Sunday 21 January 2018

சூழ்நிலைகளின் தாக்கத்திற்கு உட்பட்டே சூழ்நிலையை மனிதர்கள் மாற்றுகிறார்கள் - வி.கெல்லி, எம்.கவல்ஸோன்

“மனிதர்களின் செயல்கள், புறவயமான, அவசிய நிகழ்ச்சிகளின் தொடர் நிகழ்ச்சியாக நடக்கின்றன. இதுதான் வரலாற்று வளர்ச்சிப் போக்கை உருவாக்குவதாக உள்ளது. மனிதர்கள் தங்கள் வாழ்ககைக்குத் தேவையான அனைத்தையும் அவர்களே படைக்கிறார்கள், கருவிகளை மேம்படுத்துகிறார்கள், தங்களது குறிக்கோளை அடைய முற்படுகிறார்கள். மேலும் சிறந்த வாழ்ககைத் தரத்தை அடையப் போராடுகிறார்கள், இவ்வாறு பல முயற்சிகளில் ஈடுபட்டு, தங்களது சமூக வாழ்ககையை உருவாக்கிறார்கள்.

சமூக வளர்ச்சி விதிமுறைகள் எதுவுமே, மனிதர்களின் நடைமுறைச் செயல்களுக்கு அப்பால் இருக்கவே முடியாது. ஆனால் சூழ்நிலைகளின் தாக்கத்திற்கு உட்பட்டே சூழ்நிலையை மனிதர்கள் மாற்ற முயல்கிறார்கள் என்பதுதான் வரலாற்றின் இயக்க இயலாகும். இதுவும் மனிதர்களின் நடைமுறைச் செயல்கள் மூலம்தான வெளியிடப்படுகிறது. வளர்ச்சியின் விதிமுறைகள் இத்தகைய செயல்களின் போக்கையும் உள்ளடக்கத்தையும் தீர்மானிக்கின்றன”

 (பக்கம் 37 -38 வரலாற்றுப் பொருள்முதல்வாதம்)

வரலாற்றியல் பொருள்முதல்வாதம் சமூகத்தின் வளர்ச்சியின் பொது விதிகளை சுட்டிக்காட்டுகிறது - வி.கெல்லி, எம்.கவல்ஸோன்

“..சமூகத்தைப் பற்றிய மார்க்சியத் தத்துவத்தை விளக்கிக் கூறுகிறபோது, வரலாற்றைப் படிப்பதற்கான ஒரு வழிகாட்டிதான் மார்க்சியமே ஒழிய, வரலாற்றுப் போக்கையே உருவாக்குவதற்கான ஒரு கருவி, மார்க்கம் அல்ல என்பதை எடுத்த எடுப்பிலேயே கூறிவிட வேண்டும். வரலாற்று ரகசியங்களைப் படித்துப் புரிந்துகொள்ள வேண்டிய தேவையே இல்லாமல் ஆக்கிவிடக்கூடிய மந்திரக்கோல் அல்ல மார்க்சியம்.

இந்த நாட்டில் அல்லது அந்த நாட்டில், இந்த அல்லது இன்னொரு கட்டத்தில் நடக்கக் கூடிய வரலாற்றுப் போக்கைக் கணித்து கூறிவிட முடியும் என்று,  வரலாற்றுப் பபாருள்முதல்வாதம் கூறிக் கொள்வது இல்லை. சமூகத்தின் வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கக்கூடிய பொது விதிகளை இது படிப்பதுடன், பொதுவாகக் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை வழிகாட்டியாக உருவாக்குகிறது. அதை அமுலாக்குவது, பிரிட்டனிலும், பிரான்சிலும், அமெரிக்காவிலும், முதலாளித்துவ நாடுகளிலும் சோஷலிஸ்டு நாடுகளிலும், தொழில்மயமான நாடுகளிலும், வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கும் நாடுகளிலும், மாறுபடலாம். ஏனெனில், அங்குள்ள குறிப்பிட்ட சூழ்நிலையும், நீண்ட முழுமையான வரலாற்றுப் போக்கும், இந்நாடுகளில் அல்லது ஒரு வகையான குழுநாடுகளில் தனித்தனித் தன்மைகளில் வேறுபட்டிருக்கக்கூடும்”
(வரலாற்றுப் பொருள்முதல்வாதம் பக்கம் 37 -38)


Monday 15 January 2018

சமூக முன்னேற்றத்திற்கான புறவயமான கோட்பாடுகள் - வி.கெல்லி, எம்.கவல்ஸோன்

“சமூக முன்னேற்றத்திற்கான புறவயமான கோட்பாடுகள் என்று எதாவது உண்டா?

சமூக வளர்ச்சிக்கு உற்பத்தி அடிப்படையாக இருப்பதால், அதிலிருந்துதான் சமூக முன்னேற்றத்திற்கான புறவயக் கோட்பாட்டைக் காண நாம் முயல வேண்டும். இதனை அளவுகோலாகப் பயன்படுத்தி, வரலாற்றுப் போக்கில் எழக்கூடிய வித்தியாசங்களை மதிப்பிடவும், சமுதாயம் அடைந்து விட்டிருக்கிற வளர்ச்சி மட்டத்த் தீர்மானிக்கவும் முடியும்.

உற்பத்தி வளர்ச்சி என்பது, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி மட்டத்தால் தீர்மானிக்கப்படுவதாக இருப்பதால், பொருள்முதல்வாத வரலாற்றுக் கண்ணோட்டத்திலிருந்து அவசியமாக எழுவது என்னவென்றால், சமூக முன்னேற்றத்திற்கான மிக உயர்ந்த புறவயமான கோட்பாடுகளை, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில்தான் காணவேண்டும், என்பதாகும்.

உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி மனிதகுலம், சமூக முனனேற்றக் கட்டங்கள் மூலமாக முன்னேற ஆணிவேராகும். ஏனெனில், இதுதான், அவற்றை அவனுடைய சேவைக்காகப் பயன்படுத்துவதில் அவன் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறான் என்பதைக் காட்டுவதாகவும் இருக்கிறது. மனிதகுலத்தின் சமூக வளர்ச்சிக்கான வாய்ப்பு வசதிகளைத் திறந்து காட்டுவதாகவும் உள்ளது.

இந்தக் கோட்பாடு புறவயமானது. ஏனெனில், இதனைப் பயன்படுத்தி, சமூக வளர்ச்சி மட்டப்படிகளில், சமூகப் பொருளாதாரக் கட்டுமானத்தைத் தீர்மானிக்க உதவுவதாக இருக்கிறது.”

(வரலாற்றுப் பொருள்முதல்வாதம்  - பக்கம் - 477)

Friday 12 January 2018

சமுதாய வாழ்நிலையும் சமுதாய உணர்வும் – கி.ஷஹ்நாஸாரவ், அ.போபரீக்கின், யூ.கிராஸின், வி.சுகதேயெவ்

சமுதாயத்தின் வரலாறு இயற்கையின் வளர்ச்சியிலிருந்து கணிசமாக மாறுபடுகிறது. இயற்கையில் உணர்வுள்ள சக்திகள் கிடையாது, அங்கே வளர்ச்சி தன்னிச்சையாக நடைபெறுகிறது. சமுதாயத்தில் விஷயம் வேறு விதமானது. இங்கே உணர்வும் சித்தமும் கொண்ட மனிதர்கள் செயல்படுகின்றனர். இவர்கள் தம்முன் குறிப்பிட்ட கடமைகளை வைத்து அவற்றை நிறைவேற்ற முயலுகின்றனர். உணர்வு, கருத்துக்கள், லட்சியங்கள் தான் சமுதாய வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன என்ற ஒரு மாயை ஏற்படுகிறது.

உண்மையில் இப்படியல்ல. உணர்வோடு இயங்கக் கூடிய மக்கள் அவர்களது சித்தத்தையும் பகுத்தறிவையும் சாராத குறிப்பிட்ட புறவயச் சூழ்நிலைகளில் வாழ்கின்றனர். மனிதன் வாழ வேண்டுமானுல் அவன் உணவு, உடை, காலணி, இருப்பிடம் முதலிய பொருளாயதத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். மனிதன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தத் தேவைகள் அவனை இயற்கையுடனும் மற்ற மக்களுடனும் குறிப்பிட்ட உறவு முறைகளை வைத்துக் கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கின்றன: அவன் நிலத்தை உழுகிறான், வீடுகளைக் கட்டுகிறான், ஆடையைத் தைக்கிறான், உற்பத்திக் கருவிகளைத் தோற்றுவிக்கிறான், தனது உழைப்பின் விளைபொருட்களைப் பரிவர்த்தனை செய்து கொள்கிறான். இவை எல்லாவற்றிலிருந்தும் மனிதர்களின் பொருளாயத வாழ்க்கை, அவர்களது சமுதாய வாழ்நிலை உருவாகிறது. சமுதாயத்தில் எந்தவிதக் கருத்துக்களும் தத்துவங்களும் நிலவினாலும் இவற்றைச் சாராத புறவய விதிகள் இந்த வாழ்நிலைக்கு உண்டு.
பொருளாயத நலன்களை உற்பத்தி செய்வதற்கான மக்களின் உழைப்பு நவடிக்கைதான் சமுதாய வாழ்நிலையின் முக்கிய சாரமாகும்.
...
உழைப்பு என்பது மனித வாழ்க்கைக்கும், சமுதாயம் நிலவுவதற்கும் அதன் வளர்ச்சிக்கும் இயற்கையான மற்றும் அவசியமான நிபந்தனையாகும்.

மக்களின் சமுதாய வாழ்நிலைதான் அவர்களது சமுதாய உணர்வை அதாவது கண்ணோட்டங்கள், கருத்துக்கள், சித்தாந்தங்கள், தத்துவங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றை, சுருங்கக் கூறின் சமுதாயத்தினுடைய ஆன்மீக வாழ்வின் உள்ளடக்கமாக எவை விளங்குகின்றனவோ, அவையனைத்தையும் நிர்ணயிக்கின்றது. சமுதாய உணர்வின் பல்வேறு வடிவங்களில் மக்களது சமுதாய வாழ்நிலையின் நிபந்தனைகளும் முதிர்ச்சியடைந்த தேவைகளும் ஒரளவு முற்றிலுமாகப் பிரதிபலிக்கின்றன.

எந்த ஒரு கருத்தையும் அல்லது தத்துவத்தையும் எடுத்துக் கொண்டாலும் அவற்றின் வேர்கள் எப்போதும் சமுதாய வாழ்நிலையில், சமுதாய வாழ்க்கையின் பொருளாயாத சூழ்நிலைகளில் இருக்கும். சமுதாய வளர்ச்சியின் அடிப்படையை மக்களின் உணர்வில் தேடாமல், அவர்களது சமுதாய வாழ்நிலையில், பொருளாயத நலன்களின் உற்பத்தி வளர்ச்சியில் தேடி வேண்டும் என்று முக்கிய முடிவு இதிலிருந்து தோன்றுகிறது.”

(சமூக விஞ்ஞானம்)