Thursday 6 April 2017

சமூகத்தை மாற்றி அமைப்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு

"நாம் முற்றிலும் மார்க்சியக் கோட்பாட்டின் முறையிலான
நிலைபாட்டை எமது அடிநிலையாய்க் கொண்டு நிற்கிறோம்
...
புரட்சிகர சோஷலிடுக் கட்சியின் முன்னுள்ள மெய்யான பணி......
சமூகத்தைத் திருத்தியமைப்பதற்குத் திட்டங்கள் வரைவதல்ல,
தொழிலாளர்களுடைய நிலைமையை மேம்படச் செய்வது குறித்து
முதலாளிகளுக்கும் அவர்களது அடிவருடிகளுக்கும் அறிவுரை அளிப்பதல்ல, சதிகள் புரிந்திடுவதல்ல இப்பணி, பாட்டாளி வாக்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தை ஒழுங்கமைப்பு செய்வதும், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரம் வெல்வதையும் சோஷலிசச் சமூகம் ஒழுங்கமைக்கப்படுவதையும் இறுதிக் குறிக்கோளாய்க் கொண்ட இந்த வாக்கப்போராட்டத்துக்குத் தலைமை தாங்குவதுமே இப்பணி என்று அது தெளிவுபடுத்திற்று."
லெனின் -(நமது வேலைத்திட்டம்).

                   இயற்கையைப் போன்றே சமூகத்திலும் புறநிலை விதிகளின் அடிப்படையில் வளர்ச்சி நடைபெறுகிறது என்பதை  மார்க்சியம்  நமக்கு விளக்குகிறது, ஆனால் முதலாளித்துவ அறிஞர்கள் சமூகம் பற்றிய மார்க்சியக் கண்ணோட்டத்தை  விதிவாதத்துக்கு ஆட்பட்டதாக விமர்சிக்கின்றனர்.  சமூக வரலாற்று நிகழ்வுகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகின்றன என்று  மார்க்சியம் கருதுவதாக விமர்சிக்கினறனர். இதன் அடிப்படையில் முதலாளித்துவ அறிஞர்கள் முதலாளித்துவ சமூகத்தைத் தொடர்ந்து சோஷலிச சமூகம் வரும் என்பதை மறுக்கின்றனர். மேலும் அவர்கள்சூரியன் உதிப்பதற்கு எந்த கம்யூனிஸ்ட் கட்சியும் இயற்கைக்கு தேவைப் படாதது போல், சமூகம் புறநிலை  விதிப்படி செயற்படும்  என்றால் சோஷலிச சமூகத்துக்காக கம்யூனிஸ்ட் கட்சி ஏன் போராட வேண்டும் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

       வரலாற்று விதிகள் மக்களது நடவடிக்கையின் வழியே செயற்படுகின்றன என்பதே, இயற்கைக்கும் சமூக விதிக்கும் உள்ள வேறுபாடு என்பதை அறிந்திருக்கிறது மார்க்சியம். மக்களே செயல்முனைப்போடு வரலாற்றைப் படைக்கின்றனர். மக்கள் உணர்வு பூர்வமாகவே தமது குறிக்கோளை அமைத்துஅதன்படியே செயற்படுத்துகின்றனர். இந்த உணர்வுபூர்வமான செயற்பாட்டை தன்னிச்சையாக அவர்கள் அமைத்துக் கொள்வதில்லைமாறாக புறநிலை விதிகளின் தாக்கத்தின் விளைவாக உருவாக்கிக் கொள்கின்றனர். இவைகள் வர்க்கங்களின் நலன்களால் தீர்மானிக்கப்படுகிறது.

இன்றைய முதலாளித்துவ சமூகம் உழைப்பாளிகளை சுரண்டி வளர்கிறது என்பது கண்கூடான ஒன்றாகும். உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும் தனி முதலாளியின் அபகரிப்பு முறைக்கும் இடையேயுள்ள முரண்பாட்டின் உச்சமே இன்றைக்கு பாட்டாளிகளுக்கும் முதலாளிகளுக்கும் இடையே வர்க்கப் போராட்டமாக காட்சியளிக்கிறது.

உழைப்பாளிகளைச் சுரண்டி தனது செல்வங்களைப் பெருக்கிக் கொள்ளும் முதலாளி வர்க்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கு உழைப்பாளிகளுக்கென்று தனித்த இயக்கம் தேவைப்படுகிறது. இந்த இயக்கத்தை நடத்திச் செல்லும் கம்யூனிஸ்டுகள் தமக்கென எந்த குறுங்குழுவாத கண்ணோட்டத்தையும் வைத்திருக்கவில்லை. கம்யூனிஸ்டுகள் தொழிலாளி வர்க்கத்தின் நலன்களைத் தவிர்த்து வேறு நோக்கம் எதனையும் கொண்டவர்கள் அல்ல. முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளி வர்க்கம் சந்திக்க வேண்டிய வளர்ச்சிக் கட்டங்களை அறிந்து அதற்கான போராட்ட உத்திகளை வகுத்து அதனை நடைமுறைப்படுத்துகின்றனர்.

கம்யூனிஸ்டுகள் தாம் நடத்தும் போராட்ட வழிமுறைகளைமார்க்ஸ் வகுத்துக் கொடுத்த வரலாற்றியல் பொருள்முதல்வாத அடிப்படையில் உடனடி போராட்டத்தையும் இறுதி குறிக்கோளையும் அமைத்துக் கொள்கின்றனர். புரட்சிகரமான கோட்பாடு இல்லையேல் புரட்சிகரமான இயக்கம் இல்லை என்று லெனின் கூறியதற்கு இணங்கதங்களுக்கான புரட்சிகரமான கோட்பாட்டை பொருள்முதல்வாத கண்ணோட்டத்தின் அடிப்படையில் அமைத்துக்கொள்கின்றனர்.

முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான போராட்டத்தில் பாட்டாளிகளின் முன்னணிப்படையாக கம்யூனிஸ்ட் இயக்கம் செயல்படுகிறது. முதலாளித்துவ அமைப்பை தூக்கி எறிவதற்கும்அதனிடத்தில் தொழிலாளி வர்க்கத்தின் ஆட்சியை அமைப்பதற்கும்தொழிலாளிகளை ஒன்றிணைக்கும் சக்தியாக கம்யூனிஸ்ட் இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் உறுதியோடு செயற்பட மார்க்சிய சித்தாந்தம் உதவிடுகிறது.

உற்பத்தியின் வளர்ச்சி என்பது உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியிலிருந்தே தொடங்குகிறது. இந்த உற்பத்திச் சக்தியின் புரட்சிகர மாற்றம் உழைப்புக் கருவிகளின் வளர்ச்சியில் அடங்கியிருக்கிறது. உற்பத்திச் சக்திகள் எத்தகையதோஅத்தகையதாக உற்பத்தி உறவுகள் அமைகிறது. உற்பத்திச் சக்திகள் உற்பத்தி உறவுகளைக் காட்டிலும் முன்னதாகவே வளர்ச்சியை எட்டுகின்றன. இதன் விளைவாக புதிய உற்பத்திச் சக்திகள் பழைமையாகிவிட்ட உற்பத்தி உறவுகளிடம் முரணை அதிகப்படுத்துகின்றன.

பழைய உற்பத்தி முறைக்குள்ளே புதிய உற்பத்தி முறை முதிர்வது மனிதர்களின் உணர்வை சாராமல் நிகழ்கிறது. இந்நிகழ்வு உற்பத்திச் சக்தியின் வளர்ச்சியால் ஏற்படுகிறது. இந்தப் புறநிலையே வர்க்கப் போராட்டத்துக்கான பொருளாயாத சக்தியாக இருக்கிறது. அதாவது இப்புறநிலை வர்க்கப்போராட்டத்தில் பிரதிபலிக்கிறது. இறுதியில் வார்க்கப் போராட்டம் உச்சத்தை எட்டுகிறது. இந்த உற்பத்தி முரண் சமூகப் புரட்சியின் மூலமே தீர்க்கப்படுகிறது.

இங்கு வரலாற்றின் பொது விதியை மட்டுமே எடுத்துரைத்திருக்கிறது. இதனை அப்படியே வரலாற்றின் மீது திணிக்க முடியாது. ஒவ்வொரு நாட்டின் பொருள் உற்பத்தியின் நிலையினையும், அதனால் ஏற்படுகிற வர்க்க உறவுகளின் முரணையும், உள்ளடக்கிய பல்வேறு வளர்ச்சிப் போக்கின் தனித்த தன்மைகளையும் அறிந்து செயற்பாட்டைத் தீர்மானிக்க வேண்டும்.

        அந்தந்த நாட்டினுடைய வளர்ச்சியின் புறநிலை விதிகளை அறிந்துஅதனை ஆதாரமாகக் கொண்டு வரலாற்றின்  திசைவழியை தெரிந்துஅதனடிப்படையில் தனது செயல்தந்திரத்தை அமைத்து கம்யூனிஸ்ட் இயக்கம் செயற்பட வரலாற்றியல் பொருள்முதல்வாதம் வழிகாட்டுகிறது.

புறநிலை  விதி என்கிறசமூக வளர்ச்சியின் போக்கை உணர்ந்து அதன் வழியில் செல்வதையே அவசியத்தை அறிந்து செயற்படுவதாகக் கூறுகிறது மார்க்சியம். புறநிலை அவசியத்தைப் பற்றிய அறிவு மக்களுக்கு வரலாற்றில் செயற்பாட்டுச் சுதந்திரத்தைக் கொடுக்கிறது. இதனை அறிந்து கம்யூனிஸ்ட் கட்சியின்  தலைமை தனது செயற்பாட்டை வகுத்துக் கொள்கிறது.

       முற்போக்கு வர்க்கமான பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படை என்றழைக்கின்ற கட்சிசில நேரங்களில் சமூகம் வழங்கிய வாய்ப்புகளை தவறவிட்ட நிகழ்வுகள் உண்டு. வரலாற்று அவசியத்தின் அடிப்படையில் சென்று, கம்யூனிஸ்ட் இயக்கம் வெற்றி பெறுவதற்கு கட்சியானதுபாட்டாளி வர்க்க உணர்வில் உறுதியும், அமைப்பின் கட்டுப்பாடும் பெற்றதாக இருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.

       கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு சமூக வளர்ச்சியைப் பற்றிய கண்ணோட்டத்தை வரலாற்றியல் பொருள்முதல்வாதம் அளித்திடுகிறது. தத்துவம் தனது பொருளாயத ஆயுதத்தைப் பாட்டாளியிடம் காண்பது போலவேபாட்டாளி வர்க்கம் தனது அறிவார்ந்த ஆயுதத்தை தத்தவத்திடம் காண்கிறது என்பார் மார்க்ஸ்.

பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில்தான் பாட்டாளி வர்க்க உணர்வையும், கட்டுப்பாட்டையும் பெற்றுக்கொள்ள முடியும். மார்க்சும் எங்கெல்சும் தத்துவஞானப் பொருள்முதல்வாதத்தை மிகுந்த மனத்திண்மையோடு ஆதரித்துப் பாதுகாத்தனர். இந்த அடிப்படையிலிருந்து  விலகிச் செல்லும் ஒவ்வொரு திரிபும் மிகவும் தவறாகியிருப்பதை அவர்கள் அடிக்கடி விளக்கி வந்தார்கள் என்று லெனின் கூறுவார். இந்த மார்க்சிய ஆசான்களின் வழிகாட்டுதலில் சென்றால்தான்முதலாளித்துவச் சுரண்டலின் காரணத்தைப் புரிந்து கொண்டு,  அதன் உள்முரண்பாட்டின் தீர்வாய்முதலாளித்துவத்தைத் தூக்கியெறிந்துவிட்டு சோஷலிச சமூகத்தை அமைக்க முடியும்.

அதற்கு வரலாற்றியல் பொருள்முதல்வாதமே கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழிகாட்டும்.


இயற்கையிலும் சமூகத்திலும் இயக்கவியலின் செயற்பாடு

இயற்கையில் இயக்கவியலின் செயற்பாட்டை ஒர் எளிய எடுத்துக்காட்டின் வழியில் விளக்குவோம்.

நீர் என்பது திரவநிலையில் உள்ளது. இந்நீர் பனிக்கட்டியாக திடநிலைக்கு உருமாற்றம் ஏற்படும் நிகழ்வின் வழியில் இயக்கவியலின் விதிகள் செயற்படுவதை அறிந்து கொள்வோம்.

நீர் சுற்றுப்புற சூழலால், அதாவது பருவநிலை மாற்றத்தால் குளிர்ச்சி அடைகிறது. சுற்றுச் சூழலின் தாக்கத்தின் தொடக்கத்தில் நீர் குளிர்ச்சியை மட்டுமே கொண்டதாக திரவநிலையிலேயே காணப்படுகிறது. தொடர்ச்சியாகத் தாக்கும் போது குளிர்ச்சியின் அளவு உயர்ந்து கொண்டே செல்கிறது. குறிப்பிட்ட அளவை எட்டியவுடன் அதாவது ‘0’ டிகிரி செல்சியஸைத் தொட்டவுடன் நீரின் திரவநிலையில் மாற்றம் பெற்று திடநிலைக்கு செல்கிறது.

திரவ நிலையில் இருந்து குறிப்பிட்ட அளவு குளிர்ச்சி ஏற்படும் போது திரவநிலை மறுக்கப்பட்டு திடநிலைக்கு மாறுகிறது. அதாவது இதுவரை இருந்த பொருள் மறைந்து புதிய பொருள் தோற்றம் பெறுவதே பண்புநிலை மாற்றம் என்று அழைக்கப்படுகிறது.

திரவநிலையில் உள்ள நீரில், நீர் நிலைக்கான வெப்பத்துக்கும், சுற்றுச்சூழலால் ஏற்படுகின்ற குளிர்ச்சியினுடைய நிலைக்குமான எதிர்நிலைகளின் முரணே இங்கு நீர் என்ற நிலையில் நமக்கு காட்சியளித்தது. இந்த நீர் குறிப்பிட்ட கட்டம்வரை அதாவது பண்பு நிலையில் பனியாக மாற்றம் ஏற்படாதவரையில், நீரின் வெப்பநிலையும், சுற்றுச்சூழல் ஏற்படுத்தும் குளிர்ச்சியும் இணைந்து ஐக்கிய நிலையில் இருக்கிறது. நீரின் வெப்பநிலையும், சுற்றுச்சூழல் ஏற்படுத்தும் குளிர்ச்சிக்கும் இடயேயான போராட்டத்தின் ஊடேயே இந்த ஐக்கியம் நிலைபெற்றிருக்கிறது. குளிர்ச்சியின் தாக்கம் அதிகரித்து 0’ டிகிரி செல்சியஸ் நிலையை எட்டும் போது நீர் என்ற பண்பு மறைந்து பனிக்கட்டி என்ற புதிய பண்பை பெறுகிறது. அதாவது நீர் என்ற நிலை மறுக்கப்பட்டு பனிகட்டி என்ற நிலையினை பெறுகிறது.

சமூக மாற்றத்தில் இயக்கவியல் விதிகள் செயற்படுவதை, முதலாளித்துவ சமூக அமைப்பு முறையிலிருந்து சோஷலிச சமூக அமைப்பு முறைக்கு மாற்றம் பெறுவதின் வழியில் விளக்குவோம்.

சமூக உற்பத்தியின் வளர்ச்சியால் சமூகம் முன்னேறுகிறது. சமூக உற்பத்தியின் வளர்ச்சி என்பது உற்பத்திச் சக்திகளின் வளாச்சியில் இருந்து தொடங்குகிறது. உழைப்புச் சக்தியின் வளர்ச்சி முதன்மையாக உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியால் நிர்ணயிக்கப்படுகிறது.

நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையின்போது உருவாகிய பட்டறைத் தொழில் போதாமையாகிப் போகும்போது, நீராவி இயந்திரங்களின் வருகை முதலாளித்துவ உற்பத்தி முறையைத் தோற்றுவித்ததுகையால் ஓட்டி மாவரைக்கும் இயந்திரம் நிலப்பிரபுவைக் கொண்ட சமுதாயத்தைக் கொடுக்கிறது, நீராவியால் ஓடுகிற இயந்திரம் தொழில்துறை முதலாளியைக் கொண்ட சமுதாயத்தைக் கொடுக்கிறது என்று மார்க்ஸ் கூறுவார்.

உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான முரண்பாடே சமூக வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கிறது. இந்த முரணின் செயற்பாட்டை இயக்கவியல் முறையில் விளக்குவோம்.

முதலாளித்துவ உற்பத்தி முறையில், உற்பத்தி சமூகமுறையாகவும், உற்பத்தி உறவுகள் என்பது தனியுடைமையின் அடிப்படையிலான வினியோகமாகவும் இருக்கிறது.

முதலாளித்துவ உற்பத்தி முறையின் தொடக்கத்தில், நிலப்பிரபுத்துவ உற்பத்தி சக்திகளுடன் ஒப்பிடும் போது முதலாளித்துவ உற்பத்திச் சக்திகள் மேலோங்கி காணப்படுகிறது. அதற்கு ஒப்பவே சமூக உற்பத்தியின் வேலைப் பிரிவு தொடக்க நிலையினதாகவே இருக்கிறது.

இந்த முதலாளித்துவ உற்பத்தி முறையின் தொடக்கத்தில், தனியுடைமை முதலாளிகளும் உற்பத்தி கருவிகளை இழந்து உழைப்புச்க்தியைத் தவிர சொந்தமாக கொள்வதற்கு ஏதுமற்ற சுதந்திரமான தொழிலாளிகளும் இணைந்து காணப்படுகின்றனர். இவ்விருவரும் இன்றி முதலாளித்துவ உற்பத்திமுறை நிகழாது. இதில்தான் இவ்விருவர்களின் ஐக்கியம் காணப்படுகிறது. இந்த ஐக்கியம் சுரண்டல் அடிப்படையிலானது என்பதானால் எதிர்நிலைகளின் ஐக்கியம் என்று கூறப்படுகிறது. இந்த ஐக்கியம் ஒப்பீட்டு நிலையினதாகும். இதன் போராட்டம் அறுதியானதாகும்.

முதலாளித்துவ உற்பத்தி முறையில் தனித்தனி முதலாளிகளுக்கு இடையிலான போட்டியினாலும், தொழிலாளிகளின் போராட்டத்தை குறைக்கும் நோக்கத்தோடும் முதலாளிகள் தமது உற்பத்தி முறையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதிலும் புதிய இயந்திரங்களை புகுத்துவதிலும் அதிக கவனம் செலுத்துகின்றனர். இதனையே கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, முதலாளித்துவ வர்க்கத்தால் ஓயாது ஒழியாது உற்பத்திக் கருவிகளிலும், இதன் மூலம் உற்பத்தி உறவுகளிலும், இவற்றுடன் கூடவே சமூக உறவுகள் அனைத்திலுமே புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தாமல் வாழ முடியாது என்கிறது.

முதலாளித்துவ உற்பத்தி முறையின் தொடக்கத்தில் காணப்பட்டதுபோல் இல்லாமல், இயந்திரங்களின் வளர்ச்சி பிற்காலத்தில் பிரம்மாண்டமாக இருக்கிறது. இந்த உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி, முதலாளியினுடைய தனிச்சொத்துடமை முறையோடு மோதுகிறது. இதனை எங்கெல்ஸ், சமூகமயமாகி விட்ட பொருள் உற்பத்திக்கும், முதலாளித்துவ சுவீகரிப்புக்கும் இடையிலான முரண்பாடு, பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான பகைமையாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டது என்று கூறுவார்.

உற்பத்திச் சாதனங்களின் மையப்பாடும் உழைப்பின் சமூகமயமாதலும் வளர்ந்து செல்கையில், அவற்றின் முதலாளித்துவ மேலோடு அவற்றுக்கு ஒவ்வாததாகி விடுகிறது. ஆகவே அந்த மேலோடு உடைத்து எறியப்படுகிறது. முதலாளித்துவ தனியுடைமையின் சாவு மணி ஒலிக்கிறது. உடைமை பறிப்போரின் உடைமை பறிக்கப்படுகிறது, என்று மூலதன நூல் கூறுகிறது.

இந்த சமூக மாற்றம் என்பது எந்த ஒரு மனிதனின் தனிப்பட்ட விருப்பமாக இல்லாமல், சமூக வளர்ச்சியின் விளைவாகத் தோன்றுகிறது என்பதை இயக்கவியல் முறையில் விளக்கப்படுத்துவோம். இப்படிச் சொல்வதால் சமூகம் எதோ நேர்ப்பாதை வழியாக செல்வதாகவும் அதனைப் பிடித்துவிட்டால் போதும் என்ற வகையில் எளிதாகப் புரிந்துக்கொள்ளக் கூடாது. சமூகமயமாதல் என்பதில் காணப்படும் சிக்கலான பல்வேறு போக்குகளிலும் தெளிவைப் பெற்றாக வேண்டும்
.
முதலாளித்துவ உற்பத்தி முறையில் காணப்படும் முரண், தனிச்சொத்து அடிப்படையில் திரட்டப்பட்ட உற்பத்திச் சாதனங்களின் மையப்பாட்டிற்கும், உழைப்பின் சமூகமயமாதலுக்கும் இடையே காணப்படுகிறது. இந்த முரணில்தான் ஐக்கியமும் போராட்டமும் அடங்கியிருக்கிறது. இவ்விரண்டும் இல்லாமல் இந்த உற்பத்தி முறை நிகழாது. இந்த இருப்பு என்பது போராட்டத்தின் ஊடேயே நிகழ்கிறது. போராடுகின்ற இவ்விரண்டின் இருப்பே இதன் ஐக்கியத்தைச் சுட்டுகிறது. இந்த ஐக்கியம் முரண் அடிப்படையில் காணப்படுவதால் இவற்றுக்கு இடையேயான ஐக்கியம் போராட்டமாகவே காணப்படுகிறது. ஐக்கியமும் போராட்டமும் என்ற இயக்கவியல் விதியின் இரண்டாம் விதியை இவ்வாறு விளங்கிக் கொள்ளலாம்.

அடுத்து அளவு மாறுபாடுவதும் அதன் மூலம் பண்பு மாறுவதும் பற்றிய விதிக்கு வருவோம்.

சரக்கு உற்பத்தி என்பதே சமூக உற்பத்திதான். முதலாளித்துவ உற்பத்தி முறையின் தொடக்கத்தில் தனிச்சொத்தின் அடிப்படையிலான உற்பத்திச் சாதனங்களின் மையப்பாடு எளிமையானதாக இருக்கிறது. உழைப்பின் சமூகத் தன்மையும் தொடக்க நிலையிலானதாக இருக்கிறது. இதனால் இதனை முழுமையாக அறிந்திட முடியவில்லை. இவற்றின் வளர்ச்சியினால் அளவுகள் மாறுபடுகின்றன. இந்த மாறுபாடுகள் இவற்றின் முரணை மிகுதியாக்கி விடுகிறது. இந்த மிகுதி அதன் பழைய வடிவத்தோடு மோதுகிறது. இந்த மோதல் அதனை தூக்கி எறிவதிலும் புதிய வடிவத்தை அமைப்பதிலும் முடிகிறது.

மார்க்ஸ் இதனை தமது அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு என்ற நூலின் முன்னுரையில் கூறியுள்ளார். வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் பொருளாயத உற்பத்திச் சக்திகள் அன்றைக்கு இருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள் மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதிலிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறிவிடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது.

மார்க்ஸ் குறிப்பிடுவது போல் இந்த அளவு மாறுபாடு பண்பு மாறுபாடாக மாறும் போது புரட்சியின் சகாப்தம் தொடங்குகிறது.

அடுத்து நிலைமறுப்பின் நிலைறுப்பு என்ற மூன்றாம் விதிக்கு வருவோம்.

முதலாளித்துவ உற்பத்தி முறையின் முதிர்வில், சமூக உற்பத்தியாக மாறிப்போன, புதிய சூழ்நிலைமைக்கும், பழைய தனிசொத்து அடிப்படையிலான வினியோக முறைக்கும் இடையிலான முரண் முற்றி, உற்பத்தியின் வளர்ச்சிக்கு, முதலாளித்துவ உற்பத்தி முறை தடையாகப் போனதனால் பழைய உற்பத்திமுறை மறுக்கப்படுகிறது. முதலாளி வர்க்கத்தின் கைகளில் இருந்து நழுவிக் கொண்டிருக்கும் சமூகமயமான உற்பத்தி சாதனங்களை பாட்டாளி வர்க்கம் புரட்சியின் வழியில் (பாய்ச்சல்) கையகப்படுத்தி பொதுச் சொத்தாய் மாற்றி பிரச்சினைக்கு தீர்வளிக்கிறது. இந்தச் செயற்பாட்டின் மூலம் பாட்டாளி வர்க்கம் உற்பத்திச் சாதனங்களை அவை இதுகாறும் தாங்கி இருந்த மூலதன இயல்பிலிருந்து விடுவித்து, அவற்றின் சமூக இயல்பு செயல்படுவதற்கு முழுச் சுதந்திரம் அளிக்கின்றது. இவ்வாறு முதலாளித்துவ உற்பத்தி முறை என்கிற அமைப்பு நிலைமறுக்கப்பட்டு சோஷலிச உற்பத்தி முறை என்கிற அமைப்பு நிலைபெறுகிறது.

இயக்கவியலின் முதன்மையைப் புரிந்து கொள்வதற்கு இயக்கவியலை மறுக்கின்ற போக்கால் நிகழக்கூடியது என்ன என்பதை பார்த்தால் தெளிவாகும். மார்க்சியத்தின் இயக்கவியலை மறுக்கின்ற சீர்திருத்தவாதிகள் பரிணாமவாதத்தை முன்வைக்கின்றனர். முதலாளித்துவத்தில் இருந்து சோஷலிசத்துக்கு மாறுவது சீர்திருத்தங்களின் வழியில், முதலாளித்துவ அமைப்பு முறையின் அடித்தளங்களை பாதிக்காத வகையில் செய்திட முடியும்  என்று கருதுகின்றனர். இயக்கவியலின் பாய்சல் என்கிற இடைமுறிவைப் புறக்கணித்து சீர்திருத்தங்களின் வழியில் சமாதானமாக, சமூகப் புரட்சி ஏற்படாமல் சோஷலிசத்துக்கு மாறிவிட முடியும் என்று நம்புகின்றனர்.

அடுத்து இடதுசாரி தீவிரவாதிகள், இவர்கள் சமூகப் பாய்ச்சலுக்கு, அளவுமாற்றத்தின் தேவையை மறுதலிக்கின்றனர். உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின் அளவு மாறுபாட்டை கணக்கில் கொள்ளாமல் பண்பு மாற்றத்தை மட்டுமே முன்வைத்து, பாய்ச்சல் முறையான புரட்சி கட்டத்தை மட்டுமே செயற்படுத்த துடிக்கின்றனர். அதாவது இடதுசாரி தீவிரவாதிகள் பாய்ச்சல் ஏற்படுவதற்கு தேவைப்படுகிற அளவு மாற்றத்தை விடுத்து, பாய்ச்சலாக பாய்வதற்கு முயற்சிக்கின்றனர். மேலே மார்க்ஸ் கூறிய சமூகப் புரட்சியின் சகாப்தத்தில் காணப்படும் மேற்கட்டமைப்பின் தீவிரசெயல்பாட்டை தீர்மானிக்கும் செயற்பாடாக புரிந்து கொண்டு மேற்கட்டமைப்புக்கு முதன்மையிடம் கொடுத்து அடித்தளதை இரண்டாம் இடத்திற்கு தள்ளிவிடுகின்றனர்.


அளவு மாற்றத்தின் முறிவையே இயக்கவியல் பாய்ச்சல் என்கிறது. இது பழைய நிலையை மறுத்து புதியமுறைக்கு நிலைமாறுவதைக் குறிக்கிறது. அளவு மாற்றம் பண்பு மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்ற விதியை மட்டும் ஏற்கின்ற ஒற்றைப் போக்கு, இயற்கையில் பாய்ச்சலையும், சமூக மாற்றத்தில் புரட்சியையும் மறுக்கின்ற இயக்கமறுப்பியலாகும்.  

இயக்கவியலின் வகையினங்கள்

(Categories of dialectics)

எல்லா விஞ்ஞான விதிகளுக்கும் அதற்குரிய வகையினங்கள் (Categories) இருக்கின்றன. அந்த வகையினங்களினுடைய வகைப்பிரிவின் அடிப்படையில்தான் அந்த விஞ்ஞானங்களின் விதிகளைப் புரிந்து செயற்படுத்த முடிகிறது. அரசியல் பொருளாதாரம் என்கிற விஞ்ஞானத்தை படித்தறிவற்கு சரக்கின் இரட்டைத் தன்மை, உழைப்பின் இரட்டைத் தன்மை, உற்பத்திக் கருவிகள், உற்பத்திச் சக்திகள், உற்பத்தி உறவுகள், மூலதனம், உபரி மதிப்பு, மறுவுற்பத்தி போன்ற வகையினங்களை அறிந்திருக்க வேண்டும். தத்துவம் என்ற விஞ்ஞானத்துக்கு  உணர்வுநிலை, பருப்பொருள், விசும்பு, காலம், அறிவுத் தோற்றவியல் போன்ற வகையினங்கள் இருக்கிறது.

இயக்கமறுப்பியல் கண்ணோட்டம், புறநிலையின் கூறுகளின் இணைப்பையும் தொடர்பையும் ஒப்புக் கொள்வதில்லை. அதனால் காரணம், விளைவு, உள்ளடக்கம், வடிவம் என்பது போன்ற வகையினங்களை ஏற்றுக் கொள்வதில்லை.

வகையினங்கள், புறநிலையான உண்மைகளை அறிதலின் நிகழ்வுப்போக்கால் உருவாகின்றன. இந்த வகையினங்களின் மூலம் சுற்றியுள்ள உலகின் புறநிலைக் கூறுகளின் பிரதிபலிப்பைக்கொண்டு அனைத்தின் தொடர்பு, இணைப்பு ஆகியவைகளை அறிந்துகொள்ளப்படுகிறது.


இந்த வகையினங்களை அறிந்து கொள்ளும்போது அவற்றின் சொல்விளக்கத்தோடு நின்றுவிடக்கூடாது. அச்சொல் உணர்த்தும்  விளக்கத்தை முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும். அதன் ஆழ்ந்த பொருளை அறிய வேண்டும்.

1.தனியானது, குறிப்பானது, சர்வப்பொதுவானது (Individual, particular, Universal)

உலகில் காணப்படும் ஒவ்வொரு பொருளும், நிகழ்வும் அவற்றுக்கே உரிய தனியான தன்மையும், அவைகளுக்கு உரிய பொதுத் தன்மையும் பெற்றதாக இருக்கிறது. முற்றிலும் ஒரே மாதிரியான இரண்டை பார்க்க முடியாது. ஓரே மரத்தில் காணப்படும் இலைகள் ஒவ்வொன்றும் சிறுமாற்றங்களையேனும் தம்முள் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. அதே நேரத்தில் அவ்விலைகளுக்கிடையே உள்ள பொதுத் தன்மையாக அவைகள் ஒருகுறிப்பிட்டவகை மரத்தின் இலைகள் என்று அறிந்துகொள்ள முடிகிறது.

சமூகத்தில் காணப்படும் மனிதர்கள் ஒருவருக்கொருவர் வேறுபட்டே இருக்கின்றனர், அதே நேரத்தில் அவர்கள் அனைவரும் மனிதர்கள் என்ற வகையில் ஒத்ததன்மை பெற்றவர்களாவர்.

ஓரேவிதமாக, திரும்பத்திரும்ப  நிகழும் தன்மையே சர்வப்பொதுவானது என்றழைக்கப்படுகிறது. ஒரேவிதப் பொருட்களில் அவற்றுக்கிடையே உள்ள ஒற்றுமையையும் வேற்றுமையையும் காணமுடிகிறது. அவற்றிடையே காணப்படும் வேறுபடுத்தும் தன்மையை தனியானது என்று அழைக்கிறோம்.

 ஒப்பிட்டுப் பார்க்கையில் அவற்றுக்கிடையே காணப்படும் வேறுபாடுகள், குறிப்பான தன்மை மற்றும் பொதுவானது ஆகிய  மூன்றையும் பிரித்தறிவதற்கு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்.

மாம்பழம் என்பது தனியானது. மாமரம் என்பது குறிப்பானது.  மரம் என்ற வகையில் சர்வப்பொதுவானது.

அதே போல் சமூக மாற்றம் என்பது சர்வப்பொதுவானது. அதில் தேசிய விடுதலை, ஜனநாயகப் புரட்சி, சோஷலிசப் புரட்சி போன்றவை குறிப்பானது. குறிப்பிட்ட நாட்டில் நடைபெறுவதை தனியானது என்று வகைப்படுத்தப்படுகிறது.

தனியானது, குறிப்பானது, சர்வபொதுவனது ஆகியவை பிரிக்க முடியாத ஒற்றுமையைக் கொண்டதாகும்.

2. காரணமும் விளைவும் (Cause and Effect)

ஒரு நிகழ்வு நடைபெற்றது என்றால், அது நடைபெறுவதற்கான காரணங்களின்றி தோன்றுவதில்லை. நிகழ்வு குறிப்பிட்ட காரணங்களின் விளைவாகும். காரணம் இன்றி ஒரு நிகழ்வும் நடைபெறுவதில்லை. குறிப்பிட்ட விளைவை ஏற்படுத்துகின்ற காரணியே அந்நிகழ்வு தோன்றுவதற்கான காரணமாகும். ஒரு நிகழ்வு மற்றொரு நிகழ்வை உருவாக்குகிறது என்றால் முந்தையது காரணம் என்றும்  பிந்தையது விளைவு என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது காரணமான நிகழ்வு எப்போதும்  விளைவுக்கு முன்பானதுவிளைவு காரணத்துக்கு பிந்தியதாகும்.

காரணத்தால் ஏற்படுகிற விளைவு என்பது காலவரிசைத் தொடரை வெளிப்படுத்துகிறது. இத் தொடர்ச்சி காரணமும் விளைவும் இடங்களை மாற்றிக் கொள்வதையும் உணர்த்துகிறது. இப்போது விளைவாய் காணப்படும் நிகழ்வு மற்றொன்றுக்கு காரணமாகும்போது முந்தைய விளைவு புதியதுக்குக் காரணமாகிறது. இவ்வாறே இதன் தொடர்ச்சி நடைபெறுகிறது.

குறிப்பிட்ட காரணங்கள் நிலவும் போது குறிப்பிட்ட விளைவைக் கட்டாயம் ஏற்படுத்துகிறது என்பதில் அவற்றின் அவசியத் தன்மை அடங்கியிருக்கிறது.

முதலாளித்துவ உற்பத்தி முறையின் உள்முரண்பாட்டின் காரணத்தால்தான் பொருளாதார நெருக்கடி என்ற விளைவு ஏற்படுகிறது. சந்தையின் தேவையை அறிந்திட முடியாமல் முதலாளித்துவ உற்பத்தி நடைபெறுகிறது. திட்டமிடாத வகையில் தனித்தனி முதலாளிகளின் லாபநோக்கில், புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய இயந்திரங்களைக் கண்டுபிடித்து உற்பத்தியில் ஈடுபடுத்துவதால் உண்டாகும் மிகை உற்பத்தியின் காரணமாகவே பொருளாதார நெருக்கடி என்ற விளைவு ஏற்படுகிறது

3. அவசியமும் தற்செயலும் (Necessity and Chance)

அவசியம் என்பது காரணத்தின் விளைவாய் நடைபெறுகிறது. அதாவது சில தொடர்புகளினுடைய இயல்புகளினால் ஏற்படுகின்ற சூழ்நிலைமைகளால் உருவாவதே அவசியம்.  தற்செயல் என்பது நடைபெறலாம், அல்லது நடைபெறாமல் போகலாம் என்பதை உணர்த்துகிறது.

புறநிலைமைகளினுடைய வளர்ச்சியின் தவிர்க்க முடியாததின் விளைவாய் அவசியம் தோன்றுகிறது. அதே போன்று தற்செயலும் முழுதும் காரணங்களற்ற  நிலைமைகளில் தோன்றுவதில்லைதற்செயல் நிகழ்ச்சிகள் தோன்றுதற்கான காரணங்களும் இருக்கவே செய்கிறது. தற்செயல் என்பதை காரணமற்ற விளைவாய் பார்க்க முடியாது.

ஏன் என்றால் அவசியம் போன்றே, தற்செயலும் புறநிலைத் தன்மையானது. அதனால் தற்செயலை அவசியத்தின் வெளிப்பாடாக, அவசியத்துக்கு துணைபுரிவதாக இருப்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

தற்செயல் ஒப்பீட்டு நிலையானது தான், அவசியத்தின் தொடர்புகளற்ற தற்செயல் என்பது கிடையாது. குறிப்பிட்ட நோக்கில் அது தற்செயலானது, அதுவே வேறொரு நோக்கில் அவசியத்தின் தொடர்பு பெற்றிருப்பதை காணலாம்.

தற்செயல் என்பது நடைபெறலாம் அல்லது நடைபெறாது போகலாம், ஆனால் சாத்தியமானதே. அதாவது தற்செயல் எந்த சாத்தியமற்ற நிகழ்வையும் நடத்திக் காட்டுவதில்லை. தற்செயல் என்பது இடைத்தொடர்பின் ஒரு முனையேயாகும், அதன் மற்றொரு முனை அவசியமாக இருக்கிறது.

இயக்கவியல் பற்றிய அறியாமை பலபேரை அவசியத்தையும் தற்செயலையும் எதிர் எதிர்நிலைக்குக் கொண்டு செல்கின்றது. ஒருசிலர் அவசியத்தின் அடிப்படையில் மட்டும் நிகழ்வுகள் உலகில் நடைபெறுகிறது என்று நினைக்கின்றனர். இவர்கள் அவசிய நிலையை அறுதியான ஒன்றாக பரம்பொருளாக காண்கின்றனர்.

மற்றும் சிலர் அவசியம் என்பதை மறுக்கின்றனர். தற்செயலால் மட்டுமே அனைத்தும்  நிகழ்கிறது என்கின்றனர். ஆனால் இயக்கவியல், அவசியத்தின் அடிப்படையில் மட்டும் அல்லது தற்செயலாகத்தான் நிகழ்வுகள் மட்டும் நடைபெறுகின்றன என்பதை மறுத்து, இவ்விரண்டுக்கும் இடையே உள்ள பரஸ்பர உறவை ஏற்றுக் கொள்கிறது.

தற்செயல் நடவடிக்கைகள் அதன் வளர்ச்சிப் போக்கில் அவசியமாகிறது.

அவசியம் என்பதை தூய நிலையில் புரிந்து கொள்ளக் கூடாது. பல்வேறு தற்செயல் நிகழ்வின் தொடர்ச்சியில் அவசியம் ஆகிறது. ஒவ்வொன்றும் மற்றொன்றுடன் எதிர்வினை புரிகிறது.

இதை ஒரு நிகழ்ச்சியின் வாயிலாய் விளக்கலாம். நிறைமாதக் கர்ப்பிணி இரயிலில் பயணம் மேற்கொள்கிறார். இடையில் பிரசவ வலி ஏற்பட்டு விடுகிறது. பிரசவிப்பதற்கு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஆனால் தற்போது அதற்கு வாய்ப்பில்லை. ஆனால் அதே இரயிலில் ஒரு மருத்துவர் பயணம் செய்கிறார். அந்த மருத்துவரின் உதவியுடன் இரயில் பெட்டியிலேயே பிரசவம் சுகமாக நடைபெறுகிறது. மருத்துவரின் பயணம் ஒரு தற்செயல் நடவடிக்கையே. ஆனாலும் இந்த தற்செயல் நிகழ்ச்சி பிரசவத்தின் தேவையை நிறைவேற்றி விடுகிறது

சமூக மாற்றம் என்பது, வரலாற்று வளர்ச்சியின் விதியின்படி ஏற்படுகிறது. இது வரலாற்றின் அவசியத்தைக் குறிக்கிறது. இந்த சமூக மாற்றம் பல்வேறு தற்செயல் சந்தர்ப்பங்களுடன் தொடர்புடையதாக இருக்கிறது. புரட்சியை நிகழ்த்தும் போது அந்தக் கட்சிக்கு தலைமை ஏற்றிருக்கும் நபர் தற்செயலான செயற்பாடே, ஆனால் இந்த தற்செயல் அவசியத்தின் செயல்முறைகளின் மூலமாகவே நடைபெறுகிறது

4. உள்ளடக்கமும் வடிவமும்  (Content and Form)

உள்ளடக்கம் என்பது குறிப்பிட்ட நிகழ்வின் இருப்புக்கும், அதன் வடிவங்கள் தோன்றுவதற்கான நிர்ணயிப்பாகவும் இருக்கிறது. வடிவம் என்பது உள்ளடக்கத்தின் கட்டமைப்பாகவும், அது நிலவுவதற்கான சாதனமாகவும் இருக்கிறது.

உள்ளடக்கமும் வடிவமும் ஒன்றை  ஒன்று பிரிக்க முடியாத நெருக்கம் கொண்டவையாகும். ஒரு நிகழ்வு என்பது உள்ளடகத்தையும் வடிவத்தையும் கொண்டிருக்கிறது. இதில் உள்ளடக்கம் நிர்ணயகரமான தன்மையைப் பெற்றிருக்கிறது.

உள்ளடகத்துக்கு பொருத்தமான வடிவம் என்பது அந்நிகழ்வின் வளர்ச்சிக்கு முக்கிய  நிபந்தனையாக இருக்கிறது. இந்த பொருத்தம் என்பது முழுமையானதாக, மாறாததாக, நிலையானதாக கருத முடியாது.

வடிவம் உள்ளடக்கத்தால் நிர்ணயிக்கப்படுகிறது என்றாலும், வடிவம் ஒப்பீட்டு வகையில் சுதந்திரம் பெற்றிருக்கிறது. தன்னளவில் உள்ளடக்கத்தோடு எதிர்வினை புரிகிறது. இந்த எதிர்வினை இரண்டு வகைகளில்  நிகழ்கிறது. ஒன்று உள்ளடக்கத்துக்குப் பொருத்தமாக இருக்கின்றது அப்போது உள்ளடக்கத்தின் வளர்ச்சி சீரானதாக இருக்கிறது. மற்றொன்று உள்ளடக்கத்தின் ஏற்றவகைக்கு பொருந்தாமல் இருக்கின்றது, அப்போது வளாச்சியைத் தாமதப் படுத்துகிறது அல்லது பின்னோக்கித் தள்ளுகிறது.

உள்ளடக்கம் வடிவம் இவற்றில் உள்ளடக்கம் முதலில் மாற்றம் பெறுகிறது அதற்கு ஏற்ப வடிவத்தில் மாற்றம்  நிகழ்கிறது. புதிய உள்ளடக்கத்துக்கும் பழைய வடித்துக்கும் இடையே முரண்பாடு முற்றி மோதல் வலுப்பெறுகிறது. மோதலின்  விளைவாய் பழைய வடிவம் தூக்கி எறியப்பட்டு புதிய உள்ளடக்கத்துக்குப் பொருத்தான புதிய வடிவம் தோற்றுவிக்கப்படுகிறது.

உள்ளடக்கத்துக்கும் வடிவத்துக்கும் உள்ள இடைத் தொடர்பை சரியான வகையில் புரிந்து கொள்ளுதல் நடைமுறை வேலைக்கு முக்கியமானதாகும்.

தண்ணீர் திரவமாக இருப்பதால் அதனை  ஒரு பாத்திரத்தில் வைக்கிறோம். அப் பாத்திரத்தில் உள்ள தண்ணீரை 100 டிகிரி வெப்ப நிலையில் கொதிக்க வைக்கும் போது தண்ணீர் நீராவியாக மாறுகிறது. உரு மாறிய நீராவியை தற்போது அதே பாத்திரத்தில் நிறுத்திவைக்க இயலாது. மாறாக அதை அடைத்து வைப்பதற்கு  சிலிண்டர் தேவைப்படுகிறது. எனவே உள்ளடக்குத் தக்கபடி அதனைத்தாங்கும் வடிவம் மாறி விடுகிறது.

நிலப்பிரபுத்துவம் நிலவியபோது முடியாட்சி அதன் அரசியல் வடிவமாக இருக்கிறது. வரலாற்று நிகழ்ச்சிப்போக்கில் முதலாளித்துவ உற்பத்திமுறை தோன்றியபோது பழைய அரசியல் வடிவமான முடியாட்சி ஒவ்வாததாகி விடுகிறது. முதலாளித்துவ உற்பத்திமுறையின் உள்ளடக்கத்துக்கு ஏற்ற வடிவமாக நாடாளுமன்றம் தோன்றுகிறது. ஆனால் அந்த நாடாளுமன்றம் பிரதம மந்திரியின் தலைமையைக் கொண்டதாக இருக்கலாம் அல்லது ஜனாதிபதியின் தலைமையைக் கொண்டதாக இருக்கலாம். ஆனால் இவையிரண்டும் உள்ளடக்கத்துக்குப் பொருத்தமானதாகவே இருக்கும்.

5. சாத்தியமும் எதார்த்தமும் (Possibility and Reality)

புதியதான ஒன்று தோன்றுவதற்கான நிலைமைகள் நிலவுவது சாத்தியம் என்றழைக்கப்படுகிறது. அதாவது எதிர்காலத்தில் தோன்றக்கூடிய தன்மைகளையும், நிகழ்வுகளையும் எதார்த்த வளர்ச்சியின் புறநிலையான தன்மையாக  சாத்தியம் பிரதிபலிக்கிறது.

எதார்த்தம் என்பது விரிவான பொருளிலும் குறுகிய பொருளிலும் அறியப்படுகிறதுவிரிந்த பொருளில் எதார்த்தம் என்பது புறநிலையில் நிலவுகின்ற அனைத்தையும் குறிக்கிறது. குறுகிய பொருளில் எதார்த்தம் என்பது செயற்படுத்தப்பட்டதை அதாவது நிறைவேற்றப்பட்டதை குறிக்கிறது.


சாத்தியமும் எதார்த்தமும் தம்முள் பின்னிப்பிணைந்திருக்கின்றன. எதார்த்தத்தின் வளர்ச்சியில் சாத்தியம் தோன்றுகிறது. சாத்தியமானதின் தயாரிப்பினால் யதார்த்தம் ஆகிறது.

சமூக வாழ்வில், உணர்வும் சித்தமும் கொண்ட மக்கள் செயற்படுகின்றனர். சமூக வாழ்வில் மாற்றம் என்பது இயற்கையில் நிகழ்வதுபோல் மக்களைச் சாராமல் நிகழ்வதில்லை. சமூகத்தில், மாற்றத்தை நிகழ்த்துவதற்கு புறநிலைமைகளோடு, மாற்றத்தின் அவசியத்தை உணர்ந்து அதற்காகப் பாடுபடுகின்ற உறுதியான வர்க்கம், அதற்கு துணைபுரிய அனைத்து மக்கள், இவற்றைத் தலைமை தாங்கி நடத்தக் கட்சி போன்ற அகநிலைமைகளும் அவசியமாகின்றன.

இயற்கை மாற்றம் தன்னியல்பாகவே இயக்கவியல் பொருள்முதல்வாதமாக செயற்படுகிறது. சமூக மாற்றத்துக்கான நடைமுறைக் கோட்பாட்டை வகுத்துக் கொள்வதற்கும், பாட்டாளி வாக்கம் தம்மை உறுதிபடுத்துவதற்கும்  இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை குறிப்பாக வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தை கட்சி உறுதியாகக் கையாள வேண்டும்.

முதலாளித்துவ உற்பத்திமுறையில் உள்முரண்பாட்டின் முதிர்ச்சியின் வெளிப்பாடாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுகின்றன. எல்லாப் பொருளாதார நெருக்கடியும் புரட்சியை ஏற்படுத்துவதில்லை. இந்தத் தொடர் நிகழ்வு முரண்பாட்டின் முதிர்ச்சியை, புரட்சியை ஏற்படுத்தும்  சாத்தியப்பாட்டைத் தோற்றுவிக்கின்றது. கட்சி, அதற்கு ஏற்றத் தலைமை, அன்றைய வர்க்கங்களின் கூட்டணி ஆகியவை இந்த சாத்தியப்பாட்டைத் தேர்ந்தெடுத்து, எதார்த்தமாக்கும் திறமை பெற்றிருக்க வேண்டும். அப்போது தான் சாத்தியமானவை எதார்த்தமாகும்.

6. சாராம்சமும் புலப்பாடும் (Essence and Phenomenon)

ஒவ்வொரு பொருளும் இரண்டு தன்மை பெற்றுள்ளது. ஒன்று சாராம்சம் மற்றொன்று புலப்பாடு (Phenomenon). பார்க்கின்ற பொருளின் புறவடிவமே புலப்பாடு. புலப்படுகின்ற வடிவத்தைத் தீர்மானிக்கின்ற அல்லது புறவடிவத்தில் வெளிப்படுகின்ற உள்ளடக்கம் சாராம்சம் (Essence).

சாராம்சம் என்பது பொருளின் அடிப்படைகளின் இணைப்புகளையும் உள்விதிகளையும் இணைத்த முழுமையைக் குறிக்கிறது. இவையே அப்பொருளின் வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது. இந்தப் பொருட்களின் மாற்றம், வளர்ச்சி என்பது உடனடியாக மேற்பரப்பில் அதாவது புறவடிவத்தில் வெளிப்படுவதில்லை. அந்த மாற்றங்கள் புறவடிவத்தின் உள்ளே சூக்குமமாக மறைந்து இருக்கிறது. ஆகவே இந்த மாற்றங்கள் புலனுறுப்புகளால் நேரடியாக  அறியப்படுவதில்லை. புலனுறுப்புகளின் ஒட்டுமொத்த விளைவின் ஊடே, சூக்கும சிந்தனையின் வாயிலாக அறியப்படுகிறது.

புலப்பாடு என்பது நிகழ்வின் தோற்றாப்பாடேயாகும். ஒரு பொருளின் இயக்கத்தை அதாவது நிகழ்வை மனிதன் நேரடியாக புலன்களின் மூலம் அறிவதை இது காட்டுகிறது. அதாவது பொருளினுடைய நிகழ்வின் மேற்பரப்பை முதலில் மனிதன் கவனிக்கிறான். பொருளினுடைய நிகழ்முறையின் வெளிப்பாடான புறத்தோற்றத்தையே புலப்பாடு என்கிறோம்.

சாராம்சமும் புலப்பாடும் இரண்டும் ஒன்றிணைந்த பகுதியாகும். இதில் சாராம்சம் இல்லாமல் புலப்பாடு இல்லை. சாராம்சத்தில் தோன்றியது புலப்பாட்டு வடிவமாக வெளிப்படுகிறது. சாராம்சத்தின் உள்ளடக்கத்தை புலப்பாட்டு வடிவத்தில் வெளிப்படுத்துகிறது.

மின்சாரம் என்பது சாராம்சமாகும், அந்த மின்சாரத்தின் ஆற்றல் மின்விசிறியாக, மின்சார ரயிலாக, மின்மோட்டாராக நமக்குப் புலப்படுகிறது. எந்த ஒரு நிகழ்வின் வெளிப்பாடும், அந்த உட்சாரத்தின் ஆற்றலையே பிரதிபலிக்கின்றன.


சமூகமயமாகிவிட்ட பொருளுற்பத்திக்கும் முதலாளித்துவச் சுவீகரிப்புக்கும் இடையிலான முரண்பாடு, பாட்டாளிவர்க்கத்திற்கும் முதலாளித்துவவர்க்கத்திற்கும் இடையிலான பகைமை, வர்க்கப் போராட்டமாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது