Sunday 2 January 2022

“பண்டைய வேதத் தத்துவங்களும் வேத மறுப்புப் பௌத்தமும்” என்ற தனது நூலுக்கு நா.வானமாமலை எழுதிய முகவுரை:-

 


“இந்நூல் (பண்டைய வேதத் தத்துவங்களும் வேத மறுப்புப் பௌத்தமும்) ஒரு விரிவான ஆய்வு நூல் அன்று. மார்க்சிய வாதிகளுக்கும், முற்போக்குவாதிகளுக்கும் நமது பண்டைய தத்துவங்களை அவற்றின் சமுதாய வளர்ச்சிப் பின்னணியில் அறிமுகப்படுத்துவதே இந்நூலின் நோக்கம். இவ்வறிமுகம்கூட மிகவும் கடினமாக இருக்கிறது என்று தொழிலாளித் தோழர்களும், கம்யூனிஸ்டுக் கட்சி ஊழியர்களும் உணரக்கூடும். இது ஒரு சிக்கலான பிரச்சினை. தத்துவம் புரிந்து கொள்ளக் கடினமானது. அதை எளிதில் புரியும்படி விளக்க வேண்டும். ஆனால், நமது தொழிலாளர்களுக்கு எந்தத் தத்துவத்தைப் பற்றியும் தெரியாது; எளிய தத்துவ நூல்களும் தமிழில் கிடைப்பதில்லை. இங்கேதான், எங்கே தத்துவத்தை விளக்கத் தொடங்குவது என்பது எனக்குப் புரியவில்லை . ஆயினும் இந்தியத் தத்துவப் பரம்பரையையும், பண்பாட்டுப் பரம்பரையையும், புரட்சிகரமான தொழிலாளி வர்க்கம் தெரிந்து கொள்ள வேண்டியது, எதிரி வர்க்கங்களின் தத்துவங்களை எதிர்த்துப் போராட அவசியமாகும்.”