Tuesday 27 November 2018

நான்கு குடும்ப உறவுகள்


(எங்கெல்ஸ் எழுதிய “குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற நூலின் அடிப்படையில் சுருக்கப்பட்டது)

ஆதிகால உறவுமுறைகளை தற்கால விபசாரம் என்கிற கண்ணாடியை அணிந்து கொண்டு பார்க்கும்வரை அவற்றைப் புரிந்து கொள்ள முடியாது. அது எந்த சூழ்நிலையில் தோன்றியது என்பதையே நாம் பார்க்க வேண்டும்.

1. இரத்த உறவுக் குடும்பம்
2. புனலுவா குடும்பம்
3. இணை குடும்பம்
4. ஒருதார மணக்குடும்பம்

1. இரத்த உறவுக் குடும்பம்

இது குடும்பத்தின முதல் கட்டமாகும். குடும்பம் என்ற வரம்புக்குள் அடங்கிய எல்லாத் தாத்தாக்களும் பாட்டிகளும் பரஸ்பரம் கணவன் மனைவியர் ஆவார்கள். அவர்களின் குழந்தைகளும் – தந்தையர்களும் தாயார்களும்- அதே போல் பரஸ்பரம் கணவன், மனைவியர் ஆவார்கள். இவர்களுடைய குழந்தைகள் ஒருவருக்கொருவர் கணவன், மனைவியராகவுள்ள மூன்றாம் வட்டமாக அமைவார்கள்.

இந்தக் குடும்ப வடிவத்தில், முன்னோர்களும் வழிவந்தோரும், பெற்றோர்களும் குழந்தைகளும் மட்டுமே ஒருவருக்கொருவர் திருமண உரிமைகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். இந்தக் கட்டத்தில் சகோதரன் சகோதரி ஆகியோர்களுக்கு இடையில் உறவுகொள்வது சகஜமாக இருந்தது.

2. புனலுவா குடும்பம்

பெற்றோர்களும் குழந்தைகளும் பரஸ்பரம் உடலுறவு கொள்வதை விலக்கியது குடும்ப அமைப்பில் முதல் முன்னேற்றமாகும், சகோதரர், சகோதரிகள் பரஸ்பரம் உடலுறவு கொள்வதை விலக்கியது இரண்டாவது முன்னேற்றமாகும். முதலில் சொந்த சகோதரர் சகோதரிகளிடையே விலக்கப்பட்ட மணம், பின்பு ஒன்றுவிட்ட, இரண்டுவிட்ட சகோதர் சகோதரிகளுக்கு இடையே திருமணம் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஒரு தாய் வயிற்றில் பிறந்த குழந்தைகளுக்கு இடைய உடலுறவு கொள்வது முறையல்ல என்ற கருத்து தோன்றிய உடன் புதிய குடும்ப உறவுகள் தோன்றுவதற்கு தூண்டிது. சகோதரிகளைக் கொண்ட ஒரு குழு குடும்பச் சமூகத்தின் மூலக்கருவாக அமைந்தன. அவர்களின் கூடப்பிறந்த சகோதரர்கள் இன்னொரு குடும்பச் சமூகத்துக்கு மூலக்கருவாக அமைந்தனர். பூனலுவா குடும்பம் என்று அழைக்கப்படுகிற குடும்ப வடிவம் இந்த முறையில் மாற்றம் பெற்றது. இந்தக் கணவன்மார்கள் இனியும் சகோதரர்களாக இல்லாது “புனலுவா” என்ற உறவைப் பெறுகின்றனர். புனுலுவா என்றால் பங்காளியாகும்.

அதே போல் கூடப்பிறந்த சகோதரர்களையோ அல்லது இரத்த சம்பந்தமுள்ள பல தாய் வயிற்றுப் பிள்ளைகளான சகோதரர்களையோ கொண்ட ஒரு குழுவினர் சில பெண்களைப் பொது மணம் செய்து கொண்டனர். அவர்கள் இவர்களுடைய சகோதரிகள் அல்ல. இநத்ப் பெண்கள் ஒருவரையொருவர் “புனலுவா” என்று அழைத்துக் கொண்டார்கள். பிற்காலத்தில் இதிலிருந்து வரிசையாக சில திரிபுகள் தோன்றின. மிகப் பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் குலம் என்னும் அமைப்பு பூனலுவா குடும்பத்தில் இருந்துதான நேரடியாகத் தோன்றியத் தெரிகிறது.

குழுக் குடும்பத்தின் எல்லா வடிவங்களிலும் ஒரு குழந்தையின் தகப்பனார் யார் என்பதை அறுதியிட்டுச் சொல்ல இயலாது. ஆனால் அந்தக் குழந்தையின் தாய் யார் என்பதை உறுதியாகச் சொல்லலாம். அந்தக் குடும்பத் தொகுதி முழுவதிலுமுள்ள ’குழந்தைகள் எல்லோரையும் அவள் தன் குழந்தைகள் என்றே அழைத்தாலும், அக்குழந்தைகளின் பால் ஒரு தாய்க்குரிய கடமைகளை அவள் செய்யுமாறு விதிக்கப்பட்டிருந்தாலும் அவள் மற்ற குழந்தைகளிலிருந்து தன்னுடைய சொந்தக் குழந்தைகளை அறிந்து வைத்திருக்கிறார்கள்.

குழு மணமுறை இருக்கின்ற இடங்களில் எல்லாம் தாய் வழியாக மட்டுமே மரபுவழியைக் கண்டறிய முடியும் என்றும், ஆகவே பெண்வழி மட்டுமே ஒப்புக் கொள்ளப்பட்டது என்றும் தெளிவாகிறது. உண்மையாகப் பார்த்தால், காட்டுமிராண்டி நிலையிலுள்ள மக்களினங்கள் அனைத்திலும், அநாகரிக நிலையின் ஆரம்பக்கட்டத்தைச் சேர்ந்த மக்களினங்களிலும் இப்படித்தான் இருக்கிறது.

3. இணை குடும்பம்

ஆணுக்குப் பல மனைவியர் இருப்பினும் அவர்களில் ஒருத்தி அவனுடைய பிரதான மனைவியாக இருந்தாள். அதேபோல் அவளுடைய பல கணவர்களில் அவனும் பிரதான கணவனாக இருந்தான்.

காட்டுமிராண்டி நிலைக்கும் அநாகரிக நிலைக்கும் இடைப்பட்ட எல்லைக் கோட்டில்தான் இணைக் குடும்பம் எழுந்தது. முக்கியமாகக் காட்டுமிராண்டி நிலையின் வளர்ந்த கட்டத்திலும், சிற்சில இடங்களில் மட்டும் அநாகரிக நிலையின் ஆரம்பக் கட்டத்திலும் அது தோன்றியது.

காட்டுமிராண்டி நிலைக்குக் குறியடையாளமாகக் குழு மணமும், நாகரிக நிலைக்குக் குறியடையாளமாக ஒரு தார மணமும் இருப்பதைப் போல அநாகரிக நிலைக்கு இணைக் குடும்பம் குறியடையாளமாக உள்ளது.

இணை குடும்பத்தில் இணைந்து வாழும் போது பெண் கற்புடன் இருக்க வேண்டும் என்பது கண்டிப்பாக வற்புறுத்தப்படுகிறது. அவள் சோரம் போனால் குரூரமாகத் தண்டிக்கப்படுடிகிறாள். ஆனால் இதனை ஆண் கடைப்பிடிப்பதில்லை. பல தார மணமும் சமயங்களில் சோரம் போவதும் ஆணின் உரிமை என்னும் வகையில் அந்த வாழ்க்கை நடைபெறுகிறது.

இரு தரப்பினரும் திருமண உறவைச் சுலபமாக ரத்து செய்து கொள்ளலாம், அப்போது குழந்தைகள் முன்போலவே தாய்க்கு மட்டுமே சொந்தமாவார்கள்.

தாயுரிமைப்படி, அதாவது பெண்வழியாக மட்டுமே மரபு வழி கணக்கிடப்பட்டு வந்தவரை, குலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட பரம்பரை வாரிசு முறையின்படி இறந்துவிட்ட குலத்தின் உறுப்பினருடைய உடைமைக்குக் குல உறவினர்கள் தான் முதலில் வாரிசுகளாக இருந்தார்கள்.

மந்தைகளின் உடைமையாளன் மரணமடைந்து விட்டால் அந்த மந்தைகள் முதலில் அவனுடைய சகோதரர், சகோதரிகளிடமும் சகோதரிகளின் குழந்தைகளிடமும் அல்லது அவனுடைய தாயின் சகோதரிகளின் சந்ததியாரிடம் போய்ச் சேர்ந்தன. ஆனால் அவனுடைய குழந்தைகளுக்கு வாரிசுரிமை கிடையாது.

இப்படி செல்வம் பெருகிய பொழுது, அது ஒரு பக்கத்தில், குடும்பத்தில் பெண்ணைவிட ஆணுக்கு முக்கியமான அந்தஸ்தைக் கொடுத்தது. மறு பக்கத்தில், தனது குழந்தைகளுக்குச் சாதகமான வழியில் பரம்பரை வாரிசு முறையை மாற்ற இந்த வலுப்பெற்ற நிலையைப் பயன்படுத்திக் கொள்ள ஆணுக்கு ஒரு தூண்டுதலை அளித்தது. ஆனால் தாயுரிமைப்படி மரபுவழி இருக்கும்வரை இப்படி நடக்க முடியாது. ஆகவே தாயுரிமையைத் தூக்கியெறிய வேண்டியதாயிற்று. அது தூக்கியெறியப்பட்டது.

தாயுரிமை தூக்கியெறியப்பட்டது பெண்ணினம் உலக வரலாற்று ரீதியில் பெற்ற தோல்வி ஆகும். ஆண் வீட்டினுடைய ஆட்சியின் கடிவாளத்தைக் கைப்பற்றினான். பெண் இழிநிலைக்கு படிப்படியாகத் தள்ளப்பட்டாள், அடிமைப்படுத்தப்பட்டாள்; ஆணின் உடலின்ப வேட்கைக்குக் கருவியானாள், கேவலம் குழந்தைகளைப் பெறுகின்ற சாதனமாக ஆகிட்டாள். இது பெண்களின் நிலையைக் கீழே இறக்கி விட்டது.

இப்படிப்பட்ட குடும்ப வடிவம் இணை மணம் என்ற நிலையில் இருந்து ஒருதார மணத்துக்கு மாறியது. மனைவியின் விசுவாசத்தை உறுதிப்படுத்துவதற்காக, குழந்தைகளின் தகப்பனார் இவர்தான் என்பதை உறுதி செய்வதற்காக ஆணின் முழுமையான அதிகாரத்தின் கீழ் பெண் வைக்கப்படுகிறாள். அவளை கொலை செய்தால், அது அவன் தனது உரிமையை பயன்படுத்திக் கொண்டதாகக் கொள்ளப்படுகிறது. தந்தைவழிக் குடும்பத்துடன் நாம் ஏடறிந்த வரலாற்றுக்குள் நுழைகிறோம்.
4. ஒருதார மணக்குடும்பம்

அநாகரிக நிலையின் இடைக் கட்டம் வளர்ந்த கட்டத்துக்கு மாறிச்செல்லும் காலப்பகுதியில் இணைக் குடும்பத்தில் இருந்து  ஒரு தார மணம் தோன்றுகிறது.

ஒரு தார மணத்துக்குப் பக்கத்திலேயே அடிமை முறை இருந்ததனாலும், ஆணுக்கு முற்றிலும் சொந்தமாக அழகிய இளம் பெண்ணடிமைகள் இருந்ததனாலும் ஆரம்பத்திலிருந்தே ஒரு தார மணம் என்பது பெண்களுக்கு மட்டுமே என்னும் பிரத்யேகமான தன்மையை முத்திரையாகக் கொண்டிருந்தது, அத்தன்மை இன்றும் கூட அதில் இருக்கிறது.

ஒருதார மணம் தனிநபர் பாலியல் காதலினால் ஏற்படவில்லை, அத்துடன் அதற்கு சிறிதும் சம்பந்தமில்லை, ஏனென்றால் முன்போலவே திருமணங்கள் வசதிக்காகச் செய்து கொண்ட திருமணங்களாகவே இருந்தன. இயற்கையான நிலைமைகளை அடிப்படையாகக் கொள்ளாமல் பொருளாதார நிலைமைகளை -அதாவது, ஆதிகால, இயற்கையாக வளர்ந்த பொதுச் சொத்தின் மீது தனியுடைமை வெற்றி பெற்றிருந்த நிலைமைகளை---அடிப்படையாகக் கொண்டு தோன்றிய முதல் குடும்ப வடிவம் அது.

குடும்பத்தை ஆண் ஆட்சி செய்தல், தன்னுடையது எனக் கூறக்கூடிய குழந்தைகளைப் பெறுதல், தன்னுடைய செல்வத்துக்கு வாரிசுகளைப் பெறுதல் ஆகியவை மட்டுமே ஒரு தார மணத்தின் இலட்சியங்கள்.

ஆக, ஆணுகும் பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு சமரசமாக ஒரு தார மணமுறை வரலாற்றில் தோன்றவில்லை; அத்தகைய சமரசத்தின் உச்ச வடிவமாக அது தோன்றவில்லை என்பது நிச்சயம். அதற்கு மாறாக, ஒரு பால் மற்றொரு பாலை அடிமைப்படுத்துதலாக அது தோன்றியது, ஏடறிந்த வரலாற்றுக்கு முந்திய காலங்களில் அறவே அந்திராத இரு பால் சச்சரவைப் பற்றிய பிரகடனமாகவே அது தோன்றுகிறது.

மார்க்சும் எங்கெல்சும் 1846இல் எழுதி, வெளியிடப்படாத பழைய கையெழுத்துப் பிரதியில் (ஜெர்மன் சித்தாநதம்) பின்வருமாறு எழுதினர்: “குழந்தை பெறுவதற்காக ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான வேலைப்பிரிவினைதான் முதல் வேலைப் பிரிவினை ஆகும்.” இன்று இத்துடன் நான் பின்வருமாறு சேர்த்துக் கூறுவேண்டும்: வரலாற்றில் தோன்றிய முதல் வர்க்கப் பகைமை ஒரு தார மணத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் பகைமை வளர்வதுடன் பொருந்துகிறது, முதல் வர்க்க ஒடுக்குமுறை ஆண்பால் பெண்பாலை ஒடுக்குகின்ற ஒடுக்குமுறையுடன் பொருந்துகிறது.

ஒரு தார மண முறை வரலாற்று ரீதியில் மகத்தான முன்னேற்றமாகும். ஆனால் அதே சமயத்தில், அது அடிமை முறையுடனும் தனிச் சொத்துடனும் சேர்ந்தாற் போலவே இன்றளவும் நீடிக்கின்ற ஒரு யுகத்தைத் தொடங்கியது. அந்த யுகத்தில் ஒவ்வொரு முன்னேற்றமும் அதே போல் சார்புநிலையில் ஒரு பின்னடைவாகவும் இருக்கிறது. அதில் ஒரு குழுவின் துன்பத்தையும் ஒடுக்கப்படுதலையும் ஆதாரமாகக் கொண்டுள்ளது மற்றொரு குழு நல்வாழ்க்கையும் வளர்ச்சியும் அடைகிறது.

ஒரு பக்கத்தில் ஒரு தார மண முறை, மறு பக்கத்தில் பொது மகளிர் முறை இதனுள் விபசாரம் என்ற அதன் மிகத் தீவிரமான வடிவமும் அடங்கும். மற்ற எந்த சமுதாய நிறுவனத்தையும்  போல பொதுமகளிர் முறையும் ஒரு சமூக நிறுவனமே. அது பழைய பாலுறவு சுதந்திரத்தின் தொடர்ச்சியே- ஆண்களுக்குச் சாதகமான தொடர்ச்சி. குறிப்பாக ஆளும் வர்க்கத்தினர் எதார்த்தத்தில் இதை சகித்துக் கொள்வது மட்டுமன்றி ஆர்வத்துடன் கடைப்பிடித்தாலும் அதைப் பேச்சளாவில் கண்டிக்கிறார்கள். ஆனால் எதார்த்தத்தில் இந்தக் கண்டனம் விபசாரத்தில் ஈடுபடுகின்ற ஆண்களைத் தாக்கவில்லை, பெண்களைத்தான் தாக்குகிறது. பெண்பால் மீது ஆண்பால் செலுத்தும் சர்வ ஆதிக்கம் சமூகத்தின் அடிப்படையான விதி என்று மீண்டும் பிரகடனம் செய்வதற்காகப் பெண்கள் புறக்கணித்து சமூகத்துக்கு வெளியே தள்ளப்படுகிறார்கள்.

எனினும் இதனால் ஒரு தார மண முறைக்குள்ளேயே இரண்டாவது முரண்பாடு வளர்கிறது. பொது மகளிர் முறையின் மூலம் சொகுசான வாழ்க்கை நடத்துகின்ற கணவனுக்குப் பக்கத்திலேயே புறக்க கணிக்கப்பட்ட மனைவியும் நிற்கிறாள்.

நாமறிந்தவற்றுள் ஒருதார மண முறை என்ற ஒரே குடும்ப வடிவத்திலிருந்துதான் நவீன காலக் காதல் வளர்ந்திருக்க முடியும் என்ற போதிலும் இந்தக் காதல் அதற்குள் கணவன், மனைவியின் பரஸ்பரக் காதலாக மட்டுமே அல்லது பெரும்பாலும் கணவன், மனைவியின் காதலாக வளர்ந்தது என்று கூற முடியாது. ஆணின் ஆதிக்கத்தின் கீழுள்ள கண்டிப்பான ஒரு தார மணத்தின் தன்மை முழுவதுமே இதை அனுமதிப்பதில்லை, வரலாற்று ரீதியில் சுறுசுறுப்பான எல்லா வர்க்கங்களிடையிலும், அதாவது எல்லா ஆளும் வர்க்கங்களிடையிலும் திருமணம் என்பது இணைமண முறைக் காலத்திலிருந்து பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட, செளகரியத்துக்கான திருமணமாகவே இருந்து வந்துள்ளது.

இன்று, மிகப் பெரும் பாலான சமயங்களில் ஆண் குடும்பத்துக்குச் சம்பாதிப்பவனாக, உணவு அளிப்பவனாக இருக்க வேண்டியிருக்கிறது, குறைந்தபட்சம் உடைமை வர்க்கங்களில் இப்படித்தான். இது அவனுக்கு ஆதிக்க நிலையைத் தருகிறது. அதற்கு சிறப்பான சட்ட ரீதியான சலுகைககள் அவசியமில்லை , குடும்பத்தில் அவன் தான் முதலாளி; அவன் மனைவி பாட்டாளி வர்க்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறாள். எனினும் தொழில்துறை உலகில் முதலாளி வர்க்கத்தின் விசேஷமான, சட்ட ரீதியான சலுகைகள் எல்லாம் ஒரு புறம் ஒதுக்கப்பட்டு, இரண்டு வர்க்கங்களின் சட்ட ரீதியான சமநிலை நிறுவப்பட்ட பிறகே பாட்டாளி வர்க்கத்தை அழுத்திக் கொண்டிருக்கின்ற பொருளாதார ஒடுக்குமுறையின் குறிப்பான தன்மை மிகவும் கூர்மையாக வெளித்தெரிகிறது.

இரண்டு வர்க்கங்களுக்கு இடையிலான பகைமையை ஜனநாயகக் குடியரசு ஒழிப்பதில்லை. அதற்கு மாறாக, அதைச் சண்டை போட்டு முடிவு காண்பதற்குத்தான் களம் அமைத்துக் கொடுக்கிறது. நவீனக் குடும்பத்தில் பெண் மீது ஆணுக்குள்ள ஆதிக்கத்தின் அலாதித் தன்மையும் அவர்களிடையில் உண்மையான சமுதாய சமத்துவத்தை நிறுவுவதற்குரிய அவசியமும் வழிமுறையும் அதே போன்றதே. அவ்விருவரும் சட்டத்தின் முன்பாக முழுமையான சமநிலையில் இருக்கும் பொழுதே அவை முழு உருவத்தில் வெளிக்காட்டப்படும். பெண்ணினம் முழுவதையும் சமூக உற்பத்தியில் மீண்டும் புகுத்துவது தான் பெண்களின் விடுதலைக்குரிய முதல் நிபந்தனை என்பது அப்பொழுது தான் தெளிவாகும்.

குடும்பம் என்கிற இந்த அத்தியாயத்தின் தொகுப்புரை:-

மனிதகுல வளர்ச்சியின் மூன்று முக்கியமான கட்டங்களுடன் பொதுவாகவும் மொத்தமாகவும் பொருந்துகின்ற மூன்று முக்கியமான மண வடிவங்கள் உள்ளன: 1)காட்டு மிராண்டி நிலை-குழு மணம்; 2)அநாகரிக நிலை-இணை மணம்; 3)நாகரிக நிலை- ஒரு தார மணம், இதற்குத் துணையாகக் கள்ளக் காதல் நாயக முறையும் விபசாரமும். அநாகரிக நிலையின் முதிர்ந்தகட்டத்தில் இணை மணத்துக்கும் ஒரு தார மணத்துக்கும் இடையில் பெண்ணடிமைகள் மீது ஆண்கள் ஆதிக்கம் செலுத்துவதும், பலதார மண முறையும் உள்ளன.

இந்தத் தொடரில் குறிக்க வேண்டிய முன்னேற்றம், குழு மணத்திலுள்ள பாலுறவுச் சுதந்திரம் பெண்களிடமிருந்து மேன்மேலும் பறிக்கப்படுகிறதே தவிர, ஆண்களிடமிருந்து பறிக்கப்படவில்லை என்ற பிரத்யேகமான உண்மையுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை நமது மொத்த விளக்கமும் எடுத்துக்காட்டியிருக்கிறது. எதார்த்தத்தில் ஆண்கள் விஷயத்தில் குழு மணம் இன்றுவரை இருந்து வருகிறது. சட்ட ரீதியிலும் சமுதாய ரீதியிலும் பெண்ணுக்குக் கொடிய விளைவுகளை உண்டாக்கத்தக்க அதே குற்றம் ஆணைப் பொறுத்தமட்டில் கௌரவமானதாகக் கருதப்படுகிறது. அதிகமாகப் போனால் அவனுடைய ஒழுக்கத்துக்கு அது அற்பமான கறை: அதை அவன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறான்.
நாம் ஒரு சமூகப் புரட்சியை (கம்யூனிசப் புரட்சி) நெருங்கிக் கொண்டிருக்கிறோம். அதில் (கம்யூனிச சமூகத்தல்), இதுவரை இருந்துள்ள ஒருதார மணத்தின் பொருளாதார அடிப்படைகள் அனைத்தும், ஒரு தார மணத்தின் பிற்சேர்க்கையான விபசாரத்தின் அடிப்படைகளைப் போல மறைந்து விடுவது நிச்சயமாகும். ஒரு நபரிடம், அதாவது ஒரு ஆணிடம் கணிசமான அளவுக்குச் செல்வம் குவிந்ததிலிருந்துதான், இச்செல்வத்தை மற்ற குழந்தைகளுக்கு அல்லாமல் தன்னுடைய சொந்தக் குழந்தைகளுக்கு விட்டுச் செல்ல வேண்டுமென்ற விருப்பத்திலிருந்து தான் ஒரு தார பணம் தோன்றியது. இந்த நோக்கம் நிறைவேறுவதற்குப் பெண் ஒரு தார மண முறையில் இருக்க வேண்டும், ஆனால் ஆணுக்கு அது அவசியமல்ல, எனவே பெண்ணுக்குரிய இந்த ஒரு தார மணம் ஆணுடைய பகிரங்கமான அல்லது மறைமுகமான பல தார மணத்துக்குத் தடையாக இருக்கவில்லை, எனினும் வரப்போகின்ற சமூகப் புரட்சி, குறைந்தபட்சம் நிரந்தரமான, மரபுவழிச் செல்வத்தின் பெரும்பகுதியை - உற்பத்திச் சாதனங்களை- பொதுச்சொத்தாக மாற்றி விடுவதன் மூலம் வாரிசு முறை பற்றிய இந்தக் கவலைகளை எல்லாம் அதிகமாகக் குறைத்து விடும், பொருளாதாரக் காரணங்களிலிருந்து ஒரு தார மணம் தோன்றியதால் இக் காரணங்கள் மறைகின்ற பொழுது அதுவும் மறைந்து விடுமா?

ஒரு தார மணம் மறைவதற்குப் பதிலாக நடைமுறையில் முழுமையாக மெய்மையாகத் தொடங்கும் என்று பதில் கூறினால் அது தவறாகாது. ஏனென்றால் உற்பத்திச் சாதனங்களைப் பொது உடைமையாக மாற்றும் பொழுது கூலியுழைப்பும் பாட்டாணி வர்க்கமும் மறைந்து விடுகின்றன; அத்துடன் ஒரு குறிப்பிட்ட- புள்ளிவிவரப்படி கணக்கிடத்தக்க-- எண்ணிக்கையிலுள்ள பெண்கள் பணத்திற்காகத் தம்மை விற்க வேண்டிய அவசியமும் மறைந்து விடுகிறது. விபசாரம் மறைகிறது. ஒருதார மணம் நலிந்து போவதற்கு பதிலாக முடிவில்---ஆணுக்கும் சேர்த்து-எதார்த்தமாகிறது.

திருமணத்தில் முழு சுதந்திரம் என்பது முதலாளித்துவ உற்பத்தியையும் அது படைக்கின்ற சொத்து உறவுகளையும் ஒழிப்பதன் மூலம் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் இன்னும் இவ்வளவு பலமான தாக்கத்தைச் செலுத்துகின்ற துணைப் பொருளாதாரக் காரணங்கள் எல்லாவற்றையும் அகற்றிய பிறகுதான் பொதுவாகச் செயல்பட முடியும். அப்பொழுதுதான் பரஸ்பர அன்பைத் தவிர வேறு எந்த நோக்கமும் இருக்காது. ஒருவன் பால் அல்லது ஒருத்தியின் பால் அன்பு காட்டுவது காதலின் இயல்பு. எனினும் இன்று பெண் மட்டுமே அதை முழுமையாகக நடைமுறையில் காட்டுகிறாள். எனவே காதல் திருமணம் அதன் இயல்பிலேயே ஒரு தார மணமாகத்தான் இருக்கிறது. குழு மணத்திலிருந்து ஒரு தார மணத்துக்கு முன்னேற்றமடைந்தது முக்கியமாகப் பெண்களினால் ஏற்பட்டது என்று கருதுவது மிகச் சரியானது.

இணை மணத்திலிருந்து ஒரு தார மணத்துக்கு மாறியது மட்டுமே ஆண்களால் ஏற்பட்டது என்று கொள்ள முடியும். மேலும், வரலாற்று ரீதியாகப் பார்த்தால் இதன் விளைவாகப் பெண்களின் நிலை மேலும் மோசமடைந்தது. திருமணமான ஆண்களின் ஒழுக்கக் கேட்டுக்கு வழி கிடைத்தது. ஆண்களுடைய வழக்கமான ஒழுக்கக் கேட்டைப் பெண்கள் சகித்துக் கொண்டிருக்கும்படி கட்டாயப்படுத்துகின்ற பொருளாதார நோக்கங்கள் தமது வாழ்க்கையைப் பற்றிய கவலை, அதற்கும் மேலாகத் தமது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றிய கவலை----மறைகின்ற பொழுது ஏற்படுகின்ற ஆண், பெண் சமத்துவம் பெண்கள் பல கணவர் மண முறைக்குப் போய் விடுவதை விட ஆண்கள் உண்மையிலேயே ஒரு தார மணத்தைக் கடைப் பிடிப்பதற்குப் பேருதவி செய்யும் என்று முந்திய அனுபவத்தின் அடிப்படையில் கூறலாம்.

முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு வந்து கொண்டிருக்கின்ற அழிவுக்குப் பிறகு பால் உறவுகளை ஒழுங்குபடுத்துவதைப் பற்றி நாம் ஊகமாகச் சொல்லக் கூடியது பெரும்பாலும் எதிர்மறையாகவே இருக்கிறது. இதைத் தவிர கூடுதவாக என்ன இருக்கும்? ஒரு புதிய தலைமுறை வளர்ச்சி அடைந்த பிறகு அது முடிவு கட்டப்படும். அந்தத் தலைமுறையைச் சேர்ந்த ஆண்களுக்கு பணத்தைக் கொண்டு அல்லது சமூக ரீதியான இதர அதிகார சாதனங்களைக் கொண்டு ஒரு பெண்ணை இணங்கச் செய்யும்படி தம் வாழ்க்கையில் என்றைக்குமே நேராது. பெண்கள் உண்மைக் காதலுக்காக மட்டுமன்றி வேறெந்த நோக்கத்துக்காகவும் எந்த ஆணுக்கும் என்றைக்குமே இணங்க மாட்டார்கள், அல்லது பொருளாதார விளைவுகளைப் பற்றி அச்சம் கொண்டு தம்முடைய காதலனுக்குத் தம்மைக் கொடுப்பதற்குத் தயங்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படாது. அப்படிப்பட்ட மக்கள் தோன்றியவுடனே, அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நாம் இன்று நினைக்கிறோமோ, அதைச் சிறிதும் பொருட்படுத்த மாட்டார்கள். அவர்கள் ஒவ்வொரு நபருடைய நடைமுறையை ஒட்டி தமது சொந்த நடைமுறையையும் அதற்குப் பொருத்தமான தமது சொந்தப் பொது மக்கள் அபிப்பிராயத்தையும் நிலை நாட்டுவார்கள், விஷயம் அத்துடன் முடிந்து விடும்.

Thursday 22 November 2018

கருத்துமுதல்வாத மோசடியில் சிக்கிடாதவருக்கே வரலாற்றியல் பொருள்முதல்வாதம் தெளிவாகப் புரியும்


இன்றைய சாதி பற்றிய விவாதத்தில் மார்க்சிய அடிப்படை என்ற பொருளில் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப பேசிவருகின்றனர். மார்க்சியம் “கருத்து” என்பதை எவ்வாறு பார்க்கிறது என்பதில் தெளிவிருந்தால் இந்த விவாதம் இந்தவழியில் செல்லாது.

மார்க்சின் மாபெரும் கண்டபிடிப்பு, என்று எங்கெல்ஸ் குறிப்பிடுகிற இந்த வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைப் புரிந்து கொள்வதில் சிக்கல் நீடிப்பது வேதனைக்கு உரியதே. மார்க்சும் எங்கெல்சும் “வரலாற்றியல் பொருள்முதல்வாதம்” என்று தனியாக “மூலதனம்” நூல் போல் எழுதவில்லை என்பது உண்மையே. ஆனால் அதனைப் போதுமான அளவுக்கு விளக்கத்தைத் தமது நூல்களிலும் கடிதங்களிலும் விளக்கியிருக்கின்றனர்.

மூலதனம் நூலின் முன்னுரையில் ஹெகலின் இயக்கவியலைப் பற்றிப் பேசும் போது தெளிவாகவே பொருள்முதல்வாத கண்ணோட்டத்தை மார்க்ஸ் முன்வைத்துள்ளார்.

“எனது இயக்கவியல் வழிமுறை ஹெகலிய வழிமுறையிலிருந்து வேறுபட்டது மட்டுமன்று, அதற்கு நேர் எதிரானதுமாகும். ஹெகலுக்கு, மனித மூளையின் உயிர் நிகழ்முறையானது, அதாவது சிந்தனை நிகழ்முறையானது -இதனை அவர் ''கருத்து' என்ற பெயரில் சுயேச்சையான கர்த்தாவாகவே மாற்றி விடுகிறார் - எதார்த்த உலகத்தின் படைப்பாளி ஆகும்; எதார்த்த உலகம் "கருத்தின்" புற வடிவமே, புலப்பாட்டு வடிவமே அன்றி வேறில்லை. மாறாக எனக்கு, கருத்துலகம் என்பது மனித உள்ளத்தால் பிரதிபலிக்கப்பட்டு, சிந்தனை வடிவங்களாக மாற்றப் படுகிற பொருளுலகமே அன்றி வேறில்லை.”

தத்துவ உலகம் இரண்டாகத் தான் பிரிந்திருக்கிறது. ஒன்று கருத்துமுதல்வாதம் மற்றொன்று பொருள்முதல்வாதம். இதனைக் கடந்து மூன்றாவதாகவோ, இரண்டையும் ஒன்றிணைந்ததாகவோ கருதுவதெல்லாம் கருத்துமுதல்வாதத்திற்கே நம்மைக் இட்டுச் செல்லும்.

“பருப்பொருள், மனதின் உற்பத்திப் பொருள் அன்று. ஆனால் மனம் என்பது பருப்பொருளின் உன்னதமான விளைபொருளே ஆகும். இது தூய பொருள்முதல்வாதம் என்பது உண்மையே.”
(லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள
ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்)

எங்கெல்ஸ் கூறுகிறபடி பருப்பொருளின் விளைபொருளே மனம், இந்தத் தூய பொருள்முதல்வாதத்தைப் புரிந்து கொள்ள முடிவில்லை என்றால், சிந்தனையின் போக்கை மார்க்சிய வழியில் அறிந்து செயல்பட முடியாது.

கருத்துகள், கண்ணோட்டங்கள் ஆகிவற்றின் மாற்றம் பொருளாயத வாழ்நிலைமைகளில் ஏற்படும் மாறுதல்களினால் ஏற்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள ஆழ்ந்த ஞானம் வேண்டுமா என்ன? என்று “கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை” நம்மைப் பார்த்துக் கேட்கிறது. மேலும், பொருள் உற்பத்தியில் ஏற்படும் மாற்றமே அறிவுத்துறையிலும் மாற்றத்தை ஏற்படுகிறது என்பதையே வரலாறு நிரூபிக்கிறது என்கிறது.

“மனிதனது கருத்துகளும் நினைப்புகளும் கண்ணோட்டங்களும் – சுருங்கச் சொன்னால் மனிதனது உணர்வானது- அவனது பொருளாயத வாழ்நிலைமைகளிலும் சமூக உறவுகளிலும் சமூக வாழ்விலும் ஏற்படும் ஒவ்வொரு மாறுதலுடனும் சேர்ந்து மாறிச் செல்வதைப் புரிந்து கொள்ள ஆழ்ந்த ஞானம் வேண்டுமா? என்ன?

பொருள் உற்பத்தியில் ஏற்படும் மாறுதலுக்கு ஏற்ப, அறிவுத் துறை உற்பத்தியின் தன்மையிலும் மாற்றம் ஏற்படுகிறது – கருத்துக்களின் வரலாறு நிரூபிப்பது இதன்றி வேறு என்னவாம்?” (கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை)

வர்க்கப் போராட்டம் என்ற சொல்லைப் பிடித்துக் கொண்டிருந்தால் போதாது, அதனை மார்க்சியம் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற கோட்பாட்டின் மூலம் எவ்வாறு விளக்குகிறது என்பதை அறிந்திருக்க வேண்டும்.

“அறிக்கையில் இழையோடி நிற்கும் அடிப்படை கருத்து – வரலாற்றின் ஒவ்வொரு சகாப்தத்திலும் பொருளாதார உற்பத்தியும் தவிர்க்க முடியாதபடி இதிலிருந்து எழும் சமூகக்கட்டமைப்பும் அந்தச் சகாப்தத்தின் அரசியல், அறிவுத்துறை வரலாற்றுக்குரிய அடித்தளமாய் அமைகின்றன, ஆகவே (புராதன நிலப் பொதுவுடைமை சிதைந்து போன காலம் முதலாள்) அனைத்து வரலாறும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே , சமூக வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களிலும் சுரண்டப்படும் வர்க்கத்துககும் சுரண்டும் வர்க்கத்துக்கும், ஆதிக்கத்க்கு உட்படுத்தப்படும் வர்க்கத்துக்கும் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்துக்கும் இடையே நடைபெறும் போராட்ட வரலாறாகவே இருந்து வருகிறது, ..”
(கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை, எங்கெல்ஸ் முன்னுரை 1883)


      அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற கோட்பாட்டைப் பற்றிய வார்த்தை விவரிப்பதிலேயே காலம்கடத்தியது போல், மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது என்பதையும் வார்த்தை விளையாட்டாகப் புரிந்து கொள்ளக்கூடாது.  க்கோட்பாட்டில் காணப்படும் கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் ஆகியற்றுக்கு இடையேயுள்ள வேறுபாட்டை அறிந்திடல் வேண்டும்.

மார்க்ஸ்:- “உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டமைப்பு எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுத்துறை வாழ்வின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது. மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது."
(அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு முன்னுரை)

      மனிதர்களின் உணர்வுநிலையே அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிக்கிறது என்றால் இது கருத்துமுதல்வாதம். மனிர்களுடைய வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது என்றால் இது பொருள்முதல்வாதம்.

      அதே போல் அடித்தளம் தீர்மானிக்கிறது என்றால் பொருள்முதல்வாதம், மேற்கட்டமைப்பு அடித்தளத்தைத் தீர்மானிக்கிறது என்றால் கருத்துமுதல்வாதம். இதல்லாது மூன்றாவது உணர்வுநிலையோ, மூன்றாவது தளமோ கிடையாது.

      மார்க்சின் வரலாற்றியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாத சிலர், மனிதனது சிந்தனையை மதிக்காது, புறநிலையே சமூகத்தைச் செயற்படுத்துகிறது என்று மார்க்சியம் கருதுவதாகக் கூறுகின்றனர்.

இதற்கு எங்கெல்ஸ் நேரடியாகவே பொருளாதார நிலைமை தானாகவே செயல்பட்டு விளைவை ஏற்படுத்துவதில்லை என்று பதில் அளித்துள்ளார். தொடர்ந்து அதனை மக்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்துகின்றனர் என்பதையும் கூறியுள்ளார்.

சில நபர்கள் தம் வசதிக்காகக் கற்பனை செய்ய முயல்வதைப் போல, பொருளாதார நிலைமை தானாகவே செயல்பட்டு விளைவை ஏற்படுத்துவதில்லை.

மனிதர்கள் தம்முடைய வரலாற்றைத் தாங்களே உருவாக்குகிறார்கள்  ஆனால் குறிப்பிட்ட சூழலில் (அந்தச் சூழல் அவர்களைத் தகவமைக்கிறது) ஏற்கெனவே இருந்து கொண்டிருக்கின்ற மெய்யான உறவுகளின் அடிப்படையில், இந்த மெய்யான உறவுகளில் பொருளாதார உறவுகள் (இவற்றின் மீது மற்ற உறவுகள்  அரசியல் மற்றும் சித்தாந்த உறவுகள்  எவ்வளவு அதிகமாகத் தாக்கம் செலுத்தினாலும்) முடிவில் இன்னும் தீர்மானகரமான உறவுகளாக இருக்கின்றன, அவை சமூக வளர்ச்சி முழுவதும் இழையோடியிருக்கின்றன, அவை மட்டுமே இவ்வளர்ச்சியைப் புரிந்து கொள்ள இட்டுச் செல்லும்”
(வொ.போர்கியுசுக்கு எழுதிய கடிதம், லண்டன், ஜனவரி 25, 1894)

      மார்க்சுக்கு முன்பாக மனிதனது உணர்வுநிலையைக் கொண்டு  அவனுடைய வாழ்நிலைக்கு விளக்கம் தரப்பட்டது. இப்போது மனிதனது வாழ்நிலையைக் கொண்டு அவனுடைய உணர்வுநிலைக்கு விளக்கம் கூறுவதற்கு வழி கண்டுபிடிக்கப்பட்டது.

எங்கெல்ஸ்:- சமுதாயத்தின் பொருளாதாரக் கட்டமைப்புதான் மெய்யான அடித்தளமாய் எப்பொழுதும் அமைகிறது. இதிலிருந்து தொடங்கினால்தான் வரலாற்றின் அந்தந்தக் காலக் கூறுக்கும் உரிய நீதிநெறி அரசியல் நிறுவனங்களும் மற்றும் சமயக் கருத்துக்களுமாகிய மேற்கட்டமைப்பு அனைத்திற்கும் நாம் முடிவான விளக்கம் காணமுடிகிறது.... இதுகாறும் செய்யப்பட்டது போல மனிதனது உணர்வைக் கொண்டு அவனுடைய வாழ்நிலைக்கு விளக்கம் கூறுவதற்குப்பதில், மனிதனது வாழ்நிலையைக் கொண்டு அவனுடைய உணர்வுக்கு விளக்கம் கூறுவதற்கு ஒரு வழி கண்டறியப்பட்டது."
                                          (டூரிங்குக்கு மறுப்பு)

      பொருள்முதல்வாதத்தைத் தவறாகப் புரிந்து கொண்டவர்களே, பொருளாதார நிலைமை தானாகவே செயல்பட்டு விளைவை ஏற்படுத்தும் என்றும், மேற்கட்டமைப்பு அடித்தளத்திற்குக் கட்டுப்பட்டு அடிபணிந்து கிடக்கும் என்று கருதினர். இதற்கு எங்கெல்ஸ் தமது இறுதிக்காலத்தில் கடிதங்களில் பதிலளித்தார்.

இந்தக் கடிதங்களைத் திருத்தல்வாதிகள் எங்கெல்ஸ் அடித்தளம் தீர்மானிக்கும் என்ற கருத்தை மாற்றிக் கொண்டார் என்று விளக்கப்படுத்தினர். உண்மை அவ்வாரில்லை. அடித்தளம் மேற்கட்டமைப்பு ஆகியவற்றுக்கு இடையேயான இடைச்செயலில் அடித்தளத் மேற்கட்டமைப்பன் மீது தீர்மானகரமான பாத்திரத்தையும், மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் மீது தமது தாக்கத்தையும் செலுத்துகிறது என்றே எங்கெல்ஸ் விளக்கம் கொடுக்கிறார். மேற்கட்டமைப்பின் பாத்திரத்தைத் தான் விவரிக்கிறார். இடைச்செயலின் முடிவில் பொருளாதார இயக்கம் இன்றியமையாததாகத் தன்னை நிறுவுகிறது என்று தான் கூறியிருக்கிறார்.

...வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கருதுகோளின்படி மெய்யான வாழ்க்கையின் உற்பத்தியும் மறுவுற்பத்தியுமே வரலாற்றை முடிவாக நிர்ணயிக்கின்ற சக்திகளாகும். மார்க்சோ, நானோ இதற்கு மேல் ஒருபோதும் சொல்லவில்லை. ஆகவே பொருளாதாரக் கூறு ஒன்றுதான் நிர்ணயிக்கின்ற ஒரே கூறு என்று யாராவது இதைத் திரித்துக் கூறினால், அவர் இந்தக் கருதுகோளைப் பொருளில்லாத, சூக்குமமான, அர்த்தமில்லாத சொற்றொடராக மாற்றிவிடுகிறார். பொருளாதார நிலைமைதான் அடிப்படை, ஆனால் மேற்கட்டபைப்பின் பல்வேறு கூறுகள் - வர்க்கப் போராட்டத்தின் அரசியல் வடிவங்களும் அதன் விளைகளும், வெற்றிகரமான சண்டைக்குப் பிறகு வெற்றி பெற்ற வர்க்கம் நிறுவிய அரசியலமைப்பு, இதரவை, சட்டவியல் வடிவங்கள், பங்கெடுப்பவர்களின் அறிவில் இந்த மெய்யான போராட்டங்கள் எல்லாவற்றின் மறிவினைகளும் கூட, அரசியல், சட்டவியல், தத்துவஞானத் தத்துவங்கள், சமயக் கருத்துக்களும் வறட்டுக் கோட்பாடுகளைக் கொண்ட அமைப்புகளாக அவற்றின் கூடுதலான வளர்ச்சியும் - வரலாற்றுப் போராட்டங்களின் நிகழ்வுப்போக்கின் மீது தாக்கம் செலுத்துகின்றன, பல இனங்களில் அவற்றின் வடிவத்தை நிர்ணயிப்பதில் பெரிதளவாயிருக்கின்றன.

இக்கூறுகள் அனைத்தும் இடைச்செயல் புரிகின்றன, அந்த முடிவில்லாத தற்செயல் நிகழ்வுகளுக்கு (அதாவது, பொருள்கள் மற்றும் சம்பவங்களின் உள்இடைத்தொடர்பு மிகவும் தொலைவானதாக அல்லது நிரூபிக்க முடியாததாக இருப்பதால் அதை இல்லை என்று, அற்பமானதென்று நாம் கருத முடியும்) மத்தியில் முடிவில் பொருளாதார இயக்கம் இன்றியமையாததாகத் தன்னை நிறுவுகிறது.
(பிலோஹுக்கு எழுதிய கடிதம் செப்டெம்பர் 21 (22) 1890)

      இவ்வளவுத் தெளிவாக எங்கெல்ஸ் வெளிப்படுத்திய பின்பும், மேற்கட்டமைப்பின் சுதத்திரத் தன்மையை எங்கெல்ஸ் அங்கிகரித்தார் என்றே கூறிவருகின்றனர். அடித்தளமும் மேற்கட்டமைப்பும் சமஅளவுக்குப் பரஸ்பர வினைபுரிகிறதை எங்கெல்ஸ் ஏற்றுக் கொண்டார் என்றும் கூறுகின்றனர். ஆனால் அவரது கடிதங்களில் இவர்கள் கூறுவதைப் போல் எங்கும் காணப்படவில்லை. சில சொற்களுக்கு இவர்கள் புதிய விளத்தைக் கொடுத்துவிட்டு, எங்கெல்ஸ் இறுதியில் முடிபாகக் கூறியதை மறைத்துவிடுகின்றனர்.

      மேற்கட்டமைப்பில் காணப்படும் சுதந்திரம் சார்புநிலையானதே என்றுதான் எங்கெல்ஸ் கூறியுள்ளார். இந்த எதிர்செயல் சமதத்துவமற்றது அதனால் தான் அடித்தளத்தின் பாத்திரம் தீர்மானகரமானது, மேற்கட்டமைப்பின் பாத்திரம் தாக்கம் செலுத்துதல் என்கிறார். இடைச் செயல் என்பது பரஸ்பரமானது கிடையாது. அதாவது சமஅளவினது கிடையாது.

மேற்கட்டமைப்பு இயன்ற அளவுக்கு அதிகமான சுதந்திரத்துக்கு முயல்வதைத் திருத்தல்வாதிகள் பெரிதுபடுத்துகின்றனர். இந்த முயற்சியின் இறுதியில் பொருளாதார இயக்கம் இன்றியமையாததாகத் தன்னை நிறுகிறது என்று எங்கெல்ஸ் கூறியுள்ளதை மறைக்கின்றனர்.

“புதிய, சுயேச்சையான சக்தி பிரதானமாக உற்பத்தியின் இயக்கத்தைப் பின்பற்றுகின்ற பொழுதே, தன்னுடைய உள்ளுறையான சார்புநிலைச் சுதந்திரத்தின் மூலம், அதாவது ஒரு சமயத்தில் மாற்றித் தரப்பட்டு படிப்படியாக மேலும் வளர்க்கப்பட்ட சார்பு நிலைச் சுதந்திரத்தின் மூலம் உற்பத்தி நிலைமைகள் மற்றும் போக்கின் மீது தன் பங்குக்கு எதிர்ச்செயல் புரிகிறது. இது இரண்டு சமத்துவமில்லாத சக்திகளின் இடைச்செயல்: ஒரு பக்கத்தில் பொருளாதார இயக்கம், மறு பக்கத்தில் புதிய அரசியல் சக்தி; இச்சக்தி இயன்ற அளவுக்கு அதிகமான சுதந்திரத்துக்கு முயல்கிறது; அந்த அரசியல் சக்தி ஒரு தடவை கிடைத்த பிறகு அது சொந்த இயக்கத்தைப் பெற்று விடுகிறது. மொத்தத்தில் பொருளாதார இயக்கம் முன்னேறும்; ஆனால் அது தானே நிறுவி சார்புநிலையான சுதந்திரம் அளித்த அரசியல் இயக்கத்தின் ஒரு பக்கத்தில் அரசு ஆட்சியதிகாரத்தின் இயக்கத்திலிருந்தும் மறு பக்கத்தில் அதே சமயத்தில் தோற்று விக்கப்படுகின்ற எதிர்ப்பிலிருந்தும் - எதிர்ச்செயல்களுக்கு உட்படுகிறது.”
(ஷ்மிட்டுக்கு எழுதிய (அக்டோபர் 27, 1890) கடிதம்)

பொருளாதார நிலைமைதான் அடிப்படை, ஆனால் மேற்கட்டபைப்பின் பல்வேறு கூறுகள் - வர்க்கப் போராட்டத்தின் அரசியல் வடிவங்களும் அதன் விளைகளும், வெற்றிகரமான சண்டைக்குப் பிறகு வெற்றி பெற்ற வர்க்கம் நிறுவிய அரசியலமைப்பு, இதரவை, சட்டவியல் வடிவங்கள், பங்கெடுப்பவர்களின் அறிவில் இந்த மெய்யான போராட்டங்கள் எல்லாவற்றின் மறிவினைகளும் கூட, அரசியல், சட்டவியல், தத்துவஞானத் தத்துவங்கள், சமயக் கருத்துக்களும் வறட்டுக் கோட்பாடுகளைக் கொண்ட அமைப்புகளாக அவற்றின் கூடுதலான வளர்ச்சியும் - வரலாற்றுப் போராட்டங்களின் நிகழ்வுப்போக்கின் மீது தாக்கம் செலுத்துகின்றன, பல இனங்களில் அவற்றின் வடிவத்தை நிர்ணயிப்பதில் பெரிதளவாயிருக்கின்றன.

இக்கூறுகள் அனைத்தும் இடைச்செயல் புரிகின்றன, அந்த முடிவில்லாத தற்செயல் நிகழ்வுகளுக்கு (அதாவது, பொருள்கள் மற்றும் சம்பவங்களின் உள்இடைத்தொடர்பு மிகவும் தொலைவானதாக அல்லது நிரூபிக்க முடியாததாக இருப்பதால் அதை இல்லை என்று, அற்பமானதென்று நாம் கருத முடியும்) மத்தியில் முடிவில் பொருளாதார இயக்கம் இன்றியமையாததாகத் தன்னை நிறுவுகிறது.
(பிலோஹுக்கு எழுதிய கடிதம் செப்டெம்பர் 21 (22) 1890)

கருத்துமுதல்வாத மோசடியில் சிக்கிடாதவர்களுக்கே இந்த வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

 எங்கெல்ஸ்:- “”பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறையே சமூக, அரசியல், அறிவுலக வாழ்ககையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது” (மார்க்ஸ்) எல்லாவிதமான சமூக அரசியல் உறவுகளும், மத, சட்ட அமைப்புகளும் வரலாற்றுப் போக்கில் உருவாகின்ற அனைத்துத் தத்துவக் கருதுகோள்களும் அந்தக் குறிப்பிட்ட சகாப்தத்தில் நிலவிய வாழ்க்கையின் பொருளாயத நிலைமைகளைப் புரிந்து கொண்டால் மட்டுமே பின்னோக்கிச் சென்று இந்தப் பொருளாயத நிலைமைகளின் தடத்தை முன்னவற்றில் தேடிக் கண்டுபிடித்தால் மட்டுமே புரிந்து கொள்ளப்பட முடியும் என்பது அரசியல் பொருளாதாரத்துக்கு மட்டுமல்லாமல், வரலாற்று விஞ்ஞானங்களுக்கும் கூட (இயற்கை விஞ்ஞானங்களில் சேராத மற்ற துறைகள் அனைத்துமே வரலாற்று விஞ்ஞானங்களே) ஒரு புரட்சிகரமான கண்டுபிடிப்பாகும்.

“மனிதர்களுடைய உணர்வு அவர்களுடைய வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கிறது.” இந்தக் கருதுகோள் மிக எளிமையாக இருப்பதால், கருத்துமுதல்வாத மோசடியில் சிக்கிவிடாத எவரும் இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அது தத்துவத்துறையில் மட்டுமல்லாது செய்முறை துறையிலும்கூட மிக அதிகப் புரட்சிகரமான விளைவுகளுக்கு இட்டுச் செல்கிறது.”
(அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு
பங்களிப்பு என்ற நூலைப் பற்றி)

Wednesday 21 November 2018

வரலாற்றியல் பொருள்முதல்வாதமும் சமூகப் புரட்சியும்

(மாசேதுங் கருத்தை முன்வைத்து)


மாசேதுங் மார்க்சிய அடிப்படைகளுக்கு முதன்மைக் கொடுத்து பல இடங்களில் விளக்கியிருக்கிறார்.

அவற்றில் குறிப்பிடத் தக்கவை:-

"வறட்டுவாதம், திரிபுவாதம் இரண்டும் மார்க்சியத்துக்கு விரோதமானவை. மார்க்சியம் நிச்சயம் முனனேறி வளரும் நடைமுறை அனுபவத்தின் வளாச்சியுடன் தேங்கி நிற்க முடியாது. அது ஸ்தம்பித்து மாறாக நிலையில் நின்றால் அது உயிரற்றதாகிவிடும். இருந்தும் மார்க்சியத்தின் அடிப்படை கோட்பாடுகளை அத்துமீறக் கூடாது. அத்துமீறினால் தவறுகள் இழைக்கப்படும். ஒரு நிலையியல் கணோட்டத்திலிருந்து மார்க்சியத்தை அணுகுவதும், அதை ஏதோ  விறைப்பான ஒன்றாக கருதுவதும் வறட்டுவாதம் ஆகும். மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை  நிராகரித்தால், அதன் அனைத்தும் தழுவிய உண்மைமையை நிராகரித்தால் அது திரிபுவாதம் ஆகும். திரிபுவாதம் என்பது முதலாளித்துவ வர்க்க சித்தாந்தத்தின் ஒரு வடிவம். சோசலிசத்துககும் முதலாளித்துவத்துக்கும் இடையிள்ள வேற்றுமைகளை, பாட்டாளி வாக்க சர்வாதிகாரத்துககும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கும், முதலாளித்துவ வர்க்க சர்வாதிகாரத்துக்கும் இடையிலுள்ள வேற்றுமைகளை திரிபுவாதிகள் மறுக்கின்றனர். அவர்கள் வக்காலத்து வாங்குவது உண்மையில் முதலாளித்துவ மார்க்கத்திற்கன்றி சோசலிச மார்க்கத்திற்கல்ல. இன்றைய நிலைமைகளில் திரிபுவாதம் என்பது வறட்டுவாதத்தைக் காட்டிலும் ஆபத்தானது. இன்று சித்தாந்தத் துறையில் நமது முக்கியமான கடமைகளில் ஒன்று திரிபுவாதத்துக்கு எதிரான விமரிசனத்தை மலரச்செய்வதாகும்."

("சீனக் கம்யூனிஸ்டுக் கடசியின் பிரச்சார வேலை

பற்றிய தேசிய மாநாட்டுரை" (12 மார்ச், 1957))

இதில் மாவோ மார்க்சியத்தின் அடிப்படை கோட்பாடுகளை அத்துமீறக் கூடாது என்பதை தெளிபடுத்தியுள்ளார்.

சமூக வளர்ச்சிப் பற்றிய வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தை புரிந்து கொள்வதற்கு, மார்க்ஸ் நமக்களித்துள்ள கருத்தாக்கமான அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பற்றி மிகச் சுருக்கமாக பார்ப்போம்.

மனிதர்கள் தமது வாழ்க்கைக்காக உற்பத்தி செய்திடும் போது, தவிர்க்க முடியாத வகையில் திட்டவட்டமான உறவுகளில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் மனிதர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து புறநிலையாக இருப்பவையாகும்இதுவரை வளர்ச்சியடைந்துள்ள  பொருளாதார உற்பத்திச் சக்திகளின் மட்டத்திற்கு ஏற்ப, உற்பத்தி உறவு ஏற்படுகிறது. இந்த உற்பத்தியின் கூட்டுமொத்தமே அன்றைய அரசியல் பொருளாதார அமைப்பாகும், அதுவே அச்சமூகத்தின் அடித்தளமாகும். இந்த அடித்தளத்தின் மீது சட்டம், அரசியல் போன்ற மேல்கட்டமைப்பு எழுப்பப்படுகிறது. இதற்கு பொருத்தமாக சமூக உணர்வின் வடிவங்கள் தோன்றுகின்றன.

மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லைஅவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.. இந்த மாற்றம் விரைவிலோ அல்லது சற்றுதாமதமாகவோ நடைபெறலாம். மனிதர்களின் சமூக வாழ்நிலையே அவர்களது உணர்வுநிலையை நிர்ணயிக்கிறதுஇவ்வகையில் தான் சமூக உணர்நிலையின் மாற்றத்தை புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு சமூக அமைப்பும் அதன்  உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியை எட்டுவதற்குமுன்பாக மறைந்திடுவதில்லை. அச்சமூகத்திலுள்ள பழைய உற்பத்தி உறவுகள் அகற்ற வேண்டுமானால், புதிய உற்பத்தி உறவுகள் தோன்றுவதற்கான, பொருளாயத நிலைமைகள் அச்சமூகத்தில் தோன்றியிருக்க வேண்டும்.

உற்பத்தியும், மறுவுற்பத்தியும், அடித்தளத்தை நிர்ணயிக்கிற சக்தியாகும். ஆனால், மேற்கட்டமைப்பு அடித்தளத்தை தாக்கம் செலுத்துவதையும், இடைச்செயல் புரிவதையும் மார்க்சியம் மறுத்திடவில்லை. இந்த இடைத்தொடர்பு மிகவும்  தொலைவானதாக இருக்கிறது, முடிவில்லாத தற்செயல் நிகழ்வுகளுக்கு மத்தியில்முடிவில் பொருளாதார இயக்கம் இன்றியமையாததாகத் தன்னை நிறுவுகிறது. மேற்கட்டமைப்பு பலயினங்களில் வடிவத்தை நிர்ணயிப்பதில் பெரிதளவாயிருக்கின்றன

இரண்டாம் நிலையானாலும் சித்தாந்தங்கள் அடித்தளத்தின் மீது எதிர்ச்செயல் புரிகிறது. இதனை மறுப்பவர்கள் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை  இயக்கவியல் கண்ணோட்டத்தில் பார்க்காமல், காரணத்தை ஒரிடத்திலும், விளைவை வேறோர் இடத்திலும் காண்கிறார்கள். ஆனால் இந்த இடைச்செயல் சார்பானதாகும், மேற்கட்டமைப்பு அடித்தளத்திற்கு கட்டுப்பட்ட வகையில் தனது செயற்பாட்டில் சுதந்திரம் பெற்று அடித்தளத்தில் தாக்கம் செலுத்துகிறது. இந்த சார்பான தாக்கம், மேற்கட்டமைப்பின் முழுச்சுதந்திரம் பெற்றதாகவோ, அடித்தளத்தை  நிர்ணயிக்கிற சக்தி உடையதாகவோ கணக்கிடமுடியாது. பொருளாதார இயக்கம் மிகவும் வலிமையானதாகவும், ஆதிமூலமானதாகவும், தீர்மானகரமான சக்தியாகவும் இருக்கிறது.

அடித்தளத்துக்கும் மேற்கட்டமைப்புக்கும் இடையேயான உறவு ஒன்று தீர்மனகரமானது, மற்றொன்று தாக்கம் செலுத்துகிறது.

அடித்தளம் மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது - நிர்ணயிக்கிறது, மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் மேல் தாக்கம் செலுத்துகிறது

இந்த அடிப்படையோடு மாசேதுங் எழுதியுள்ள "முரண்பாடு பற்றி" என்ற கட்டுரையில் எழுதியுள்ளதைப் பார்ப்போம்.

மாசேதுங்:-

உற்பத்தி சக்திகளும், நடைமுறையும், பொருளாதார அடித்தளமும், உண்மையில் முதன்மையான நிச்சயமான பங்கையே வகிக்கிறது. இதை மறுக்கக் கூடியவர்கள் பொருள்முதல்வாதிகளாக இருக்கமுடியாது. ஆனால், குறிப்பிட்ட நிலைமைகளில் உற்பத்தி உறவுகள், கோட்பாடு மற்றும் மேற்கட்டுமானம் போன்ற கூறுகள் முதன்மையான தீர்மானகரமான பாத்திரமாக மாறி தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றன என்பது கட்டாயம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். (.. theory and the superstructure in turn manifest themselves in the principal and decisive role. )

உற்பத்தி உறவுகளில் மாற்றமேதும் இல்லாமல், உற்பத்தி சக்திகள் மேலும் வளர்ச்சியுற முடியாமல் இருக்கும்போது, உற்பத்தி உறவுகளில் ஏற்படும் மாற்றம் முதன்மையான, தீர்மானகரமான பாத்திரத்தை வகிக்கிறது. "புரட்சிகர கோட்பாடு இல்லாமல், புரட் சிகரமான இயக்கம் இருக்க முடியாதுஎன லெனின் கூறிய காலத்தில், புரட்சிகர கோட்பாடு உருவாக்கமும், அதற்காக வாதாடுவதுமே முதன்மையான தீர்மானகரமான பங்கை வகித்தன. ஒரு கடமை (எத்தகையதொன்றானாலும் கூட) நிறைவேற்றப்பட வேண்டிய நேரத்தில், வழிகாட்டும் பாதையோ, வழிமுறையோ, திட்டமோ, கொள்கையோ இல்லாதிருக்கும் போது வழிகாட்டும் பாதையோ, வழிமுறையோ, திட்டமோ, கொள்கைகளோ உருவாக்கப்படுவதுதான் முதன்மையான தீர்மானகரமான கூறாகும்.

அதேபோன்று, அரசியல்-பண்பாடு முதலிய மேல்கட்டுமானம், பொருளாதார அடித்தளத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் போது, அரசியல் மற்றும் பண்பாட்டு மாற்றங்கள் முதன்மையானவையாகவும், தீர்மானகரமானவையாகவும் விளங்குகின்றன. இப்படிச் சொல்லும் போது நாம் பொருள் முதல்வாதத்திற்கு முரணாகச் செல்கிறோமா? இல்லை. ஏனெனில், வரலாற்றின் பொது வளர்ச்சியில் சடப் பொருட்களே சிந்தனையைத் தீர்மானிக்கிறது; சமூக வாழ்வு - சமூக உணர்வை நிச்சயிக்கிறது என்பதை நாம் ஏற்றுக் கொள்ளும் அதேநேரத்தில், சிந்தனை என்பது சடப் பொருளின் மீதும்; சமுதாய உணர்வு என்பது சமுதாய வாழ்வின்மீதும்; மேல்கட்டுமானம் என்பது பொருளாதார அடித்தளத்தின் மீதும் பிரதிபலிப்பதை நாம் ஏற்று கொள்கிறோம். உண்மையில் அதை நாம் அங்கீகரிக்கவும் வேண்டும். இது, பொருள்முதல்வாதத்திற்கு எதிரானது அல்ல. மாறாக, எந்திரவியல் பொருள் முதல்வாதத்தைத் தவிர்த்து, இயங்கியல் பொருள் முதல்வாதத்தை உயர்த்திப் பிடிக்கிறது.”

(முரண்பாடு பற்றி

-          முதன்மை முரண்பாடும் ஒரு முரண்பாட்டின் முதன்மைக் கூறும

மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் 1- 467-468)

அரசியல், பண்பாடு போன்றவை மேற்கட்டுமானம், பொருளாதார அடித்தளத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் பொழுது, அரசியல் மற்றும் பண்பாட்டு மாறுதல்கள் முதன்மையானதாகவும் தீர்மானகரமானதாகவும் ஆகின்றன என்கிறார் மாவோ. இங்கே மாவோ பொருளாதார அடித்தளம் மேற்கட்டமைப்பின் மீது முதன்மையான தீர்மானகரமான பாத்திரத்தை ஏற்றுக்கொண்டு, கூடுதலாக குறிப்பிட்ட நிலைமைகளில் கோட்பாடு மற்றும் மேற்கட்டுமானம் தீர்மானகரமான பாத்திரமாக வெளிப்படுத்துவதாகவும் கூறிவிடுகிறார்.

இந்த விளக்கம் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பரஸ்பரம் தீர்மானகர பாத்திரம் வகிப்பதாக பொருள்கொள்ள வைத்திடுகிறது. பல மார்க்சிய எழுத்தாளர்கள் இதனைப் பிடித்துக் கொண்டு மார்க்சிய அடிப்படைகளில் இருந்து விலகுகின்றனர்.

வரலாற்றுப் பொருள்முதல்வாதம்  ஓர் அரிச்சுவடி என்ற நூலில் .சிவசுப்பிரமணியன் எழுதியுள்ளார்.

ஒரு சமூகத்தின் அடித்தளமாகப் பொருள் உற்பத்தி முறை அமைய, அதன் மேற்கட்டுமானமாக, கலை இலக்கியம், பண்பாடு, மதம், ஒழுக்கநெறிகள் ஆகியன அமைகின்றன. ஒரு சமூகத்தில் நிலவும் பொருள் உற்பத்தி முறை அதன் மேற்கட்டுமான அம்சங்களைப் பாதிக்கிறது. சில நேரங்களில் அதைத் தீர்மானிக்கிறது. ஆயினும் மேற்கட்டுமானம்  பிடித்து வைத்த பிள்ளையார்க என்பது போல் வாளாயிருப்பதில்லை. பல நேரங்களில் அதுவும் தன் பங்கிற்கு அடித்தளமான பொருள் உற்பத்தி முறையைப் பாதிக்கிறது 

,சிவசுப்பிரமணியன் அடித்தளம் மேற்கட்டுமான அம்சத்தை பாதிப்பதாகவும், சில நேரங்களில் அடித்தளம் தீர்மானிக்கிறது என்று, மார்க்ஸ் கூறிய அடித்தளத்தின் நிர்ணயிக்கும் போக்கை மறுக்கிறார்.

அடித்தளம் மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கும் (தீர்மானிக்கும், பிரதிபலிக்கும்) - மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் மீது தாக்கம் செல்வாக்கு செலுத்தும். இந்த வார்த்தைகளை இதற்கு மாறாக பயன்படுத்துவது மார்க்ஸ், எங்கெல்ஸ். லெனின் ஆகியோரின் தத்துவக் கண்ணோட்டத்துக்கு மாறானதே.

எஸ்..பெருமாள் அவர்கள் "மார்க்சீய தத்துவம் ஓர் அறிமுகம்" என்ற நூலை எழுதியுள்ளார். அதில்:-

"அடித்தளம் :- சமூகத்தின் பொருளாதார அமைப்பு. இதுவே உற்பத்தி முறை. பொருளியல் வாழ்வு, சமூகம், அரசியல் சிந்தனைகளை நிர்ணயிக்கிறது."

இதில் மிகச்சுருக்கமாகவும் சரியாகவும் சொல்லிவிட்டார். ஆனால் அவர் இத்துடன் நிறுத்திக் கொள்ள விரும்பாமல், கிராம்சியின் பண்பாட்டு சிந்தனையை இங்கே புகுத்திவிடுகிறார்.

"மேற்கட்டுமானம் :- தத்துவம், மதம், கலை இலக்கியம், கலாச்சாரம், இவையும் நிர்ணயமான பாத்திரம் வகிக்கின்றன. தத்துவத்திலும் பண்பாட்டு தளத்திலும் சமகாலச் சொரணை மிகவும் அவசியம்."

எஸ்..பெருமாள் அவர்கள் அடித்தளத்திற்கும் மேற்கட்டமைப்பிற்கும் சமமான முதன்மை கொடுப்பதும், கட்டிடமில்லையேல் கூரையில்லை. கூரையில்லையேல் கட்டிடமில்லை என்று புதுமையான விளக்கம் அளிப்பதும் விந்தையாக இருக்கிறது.

அடித்தளம் மேற்கட்டுமானத்தை தீர்மானிக்கிறது. மேற்கட்டுமானமும் அடித்தளத்தை தீர்மானிக்கிறது. கட்டிடமில்லையேல் கூரையில்லை. கூரையில்லையேல் கட்டிடமில்லை. சமூக மதிப்புகள், அறிவியல், அரசியல், கலை இலக்கியம், தத்துவம் ஆகிய கருத்தியல் உறவுகள் மனிதர்க்கு உண்டு. கலை இலக்கியம், தத்துவம், மதம், சாதி, பொருள்பண்பு கொண்ட பண்பாட்டு சக்திகளாக மாறும் தன்மை கொண்டவை.

சுரண்டும் நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ வர்க்கங்கள் - வெறும் பொருளாதார பலத்தாலோ, அரசியல் பலத்தாலோ மட்டும் நம்மை ஆண்டு வரவில்லை. அவை வலுவான அரசு மற்றும் சமூக பண்பாட்டு நிறுவனங்களை உருவாக்கி வைத்திருக்கின்றன. பிரபஞ்சத்தின் தோற்றம் கட்டமைப்பு என்ற உச்சாணிக் கேள்விகளில் தொடங்கி மனிதனின் தினசரி நடத்தை வரையில் ஊடுருவி நிற்கும் நிறுவனமாக மதம் திகழ்கிறது - இன்றும் தொடர்கிறது.

பொருளாதாரத்தை வெறும் என்றும், அரசு, சமூக பண்பாட்டு நிறுவனங்களை வலுவான என்றும் அடைமொழி கொடுப்பதிலிருந்தே எஸ்..பெருமாள் அவர்களது கண்ணோட்டம் சித்தாந்தை முதன்மைப்படுத்துவது வெளிப்படுகிறது. அந்த வலுவான அரசும், பண்பாட்டு நிறுவனங்களும் அன்றைய பொருளாதார வளர்ச்சி நிலையால் தான் நிர்ணயிக்கப்பட்டவை என்கிற மார்க்சியக் கண்ணோட்டம் இங்கே மறுக்கப்படுகிறது.

"மார்க்சியத்தின் எதிர்காலம் அரசியல் சிக்கல் " என்ற கட்டுரையில் தியாகு எழுதுகிறார்.

"அடித்தளத்துக்கும் மேற்கட்டுமானத்துக்குமான உறவுகள் பொருளாதாரத்துக்கு நேர் பொருத்தமாக அரசியல், கலை இலக்கியம் என்றெல்லாம் வருவது கிடையாது. ஒவ்வொரு துறைக்கும் சுயேச்சையான தனி வரலாறு உண்டு. இவற்றிடையே செயற்கையாக முடிச்சுப் போடும் முயற்சிகள் உண்டு. அதேபோல இவை ஒன்றின் மீதொன்று செலுத்துகிற தாக்கத்தைக் காணாதிருப்பதும் தவறு"

அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற கருத்தாக்கத்தின் இயக்கவியல் தொடர்வை அறுத்துவிடுகிறார் தியாகு.

மார்க்சிய அரசியல் பொருளாதாரம் என்ற தமது நூலில் வெங்கடேஷ் ஆத்ரேயா கூறுகிறார்:-

சில மேற்கட்டுமானமும் அடித்தளத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், அடிக்கட்டுமானம் தான் மேல்கட்டுமானத்தின் மீது தீர்மானகரமான செல்வாக்கைச் செலுத்துகிறது என்பதும் வலியுறுத்தப்படுகிறது.

இதில்  ஆனால்  என்று சந்தேகத்தை கிளப்பி விடுகிறார். அது மட்டுமல்லாது இந்த அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற விவரிப்பில் முரண்தொனி காணப்படுகிறது. மேற்கட்டமைப்பை ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது என்றால் எந்தளவிற்கு, அடித்தளம் மேற்கட்டமைப்பை தீர்மானிக்கிறது என்றால் எந்த வகையில் என்பது இங்கு தெளிவாக்கப்படவில்லை. வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை முழுமையாக புரிந்து கொள்வதில்லை என்று வருத்தப்படுகிறார் தோழர் வெங்கடேஷ் ஆத்ரேயாஆனால் இவ்வளவு குழப்பமாக எழுதியிருப்பதைப் பார்க்கும் போது புரிந்து கொள்ளக் கூடாது என்ற முடிவில் இருப்பது போல் தோன்றுகிறது.

அடித்தளம் மேற்கட்டமைப்பில் தீர்மானகரமான செல்வாக்கைச் செலுத்துகிறது.  இதில் செல்வாக்கை செலுத்துவது என்ற சொல்லை, மேற்கட்டுமானம் அடித்தளத்தின் மீது செலுத்துவதைக் குறிக்க வேண்டும், தீர்மானகரமான என்பதை, அடித்தளம் மேற்கட்டமைப்பை தீர்மானிக்கிறது என்று தெரிவிக்க வேண்டும். இதை மாற்றியோ, அல்லது குறிப்பிடாமலோ இருந்தால் குழப்பமும், புரியாமையும் தான் ஏற்படும்.

கோவை ஞானி மார்க்சியத்திற்கு அழிவில்லைஎன்று கட்டுரைக்கு தலைப்பைக் கொடுத்துவிட்டு, மார்க்சியத்தின் அடிப்படைகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் அதனை புரட்டுகிறார்.

"மார்க்சியத்தின் அடிப்படைகள் என்று அறியப்பட்டனவற்றினுள்ளும் கேள்விகள் எழுந்துளளன.

..

அடித்தளம், மேல்கட்டுமானம் என்பனவற்றில் எப்பொழுதும் அடித்தளத்திற்கே அழுத்தம் என்பது தொடக்கம் முதலே கேள்விக்குள்ளாகியிருக்கிறது"

இதன் மூலம் கோவை ஞானி மாறிவரும் காலகட்டத்தில் மட்டும் அல்ல, மார்க்சியம் தோன்றியதிலிருந்தே, அதன் அடிப்படைகளை கேள்விக்குள்ளாக்குகிறார். அவர் மார்க்ஸ் பிறந்த காலத்தில் வாழ்ந்திருந்தாலும் மார்க்சியத்தை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருந்திருக்கமாட்டார் என்பதே உண்மை, அதனால் தான் கட்டுரையின் மற்றொரு பகுதியில் "பொருளா? கருததா? எது முதல் என்ற ஆய்வில் பொருள்முதல்வாதம் அடங்குவதில்லை. பொருளும் கருத்தும ஒன்றையொன்று ஊடுடுருக் கூடியவை" என்று எழுதுகிறார். ஆக இவரால் மார்க்சியத்தை மட்டுமல்ல, தத்துவயியலை பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் என்ற இரு போக்குகளாகப் பிரிக்கப்படுவதையே விரும்பவில்லை, ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.

பொன்னீலன் மார்க்சியத்தின் எதிர்காலம் பண்பாட்டுச் சிக்கல்என்ற கட்டுரையை எழுதியுள்ளார். “மார்க்சியத்தில் மிக அடிப்படையான ஒரு கூறு அடித்தளத்துக்கும் மேற்கோப்புக்கும் இடையிலான உறவு. அடித்தளமும் மேற்கோப்பும் ஒன்றை ஒன்று பாதிப்பது. ஒன்றோடொன்று முரண்படுவது.” இதில் பொன்னீலன் அடித்தளத்திற்கும் மேற்கோப்புக்கும் இடைத்தொடர்பை மட்டும் தெரிவிக்கிறார், ஆனால் அடித்தளத்தின் தீர்மானகரப் போக்கை கூறாமலேயே விட்டுவிடுகிறார். அடுத்து கூறுகிறார். “.. சமகாலத்தில் மனிதனைப் பற்றியோ, மனிதகுலம் பற்றியோ பார்க்கும் பொழுது இந்தப் பார்வை மட்டும் போதாது என்று தோன்றுகிறது”. ஆக இவரும் மார்க்சியத்தின் பொருள்முதல்வாதக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை என்பதை வெளிப்படுத்திவிட்டார்.

மார்க்ஸ் கூறுகிறார்:-

"இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டமைப்பு எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுத்துறை வாழ்வின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது. மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.

வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் பொருளாயத உற்பத்திச் சக்திகள் அன்றைக்கிருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு - அல்லது அவற்றைச் சட்டபூர்வமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்ற சொத்துரிமை உறவுகளோடு - இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள் மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதிலிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறிவிடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது.

பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள், அந்த மாபெரும் மேற்கட்டுமானம் முழுவதையுமே சீக்கிரமாகவோ அல்லது சற்றுத் தாமதமாகவோ, மாற்றியமைக்கின்றன. இப்படிப்பட்ட மாற்றங்களை ஆராய்கிற பொழுது உற்பத்தியின் பொருளாதார நிலைமையில் ஏற்படுகிற பொருள்வகை மாற்றங்களுக்கும் (இயற்கை விஞ்ஞானத்தைப் போல இதைத் துல்லியமாக நிர்ணயிக்க முடியும்) சட்டம், அரசியல், மதம், கலைத் துறை அல்லது தத்துவஞானத் துறைகளில் - சுருக்கமாகச் சொல்வதென்றால்  சித்தாந்தத் துறைகளில் - இந்தப் போராட்டத்தை மனிதர்கள் உணர்ந்து  கொண்டு அதில் இறுதி முடிவுக்காகப் போராடுகின்ற கொள்கை வடிவங்களுக்கும் வேறுபாட்டைக் காண்பது எப்பொழுதுமே அவசியமாகும்.

.......

எந்த சமூக அமைப்பும் அதற்குப் போதுமான உற்பத்தி சக்திகள் அனைத்தும் வளர்ச்சியடைவதற்கு முன்பாக ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை, புதிய, உயர்வான உற்பத்தி உறவுகள் தாங்கள் நீடித்திருக்கக் கூடிய பொருளாயத நிலைமைகள் பழைய சமூகத்தின் சுற்றுவட்டத்துக்குள் முதிர்ச்சியடைவதற்கு முன்பே பழைய உற்பத்தி உறவுகளை ஒருபோதும் அகற்றுவதில்லை. எனவே மனித குலம் தன்னால் சாதிக்கக் கூடிய கடமைகளையே தனக்குத் தவிர்க்க முடியாதபடி விதித்துக் கொள்கிறது. ஏனென்றால் பிரச்சினையைத் தீர்க்கக் கூடிய பொருளாயத நிலைமைகள் முன்பே இடம் பெற்ற பிறகு அல்லது குறைந்தபட்சம் உருவாக்கிக் கொண்டிருக்கும் பொழுதுதான் அந்தப் பிரச்சினையே தோன்றுகிறது என்பது அதிக நுணுக்கமாக ஆராயும் பொழுது புலப்படும்."

(அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு முன்னுரை )

மேற்கட்டமைப்பில் ஏற்படுகின்ற மாற்றங்களை ஆராய்ந்தால் உற்பத்தியின் பொருளாதார நிலைமையில் ஏற்படுகிற பொருள்வகை மாற்றங்களை- சுருக்கமாகச் சொல்வதென்றால் சித்தாந்தத் துறைகளில் ஏற்படுகின்றன என்று தான் மார்க்ஸ் கூறுகிறார். ஆனால் மாவோ "உற்பத்தி உறவுகளில் மாறுதல் எதுவும் இன்றி, வளர்வதற்கு உற்பத்தி சக்திகளுக்கு சாத்தியமாகாத பொழுது அப்பொழுது, உற்பத்தி உறவுகளில் மாறுதல் என்பது முதன்மையான, தீமானகரமான பாத்திரத்தை ஆற்றுகிறது. புரட்சிகரக் கோட்பாட்டை உருவாக்குதிலும் அதைக் கடைப்பிடிப்பது அக்காலங்களில் முதன்மையான தீர்மானகரமான பாத்திரத்தை ஆற்றுகின்றன" என்கிறார். அடித்தளத்தில் ஏற்பட்ட மாற்றங்களின் தீர்மானித்தப்படி மேற்கட்டமைப்பு தீவிரமாக செயற்படுகின்றன என்று சொல்வது தான் மார்க்சியம். சமூகத்தை மாற்றும் படியான மேற்கட்டமைப்பின் தீவிரமான செயற்பாட்டை அடித்தளத்தின் முரண்பாடே தீர்மானிக்கிறது என்று மார்க்சியம் தெளிவாகவே கூறியிருக்கிறது.

இதனையே அறிக்கையில் மார்க்சும், எங்கெல்சும் கூறுகிறார்கள்:-

கம்யூனிஸ்டுகளுடைய தத்துவார்த்த முடிவுகள் உலகைப் புத்தமைக்க நினைக்கும் இந்த அல்லது அந்தச் சீர்திருத்தாளர் புனைந்தமைத்ததோ, கண்டுபிடித்தோ கூறிய கருத்துக்களை அல்லது கோட்பாடுகளை எவ்வகையிலும் அடிப்படையாய்கக் கொண்டவையல்ல.

நடப்பிலுள்ள வர்க்கப் போராட்டத்திலிருந்து, நம் கண்ணெதிர் நடைபெற்று வரும் வரலாற்று இயக்கத்தலிருந்து உதிக்கும் மெய்யான உறவுகளையே இந்த முடிவுகள் பொதுப்பட எடுத்துரைக்கின்றன. நடப்பிலுள்ள சொத்துடைமை உறவுகளை ஒழிப்பது எவ்வதத்திலும் கம்யூனிசத்துக்கு உரித்தான ஒரு தனிச் சிறப்பல்ல.

வரலாற்று  நிலைமைகளில் ஏற்படும் மாற்றத்தின் விளைவாய்ச் சொத்துடைமை உறவுகள் யாவும் கடந்த காலத்தில் தொடர்ந்தாற்போல் வரலாற்று வழியில் மாற்றமடைந்தே வந்திருக்கின்றன

அறிக்கை தெளிவாக்குவது என்வென்றால் சோஷலிசப் புரட்சியை நிகழ்த்துவது இந்த அல்லது அந்தச் சீர்திருத்தாளர்களின் கருத்துக்கள் அல்லது கோட்பாடுகள் அல்ல. நடைபெற்றுவரும் வர்க்கப் போராட்டத்திலிருந்தே அவை பொதுப்பட எடுத்துரைக்கப்படுகின்றன. அதனால் சொத்துடைமை உறவுகளை ஒழிப்பது இந்த சீர்திருத்தாளர்களின் கோட்பாட்பாட்டினாலோ அல்லது புனைந்தமைந்ததோ கிடையாது.

இதனை லெனின் தெளிவுபடுத்துகிறார்.

"..மார்க்சியப் பார்வைநிலையில் புரட்சி என்பது என்ன?  காலாவதியாகிவிட்ட அரசியல் மேற்கட்டுமானத்தை பலத்தைக் கொண்டு இடித்துத் தள்ளுவது, அதற்கும் புதிய உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயுள்ள முரண்பாடு ஒரு குறிப்பிட்ட தருணத்தில் அதை இற்று விழும்படி செய்தது.

..

மேற்கட்டுமானம் ஒவ்வாரு கணுவிலும் வெடிப்புற்று வருகிறது, அழுத்தம் தாங்க முடியாமல் பலவீனப்பட்டு வருகிறது. மிகப் பலவாக வேறுபட்ட வர்க்கங்களின், குழுக்களின் பிரதிநிதிகள் மூலமாக மக்கள் இன்று தங்கள் சொந்த முயற்சியினால் ஒரு புதிய மேற்கட்டுமானத்தைக் கட்டிக் கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில் பழைய மேற்கட்டுமானம் பயனற்றதென்று எல்லோருக்கும் தெரிந்துவிடுகிறது. எல்லோரும் புரட்சியை அங்கீகரிக்கிறார்கள். எந்த வர்க்கங்கள் இந்தப் புதிய மேற்கட்டுமானத்தைக் கட்ட வேண்டும், எப்படி கட்ட வேண்டும் என்று வரையறுப்பதே இன்றுள்ள பணி."

(ஜனநாயகப் புரட்சியில் சமூக-ஜனநாயகவாதத்தின் இரண்டு போர்த்தந்திரங்கள்)

எங்கெல்ஸ் காலமானபோது லெனின் எழுதியனார்:-

"தொழிலாளி வாக்கமும் அதன் கோரிக்கைகளும் இன்றையப் பொருளாதார அமைப்பு முறையிலிருந்து விளைந்த அவசியமான விளைவே என்றும், இந்தப் பொருளாதார அமைப்பு முறையும் முதலாளித்துவ வர்க்கமும் சேர்ந்து தவிர்க்க முடியாத வகையிலே பாட்டாளி வர்க்கத்தை உண்டாக்கி, அதனை ஒழுங்கமைத்து அணி திரட்டுகின்றன என்றும் முதன் முதலாக எடுத்துக் காட்டியவர்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருமே. இன்று மனித குலத்தை ஒடுக்கி வதைத்து வரும் தீமைகளிலிருந்து அதை விடுவிக்க வல்லது ஒழுங்கமைத்துக் கொண்டு அணிதிரண்டு நிற்கும் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டமே தவிர உயர்ந்த சிந்தனை படைத்த தனிநபர்கள் சிலரின் நல்லெண்ண மிக்க  முயற்சிகள் அல்ல என்று அவ்விருவரும் எடுத்துக் காட்டினார்கள். சோஷலிசம் என்பது எதோ கனவு காண்பவர்களுடைய கற்பனைப் பொருள் அல்ல, நவீன சமுதாயத்தில் உற்பத்திச் சக்திகளுடைய வளர்ச்சியின் கடைசிக் குறிக்கோளும், தவிர்க்க முடியாத விளைவும் ஆகும் அது என்று தங்கள் விஞ்ஞான நூல்களிலே மார்க்சும் எங்கெல்சும் முதன் முதலாக விளக்கினர்."

(பிரெடெரிக் எங்கெல்ஸ்)

இதில் லெனின் தொழிலாளி வர்க்கத்தின் கோரிக்கைகளும், பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டமும் தனிநபர்களின் நல்லெண்ண மிக்க முயற்சிகளால் தோன்றியவை அல்ல என்று மார்க்ஸ் எங்கெல்ஸ் வலியுறுத்துவதை எடுத்துக்காட்டியுள்ளார். அதே போல் சோஷலிசம் என்பது கனவின் கற்பனை பொருளல்ல, நவீன சமூக வளர்ச்சியின் உற்பத்திச் சக்திகளுடைய வளர்ச்சியின் இறுதிக் குறிக்கோளும் தவிர்க்க முடியாத விளைவாகும் என்று மார்க்சும் எங்கெல்சும் தங்களது விஞ்ஞான நூல்களில் எழுதியதை லெனின் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இறுதிக் குறிக்கோளையும், விளைவையும் அறிந்து உணர்ந்து சித்தாந்தமாக்கி புரட்சியை முடிப்பவர்களே பாட்டாளி மக்களும், விவசாயிகளும் இவர்களை தலைமைத் தாங்கும் முன்னணிப் படையும், பொதுவாக அனைத்து மக்களோடு இணைந்து புரட்சியை நிகழ்த்தி காட்டுகின்றனர்.

குறிப்பிட்ட நிலைமைகளில் மேற்கட்டமைப்பு தீர்மானகரமான பாத்திரம் ஆற்றுகிறது என்று மாவோ கூறுகிறார். இது அடித்தளத்துக்கும் மேற்கட்டப்புக்கும் உள்ள இடைத் தொடர்பை பரஸ்வர வினையாற்றுதலாக புரிந்து கொள்வதற்கு முழுமையான இடம் கொடுக்கிறார்.

இன்று பரஸ்பரவினைபுரிதல் என்ற கோட்பாட்டை பின்பற்றுபவர்கள், தோழர் மாவோவின் இந்தக் கருத்தைத் தான் முன்நிறுத்துகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளோ, அமைப்புகளோ இதனை விவாதித்து எந்த முடிவையும் இதுவரை நிலைநிறுத்தவில்லை. கம்யூனிச நடைமுறைச் சிக்கலுக்கு, இந்த பரஸ்பர வினைபுரிதல் காரணமானதை, இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவே இல்லை. இதனை ஆழமாக விவாதிப்பது அவசியமானதாகும்.

லெனின்:-

"மேற்கட்டுமானம் ஒவ்வொரு கணுவிலும் வெடிப்புற்று வருகிறது. மிகப் பலவாக வேறுபட்ட வர்க்கங்களின், குழுக்களின் பிரதிநிதிகள் மூலமாக மக்கள் இன்று தங்கள் சொந்த முயற்சியினால் ஒரு புதிய மேற்கட்டுமானத்தைக் கட்டிக் கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில் பழைய மேற்கட்டுமானம் பயனற்றதென்று எல்லோருக்கும் தெரிந்துவிடுகிறது. எல்லோரும் புரட்சியை அங்கீகரிக்கிறார்கள். எந்த வர்க்கங்கள் இந்தப் புதிய மேற்கட்டுமானத்தைக் கட்ட வேண்டும், எப்படிக்கட்ட வேண்டும் என்று வரையறுப்பதே இன்றுள்ள பணி, இதை வரையறுக்காவிட்டால் புரட்சிக் கோஷம் தற்சமயம் பொருளற்ற வெற்றிச் சொல்லாகும்"

(ஜனநாயகப் புரட்சியில் சமூக-ஜனநாயகவாதத்தின் இரண்டு போர்த்தந்திரங்கள்)

புரட்சிகர கட்டத்தில் பழைய மேற்கட்டுமானம் பயனற்றது என்று எல்லோருக்கும் தெரிந்து புரட்சியை ஏற்றுக் கொண்டுவிடுகின்றனர். அப்போது எந்த வர்க்கங்கள் இந்தப் புதிய மேற்கட்டுமானத்தைக் கட்ட வேண்டும் எப்படிக்கட்ட வேண்டும் என்று வரையறுக்கிற தீவிரபாத்திரத்தை தீர்மானிக்கும் பாத்திரமாக மாசேதுங் கூறிவிடுகிறார்மேற்கட்டுமானம் பொருளாதார அடித்தளத்தின் வளர்ச்சியைத் தடுக்கும்பொழுது அடித்தளம் திறனற்றுபோய்விட்டதாகவும் மேற்கட்டுமானத்தால் அடித்தளத்தை காப்பாற் வேண்டிய சூழல் ஏற்பட்டது போல் மாவோ பேசுகிறார்.

ஆனால் இந்தச் சூழலை மார்க்ஸ்:-

"மூலதனத்தின் ஏக போகம், அதனோடு சேர்ந்தும் அதன் ஆளுகையிலும் பிறந்து வளர்ந்த பொருளுற்பத்தி முறைக்குப் பூட்டிய விலங்காகி விடுகிறது. முடிவில், உற்பத்திச் சாதனங்களின் மையப்பாடும் உழைப்பின் சமூகமயமாதலும் வளர்ந்து செல்கையில், அவற்றின் முதலாளித்துவ மேலோடு அவற்றுக்கு ஒவ்வாத்தாகி விடும் நிலை வருகிறது. ஆகவே அந்த மேலோடு உடைத்தெறியப்படுகிறது. முதலாளித்துவத் தனியுடைமையின் சாவு மணி ஒலிக்கிறது. உடைமை பறிப்போரின் உடைமை பறிக்கப்படுகிறது."

(மூலதனம்I (தமிழ் என்.சி.பி.எச்)பக்கம் 1026-1027)

இங்கு மார்க்ஸ் உற்பத்திச் சாதனங்களின் மையப்பாடும் உழைப்பின் சமூகமயமாதலும் வளர்ந்து சென்றமையால், முதலாளித்துவ மேற்கட்டுமான மேலோடுகள் அடித்தளத்துக்கு ஒவ்வாததாகிவிடுவதைக் குறிப்பிட்டு, மேலோடு உடைத்தெறியப்படும் என்று கூறுகிறார். அடித்தளத்தின் வளர்ந்த பொருளுற்பத்தி முறைக்குப் பூட்டிய விலங்காகிப் போனதால் உடைத்தெறியப்படுவதைக் குறிப்பிடுகிறார். அடித்தளம் பலவினப்பட்டு போனதால் மேற்கட்டமைப்பு தீர்மானகரபாத்திரம் எடுக்க வேண்டிய நிலைவந்தது என்று மாசேதுங் கூறுவது போல் மார்க்ஸ் பேசவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அடித்தளத்தின் வளர்ச்சி நிலைக்கு, மேற்கட்டமைப்பு பின்தங்கிப் போனதால் மேற்கட்டமைப்பு உடைத்தெறியப்படுகிறது.

அடித்தளத்துக்கும் மேற்கட்டமைப்புக்குமான இயக்கவியல் தொடர்பை மறுப்பதின் விளைவே மாசேதுங்கின் கூற்றுக்குக் காரணம்.

மார்க்ஸ் கூறுகிறார்:-

சமுதாய உறவுகள் உற்பத்திச் சக்திகளோடு நெருக்கமாகப் பிணைக்கப்படடுள்ளன. புதிய உற்பத்திச் சக்திகளைப் பெறுவதிலே மனிதர்கள் தமது உற்பத்தி முறையை மாற்றிக் கொள்கிறார்கள், உற்பத்தி முறையையும் தமது வாழ்க்கைக்கான சம்பாதிக்கும் முறையையும் மாற்றிக் கொள்வதிலே தங்களுடைய சமுதாய உறவுகள் அனைத்தையும் மாற்றி விடுகிறார்கள், கையால் ஓட்டி மாவரைக்கும் இயந்திரம் உங்களுக்கு நிலப்பிரபுவைக் கொண்ட சமுதாயத்தைக் கொடுக்கிறது, நீராவியால் ஓடுகிற இயந்திரம் தொழில்துறை முதலாளியைக் கொண்ட சமுதாயத்தைக் கொடுக்கிறது.

தமது பொருள் உற்பத்திற்குரிய தரத்துக்குப் பொருத்தமாகத் தமது சமுதாய உறவுகளை நிறுவிக் கொள்கிற அதே மனிதர்கள்தாம் அந்தச் சமுதாய உறவுகளுக்குப் பொருத்தமாகக் கோட்பாடுகளையும் கருத்துக்களையும் வகையினங்களையும் உற்பத்தி செய்கிறார்கள்.

ஆகவே, இந்தக் கருத்துக்களும் இந்த வகையினங்களும் வெளியிடுகிற உறவுகள் எந்த அளவுக்கு நிரந்தரமானவையாக இல்லையோ அதே அளவுக்குத் தாமும் நிரந்தரமானவை அல்ல. அவை வரலாற்றுரீதியான, தற்காலிகமான விளைபொருட்களே.

உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியிலே, சமுதாய உறவுகளில் அழிவிலே, கருத்துக்களின் உருவாக்கத்திலே ஒர் இடையறாத இயக்கம் இருக்கிறது.

 (தத்துவவியலின் வறுமை)

எங்கெல்ஸ் போர்கியுக்கு எழுதிய கடித்தில் சமூகத்துக்குத் தொழில்நுட்பத் தேவை ஏற்பட்டால், அத்தேவை பத்து பல்கலைகழகங்களைக் காட்டிலும் அதிகமாக விஞ்ஞானத்தை முன்னுக்குத் தள்ளும் என்று பொருளாதார தேவையின் அடிப்படையில் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் நடைபெறுவதாக கூறுகிறார். ஆனால் இர்பான் அபீப் போன்றோர்கள் கருத்துநிலைகளிலிருந்து தொழில்நுட்பம் கண்டுபிடிக்க படுவதாக தெரிவிக்கின்றனர்.

மார்க்சிய வழியில் வரலாற்றியல் பொருள்முதுல்வாதத்தை ஏற்றுக் கொள்ளாத்தால்    இர்பான் அபீப்  சமூக மாற்றத்தில் பொருளாதார காரணங்களின் இன்றியமையாததை புரிந்த கொள்ளாமல் கூறுகிறார், முதலாளித்துவமும், பிற சுரண்டல் அமைப்புகளும் சொந்தச் சுமை காரணமாக அல்லது முதலாளித்துவப் பொது நெருக்கடி காரணமாக தாமாகவே வீழ்ந்துவிடாது. கருத்துப் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு மாற்று இல்லை. பொருளாதாரச் செயல்பாடு ஒரு உதவிதான். ஆனால் அது வர்க்க உணர்வுக்கு மாற்றாகாது.

இங்கே, இர்பான் அபீப்  கருத்துக்களை தோற்றுவிக்கிற தீர்மானகரமான சக்தி பொருளாதாரத்தில் இருப்பதை மறுக்கிறார். தீர்மானகரமான சக்தியை ஒரு உதவி என்று சிறுமைப்படுத்துகிறார். இது பொருள்முதல்வாதப் பார்வைக்கு மறான கருத்தாகும்.

வர்க்கப் போராட்டத்தின் சாரம் பொருளாதார செயற்பாட்டில் அடங்கியிருக்கிறது. வர்க்க உணர்வென்பது பொருளாதார செயற்பாட்டிலிருந்து விலக்கி பார்ப்பதென்பது கருத்துமுதல்வாதக் கண்ணோட்டமாகும். வர்க்கப் பேராட்டத்தின் பொருளாதாரக் காரணங்களின் அடிப்படையில் விளக்கப்படுத்துவதே பொருள்முதல்வாதமாகும். பொருளாயதக் காரணங்களின் விளைவுகளின் அடிப்படையில் இதனை விளக்கப்படுத்துவதால் தான் மார்க்சியத்தை விஞ்ஞானம் என்றழைக்கப்படுகிறது.

சமூக வாழ்க்கை நிலையே மனிதர்களுடைய உணர்வை நிர்ணயிக்கிறது என்ற பொருள்முதல்வாதக் கண்ணோட்டம், கருத்துமுதல்வாத மோசடியில் சிக்கிவிடாதவர்களுக்கே தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும் என்று எங்கெல்ஸ் கூறுவது சரியாகத்தான் இருக்கிறது.

“”பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறையே சமூக, அரசியல், அறிவுலக வாழ்ககையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது” (மார்க்ஸ்) எல்லாவிதமான சமூக அரசியல் உறவுகளும், மத, சட்ட அமைப்புகளும் வரலாற்றுப் போக்கில் உருவாகின்ற அனைத்துத் தத்துவக் கருதுகோள்களும் அந்தக் குறிப்பிட்ட சகாப்தத்தில் நிலவிய வாழ்க்கையின் பொருளாயத நிலைமைகளைப் புரிந்து கொண்டால் மட்டுமே பின்னோக்கிச் சென்று இந்தப் பொருளாயத நிலைமைகளின் தடத்தை முன்னவற்றில் தேடிக் கண்டுபிடித்தால் மட்டுமே புரிந்து கொள்ளப்பட முடியும் என்பது அரசியல் பொருளாதாரத்துக்கு மட்டுமல்லாமல், வரலாற்று விஞ்ஞானங்களுக்கும் கூட (இயற்கை விஞ்ஞானங்களில் சேராத மற்ற துறைகள் அனைத்துமே வரலாற்று விஞ்ஞானங்களே) ஒரு புரட்சிகரமான கண்டுபிடிப்பாகும்.

மனிதர்களுடைய உணர்வு அவர்களுடைய வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கிறது.” இந்தக் கருதுகோள் மிக எளிமையாக இருப்பதால், கருத்துமுதல்வாத மோசடியில் சிக்கிவிடாத எவரும் இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அது தத்துவத்துறையில் மட்டுமல்லாது செய்முறைத் துறையிலும்கூட மிக அதிகப் புரட்சிகரமான விளைவுகளுக்கு இட்டுச் செல்கிறது.”

(அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு என்ற நூலைப் பற்றி)

       மார்க்சின், அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற கோட்பாடு அதிகப் புரட்சிகரமான விளைவுகளை ஏற்படுத்தியதாக எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். அடித்தளம் மேற்கட்டமைப்பு ஆகிய இரண்டின் இடைச்செயலில் அடித்தளம் தீர்மானகரமானப் பாத்திரம் வகிக்கிறது, மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் மீது தாக்கம் செலுத்துகிறது, தாக்கம் என்பது வளர்ச்சியை விரைவுபடுத்தலாம் அல்லது தாமதப்படுத்தலாம். இதற்கு மேல் ஒன்றும் செய்திட முடியாது. சமூகப் பற்றிய இந்த புரட்சிகர விஞ்ஞான கண்டுபிடிப்பை, அடித்தளம் மேற்கட்டமைப்பு ஆகிவற்றுக்கு இடையேயான இடைத்தொடர்பை பரஸ்பர வினைபுரில் என்கிற விளக்கத்தின் மூலம் சிதைக்கப்படுகிறது. இந்த பரஸ்பர வினைபுரிதல் என்பது வளர்ச்சி அடைந்த வர்க்கமற்ற கம்யூனிச சமூகத்திற்கு உரியது. மார்க்ஸ் கூறுகிற அடித்தளம் மேற்கட்டமைப்பு என்பது வர்க்க சமூகத்திற்கு உரியது.

மாவோவின் இந்த பரஸ்பர வினைபுரிதல் பற்றி கோ.கேசவன் மிகத் தெளிவாக முன்வைக்கிறார்.

கோ.கேசவன்:-

சமூக அமைப்பு அடித்தளம், மேற்கட்டுமானம் என இரண்டாக உள்ளது. அடித்தளமாகச் சமூகத்தின் உற்பத்தி முறை அமைகின்றது. அரசியல், சட்டம், கலாச்சாரம் என்பன போன்ற அம்சங்கள் மேற்கட்டுமானமாக அமைகின்றன. ஒரு சமூகத்தின் மேற்கட்டுமானத்தை இறுதியில் நிர்ணயிக்கக்கூடிய ஆற்றல் பெற்றதாக அடித்தளமான உற்பத்திமுறை அமைகின்றது. இவ்வாறு மார்க்சியம் குறிப்பிடுகிறது, மேற்கட்டுமான அம்சங்களுக்கு ஒப்பீட்டு அளவிலான சுயேச்சை இயங்குதிறம் உள்ளதென்றும் மார்க்சியம் விளக்குகின்றது. அதே நேரத்தில் மேற்கட்டுமானம், அடித்தள உற்பத்திமுறையின் மீது தன் இயல்பான செல்வாக்கையும் பயன்படுத்துகிறது என்றும் அது விளக்குகின்றது. மேற்கட்டுமானத்தின் ஓர் அம்சம் அதன் இன்னொரு அம்சத்தையும் பாதிக்கலாம். இப்படி மேற்கட்டுமான அம்சங்களுக்கு இடையிலான பரஸ்பரம் பாதிப்புகள் செலுத்துவதாக இருந்தாலும், மேற்கட்டுமானத்தின் அம்சங்கள் அடித்தள உற்பத்தி முறைமீது பாதிப்புகள் செலுத்துவதாக இருந்தாலும் மேற்கட்டுமான அம்சத்தை இறுதியில் நிர்ணயம் செய்யும் ஆற்றலை உற்பத்திமுறையே பெற்றிருக்கிறது. இது இறுதி நிர்ணயவாதம் எனப்படும்.

இருபதாம் நூற்றாண்டில் மார்க்சியத்தைத் தம் வர்க்கப் போராட்ட அனுபவங்களைக் கொண்டு செழுமைப்படுத்தும் வாய்ப்புக் கிடைத்த தோழர் மாசேதுங் மார்க்சியத்தின் இந்தக் கூற்றை விளக்கினார். இயங்கியல் அடிப்படையில் வரலாற்றுப் பொருள் முதல் வாதத்தைக் கண்டறிந்த மாசேதுங், அடித்தள உற்பத்திமுறை, மேற்கட்டுமான அம்சங்களை நிர்ணயிக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறார். இருப்பினும் மேற்கட்டுமான அம்சங்களை செயலூக்கம் அற்றதாகவோ அடித்தளத்தால் நிர்ணயிக்கப்படுவதாகவோ மட்டும் கண்டறியாமல் சில குறிப்பிட்ட நேர்வுகளில் மேற்கட்டுமான அம்சங்களும் அடித்தள உற்பத்தி முறையை நிர்ணயிக்கக்கூடிய ஆற்றலைப் பெறுகின்றன எனக் குறிப்பிடுகின்றார். (முரண்பாடு பற்றி) இது மார்க்சிய வரம்புகுட்பட்டே மார்க்சியக் கருத்தாக்கத்தைச் செழுமைப் படுத்துவதாக இருப்பினும் அடித்தள இறுதி நிர்ணயவாதம் என்பதை இயங்கியல் மாற்றத்துக்கு உட்படுத்துகிறது. குறிப்பிட்ட கட்டத்தில் மேல்தள நிர்ணயவாதம் என்ற கருத்தாக்கத்தை மாவோ சிந்தனை முன்மொழிவதன் மூலம் அடித்தளம் - மேல்தளம் - பரஸ்பர நிர்ணயவாதம் என்ற கருத்தாக்கத்தையும் தொட்டுவிடுகிறது.”

(சாதியம்- பக்-73-74)

அடித்தளம் மேற்கட்டமைப்பை தீர்மானிக்கும் என்று கூறினால், வாழ்நிலையே உணர்வுநிலையை தீர்மானிக்கின்றன என்ற பொருளோடு பொருள்முதல்வாதமாக விளங்குகிறது.

மேற்கட்டமைப்பு அடித்தளத்தை தீர்மானிக்கும் என்று கூறினார், உணர்வுநிலையே வாழ்நிலையை தீர்மானிக்கின்றன என்ற பொருளோடு கருத்துமுதல்வாதமாக விளங்குகிறது.

பரஸ்பர நிர்ணயம் என்பது பொருள்முதல்வாதம் கருத்துமுதல்வாதம் என்ற பிரிவுக்கு மாறாக, இடைக் கண்ணோட்டமாக காட்சித் தந்து, இறுதியில் கருத்துமுதல்வாதத்தில் கரைகிறது. மார்க்சியத்தின் வளர்ச்சி என்ற பெயரால் கூறுகிற இந்த பரஸ்பர வினைபுரிதல் என்ற கோட்பாடு மார்க்சின் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்கிற கோட்பாட்டின் விஞ்ஞானத் தன்மையை மறுத்துவிடுகிறது

பரஸ்பர வினைபுரிதல் என்கிற வர்க்கமற்றப் பார்வை தொழிலாளர்களுக்கு வீழ்ச்சியைத் தரும், விஞ்ஞானத் தன்மையுடன் கூடிய மார்க்சின் கோட்பாடு வழிகாட்டியாக அமைந்தால் தொழிலாளர்களுக்கு விடிவைத் தரும்.