாளித்துவ சமூகத்தில் இயந்திரம், கணிப்பொறி போன்ற சாதனங்கள் உழைப்பிற்குத் துணைபுரிகிறது. தற்போது இயற்கையின் மீது செலுத்தும் சக்தி பெருமளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது.

உழைப்புக்  கருவிகளைப் பற்றி மார்க்ஸ்  மூலதனத்தில்  எழுதுகிறார்:-
உழைப்புக் கருவிகள் என்பது உழைப்பாளி தனக்கும் தன் உழைப்பின் குறிப்பொருளுக்கும் இடையே வைப்பதும், அவரது செயற்பாட்டின் கடத்தியாகப் பயன்படுவதுமான பொருள், அல்லது பொருட் தொகுதி ஆகும். அவர் சில பொருட்களின் யாந்திரிக, பௌதிக, இரசாயனப் பண்புகளைப் பயன்படுத்தி பிற பொருட்களைத் தமது நோக்கங்களுக்கு சேவகம் புரியச் செய்கிறார்.

பழங்கள் போன்ற தயார் நிலையிலுள்ள வாழ்வுச் சாதனங்களை சேகரிப்பதில் மனிதனின் கைகால்களே உழைப்புக் கருவிகளாகப் பயன்படுகின்றன. இவற்றை விலக்கிவிட்டுப் பார்த்தால், உழைப்பாளி சொந்தமாக்கிக் கொள்கிற முதற்பொருள் உழைப்பின் குறிப்பொருளன்று, உழைப்புக் கருவியே.

இவ்வாறு, இயற்கை அவரது செயற்பாட்டுக்குதவும் உறுப்புகளில் ஒன்றாகின்றது. அதனை அவர் தமது உறுப்புகளோடு இணைத்துக் கொண்டு  விலிலிய நூல் என்ன சொன்னாலும்  தமது ஆகிருதியை ஓங்கி வளரச் செய்கிறார். பூமி அவரது ஆதி உக்கிராணமாய் விளங்குகிறது. எடுத்துக்காட்டாக, வீசுவதற்கும், அரைப்பதற்கும், அடிப்பதற்கும், வெட்டுவதற்கும் இன்ன பிற காரியங்களுக்குமான கற்களை அது அவருக்கு வழங்குகிறது. பூபூமியே ஓர் உழைப்புக் கருவிதான்.

ஆனால், அது விவசாயத்தில் அவ்வாறு பயன்படுத்தப்படுவதற்கு, வரிசையான இதர பல உழைப்புச் சாதனங்களும், ஒப்பளவில் உழைப்பின் வளர்ச்சி நிலையும் அவசியம். உழைப்பு சிறிதளவு வளர்ச்சி கண்டதுமே, அதற்கென தயாரிக்கப்பட்ட தனிவகைக் கருவிகள் தேவைப்படுகின்றன. இவ்வாறு மிகப் பழங் குகைகளில் கற்கருவிகளையும் கல்லாயுதங்களையும் காண்கிறோம். மனித வரலாற்றின் மிக ஆரம்ப காலத்தில், பழக்கப்பட்ட மிருகங்கள், அதாவது குறிக்கோளுடன் வளர்தெடுக்கப்பட்டு உழைப்பினால் மாற்றங்களுக்குள்ளான மிருகங்கள், - திருத்திச் செப்பனிட்ட கற்கள், மரம், எலும்புகள், கிளிஞ்சல்கள் ஆகியவற்றோடு - கூட  உழைப்புக் கருவிகளாக முக்கியப் பங்குவகிக்கின்றன.

உழைப்புக் கருவிகளின் உபயோகமும் புனைவும்  குறிப்பிட்ட சில மிருக ராசிகளிடையே இவை முதிரா நிலையில் காணப்பட்ட போதிலும்  மனித உழைப்பு நிகழ்முறைக்கே உரித்தான தனிச் சிறப்புகளாகும், எனவே, கருவி செய்யும் மிருகம் என்று மனிதனுக்கு இலக்கணம் வகுக்கிறார் பிராங்க்ளின்.

மறைந்து போய்விட்ட மிருக ராசிகளை நிர்ணயிப்பதற்கு புதைபடிவ எலும்புகள் எவ்வளவு முக்கியத்துவமுள்ளவையோ, மறைந்து போய்விட்ட சமூகப் பொருளாதாரக் கருவிகளின் மீதமிச்சங்களும் அதே அளவு முக்கியத்துவமுள்ளவையாகும்.

வெவ்வேறு பொருளாதார சகாப்தங்களை நாம் வேறுபடுத்திப் பார்க்க உதவுவது தயாரிக்கப்பட்ட பொருட்களை எவை என்பதன்று, அவை தயாரிக்கப்பட்டது எப்படி என்பதும், எக்கருவிகளால் என்பதுமே. உழைப்புக் கருவிகள் மனித உழைப்பு அடைந்துள்ள வளர்ச்சி நிலைக்கு ஓர் அளவுகோலை வழங்குவது மட்டுமல்லாமல், அந்த உழைப்பு நடைபெறுகிற சமூக நிலைமைகளைச் சுட்டிக் காட்டும் குறிகளாகவும் உள்ளன.

....இன்னும் விரிவான அர்த்தத்தில், நாம் உழைப்புக் கருவிகள் என்ற வகையில், உழைப்பை அதன் குறிப்பொருளுக்கு நேரடியாக மாற்றிக் கொடுப்பதற்குப் பயன்படுத்தப்படுபவையும், எனவே ஏதேனும் ஒரு விதத்தில் செயற்பாட்டின் கடத்திகளாகப் பயன்படுபவையுமான அந்தப் பொருட்களோடு கூட, உழைப்பு நிகழ்முறையை நடத்துவதற்கு அவசியமான எல்லாப் பொருட்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இவை நேரடியாக உழைப்பு நிகழ்முறையில் நுழைவதில்லை, ஆனால் இவையின்றி அது நடைபெறவே முடியாது, அல்லது பகுதியளவுக்கே நடைபெற முடியும்.  பூபூமி இவ்வகைப்பட்ட சர்வப் பொது கருவி என்பதை மீண்டும் காண்கிறோம். ஏனெனில் உழைப்பாளி நிற்பதற்கு ஓர் இடத்தையும் அவரது செயற்பாடு ஈடுபடுத்தப்படுவதற்கு ஒரு களத்தையும் அது வழங்குகிறது. முந்தைய உழைப்பின் பலனாய் அமைந்து, இவ்வகை உழைப்புக் கருவிகளாகவும் இருப்பவற்றில் பட்டறைகள், கால்வாய்கள், சாலைகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
(மூலதனம் தொகுதி 1 பக்கம் 247 - 248)

உழைப்பின் குறிப்பொருள் (Objects of Labour)


உற்பத்தியை தொடங்குவதற்கும், விளைபொருட்களைச் செய்வதற்கும் தேவைப்படும் பொருளை உழைப்பின் குறிப்பொருள் என்றழைக்கப்படும். அதாவது  எந்தப் பொருட்களின் மீது உழைப்பாளி, தமது உழைப்பை செலுத்துகிறாரோ, அந்தப் பொருள் உழைப்பின் குறிப்பொருள்.

தொடக்க காலத்தில் இயற்கையில் இருந்து மட்டுமே, உழைப்பின் குறிப்பொருளை எடுத்துப் பயன்படுத்தினர். அவ்வாறு இயற்கையிலிருந்து எடுக்கப்படும் போது, அவை உற்பத்திச் சக்தியாகிறது. கையாளப்படாத பொருட்கள் வெறும் இயற்கையின்  ஒரு பகுதி என்று தான் அழைக்கப்படும்.

உழைப்பின் குறிப்பொருள் இரண்டு வகைப்படும். ஒன்று இயற்கையில் நேரடியாக கிடைப்பவை, அவை பபூமியிலிருந்து கிடைக்கும் கனிமவளங்கள், நீரிலிருந்து கிடைக்கும் மீன்கள், வனப்பொருட்கள் மற்றும் நிலம் போன்றவை. சாகுபடிக்கு உகந்த நிலமே விவசாயத்திற்குரிய உழைப்பின் குறிப்பொருளாகும்.

மற்றது, ஏற்கெனவே உழைப்பிற்கு உட்படுத்தப்பட்டதான கச்சாப்பொருட்கள். நூற்பாலைக்குத் தேவையான பருத்தி, ஏற்கெனவே உருக்கி ஆயத்தமான நிலையிலுள்ள  இரும்பு, அதாவது இரும்பைக் கொண்டு உருவாக்கப்படும் பொருளுக்கு, இரும்பு கச்சாப்பொருளாகும், இது போன்றவை இவ்வகையினைச் சேர்ந்ததாகும்.

உழைப்புச் செயல்பாட்டில் உழைப்புக் கருவிகளைக் கொண்டு, மனிதன் தனது தேவைகளை  நிறைவு செய்யும் பொருட்டு, உழைப்பின் குறிப்பொருளை மாற்றுகிறான். இந்த உழைப்பின் விளைவே உற்பத்திப் பொருள் எனப்படுகிறது.

உழைப்பின் குறிப்பொருளைப் பற்றி மார்க்ஸ்  மூலதனத்தில்  எழுதுகிறார்:-
கன்னி நிலம் (பொருளாதார வழியில் பேசுவதானால் இதில் நீரும் அடங்கும்) இப்படியே பயன்படுத்தத் தக்க தயார் நிலையில் அவசியப் பண்டங்கள் அல்லது வாழ்வுச் சாதனங்களை மனிதனுக்கு வழங்குகிறது. அது மனிதனைச் சாராமல் இயற்கையாகவே இருப்பது, மனித உழைப்பின் சர்வப்பொது குறிப்பொருளாய் அமைவது. உழைப்பு சில பொருட்களைச் சுற்றுப்புறத்துடனான நேரடித் தொடர்பிலிருந்து பிரித்தெடுக்க மட்டுமே செய்கிறது.

அந்தப் பொருட்களெல்லாம் உழைப்பின் குறிப்பொருட்கள், இயற்கை தானாகவே வழங்குபவை. இயற்கையாகவே அமைந்த நீரில் நாம் பிடிக்கிற மீன்களும், இயற்கையான வனத்தில் நாம் வெட்டுகிற மரங்களும், படிவ நாளங்களிலிருந்து நாம் எடுக்கிற தாதுப் பொருட்களும் இப்படிப்பட்டவையே. மறுபுறம், உழைப்பின் குறிப்பொருள் முந்தைய உழைப்பின் மூலம் வடிகட்டப்பட்டதென்று சொல்லக் கூடுமானால், அதைக் கச்சாப் பொருள் என்று அழைக்கிறோம்.

ஏற்கனெவே எடுக்கப்பட்டுக் கழுவுவதற்குத் தயாராய் உள்ள தாதுப்பொருள் இப்படிப்பட்டதே. கச்சாப் பொருள் அனைத்தும் உழைப்பின் குறிப்பொருளாகும்,      ஆனால் உழைப்பின் குறிப்பொருள் ஒவ்வொன்றும் கச்சாப்பொருள் அன்று. உழைப்புச் சாதனங்களைக் கொண்டு சிறிது மாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டவையே கச்சாப்பொருளாக முடியும். 
(மூலதனம் தொகுதி 1 பக்கம் 247)

உற்பத்திச் சக்திகள் (Productive Forces)


பொருள் உற்பத்தியே சமூகத்தின் அடிப்படையாகும். மக்கள், வாழ்வதற்கு உணவு, உடை, உறைவிடம் போன்ற தேவையான பொருளை உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது. வாழ்விற்கான பொருட்களை  தோற்றுவிக்கும்,  மக்களின் செயற்பாடுதான் உற்பத்தி என்றழைக்கப்படுகிறது. இந்த உற்பத்தி நிகழ்த்துவதற்கு,

1.உழைப்பின் குறிப்பொருள்,
-ஆகிய மூன்றும் தேவைப்படுகிறது.

அடித்தளமும் மேற்கட்டமைப்பும்


சமூகத்தின் வளர்ச்சியையும், அதன் சாரத்தையும் அறிவதில் மக்களுக்கு நெடுங்காலமாக ஆர்வம் இருந்துவருகிறது. இதற்கு முதன்மையான காரணம், சமூகத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வும், பாதுகாப்பின்மையுமாகும், இவையே மக்களையும், சிந்தனையாளர்களையும், சமூகத்தின் இயங்கு சக்தி எது? என்று தேடவைத்துள்ளது.

சமூகத்தை இயக்குவது எது? என்ற கேள்விக்கு கருத்துமுதல்வாதிகளும், மதவாதிகளும் சமூகத்திற்கு வெளியேயுள்ள சக்தி, கடவுள் ஆகிவற்றின் விருப்பப்படி நடைபெறுகிறது, என்ற கருத்தை முன்வைக்கின்றனர். மற்றும் சிலர் அரசர், ஆட்சியாளர், தளபதி, தலைசிறந்த மாமேதை போன்றோர்களின் விருப்பப்படி சமூகம் அமைகிறது என்றனர். இதனோடு கூட, வரலாற்றில் ஏற்படும் கலகங்கள், எழுச்சிகள், போர் நடவடிக்கைகள், தத்துவயியல் போராட்டங்கள் போன்ற சிக்கலான திடீர் நிகழ்வால் உருவாவதாக மற்றும் சிலர் கூறினர். 

மார்க்ஸ் சமூக வளர்ச்சி என்பது இயற்கையாக வரலாற்றில் நிகழும் போக்கு என்றும், அது புறநிலையான விதிகளுக்கு உட்பட்ட நிகழ்வாக இருப்பதையும் மெய்ப்பித்தார். இயற்கையில் நிகழும் புறநிலை விதிகள், சமூகத்திற்கு கிடையாது என்று மார்க்ஸ் காலத்திற்கு முன்புவரை சொல்லப்பட்டு வந்தது.

 எங்கெல்ஸ் கூறுகிறார்:-
“வரலாற்றின் உந்து விசையைப் பற்றிய மாபெரும் விதியை முதன்முதலில் கண்டுபிடித்தவர் மார்க்ஸ். வரலாற்று ரீதியான அனைத்துப் போராட்டங்களும், அவை அரசியல், மத, தத்துவஞான அல்லது வேறு ஏதாவதொரு சித்தாந்தத் துறைக்குள்ளாக முன்னேறிய போதிலும், உண்மையில் அவை அநேகமாக சமூக வர்க்கங்களின் போராட்டங்களின் தெளிவான வெளியீடுகள் மட்டுமே, இந்த வர்க்கங்கள் இருப்பதும் அதன் காரணமாக இவற்றுக்கிடையே ஏற்படுகின்ற மோதல்களும் கூட அவற்றின் பொருளாதார நிலைமையின் வளர்ச்சியின் தரத்தினால், அவற்றின் உற்பத்தி முறையினாலும் அதனால் நிர்ணயிக்கப்படுகின்ற பரிவர்த்தனை முறையினாலும் நிலைப்படுத்தப்படுகின்றன என்பது அந்த விதியாகும். இயற்கை விஞ்ஞானத்தில் சக்தியின் உருமாற்றம் பற்றிய விதிக்கு உள்ள அதே முக்கியத்துவம் வரலாற்றில் இந்த விதிக்கு உண்டு.”
(லூயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர் - எங்கெல்சின் முன்னுரை)

இயற்கை, சமூகம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதே இவ்வுலகமாகும்.   சமூகத்தை இயற்கையிலிருந்து தனித்து பிரித்து புரிந்து கொள்ள முடியாது. சமூகம் தமது இயக்கத்தை இயற்கையுடன் இணைந்தே செயல்படுகிறது.  இதில் இயற்கை, மாறாத சில விதிகளுக்கு உட்பட்டவையாக  இருப்பதை பொதுவாக ஒப்புக்கொள்வர். ஒத்த நிலைமைகள் எப்போதும் ஒத்த விளைவுகளையே உருவாக்குகின்றன, என்பது இயற்கையில்  உள்ள அறிவியல் விதியாகும். ஆனால் சமூக மாற்றத்தையோ அல்லது வளர்ச்சியையோ விதிகளுக்குள் கொண்டு வரயியலாது என்பது,  பலகாலமாக கூறப்பட்டு வரும் கருத்தாகும். இதனை மார்க்சியம் மறுத்து, இயற்கையில் உள்ள மாற்றத்தை உணர்த்தும்  அறிவியலைப் போல், சமூக மாற்றத்திற்கான விதிகளையும் அறிந்து கொள்ளலாம், என்று சமூக வளர்ச்சியை அறிவியல் கண்ணோட்டத்தில்  விளக்குகிறது. இதற்கு வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்று பெயர்.

லெனின் கூறுகிறார்:-
"இயற்கை பற்றிய அறிதலை மனித சமுதாயம் பற்றிய அறிதலாகவும் (மார்க்ஸ்) விரிவாக்கினார். மார்க்சின் வரலாற்றியல் பொருள்முதல்வாதம்  விஞ்ஞானச் சிந்தனைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக அமைந்தது. முன்பெல்லாம் வரலாற்றையும் அரசியலையும் பற்றிய  கருத்துக்களில் குழப்பமும் தான்தோன்றித் தனமும் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இப்போது அவை போய், வியப்பூட்டும் அளவுக்கு ஒருமித்த  முழுமையும் உள்ளிணக்கமும் கொண்ட ஒரு விஞ்ஞானத் தத்துவம் வந்துவிட்டது.

வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்ற இந்தத் தத்துவம்  காட்டுவதென்ன? உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின் விளைவாக ஒரு சமுதாய அமைப்பு முறையிலிருந்து அதைவிட மேலான  இன்னொரு சமுதாய அமைப்பு முறை எப்படி வளர்கிறது என்பதை - உதாரணமாக, நிலப்பிரபுத்துவச் சமுதாய அமைப்பு முறையிலிருந்து  முதலாளித்துவச் சமுதாய அமைப்பு முறை எப்படி வளர்கிறது என்பைதை - அது காட்டுகிறது.

இயற்கை என்பது - அதாவது வளர்ச்சி பெற்றுக் கொண்டேயிருக்கும் பருப்பொருள் என்பது - மனிதனுக்கு அப்பால் சுயமாக இருந்து வருகிறது.  இந்த இயற்கையை மனித அறிவு பிரதிபலிக்கிறது. அதே போலதான் மனிதனின் சமுதாய அறிவு எனப்படுவதும் (அதாவது தத்துவஞானம்,  மதம், அரசியல் முதலானவை சம்பந்தமாக மனிதன் கொண்டிருக்கும் பல்வேறு கருத்துக்களும் போதனைகளும்) சமுதாயத்தின் பொருளாதார  அமைப்பு முறையைப் பிரதிபலிக்கிறது. அரசியல் நிறுவனங்கள் என்பவையெல்லாம் பொருளாதார அடித்தளத்தின் மீது நிறுவப்பட்ட மேல்  கட்டமைப்பாகும்."
(மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்)

இதனை மறுத்து சமுதாய வளர்ச்சி என்பது இயற்கையின் வளர்ச்சியிலிருந்து பெருமளவிற்கு மாறுபடுகிறது. இயற்கையில் உணர்வுள்ள  சக்திகள் இருப்பதில்லை, ஆனால் சமுதாயத்தில் உணர்வு பெற்றுள்ள மக்கள் செயல்படுகிறார்கள். மக்களின் விருப்பப்படி, அதாவது  மக்களிடம் காணப்படும் உணர்வுகளின்படி அவர்களால் முன்வைக்கப்பட்ட லட்சியமே, சமூக வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்று  கருத்துமுதல்வாத தத்துவவாதிகள், மற்றும் மதவாதிகள் கூறிவருகிறார்கள். ஆனால் மார்க்சியம் தத்துவயியல், மதம், அரசியல்  நிறுவனங்கள் போன்றவை எல்லாம் பொருளாதார அடித்தளத்தின் மேல் உருவான மேல்கட்டமைப்பாகும் என்று நிறுவுகிறது.

      வரலாற்றை இயக்க மக்கள் தேவைப்படுகிறார்கள், இயற்கை வளர்ச்சிக்கு மக்களின் நடவடிக்கை தேவையில்லை என்பதை அறிந்த மார்க்சியம், சமூகத்தில் செயல்படும் மக்கள், தாம் நினைத்தப்படி சமூகத்தை அமைத்துக்கொள்ள முடியவில்லை என்பதையும் அறிவுறுத்துகிறது.

மார்க்ஸ் கூறுகிறார்:-
“மனிதர்கள் தங்களுடைய வரலாற்றை உருவாக்குகிறார்கள். ஆனால் தங்கள் விருப்பத்திற்கேற்ப அதை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை, தாங்களே தேர்ந்தெடுக்கும் சூழ்நிலைமைகளுக்கு ஏற்றபடி இல்லாமல் கடந்த காலத்திலிருந்து கைமாற்றிக் கொடுக்கப்பட்ட, தயாராயுள்ள சூழ்நிலைமைகளுக்கு, தாங்கள் நேரடியாகச் சந்திக்கும் சூழ்நிலைமைகளுக்கு ஏற்பவே வரலாற்றை உருவாக்குகிறார்கள்.”           
                 (லூயீ போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர்)

      உணர்வோடு செயல்படும் மக்கள், அவர்களது மனம், சிந்தனை போன்றவற்றை சாராத புறநிலை சூழ்நிலையில் வாழ்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்்கைச் சாதனங்களுக்காக இயற்கையுடனும், பிறமனிதர்களுடனும் குறிப்பிட்ட உறவை நிகழ்த்துகிறான். இந்த பொருளாயத வாழ்க்கை, அவர்களது சமுதாய வாழ்நிலைகளைத் தோற்றுவிக்கிறது. அதாவது, இதுவரை சமூகத்தில் வளர்ச்சியுற்ற, உற்பத்திச் சாதனங்களைக் கொண்டே மக்கள் உற்பத்தியில் ஈடுபட வேண்டியுள்ளது. அதனால் தான் மக்கள் தாம் விரும்பும் படியான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடிவதில்லை. பொருளாயத வாழ்விற்காக மக்களின் உழைப்பு நடவடிக்கைகளே சமுதாய வாழ்நிலையை உருவாக்குகிறது. இந்த சமூக வாழ்நிலையே, சமூக உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.

சமூக வாழ்நிலை, சமூக உணர்வுநிலை ஆகியவற்றிற்கு இடையே உள்ள உறவை, அதாவது சமூகத்தில் நிகழும் அகநிலை, புறநிலை ஆகியவற்றை ஆராய்ந்த மார்க்சியம், சமூக வாழ்நிலை தான் சமூக உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது என்ற முடிவிற்கு வருகிறது.

இதனை மார்க்ஸ் கூறுகிறார்:-
இதன் மூலம் நான் உருவாக்கிய பொதுவான முடிவை - இந்த முடிவுக்கு வந்தவுடன் அதுவே என்னுடைய ஆராய்ச்சிகளுக்கு வழிகாட்டும் கொள்கையாக மாறியது - பின்வருமாறு சுருக்கிச் சொல்லலாம்.

மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும்  சமூக உற்பத்தியில் திட்டவட்டமான உறவுகளில் தவிர்க்க முடியாத வகையில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து நிற்பவையாகும், அதாவது அவர்களுடைய உற்பத்தியின் பொருளாயத சக்திகளில் வளர்ச்சியில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும்.

இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டமைப்பு எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுத்துறை வாழ்வின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது. மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.

வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் பொருளாயத உற்பத்திச் சக்திகள் அன்றைக்கிருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு - அல்லது அவற்றைச் சட்டபூர்வமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்ற சொத்துரிமை உறவுகளோடு - இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள் மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதிலிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறிவிடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது.

பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள், அந்த மாபெரும் மேற்கட்டுமானம் முழுவதையுமே சீக்கிரமாகவோ அல்லது சற்றுத் தாமதமாகவோ, மாற்றியமைக்கின்றன. இப்படிப்பட்ட மாற்றங்களை ஆராய்கிற பொழுது உற்பத்தியின் பொருளாதார நிலைமையில் ஏற்படுகிற பொருள்வகை மாற்றங்களுக்கும் (இயற்கை விஞ்ஞானத்தைப் போல இதைத் துல்லியமாக நிர்ணயிக்க முடியும்) சட்டம், அரசியல், மதம், கலைத் துறை அல்லது தத்துவஞானத் துறைகளில் - சுருக்கமாகச் சொல்வதென்றால்  சித்தாந்தத் துறைகளில் - இந்தப் போராட்டத்தை மனிதர்கள் உணர்ந்து  கொண்டு அதில் இறுதி முடிவுக்காகப் போராடுகின்ற கொள்கை வடிவங்களுக்கும் வேறுபாட்டைக் காண்பது எப்பொழுதுமே அவசியமாகும்.

ஒரு தனிநபர் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதைக் கொண்டு நாம் அவரைப் பற்றி முடிவு செய்வதில்லை. அது போலவே, இப்படி மாறிக் கொண்டிருக்கும் காலகட்டத்தை அதன் உணர்வைக் கொண்டு முடிவு செய்ய முடியாது. அதற்கு மாறாக, இந்த உணர்வைப் பொருளாயத வாழ்க்கையின் முரண்பாடுகள் மூலமாக, உற்பத்தியின் சமூக சக்திகளுக்கும், உற்பத்தி உறவுகளுக்கும் இடையே உள்ள போராட்டத்தின் மூலமாகவே விளக்க முடியும்.

எந்த சமூக அமைப்பும் அதற்குப் போதுமான உற்பத்தி சக்திகள் அனைத்தும் வளர்ச்சியடைவதற்கு முன்பாக ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை, புதிய, உயர்வான உற்பத்தி உறவுகள் தாங்கள் நீடித்திருக்கக் கூடிய பொருளாயத நிலைமைகள் பழைய சமூகத்தின் சுற்றுவட்டத்துக்குள் முதிர்ச்சியடைவதற்கு முன்பே பழைய உற்பத்தி உறவுகளை ஒருபோதும் அகற்றுவதில்லை. எனவே மனித குலம் தன்னால் சாதிக்கக் கூடிய கடமைகளையே தனக்குத் தவிர்க்க முடியாதபடி விதித்துக் கொள்கிறது. ஏனென்றால் பிரச்சினையைத் தீர்க்கக் கூடிய பொருளாயத நிலைமைகள் முன்பே இடம் பெற்ற பிறகு அல்லது குறைந்தபட்சம் உருவாக்கிக் கொண்டிருக்கும் பொழுதுதான் அந்தப் பிரச்சினையே தோன்றுகிறது என்பது அதிக நுணுக்கமாக ஆராயும் பொழுது புலப்படும்.” 
(அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு  முன்னுரை)

இம் முன்னுரையின் இந்தப் பகுதியில் மார்க்ஸ் தன்னுடைய தத்துவயியல் கண்ணோட்டமான பொருள்முதல்வாதத்தை மிகச் சுருக்கமாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்த முன்னுரையின் பொழிப்பு:-

மனிதர்கள் தமது வாழ்க்கைக்காக உற்பத்தி செய்திடும் போது, தவிர்க்க முடியாத வகையில் திட்டவட்டமான உறவுகளில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் மனிதர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து புறநிலையாக இருப்பவையாகும். 

இதுவரை வளர்ச்சியடைந்துள்ள  பொருளாதார உற்பத்திச் சக்திகளின் மட்டத்திற்கு ஏற்ப, உற்பத்தி உறவு ஏற்படுகிறது. இந்த உற்பத்தியின் கூட்டுமொத்தமே அன்றைய அரசியல் பொருளாதார அமைப்பாகும், அதுவே அச்சமூகத்தின் அடித்தளமாகும்.

இந்த அடித்தளத்தின் மீது சட்டம், அரசியல் போன்ற மேல்கட்டமைப்பு எழுப்பப்படுகிறது. இதற்கு பொருத்தமாக சமூக உணர்வின் வடிவங்கள் தோன்றுகின்றன.

மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை,  அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.

அடித்தளத்தில் ஏற்படுகிற மாற்றங்கள், மேல்கட்டமைப்பின் முழுமையும் விரைவாக அல்லது சற்று மெதுவாக மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

அடித்தளமே மேல்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது.

இவ்வாறு முடிவெடுத்ததிலிருந்து மார்க்ஸ் இந்த முடிவையே, தனது பொதுவான தத்துவயியல் கண்ணோட்டமாக, தமது அராய்ச்சிகளுக்கு வழிகாட்டும் கொள்கையாக அமைத்துக்கொண்டார்.

ஒரு சமூகத்தின் முரண்பாட்டை,  அந்த சமூகத்தின் உற்பத்தியில் இருந்துவருகிற உற்பத்தி சத்திகளுக்கும், உற்பத்தி உறவுகளுக்கும் உள்ள போராட்டத்தின் வழியாகவே விளங்கிக்கொள்ள முடியும்.

ஒரு சமூக அமைப்பிலிருந்து மற்றொரு அமைப்பிற்கு மாறவேண்டுமானால், அங்கு உற்பத்தி சக்திகள் போதுமான அளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும், இதற்கு முன்பாக பழைய சமூகம் அழிக்கப்பட முடியாது.

பழைய உற்பத்தி உறவுகள் மாறவேண்டும் என்றால், புதிய உற்பத்தி சக்திகள் முதிர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

இந்த புறநிலை விதிகளின் படியே, மனித குலம் தமது சாதிக்கக் கூடிய கடமைகளை அமைத்துக் கொள்கிறது.

பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய பொருளாதார நிலைமைகள் தோன்றுகின்ற பொழுதுதான் அதற்கான முடிவும்கிடைக்கும்.

இதன்படி மார்க்ஸ் கூறுவது, மனித சித்தத்தை சாராத புறநிலை போக்காக, உற்பத்தி நடைபெறுகிறது, அப்போது ஏற்படுகிற உற்பத்தி உறவுகளின் அடிப்படைகளே, அன்றைய பொருளாதார வாழ்வாகவும் சமூகத்தின் அடித்தளமாகவும் அமைகிறது. இந்த அடித்தளத்திற்கு ஏற்ப சட்ட, அரசியல் போன்ற மேல்கட்டமைப்பு தோன்றுகிறது. மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது. இதுவே மார்க்சுடைய சமூகவியல் கண்ணோட்டமான வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்ற தத்துவயியல் பிரிவாக அமைகிறது. இதனை புரிந்து கொள்வதற்கு மார்சியம் கூறும் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற கருத்தாக்கத்தை சற்று விரிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

சமூகஉற்பத்தி முறை தான், எல்லா வகையான சமூக உணர்வுநிலைகளையும் தீர்மானிக்கின்றன. உற்பத்தி முறை என்பது உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் ஆகிய இரண்டையும் உள்ளடங்கியவையாகும். இந்த பொருளாதார அமைப்பையே அடித்தளம் என்றழைக்கப்படுகிறது.

தத்துவயியல், மதம், அரசியல், சட்டம், அறநெறி, பண்பாடு, கலை போன்றவை குறிப்பிட்ட பொருளாதார அமைப்பிற்கு ஏற்ப தோன்றும் மேற்கட்டமைப்பாகும்.

அடித்தளத்திற்கும் மேற்கட்டமைப்புக்கும் இடையே ஒன்றுடனொன்றான தொடர்பு நிலவுகிறது. இந்தத் தொடர்பில் அடித்தளம் முதன்மையாகவும், மேற்கட்டமைப்பை தோற்றுவிக்கும் காரணமாகவும் இருக்கிறது. ஆகவே சமூகத்தின் அடித்தளத்திற்கு ஒத்த மேல்கட்டமைப்பு உருவாகிறது. இவ்வாறு கூறுவதால் மேற்கட்டமைப்பு என்பது தன்முனைப்பின்றி, அடித்தளத்தின் பிரதிபலிப்பாக மட்டும் செயல்படுவதாக சொல்லிவிட முடியாது. மேல்கட்டமைப்பின் தனிப் போக்கை மார்க்சியம் மறுத்திடவில்லை. அடித்தளத்தின் மீதான மேல்கட்டமைப்பின் தாக்கம், அடித்தளத்திற்கு பொருத்தமானதாக இருக்கும் என்பதைத்தான் வலியுறுத்துகிறது, இதனால் தான் மேல்கட்டமைப்பின் சுதந்திரம் சார்புநிலையானது என்ற கருத்தைத் தெரிவிக்கிறது. தீர்மானகரப் பங்காற்றுவது அடித்தளமேயாகும். அடித்தளத்தால் உருவாக்கப்பட்ட மேற்கட்டமைப்பு, அடித்தளத்தை உறுதிப்படுத்துகிறது. தோன்றிய அடித்தளத்தை வலுபடுத்த முடியுமே தவிர அடித்தளத்தில் எந்த மாற்றத்தையும், மேல்கட்டமைப்பால் உருவாக்க முடியாது.

மேற்கட்டமைப்பு என்பதின் தன்முனைப்பான செயற்பாட்டை மறுத்திடாமலும், இதன் செயப்பாட்டின் இன்றியமையாததை மார்க்சியம் அறிந்திடாமலும் இல்லை, அடித்தளத்தில் ஏற்படும் மாற்றம், மேற்கட்டமைப்பில் உடனே, தானாகவே ஏற்பட்டுவிடும் என்றும் கூறவில்லை, மேற்கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள், அடித்தளத்தால் தீர்மானிக்கப்படுகிறது. மேற்கட்டமைப்பு, அடித்தளத்தால் நிர்ணயிக்கப்பட்ட வகையில் சுதந்திரத்தோடு செயல்படுகிறது என்பதைத்தான் மார்க்சியம் வலியுறுத்துகிறது. 

சமூக வாழ்வின் அடிப்படை பொருளுற்பத்தி முறையில் அடங்கியிருக்கிறது.  இந்த பொருள் உற்பத்திமுறை என்பது உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் என்ற இவ்விரண்டையும் உட்கொண்டுள்ளது.

Wednesday 8 August 2018

சமூகத்தை அணுகுவதற்கான ஒரு வழிகாட்டியே மார்க்சியம்:-


சமூகத்தைப் பற்றிய மார்க்சியத் தத்துவத்தை விளக்கிக் கூறுகிறபோது, வரலாற்றைப் படிப்பதற்கான ஒரு வழிகாட்டிதான் மார்க்சியமே ஒழிய, வரலாற்றுப் போக்கையே உருவாக்குவதற்கான ஒரு கருவி, மார்க்கம் அல்ல என்பதை எடுத்த எடுப்பிலேயே கூறிவிட வேண்டும். வரலாற்று ரகசியங்களைப் படித்துப் புரிந்துகொள்ள வேண்டிய தேவையே இல்லாமல் ஆக்கிவிடக்கூடிய மந்திரக்கோல் அல்ல மார்க்சியம். இந்த நாட்டில் அல்லது அந்த நாட்டில், இந்த அல்லது இன்னொரு கட்டத்தில் நடக்கக் கூடிய வரலாற்றுப் போக்கைக் கணித்து கூறிவிட முடியும் என்று, வரலாற்றுப் பொருள்முதல்வாதம் கூறிக் கொள்வது இல்லை.

சமூகத்தின் வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கக்கூடிய பொது விதிகளை இது படிப்பதுடன், பொதுவாகக் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை வழிகாட்டியாக உருவாக்குகிறது. அதை அமுலாக்குவது, பிரிட்டனிலும், பிரான்சிலும், அமெரிக்காவிலும், முதலாளித்துவ நாடுகளிலும், சோஷலிச நாடுகளிலும், தொழில்மயமான நாடுகளிலும், வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கும் நாடுகளிலும், மாறுபடலாம். ஏனெனில், அங்குள்ள குறிப்பிட்ட சூழ்நிலையும், நீண்ட முழுமையான வரலாற்றுப் போக்கும், இந்நாடுகளில், அல்லது ஒரு வகையான குழு நாடுகளில் தனித்தனித் தன்மைகளில் வேறுபட்டிருக்கக்கூடும்.
… … … …
வரலாற்றுப் பார்வையில் பொருள்முதல்வாதத்தின் பொருள் என்னவென்றால், சமூகத்தின் பொருளாதார வாழ்வை அங்கீகரிப்பதாகும், முதலில் பொருளாதார உற்பத்தியின் சமூகப் போக்கையும் அதாவது சமூக வாழ்க்கைக்குத் தேவையான இன்னொரு ஆதார விஷயம் என்றல்லாமல், எல்லா சமூகத் தன்மைகளுக்கும் போக்குகளுக்கும் ஊடு இணைப்பாக உள்ள அடிப்படைப் பொருளாதாரமே என்றும், அதுதான் சமூகத்தின் ஆன்மிகப்பிரிவு உள்ளிட்ட இதர எல்லா சமூக வெளிப்பாடுகளுக்கும் இறுதியில் தீர்மானிக்கிற சக்தியாக இருக்கிறது என்றும் அங்கீகரிப்பதாகும்.”
 (வரலாற்றுப் பொருள்முதல்வாதம்-வி.கெல்லி, எம்.கவல்ஸோன்- பக்கம்-37-38)