Wednesday, 8 October 2025

தோழர் பழனி சின்னசாமியின் ஆதாரமற்ற விமர்சனத்துக்கு மறுப்பு:-

 


 
 
 
 

2025 ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி ம.ஜ.இ.க அமைப்பு, லெனினியத்தின் இன்றைய பொருத்தப்பாடு என்கிற தலைப்பில் இணையவழியில் பேசுதவற்கு ஏற்பாடு செய்தது. அதில் பல தோழர்களுடன் நானும் பேசினேன். அன்று பேசிய எனது பேச்சு செந்தளம் இணைதளத்தில் (https://senthalam.com/1357) ஏப்ரல் 23ஆம் தேதி வெளிவந்தது. அதனைப் படித்த தோழர் பழனி சின்னசாமி // மார்க்சிய ஆசான் லெனின் நூலையையே திருத்தியுள்ளதை கண்டு வருத்தப்பட்டேன். / என்று முகநூலில் பதிவிட்டுள்ளார். 

செந்தளம் இணையதத்தில் இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு”, என்று தெளிவாக இறுதியில் பதிவிடப்பட்டுள்ளது. இந்தப் பக்கத்தில் எதேனும் தவறை தோழர் பழனி சின்னசாமி கண்டிருந்தால், அதனை எழுதிய அ.கா.ஈஸ்வரன் ஆகிய என்னை நோக்கி விமர்சித்திருக்க வேண்டும். அதைவிடுத்து. நேரடியாக, செந்தளம் இணைய தளத்தைக் குற்றம் சாட்டியிள்ளார். 

பழனி சின்னசாமி:-“மார்க்சிய லெனினிய அமைப்பின் இணைய தளமான செந்தளம் இன்று நான் வாசிக்கும் பொழுது அதில் மார்க்சிய ஆசான் லெனின் நூலையையே திருத்தியுள்ளதை கண்டு வருத்தப்பட்டேன். சம்பந்தப்பட்டவர்கள் சரிபார்க்க மூல நூலின் பக்கங்களை உங்கள் முன் வைத்துள்ளேன்... தேவைப்பட்டால் தவறுகளை சுட்டிக்காட்டவும் தயார். நீங்களே செய்தால் சிறப்பாக இருக்கும் தோழர்களே. ” 

எனது கூற்று தவறாக தோழர் பழனி சின்னசாமிக்கும் தோன்றி இருந்தால் அதனை திருத்த உதவி இருக்கலாம். ஆனால் அவரது தொனி அவ்வாறில்லை. செந்தளம் இணையதளத்தை மிரட்டும் தொனியில் இருக்கிறது. 

இதற்கு உடனடியாக பதிலளிக்கும் சூழ்நிலையில் அப்போது நான் இல்லை, அதனால் பிறகு பதிலளிப்போம் என்று இருந்துவிட்டேன். ஆனால் இது கட்டுரை ஆசிரியர்தான் பதிலளிக்க வேண்டும் என்று செந்தளம் காத்துக் கொண்டிருக்கவில்லை. தோழர் பழனி சின்னசாமி, லெனின் கருத்தையும் செந்தளத்தையும் இணைத்து பேசியதால், செந்தளம் நேரடியாக இதற்கு முகநூலில் பதிலளித்துவிட்டது (https://www.facebook.com/story.php?story_fbid=1499076654553738&id=100033542524221&rdid=OAn5OQfRpxMUSpIF#).

 

லெனின் கருத்தாக நான் கூறியதற்கு ஆதாரமாக அரசும் புரட்சியும் என்கிற நூலில் காணப்படும் இடத்தை செந்தளம் சரியாகச் சுட்டிக்காட்டிவிட்டது. அதனால் எனது விளக்கம் இங்கு தேவைப்படவில்லை. இருந்தாலும் லெனின் கருத்தை விளக்கமாக சொல்ல வேண்டிய பொறுப்பை உணர்ந்து விளக்கம் கொடுக்கிறேன்.

 

தோழர் பழனி சின்னசாமி சுட்டிக்காட்டுகிற பகுதி அரசும் புரட்சியும் என்கிற நூலின் மூன்றாம் அத்தியாயத்தில் உள்ளது. நான் குறிப்பிடுகிறப் பகுதி ஆறாம் அத்தியாயத்தில் உள்ளது. இதனை செந்தளம் சரியாக எடுத்துக் காட்டிவிட்டது. இங்கு எனது பணி அதனை விளக்குவது மட்டுமே.

 

அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அரசே காரணம் என்று அராஜகவாதிகள் கருதிக் கொண்டனர். அதனால் அரசைப் பயன்படுத்துவதைப் பற்றி அராஜகவாதிகள் சிந்திக்கவில்லை.

 

லெனின் மார்க்சியவாதிகளுக்கும் அரஜகவாதிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடாக மூன்றைக் குறிப்பிடுகிறார். அதில் மூன்றாவது பற்றியதே பழனி சின்னசாமி புரிந்து கொள்ளாமல் பேசியிருக்கிறார்.

 

"முன்னவர்கள் (மாக்சியவாதிகள்) தற்போதுள்ள அரசைப் பயன்படுத்திப் புரட்சிக்காகப் பாட்டாளி வாக்கத்துக்குப் பயிற்சி தர வேண்டுமென்று கோருகிறார்கள். அராஜகவாதிகள் இதனை நிராகரிக்கிறார்கள்"

 

லெனின் கூறியதை ஒருங்கிணைந்து புரிந்து கொள்ளாமல் தமக்கு ஏற்புடையதை மட்டுமே மனதில் பதியவைத்துக் கொண்டு, தோழர் பழனி சின்னசாமி இப்படி செந்தளத்தில் வந்த கட்டுரையை தவறாக விமர்சித்துள்ளார். இது விமர்சனம் அல்ல அவதூறாகும். லெனின், செந்தளம் இணைய ஆசிரியர், அ.கா.ஈஸ்வரன் ஆகிய மூன்று பேர்களையும் தோழர் பழனி சின்னசாமி அவதூறு செய்துள்ளார்.

 

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், செந்தளம் இணைய தளத்தையும் என்னையும் அம்பலப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு அவர் அம்பலமாகியுள்ளார்.

 

அரசும் புரட்சி என்கிற நூலில் நேரடியாகக் கூறியதை, லெனின் அரசு என்கிற சொற்பொழிவில் விளக்கமாகக் கூறியுள்ளார்.

 

லெனின் கருத்தை தமக்கு ஏற்றதை முன்வைத்து லெனினைப் பயன்படுத்தக்கூடாது. லெனின் கூறிய அனைத்தையும் ஒருங்கிணைந்து புரிந்து கொள்ள வேண்டும். அது அவ்வளவு எளிதான செயல் அல்ல.

 

லெனினது அரசு சொற்பொழிப் பற்றி நான் எடுத்த வகுப்பில்  கூறியதையே கீழே பதிவிடுகிறேன். 

ஆதி பொதுவுடைமை சமூகத்தில் அதாவது மக்கள் பழங்குடிகளாக வாழ்ந்திருந்த காலத்தில் வர்க்கங்கள் தோன்றவில்லை, அப்போது அரசு தோன்றவில்லை. பழங்குடி சமூகத்தில் எப்போது உபரி உற்பத்தி சிறிதளவு அதிகரித்ததோ, அப்போது அங்கே உழைப்பவர் உழைப்பைப்பெறுபவர் என்கிற பிரிவு தோன்றியது. அந்த வர்க்க சமூகம் உருவாகும் போது அரசு தோன்றியது. இதனை காரண காரியங்களோடு இணைத்து லெனின் கூறுவதை பார்ப்போம்.

 

“எங்கு எப்போது சமூகம் வர்க்கங்களாகப் பிரிந்ததோ, அதாவது மக்களிடையே ஒரு வகுப்பினர் மற்ற வகுப்பினரின் உழைப்பை நிரந்தரமாக அபகரித்துக் கொள்ள முடிகிற, ஒரு வகையினர் மற்ற வகையினரைச் சுரண்டுகிற மக்கள் குழுக்களாகப் பிரிந்ததோ, அங்கு அப்போது அரசு என்பது மக்களை நிர்ப்பந்திக்கும் விசேஷ இயந்திரமாகத் தோன்றியது என்று வரலாறு காட்டுகிறது.” 

இங்கே லெனின் மக்களை நிர்பந்திக்கிற விசேஷமான இயந்திரமாக அரசு தோன்றியதைப் பற்றி கூறியுள்ளார். 

மற்றோர் இடத்தில் அரசு தோன்றுவதற்கு முன்பான நிலையினையும் தோன்றுவதற்கான சூழ்நிலையினையும் விவரிக்கிறார். 

முதலில் அரசு தோன்றாத, தேவைப்படாத நிலைமையைப் பார்ப்போம்.

 

அரசென்பது, ஒரு வர்க்கத்தின் மீது மற்றொரு வர்க்கத்தின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக உள்ள ஓர் இயந்திரம். சமுதாயத்தில் வர்க்கங்களே இல்லாத போது, அடிமை முறையின் கால கட்டத்திற்கு முன்பு மக்கள் அதிக சமத்துவமுடைய ஆதிகால நிலையிலேயே உழைத்த நாளில், உழைப்பின் உற்பத்தித் திறன் மிகமிகக் கீழ்ப்படியில் தொடர்ந்து இருந்து வந்த சூழ்நிலையில், முற்றிலும் பண்படாத, மிகமிக எளிய வாழ்வுக்கான சாதனங்களைப் பெறுவதே ஆதி கால மனிதனுக்கு அரிதாக இருந்த அந்நாளில், மக்களின் தனித்த ஒரு பிரிவு-சமுதாயத்தின் மற்றப் பகுதியின் மேல் ஆளுகையும் ஆதிக்கமும் புரிய வேண்டித் தனியாக ஒதுங்கிப் பிரிந்த ஒன்று—இன்னும் தோன்றவில்லை; தோன்றியிருக்கவும் முடியாது.” 

அரசு தோன்றுவதற்கு முன்பான நிலைமையினைக் கூறிவிட்டு லெனின் அடுத்து தோன்றியதற்கான புறநிலைமைகளை கூறுகிறார்.

 

“சமூகம் வர்க்கங்களாகப் பிரிவதின் முதல் வடிவம் தோன்றிய போதுதான், அடிமை முறை தோன்றிய போதுதான், மக்களின் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினர் உழவுத் தொழிலின் சற்றும் பண்படாத முறைகளில் முனைந்து ஈடுபட்டு, அதன் மூலம் தேவைக்கு மேல் ஓரளவு உபரிப் பொருளை உற்பத்தி செய்ய முடிந்த போதுதான், இந்த உபரிப் பொருள் அடிமையின் மிகமிகக் கடைகெட்ட வாழ்வுக்கு இன்றியமையாததாக இல்லாமல், அது ஆண்டையின் கைகளில் சேர்ந்து விட்ட போதுதான், இவ்வாறாக ஆண்டைகள் என்ற இவ்வர்க்கத்தின் நிலை உறுதியான போது அது மேலும் உறுதியாக வேண்டி, அரசு தோன்ற வேண்டியது அவசியமாயிற்று.” 

இதற்கு விளக்கங்கள் எதுவும் தேவையில்லை. ஒன்றுக்கு இரண்டு முறைப் படித்தாலேயே லெனின் எழுத்துக்களை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். 

அடுத்து அரசின் தோற்றம் மற்றும் அதன் வடிவங்களைப் பற்றி லெனின் கூறுவதைப் பார்ப்போம். 

அரசென்பது ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தால் ஒடுக்கப் பெறுவதற்கான ஓர் இயந்திரம். ஒரு வர்க்கத்திற்கு மற்ற வர்க்கங்களைக் கீழ்ப்படிந்து இருக்கச் செய்யும் ஓர் இயந்திரம். இந்த இயந்திரத்திற்கு வேறு வேறான வடிவங்கள் உண்டு. அடிமை முறை அரசில் முடியரசும், உயர் குடி மக்களின் குடியரசும், ஜனநாயகக் குடியரசுங்கூட இருந்ததைக் கண்டோம். உண்மையில் ஆட்சி முறையின் வடிவங்கள் மிகமிக வேறுபட்டன, ஆயினும் அவற்றின் சாரம் எப்போதும் ஒன்றேதான்: அடிமைகளுக்கு எந்த உரிமையும் இல்லை; அவர்கள் ஒடுக்கப்பட்ட வர்க்கமாகவே அமைந்தனர், அவர்கள் மனிதப் பிறவிகளாக மதிக்கப்படவில்லை. பண்ணையடிமை முறை அரசிலும் இதே நிலையைத்தான் நாம் காண்கிறோம்” 

அரசு எத்தகைய வடிவமாக வளர்ச்சி அடைந்தாலும் அதன் சாரம்சம் ஒன்றுதான், ஆனால் அதன் வடிவ மாற்றங்களைக் கணக்கில் கொள்ளாது போனால், அதனைப் பயன்படுத்துவதில் உள்ள வேறுபாட்டை அறியாது போவோம். 

அடிமை சமூகத்திலும் உழைப்பாளியான அடிமை சுரண்டப்படுகிறான், நிலப்பிரபுத்துவத்தில் விவசாயி சுரண்டப்படுகிறான், முதலாளித்துவத்திலும் உழைப்பாளியான பாட்டாளி சுரண்டப்படுகிறான், சுரண்டலை மட்டும் முன்வைத்து அனைத்தையும் ஒரே நிலைமையானது என்று கூறிட முடியாது. அனைத்துக்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் அரசியலில் ஈடுபடமுடியாது. நுட்பமான வேறுபாட்டை அறியாது அனைத்தையும் பொதுமைப்படுத்துவோமானால் வேறுபட்ட சூழ்நிலையைப் பயன்படுத்தி அரசியலை செய்ய முடியாது. 

லெனின் பண்ணையடிமை முறையுடன் ஜனநாயகக் குடியரசை ஒப்பிட்டு வேறுபாட்டையும் அதனால் உழைப்பாளர்களுக்கு ஏற்பட்ட பலனைப் பற்றியும் கூறியுள்ளார். இதனை அராஜகவாதிகளால் புரிந்து கொள்ள முடிவதில்லை. 

“பண்ணையடிமை முறையுடன் ஒப்பிடும் போது, ஜனநாயகக் குடியரசும் அனைத்து மக்களுக்குரிய வாக்குரிமையும் பிரம்மாண்டமான முன்னேற்றமாகத் திகழ்ந்தன. பாட்டாளி வர்க்கம் இன்று பெற்றுள்ள ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் அடைவதற்கும், மூலதனத்தை எதிர்த்து முறையாகப் போராடுகின்ற, உறுதியும் கட்டுப்பாடும் பெற்ற அணிகளை வகுப்பதற்கும் அவை வாய்ப்பு அளித்துள்ளன.

 

பண்ணையடிமை குடியானவர்களிடம் கிட்டத்தட்ட இது போன்றதுகூட எதுவும் இருந்ததில்லை என்றால், அடிமைகளைப் பற்றிக் கூறத் தேவையேயில்லை. அடிமைகள் கிளர்ந்து எழுந்தனர், கலகம் புரிந்தனர், உள்நாட்டுப் போர்களைத் தொடங்கினர் என்பதை நாம் அறிவோம். ஆயினும் வர்க்க உணர்வுள்ள பெரும்பாலானோரையோ, போராட்டத்தை நடத்து வதற்கு வேண்டிய கட்சிகளையோ அவர்கள் ஒருபோதும் தோற்றுவிக்க முடியவில்லை.

 

தாங்கள் எந்தக் குறிக்கோளுக்காகப் போராடுகிறோம் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள அவர்களுக்கு முடியவில்லை. வரலாற்றின் மிகப் பெரும் புரட்சிகரமான கால கட்டங்களில்கூட ஆளும் வர்க்கங்களின் கைப்பாவைகளாகவே அவர்கள் எப்போதும் இருந்தனர்.

 

சமூகத்தின் உலக வளர்ச்சி நிலையிலிருந்து பார்க்கும் போது முதலாளித்துவக் குடியரசு, நாடாளுமன்றம், அனைத்து மக்களுக்குரிய வாக்குரிமை ஆகிய அனைத்தும் மாபெரும் முன்னேற்றத்தைக் காட்டுகின்றன.

 

மனிதயினம் முதலாளித்துவத்தை நோக்கிச் சென்றது. முதலாளித்துவம் ஒன்றுதான், நகர்ப்புறப் பண்பாட்டின் மூலம், ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம் தன்னைத்தானே உணரும்படியாகச் செய்யவும் உலகத் தொழிலாளி இயக்கத்தை உண்டாக்கவும் வாய்ப்பு அளித்தது; உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்களைக் கட்சிகளாக, திரளான மக்களின் போராட்டத்தை உணர்வுபூர்வமாக நடத்திச் செல்லும் சோஷலிசக் கட்சிகளாக அமையும்படிச் செய்தது.

 

நாடாளுமன்ற முறை இல்லையேல், தேர்தல் அமைப்பு இல்லையேல், தொழிலாளி வர்க்கத்தின் இவ்வளர்ச்சியை அதிகரிக்க முடியாத காரியமாகவே இருந்திருக்கும். அதனால் தான், பெருந்திரளான மக்களின் பார்வையில், இவையெல்லாம் அத்தனை பெரும் முக்கியத்துவமுடையன ஆகியிருக்கின்றன.” 

முதலாளித்துவ குடியரசில் ஏற்பட்ட வடிவமாற்றத்தைப் பயன்படுத்தத் தெரிந்து கொள்ளமுடியாமல் அராஜகவாதிகள் மார்க்சியர்களிடம் இருந்துவேறுபடுகின்றனர். இந்த வேறுபாட்டை லெனின் அரசும் புரட்சியும் என்கிற நூலில் தெளிவாக நேரடியாக கூறியிருக்கிறார்.” 

இந்த விளக்கங்கள் தோழர் பழனி சின்னசாமிக்குப் போதுமானது என்று நினைக்கிறேன். எங்களை அம்பலப்படுததுவதாக நினைத்துக் கொண்டு, அவரின் தவறானப் புரிதலால் அவர் அம்பலமாகிவிட்டார்.

 

 

 


Sunday, 23 February 2025

மார்க்சிய மானுடவியல் – ஒரு சிறிய அறிமுகம்

  

யூடியூபில் பார்க்க:-

https://www.youtube.com/watch?v=-6y6XMq8hZ4&t=409s

மார்க்சிய மானுடவியல் என்று ஒன்று இருக்கிறதா? என்கிற கேள்வி எழும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. 

மேலை நாடுகளில் உள்ள கல்விப் புலத்தில் மார்க்சிய மானுடவியல் (Marxist Anthropology) எப்போதோ வந்துவிட்டது.

நம் நாட்டில் மானுடவியல் என்னும் துறையே இன்னும் புதியதாகவே இருக்கிறது, மார்க்சிய மானுடவியல் என்பது கேள்விபடாத ஒன்றாகவே இருக்கிறது. அதனால் மார்க்சிய மானுடவியல் என்பது  பற்றிய சிறு அறிமுகத்தைப் பார்ப்போம்.

அறிமுகத்துக்கு முன் ஒன்றை சொல்ல வேண்டும். மார்க்சிய மானுடவியல் என்பது தேவையா?, இது வர்க்கப் போராட்டத்தை விட்டு விலகுவதற்கு தோன்றிய திசை விலகலாகும் என்று பல தோழர்கள் கருதுவார்கள்.

இப்படிப்பட்ட தோழர்கள் அரசியல் வேலையை மட்டுமே வர்க்கப் போராட்டமாக கருதுகின்றனர். ஆனால் வர்க்கப் போராட்டம் அனைத்தையும் உள்ளடக்கிதான் நடத்தப்படவேண்டும். அனைத்துப் பிரச்சினைக்கும் வர்க்க சார்பு வழியில் தீர்வு காண வேண்டும். தேசியப் பிரச்சினையைம் வர்க்கப் போராட்டத்துக்கு உள்ளடங்கியே விளக்கப்படுத்துகிறோம், தீர்வு காண்கிறோம்.

மார்க்சிய தொல்லியல் என்ற ஒன்று ஏற்கெனவே இருக்கிறது. இதுவும் பல தோழர்களுக்குத் தெரியாது.

உலகப் புகழ் பெற்ற மார்க்சிய தொல்லியல் அறிஞர் வி.கோர்டன் சைல்ட்.

இவர் ஆஸ்திரேலிய தொல்பொருள் ஆய்வாளர். பிற்காலத்தில் லண்டனில் உள்ள தொல்லியல் நிறுவனத்தில் பேராசிரியராகவும் இயக்குநராகவும் பணிபுரிந்தார். இவர் 1892 ஆம் ஆண்டு பிறந்தார் 1957ஆம் ஆண்டு மறைந்தார். மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோரின் இறுதிகாலத்தில் வி.கோர்டன் சைல்ட் பிறந்தார்.

வி.கோர்டன் சைல்ட் தொல்லியலைப் பற்றி கூறுவதைப் பார்ப்போம்.

“என்னைப் பொறுத்தவரை, மார்க்சியம் என்பது வரலாறு மற்றும் தொல்லியல் பொருள்களை விளக்குவதற்கான ஒர் அணுகுமுறையாகவும், விளக்குவதற்கான ஒரு வழிமுறையாகவும் உள்ளது.”

அதாவது தொல்லியலில் கிடைக்கும் பொருட்ளை மார்க்சிய வழியில் அணுகுவதைக் குறிப்பிடுகிறார்.

அவர் நிறைய நூல்களை எழுதியுள்ளார். சிலவற்றைப் பார்ப்போம்.

1, ஐரோப்பிய நாகரிகத்தின் விடியல், 2, ஆரியர்கள்: இந்தோ-ஐரோப்பிய தோற்றம் பற்றிய ஆய்வு, 3, வரலாற்றில் என்ன நடந்தது, 4, கருவிகளின் கதை, 5. முன்னேற்றமும் தொல்லியலும், 6, சமூக படிநிலைமலர்ச்சி, 7, தொல்லியல் பற்றிய சிறிய அறிமுகம்.

இதுபோன்ற பல நூல்களை எழுதியிருக்கிறார்.

தேவிபிரசாத் சட்டோபாத்யாயா போன்றோர்கள் இவரைப் பற்றி கூறியிருக்கின்றனர், ஆனால் வி.கோர்டன் சைல்டைப் பற்றி தெரியாத தோழர்கள் இன்றும் இருக்கின்றனர். குறிப்பாக மார்க்சிய தொல்லியல் அறிஞர்களில் பலருக்குத் தெரியாது. இது ஆச்சரியமான உண்மையாக இருக்கிறது.      இந்த நிலை மாறவேண்டும்.

இந்த நிலை மாறுவதற்கு வி.கோர்டன் சைல்டின் நூல்கள் தமிழில் மொழியாக்கம் செய்ய வேண்டும். குறிப்பிட்ட நூல்களையாவது விரைவில் கொண்டு வரவேண்டும்.

நாம் தனித்து இயங்க முடியாது. அனைத்திலும் சர்வதேசத்தோடு இணைந்து செயல்பட வேண்டும். கீழடி, சிவகளை போன்ற இடங்களில் அகழாய்வு நடைபெற்று வருகிறது. இன்றைய நிலையில் மார்க்சிய தொல்லியல் என்பதை அறிந்து அதன் வழியில் ஆய்வுகள் செய்ய வேண்டும்.

அதுமட்டுமல்லாது தமிழர்தான் இருப்பை முதலில் பயன்படுத்தியதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. “இரும்பின் தொன்மை” என்ற பெயரில் தமிழக தொல்லியல் துறை ஒரு நூலை அண்மையில் வெளியிட்டுள்ளது.

 

நமது பொன்னுலக இணைய தளத்தில் தோழர் சுந்தரசோழன் “இரும்பின் தொன்மை - ஒரு வரலாற்று புரிதலை நோக்கிஎன்கிற தலைப்பில் பேசினார். இது போன்று மார்க்சியர்கள் உடனுக்குடன் நமது கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும்.

தொல்லியலைவிட மானுடவியல் புதியத் துறையாக இருக்கிறது. நம் நாட்டில் மார்க்சிய மானுடவியல் இன்னும் வளர்ச்சி அடையவே இல்லை. ஏன், தொடங்கப்படவே இல்லை என்று கூறலாம்.

ஆனால், மானுடவியலை மார்க்சியம் அறிந்ததில்லை என்று கூறிடமுடியாது. எங்கெல்ஸ் எழுதிய “குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்கிற நூல் இதனடிப்படையில் தோன்றியதாகச் சொல்லலாம்.

இந்த நூலில், மார்கனுக்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில் நீயூயார்க் மாநிலத்திலுள்ள செனீகா ராகோஸ்கள் என்பவர்கள் பயன்படுத்து உறவுமுறை பெயர்கள், தென்னிந்தியாவிலுள்ள தமிழர்களிடம் காணப்படும் குடும்ப உறவுகளின் பெயர்களோடு ஒத்திருப்பதை ஒப்பிட்டு எங்கெல்ஸ் எழுதியுள்ளார். இதுவும் ஒரு வகையில் மார்க்சிய மானுடவியலைச் சார்ந்ததே.

யூதர்களைப் பற்றி மார்க்ஸ் கூறியதும், நீக்ரோவைப் (கருப்பர்களைப்) பற்றி மாவோ கூறியதும் ஒரு வகையில் மார்க்சிய மானுடவில்தான்.

இவர்கள், அன்று வரலாற்றியல் பொருள்முதல்வாதப் பார்வையில் தங்களது கருத்துகளை எழுதியுள்ளனர்.

மருத்துவத் துறையில் எப்படி ஒவ்வொன்றாக தனித்துப் பிரித்து வளர்ச்சி அடைகிறதோ அதே போல வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தில் மானுடவியல் தனித்து பிரிந்து வளர்ச்சி அடைகிறது.

வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தில் பொதுவாகப் பார்க்கப்பட்டது, மானுடவியலில் குறிப்பாகப் பார்க்கப்படுகிறது. தனித்து ஆராய்ந்தாலும் மார்க்சிய மானுடவியல் வரலாற்றியல் பொருள்முதல்வாதத் தத்துவத் துறையைச் சார்ந்ததே இயங்குகிறது.

வரலாற்றியல் பொருள்முதல்வாதத்துக்கு எதிரான  போக்கு மார்க்சிய மானுடவியலில் நுழையாமல் இருக்க வேண்டுமானால், இந்தப் பணியை மார்க்சியர்கள் செய்ய வேண்டும். இல்லை என்றால் மார்க்சியத்துக்கு எதிரானவர்கள் மார்க்சிய மானுடவியல் என்ற பெயரில் தவறானக் கருத்துக்களை எழுதி வெளியிடுவார்கள்.

நம் நாட்டில் உள்ள கல்விப் புலங்களில் மானுடவியல் தற்போது பரவி வருகிறது. கல்வி நோக்கிற்கு என்றாலும் அதனை, நாம் தாம் செய்ய வேண்டும், அப்படி செய்யவில்லை என்றால் கல்வியாளர்கள் அவர்களின் புரிதலுக்கு ஏற்ப செய்துவிடுவர்.

மார்க்சிய மானுடவியலை மார்க்சியர்கள் எழுதினால், அதனையே கல்விப் புலத்தில் உள்ளவர்கள் சான்றாதாரமாக கொள்ளவார்கள். நாம் எழுதிய மார்க்சிய மானுடவியலை அவர்களால் தவிர்க்க முடியாது.

சூழலியல் என்பது தனித்துறையாக பிரித்துப் பார்ப்பதற்கு முன்பே மார்க்ஸ் இதனைப் பற்றி பேசியிருக்கிறார். ஆனால் இன்று சூழலியல் தனியாகப் பிரிந்து அதில் மார்க்சிய  சூழலியல் என்று வளர்ச்சி பெற்றுள்ளது. அதே போல பெண்ணியம் பல அணுகுமுறையில் ஆராயப்படுகிறது. வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் பெண்ணியத்தைப் பார்ப்பது மார்க்சிய பெண்ணியம்.

இதன் தொடர்க்சியாகவே மார்க்சிய தொல்லியல், மார்க்சிய மானுடவியல் வளர்ச்சி பெற வேண்டும்.

என்சிபிஎச் பதிப்பு நிறுவனம் செட்ரிக் ஜெ.ரௌபின்சன் எழுதிய "மார்க்சிய மானுடவியல்" என்கிற நூலை வெளியிட இருக்கிறது. அது எப்படி இருக்கிறது என்பதை படித்து பார்த்த பின்புதான் கூற வேண்டும். செவ்வியல் மார்க்சியம் என்கிற வரிசையில்தான் இந்த நூல் இடம் பெற்றிருப்பதாக கருதுகிறேன். வந்தவுடன் படித்துப் பார்க்க வேண்டும்.

நம் நாட்டில் “மானுடவியல்” புதியத் துறையாக இருப்பதால், மானுடவியலின் வரையறை என்னவென்பதை பார்ப்போம்.

எதற்கும் பல வரையறை இருப்பது  போல் மானுடவியலுக்கும் பல வரையறைகள் காணப்படுகிறது.

மிகமிக சுருக்கமாக, மானுடவியலை மனிதனைப் பற்றிய அறிவியல் என்று கூறலாம்.

மனிதனை, உயிரியல் நிலையிலும், சமூக நிலையிலும், பண்பாட்டு நிலையிலும் வரலாற்று நிலையிலும் அறிவது மானுடவியல்.

பொதுவாக மானுடவியல் உயிரியல் நிலைக்கும் பண்பாட்டு நிலைக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. தமிழில் பண்பாட்டு மானுடவியலைப் பற்றிய நூல்களே அதிகம் காணப்படுகிறது.

ஏற்கெனவே “சமூகவியல்” என்று ஒரு துறை இருக்கிறது, சமூகவியலுக்கும் மானுடவியலுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்று பார்ப்போம்.

சமூகவியல் தனிமனிதனைவிட சமூகத்தைப் பற்றியே குறிப்பாக ஆராய்கிறது, சமூகத்தில் உள்ள தனிமனிதனைப் பற்றியே மானுடவியல் குறிப்பாக ஆராய்கிறது.

மனிதனின் பன்முகத்தன்மை மற்றும் பண்பாட்டு வேறுபாட்டைப் புரிந்து கொள்வதே மானுடவியலின் முதன்மையான நோக்கமாகும், சமூகப் பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்கான தீர்வையும் காண முயல்வது சமூகவியலின் முதன்மையான நோக்கமாகும். ஆனால் மானுடவியலின் முடிவுகள் சமூகவியலுக்குப் பயன்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சமூகத்தில் இருந்து மனிதனைப் பிரித்து தனித்து மானுடவியல் ஆராய்கிறது. அதாவது சமூகத்தில் இணைந்து இருக்கும் மனிதனை தனித்து ஆராய்கிறது. அப்படி ஆராயும் போது மார்க்சிய மானுடவியல், மனிதனை சமூகத்தில் இருந்து தனியானவனாக கருதவில்லை. சமூக-பொருளாதார சூழ்நிலையின் வெளிப்பாடுதான் தனிமனிதன். ஆனால் அனைத்து தனி மனிதனும் ஒரே மாதிரி இருப்பதில்லை, எந்த வகையில் வேறுபடுகிறான், ஏன் வேறுபடுகிறான் என்பதை மார்க்சிய மானுடவியல் கவனமாக ஆராய்கிறது.

சமூகத்தில் பல தொழிலாளர் பிரிவுகள் இருக்க, ஆலைத் தொழிலாளியான பாட்டாளியையே மிகவும் புரட்சிகரமானவர் என்று மார்க்சியம் கூறுவதும், ஒரு வகையில் மார்க்சிய மானுடவியல் தான். மற்ற தொழிலாளர்களுடன் ஒப்பிட்டு பாட்டாளிகளை புரட்சிகரமானவர்கள் என்று கூறப்படுகிறது. இப்படி ஒப்பிட்டுப் பார்ப்பதை மார்க்சிய மானுடவியல் சிறப்பாக செய்து காட்ட முடியும்.

ஏற்கெனவே தனிநபர் பாத்திரத்தை மார்க்சியம் ஆராய்ந்து கருத்துகளைக் கூறியிருக்கிறது. அதனால் மார்க்சிய மானுடவியல் மார்க்சியத்துக்கு எதிரானது என்று கூறிவிட முடியாது.

மானுடவியலில் பலப் பிரிவுகள் காணப்படுகிறது, அதில் முதன்மையாக இரண்டை குறிப்பிடலாம்.

1. உடல்சார் மானுடவியல், 2. பண்பாட்டு மானுடவியல்.

தொல்லியலையும் மானுடவியலாக கொள்கின்றனர், அதாவது மானுடவியல் துறையில் தொல்லியலையும் சேர்த்துவிடுகின்றனர்.

இதனை முழுமையாக தொல்லியல் அறிஞர் ஏற்பார்களா என்பது தெரியவில்லை. மானுடவியலுக்கு தொல்லியல் தேவைப்படுகிறது, இதனால் தொல்லியலை மானுடவியலுக்குள் அடக்கிவிட முடியும் என்று நான் கருதவில்லை.

உடல்சார் மானுடவியல் என்பது எதனை ஆராய்கிறது என்பதைப் பார்ப்போம்.

மனிதன் எவ்வாறு தோன்றி, வளர்ச்சி பெற்று, இன்றைய நிலையினை அடைந்தான். மனிதன் இன்றைய நிலையினை எட்டுவதற்கு எத்தகைய நிகழ்ச்சிகள் காரணமாக இருந்துள்ளது.

உலகில் காணும் மனிதர்களில் சிலர் உயரமாகவும் வேறு சிலர் குள்ளமாகவும் இருக்கின்றனர். அதே போல, கருப்பாகவும் வெள்ளையாகவும், உதடு தடிப்பாகவும் மெலிவாகவும் என்று உலகில் உள்ள மனிதர்கள் வேறுபட்டு இருப்பதற்குக் காரணங்கள் என்ன? என்பதையும், எதிர் காலத்தில் எத்தகைய மாற்றங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதையும் உடல்சார் மானுடவியல் கணக்கில் கொள்கிறது.

இது உடல்சார் மானுடவியலின் பொதுப் பார்வை, மார்க்சிய மானுடவியலில் இதனை காரண காரியத்துடன் விளக்கமாக எழுத முடியும்.

அடுத்து பண்பாட்டு மானுடவியலைப் பார்ப்போம்.

பண்பாடு, சமூக முறை, குடும்பம், திருமணம், வழிபாட்டு முறைகள், சமய நம்பிக்கைகள் போன்றவற்றை பண்பாட்டு மானுடவியல் ஆராய்கிறது.

பொதுவாக பண்பாட்டை முதன்மைப்படுத்தியே மானுடவியல் ஆராய்வதாகச் சொல்லலாம். அது மட்டுமல்லாது பின்நவீனத்துவம் போன்ற கோட்பாட்டின் அடிப்படையிலும் ஆராயப்படுகிறது. இந்த நிலையில்தான் மார்க்சிய மானுடவியல் அவசியமாகிறது.

பின்நவீனத்துவம் அனைத்தையும் பிரித்து தனித்தனியே ஆராய்ந்து பிரித்துவிடுகிறது. அதே போல பண்பாட்டை மட்டும் அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் ஆராய்ச்சிகள், பண்பாட்டு தோன்றுவதற்கான காரணத்தை கவனத்தில் கொள்வதில்லை. மார்க்சியக் கண்ணோட்டம், பண்பாட்டை தனித்துப் பார்க்கவில்லை, அதன் தோற்றத்தோடு இணைத்தே பார்க்கிறது.

மார்க்சிய மானுடவியலின் பார்வையில் பண்பாட்டை விளக்குவது பண்பாட்டு மார்க்சியத்துக்கு எதிராக இருக்கும். பண்பாட்டு மார்க்சித்துக்கு பதிலாகவும் இருக்கும்.

பண்பாட்டு மார்க்சியம், மார்க்சியத்துக்கு எதிரானது, மார்க்சிய மானுடவியல் பார்வையில் பண்பாடு என்பது மார்க்சியத்துக்கு ஆதரவானது.

மானுடவியல் சில கூறுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆராய்கிறது, ஆனால் ஆராய்வதற்கு அணுகுமுறையாக, ஒரு கோட்பாடு கண்டிப்பாக இருக்கிறது. எந்தக் கோட்பாடும் இல்லாமல் எதையும் ஆராய  முடியாது.

மானுடவியலின் முதன்மையான இரண்டு பிரிவுகளான உடல்சார் மானுடவியல், பண்பாட்டு மானுடவியல் என்கிற இரண்டையும் வரலாற்றியல் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டியது மார்க்சிய மானுடவியலின் கடமை ஆகும்.

மக்களைப் புரிந்து கொள்ளுதல், தனிமனிதனைப் புரிந்து செயல்படுத்தல் ஆகியவற்றில் தேக்கம் நம் நாட்டு இடதுசாரிகளிடையே காணப்படுகிறது. இதனைப் போக்குவதற்கு, தனிமனிதனையும், தனிமனிதன், பிற மனிதக் குழுக்களுடன் ஒப்பிட்டு ஆராய்கிற மார்க்சிய மானுடவியல் பயன்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

தமிழில் மானுடவியல் அறிஞர் என்றால் அது பக்தவத்சல பாரதி தான் நினைவுக்கு வருவார். அவர் எழுதிய மானுடவியல் பற்றிய நூல்களும் மானுடவியல் அணுகுமுறையில் எழுதிய நூல்களும் நிறைய இருக்கிறது.

பக்தவத்சல பாரதியின் குறிப்பிடத்தக் நூல் என்றால் அது, 1. பண்பாட்டு மானிடவியல், 2. பண்டைத் தமிழ்ப் பண்பாடு (மானிடவியல் நோக்கில் சங்க இலக்கியம்) 3, தமிழர் மானிடவியல், 4, இலக்கிய மானிடவியல், 5. மானிடவியல் கோட்பாடுகள் இன்னும் நிறைய இருக்கிறது, இன்னும் எழுதிக் கொண்டும் இருக்கிறார்.

நா.வானமாமலை, ஆ.சிவசுப்ரமணியன் போன்றோர்களின் ஆய்வுகள் மார்க்சிய மானுடவியல் வகைப்பட்டது என்று கூறலாம்.  தொ.பரமசிவன் ஆய்வுகள், மார்க்சியக் கண்ணோட்டத்தைவிட, பெரியாரிய பகுத்தறிவுக் கண்ணோட்டத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளது.

பெரியாரிய பகுத்தறிவாதக் கண்ணோட்டமும் மார்க்சியக் கண்ணோட்டமும் வெவ்வேறானது என்பதை கம்யூனிஸ்டுகள் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டும் வெவ்வேறு சிந்தனைப் பள்ளியினைச் சார்ந்தது. ஒவ்வொரு அணுகுமுறைக்கும் ஒரு கோட்பாடு இருக்கிறது, ஒவ்வொரு கோட்பாட்டுக்கும் வர்க்க சார்பு இருக்கிறது. தொழிலாளி வர்க்க சார்புடைய கம்யூனிஸ்டுகள் இதனை மறந்திடக்கூடாது.

சி.ஆரோக்கியசாமி எழுதிய “தமிழர் மரபில் தாய்த் தெய்வ வழிபாடும் பெரியாரும்” என்கிற நூல் பெரியாரின் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டது. கோ.சசிகலா எழுதிய “தாய்வழிச் சமூகம் - வாழ்வும் வழிபாடும்” என்கிற நூல் மார்க்சியக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுள்ளது.

சிந்தனைப் பள்ளிகள் என்று ஏன் வேறுபடுத்திப் பார்க்கப்படுகிறது என்றால், ஒவ்வொரு சிந்தனைப் பள்ளியின் முடிவுகள் வேறுபடுகிறது. அனைத்து முடிவுகளையும் ஒன்றாக வைத்து குழப்பிக் கொள்ளாமல், குறிப்பிட்ட நூல் எத்தகைய கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்பதை படிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டும்.

கோட்பாடுகளின் அடிப்படையில் முடிவுகள் மாறுபடுகிறது என்பதை மறந்திடக்கூடாது. அப்போதுதான் முடிவுகளின் வேறுபாட்டை நாம் அறிந்து கொள்ள முடியும்.

அண்மையில் நான் படித்த மானுடவியல் அணுகுமுறையில் எழுதப்பட்ட இன்னொரு நூல், டாக்டர் அ.பாண்டுரங்கன் எழுதிய “தமிழ் மக்களின் தொல்சமயம்.”

இந்த நூலில் தமிழ் சமூகத்தில் காணப்பட்ட முந்து சமயம் அதாவது நிறுவன சமயத்துக்கு முன்பான நிலைமைகளை ஆராய்கிறது.

இத்தகைய நூல்களைப் படிப்பது, “பண்டையத் தமிழர் சமூகம்” என்கிற நூலை மார்க்சியக் கண்ணோட்டத்தில் எழுத வேண்டும் என்கிற எனது எண்ணத்தை விரைவுபடுத்தியது.

தமிழர்களுக்கு என்று தனித்த வழிபாட்டு முறைகள் இன்றும் இருக்கிறது, ஆனால் தமிழர்களுக்கு என்று தனித்த, தமிழகத்திலே தோன்றிய நிறுவன சமயம்  என்பது கிடையாது. இந்த உண்மைநிலைக்கு எதிராக  சைவம், வைணவம், ஆசிவகம் போன்றவை தமிழர் சமயம் என்று கூறப்படுகிறது.

பாட்டும் தொகையும் நூல்களான சங்க இலக்கியத்தில் வைதீகத்தின் ஆதிக்கம் அதாவது வைதீகமயமாதல் காணப்படுகிறது. பரிபாடலிலும், திருகாற்றுப்படையிலும் தமிழ் முருகன் சமஸ்கிருத ஸ்கந்தன் இணைப்பு முயற்சி தொடங்கிவிட்டது.

அப்படிப்பட்ட சங்க இலக்கியத்தில் சிவனைப் பற்றி நேரடியாக கூறப்படாத நிலையில் சைவத்தின் ஆதிகம் காணப்படுகிறது.

தமிழ் சமூகமே சைவ சமூகம் என்பதாக பரப்புரை செய்யப்பட்டு வருகிறது, வைதீகமயமாதலை எதிர்ப்பது போலவே சைவமயமாதலையும் எதிர்க்க வேண்டும்.

எந்த முடிவுகளும் தரவுகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். தரவுகள் இல்லாமல் முன்வைக்கப்படும் வைதீகமயமாக்கலையும்  சைவமயமாக்கலையும் தமிழ்  அறிஞர் பெருமக்கள் எதிர்க்க வேண்டும்.

உண்மையான தரவுகளின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகளே சரியானதாக இருக்கும். சரியான முடிவுகளே சமூகத்துக்குப் பயன்படும்.

வைதீகமயமாதல், சைவமயமாதல் ஒருப்பக்கம் என்றால் பெரியாரிய பகுத்தறிவுவாதம் பேசுகிற சிலர், தமிழர்களுக்கு திணைக்கோட்பாடுதான் இருக்கிறது, சமய சிந்தனை கிடையாது. மதசார்பற்ற போக்கே தமிழர்களுக்கு உரியது என்று கூறிவருகின்றனர். இந்தக் கருத்து இப்போது அதிகமாகவே காணப்படுகிறது.

இதற்கு பதிலளிக்கும் வகையில், ”தமிழர்களுக்கு சமய சிந்தனை கிடையாதா!!” என்கிற தலைப்பில் ஒரு நூலை விரைவில் எழுதி முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளேன். இந்த நூல்  எனது 2025-ஆம் ஆண்டுத் திட்டத்தில் புதியதாக சேர்க்கப்பட்டது.

”தமிழர்களுக்கு சமய சிந்தனை கிடையாதா!!” என்கிற இந்த எனது நூல் மார்க்சிய மானுடவியல் வகையைச் சார்ந்ததாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த அளவுக்கு விளக்கம் கொடுத்தாலும் மார்க்சிய மானுடவியல் என்பது மார்க்சியத்தில் இருந்து திசை விலகும் போக்கே என்று கூறுபவர் இருப்பர் என்பதை என்னால் அறிந்து கொள்ள முடிகிறது.

திசை விலகல் என்று கூறுபவர்கள், மார்க்சிய அடிப்படைகளை மறந்திடக் கூடாது, விட்டுவிடக் கூடாது என்பதில் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

இதற்கு ஒரு விளக்கத்தைக் கூறினால் போதும் என்று நினைக்கிறேன்.

இன்று நாம் எதன் பொருளையும் அறிவதற்கு, கூகுல் தேடு பொறியையே நாடுகிறோம். தற்போது தேடுபொறியில் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) வந்திருக்கிறது.

மார்க்சிய மானுடவியலைப் பற்றி கூகுல் செயற்கை நுண்ணறிவு என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

Marxist anthropology is a framework that uses Marxism to study how economic systems influence human societies. It examines cultural evolution through economic and material conditions. 

Key features என்று ஆங்கிலத்தில் தொடர்கிறது. அதில் உள்ளதை தமிழில் சுருக்கமாகப் பார்ப்போம்.

மார்க்சிய மானுடவியல் என்பது பொருளாதார அமைப்புகள் எவ்வாறு மனித சமூகங்களை பாதிக்கின்றன என்பதை ஆய்வு செய்ய மார்க்சியத்தைப் பயன்படுத்தும் ஒரு முறையாகும். இது பொருளாதாரம் மற்றும் பொருளாயத நிலைமைகள் மூலம் பண்பாட்டு படிமலர்ச்சியை ஆராய்கிறது.   

-என்று கூகுல் செயற்கை நுண்ணறிவு கூறுகிறது. இந்தக் கருத்து மார்க்சிய அடிப்படைக்கு எதிராக இல்லை என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

அடுத்து மார்க்சிய சிறப்புத் தன்மைகள் என்று பட்டியலிடுகிறது.

மார்க்சிய மானுடவியலின் சிறப்புத் தன்மைகள்:-

1)      மார்க்சிய மானுடவியல் பண்பாட்டிற்கும் பொருளாதார அமைப்புகளுக்கும் இடையிலான உறவில் கவனம் செலுத்துகிறது.

2)      மார்க்சிய மானுடவியல் முதலாளித்துவத்தை விமர்சிக்கிறது, பண்பாடுகளின் வளர்ச்சிக்கு, பொருளாதார காரணிகளின் பங்கை எடுத்துக்காட்டுகிறது.

3)      பொருள்முதல்வாதம், வர்க்கப் போராட்டம், சரக்குகளின் மாய்மாலம் ஆகிய கருத்தாக்கங்கள் முதன்மையாக மார்க்சிய மானுடவியலில் இடம் பெற்றுள்ளது.

4)      எந்தவொரு பொருளாதார அமைப்பும் அதிகார உறவுகளை அடிப்படையாகக் கொண்டது என்ற கருத்தை மார்க்சிய மானுடவியல் அடிநிலையாகக் கொண்டுள்ளது. இது இறுதியில் வர்க்கப் போராட்டத்துக்கு வழிவகுக்கிறது.

இதைதான் மார்க்சிய மானுடவியலாக கூகுல் செயற்கை நுண்ணறிவு கூறுகிறது.

கூகுல் என்கிற முதலாளித்துவ இயந்திரம் மார்க்சியத்தில் இருந்து விலகாமல்தான் மார்க்சிய மானுடவியலுக்கு விளக்கம் கொடுத்துள்ளது. இடதுசாரிகளான நாம் விலகாமல் மார்க்சியத்தில் ஊன்றி நின்றால் போதும், நமக்கு வெற்றி நிச்சயம்.

“சமூக பண்பாட்டு மானுடவியலில் கோட்பாடுகள் மற்றும் முறைகள்” என்கிற தலைப்பில் ஒர் ஆங்கில இணைய தளத்தைப் பார்த்தேன். அதில் பல்வேறு கோட்பாடுகள் பற்றிய கட்டுரைகள் காணப்படுகிறது.

பின்நவீனத்துக் கோட்பாடும் அதில் இடம் பெற்றுள்ளது.

https://ebooks.inflibnet.ac.in/antp10/chapter/post-modernism/

21-வதாக இடம் பெற்றிருப்பது “மானுடவியலில் மார்க்சியம்” (Marxism in Anthropology)

https://ebooks.inflibnet.ac.in/antp10/chapter/marxism-in-anthropology/

இந்த இணைய தளம் கல்விபுலம் சார்ந்ததாக இருப்பதால், ஒரு கோட்பாட்டின் கருத்துக்கள் அதன் மீதான விமர்சனங்கள் இரண்டும் இடம் பெற்றுள்ளது.

இதில் மார்க்சிய மானுடவியல் பற்றிய விமர்சனமும் இடம் பெற்றுள்ளது, ஆனால் இதில் மார்க்சிய மானுடவியலைப் பற்றி சரியாகவும் தெளிவாகவும் கூறப்பட்டுள்ளது.

மார்க்சிய மானுடவியல் என்பது உலகெங்கிலும் உள்ள பல்வேறு பண்பாடுகளைப் படிக்க பயன்படுத்தப்படும் மிக முக்கியமான மானுடவியல் கோட்பாடுகளில் ஒன்றாகும்.

மார்க்சிய மானுடவியல் ஐரோப்பிய-அமெரிக்க முதலாளித்துவ மேலாதிக்கத்தின் விமர்சனமாக வளர்ந்தது.

மார்க்சிய மானுடவியல் எந்த ஒரு பண்பாடு அல்லது சமூகம் மாறுவதற்கு முதன்மைக் காரணமாக உள்ள பொருளாயத நிலைமைகளை விவாதிக்கிறது.

மார்க்சியத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், எந்தவொரு பொருளாதார அமைப்பும் அதிகார உறவுகளை அடிப்படையாகக் கொண்டது, அது இறுதியில் வர்க்கப் போராட்டத்திற்கு வழிவகுக்கிறது, எனவே, சமூகத்தில் காணப்படும் வர்க்கம், வர்க்க போராட்டம், பொருளாதாரம், உற்பத்தி - விநியோக வழிமுறைகள் ஆகியவைகளை சமூக மாற்றத்துக்கு வழிவகுக்கும் விதத்தில் மார்க்சிய மானுடவியல் ஆய்வு செய்கிறது.

இவைகளே அந்த இணையத் தளத்தில் கூறப்பட்டுள்ளது, இது ஒரு கல்வி புலம் சார்ந்த இணையதளம், இருந்தாலும் மார்க்சிய அணுகுமுறையை சரியாகப் புரிந்து தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

மார்க்சியம் புதிய நிலைமைக்கு ஏற்ப வளர்ச்சி அடையக்கூடியது. அதே போல எந்தப் புதிய துறையாக இருந்தாலும் அதனைப் பின்பற்றி மார்க்சிய அணுகுமுறையில் விளக்கம் கொடுப்பதின் மூலமே மார்க்சியம் வளம் பெறும். அவ்வாறு நாம் செயல்படாது போனால் அந்தத் துறையில் மார்க்சியம் விமர்சிக்கப்பட்டு அதற்கு பதிலளிக்காமல் விடுபட்டு போகும்.

இந்த உண்மையை அறிந்து மார்க்சியம் அனைத்துத் துறைகளிலும் நுழைந்து மார்க்சியத்தை நிலைநிறுத்த வேண்டும். மானுடவியல் என்கிற புதியத் துறையிலும் மார்க்சியம் நுழைந்து விளக்கம் கொடுத்து, மார்க்சியத்தை மேம்படுத்த வேண்டும்.

Tuesday, 8 October 2024

“பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும” என்கிற லெனின் நூலைப் பற்றி

 

(1984ஆம் ஆண்டு முன்னேற்றப் பதிப்பகம் மாஸ்கோவில் இருந்து வெளியிட்ட “மார்க்சிய- லெனினிய அடிப்படைகள்” என்கிற நூலின் பகுதி ஆகும். இந்த நூலை எழுதிய ஆசிரியர்கள் கி.என்.வோல்கவ், கெ.கெ.வதலாசப், வெ.வெ.பஷத்தாயவ், பெ.பெ.பித்ரேன்கோ, கெ.என்.பிரகோவ் ஆகியோர் ஆவர். இந்த நூலை தமிழில் மொழிபெயர்த்தவர் இரா.பாஸ்கரன்.

 

லெனின் எழுதிய “பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” என்கிற நூலைப் படிப்பதற்கு இந்தப் பகுதி சிறந்த அறிமுகமாக இருக்கும்.)

“ஆஸ்திரிய விஞ்ஞானியாகிய எர்ன்ஸ்ட் மாஹின் மாஹிசம் அல்லது அனுபவவாத விமரிசனம் எனும் தத்துவஞானப் போக்கைத்தான் அவர்கள் "பழையதாகிப்போன” மார்க்சியத் தத்துவஞானத்தைக் காட்டிலும் மேலான “மிக நவீன தத்துவஞானமாகக்” கருதினார்கள்.

இந்தத் தத்துவஞானத்தின் உள்ளடக்கத்தைப் பின்வருமாறு கூறலாம்.

மக்களால் உலகத்தை (பொருட்களை, விஷயங்களை), அது “தானாகவே" எப்படியுள்ளதோ அதேபோல் அறிய முடியாது, ஏனெனில் அவர்கள் இந்த அறிதலின் போது பொருட்களையோ விஷயங்களையோ எதிர் கொள்ளவில்லை, மாறாக தங்களது உணர்ச்சிகளைத்தான் எதிர்கொள்கின்றனர். நாம் “பொருள்” என்று கூறுவது “நமது உணர்ச்சிகளின் ஒட்டுமொத்தமே” அன்றி வேறில்லை (இதையே மாஹியவாதி “தனிமங்களின் தொகுப்பு" என்று கூறியிருப்பார்). நமது உணர்ச்சிகளின் எல்லைகட்கு அப்பால் ஏதாவது ஒன்று இருக்கிறதா என்பது நமக்குத் தெரியாது, நம்மால் தெரிந்து கொள்ளவும் முடியாது, ஏனெனில் உலகைப் பற்றிய சகலவித ஞானத்தையும் நாம் எல்லாவற்றிற்கும் மேலாக உணர்ச்சிகளிலிருந்துதான் பெறுகின்றோம். எனவே மாஹிசத்தின்படி புறவய உலகை அறியவோ, உண்மையான ஞானத்தைப் பெறவோ, நம்மைச் சுற்றியுள்ள இயற்கை மற்றும் சமுதாயத்தின் விதிகளை அறியவோ நம்மால் முடியாது.

இந்தக் கருத்து நிலைகளில் இருந்து நடைமுறை ரீதியான நடவடிக்கைகளின் பாலான, உதாரணமாக அரசியல் நடவடிக்கைகளின் பாலான அகவய ரீதியான அனுகுமுறை உருவானது. புறவய உண்மை இல்லையெனில், எந்த புறவய விதிகளின் அடிப்படையில் நமது நடவடிக்கையை அமைத்துக்கொள்ள வேண்டுமோ அந்த விதிகளை அறிதல் இயலாதது என்றால், இறுதியில் எல்லாமே மனிதர்களின் விருப்பத்தையும் சித்தத்தையும் ஸ்தாபன ரீதியாக ஒன்றுபடும் அவர்களது திறமையையும் இது போன்ற பிறவற்றையும் பொறுத்தே அமையும் என்று மாஹிசத்தின் ஆதரவாளர்கள் கருதினார்கள்.

சுற்றியுள்ள உலகம் உண்மையில் "தானாகவே" எப்படியுள்ளதோ அதே மாதிரி அதை மனிதர்களால் சரியாக அறியமுடியும் என்பதையும் எனவே புறவய உண்மையைப் பெறவும் இயற்கை மற்றும் சமுதாயத்தின் புறவய விதிகளை அறியவும் மனிதர்களால் இயலும் என்பதையும் நிருபிப்பதுதான் லெனினுடைய நூலின் முக்கிய நோக்கமாக இருந்தது. ஆம், உலகைப் பற்றிய ஞானம் உணர்ச்சிகளின் மூலம்தான் மனிதனுக்குக் கிடைக்கிறது. ஆனால் லெனின் காட்டியபடி இந்த உணர்ச்சிகள் மனிதனை உலகத்திடமிருந்து தடுத்துப் பிரிக்கக் கூடிய ஒரு சுவரோ அல்லது கவசமோ அல்ல, மாறாக இவை மனிதனை உலகத்தோடு இணைக்கக் கூடிய பாலமாகும். ஆம், உலகை அறியும் போது எல்லாவற்றிற்கும் மேலாக நாம் நமது உணர்ச்சி எதிர்கொள்கின்றோம், ஆனால் இந்த உணர்ச்சிகள் பொருட்களினுடைய புறவய குணங்களின் பிரதிபலிப்பாகும்.

நடைமுறை ரீதியான மனித நடவடிக்கையால் இது நிரூபிக்கப்படுகிறது. பொருட்களின் குணங்களை, அவற்றுக்கிடையேயான தொடர்புகளைப் பற்றிய விதிகளை நாம் தவறாகப் பிரதிபலித்தால் நம்மால் விஷயங்களை -வீடு கட்டுதல், தானியம் விளைவித்தல், பறக்கும் சாதனங்களை விண்ணில் ஏவுதல் போன்றவற்றை— நமது ஆளுகைக்கு உட்படுத்த முடியாது; அப்போது அந்தப் பொருட்களும், விஷயங்களும் நம்மை “கேட்காது' போகும்: கட்டுமானங்கள் தகர்ந்துவிழக்கூடும், நிலத்தில் விதைக்கப்பட்ட தானியங்கள் முளைக்காமல் போகலாம், விண்ணில் பறக்கும் முயற்சிகள் சோகமாக முடியக் கூடும்.

நடைமுறைதான் உண்மையின் அளவுகோலாகும் என்பது மார்க்சிய-லெனினிய தத்துவஞானத்தின் அடிப்படைக் கருத்து நிலைகளில் ஒன்றாகும். மனிதர்களின் உணர்ச்சிகளும் சிந்தனைகளும் புறவய உலகிலுள்ள பொருட்கள், விஷயங்கள், புலப்பாடு ஆகியவற்றின் பிரதிபலிப்புகளாகும் என்றும், மனித அறிதலின் உண்மை நடைமுறையால் (முதலாவதாக மனிதர்களின் பொருளாயத-உற்பத்தி நடவடிக்கை யால்) சரிபார்க்கப்படுகிறது என்றும், மனிதனால் புறவய உண்மையை பெற முடியும் என்றும் கூறக்கூடிய போதனை பொருள்முதல்வாதமும் அனுபவாத விமர்சனமும் எனும் நூலில் லெனினால் உருவாக்கப்பட்டது; இந்த லெனினிய போதனை பிரதிபலிப்பின் தத்துவம் எனும் பெயரைப் பெற்றது. இதை உருவாக்கியதன் மூலம் லெனின் மார்க்சிய தத்துவ சிந்தனையின் பொக்கிஷத்திற்கு மகத்தானதொரு காணிக்கை செலுத்தினார்.

பிரதிபலிப்பின் தத்துவம் திருத்தல்வாதிகளின் தத்துவ ஞானக் கருத்துக்களை மட்டுமல்லாது அவர்களுடைய அரசியல் வேலைதிட்டத்தையும் விமர்சனம் செய்ய அனுதித்தது. புறவய உண்மை இருப்பதை ஒத்துக்கொள்ளக் கூடிய தத்துவத்தால் மட்டுமே, எதார்த்தத்தின் புறவய விதிகளிலிருந்தும் முரண்பாடுகளிலிருந்தும் வரும் பாட்டாளிகளின் வர்க்கப் போராட்டத்திற்கான சித்தாந்த அடிப்படையாக இருக்க முடியும்.

புறவய உண்மையைப் பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தை மாஹியவாதிகள் இன்னொரு நோக்கிலிருந்தும் தாக்க முற்பட்டார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மனிதகுல வரலாற்றில் பின்னால் திருத்தப்படாத, சரி செய்யப்படாத, ஏன் சமயங்களில் முற்றிலும் தூக்கி எறியப்பட்ட பொருட்கள் அல்லது புலப்பாடுகளைப் பற்றிய ஞானம் ஒன்று கூட இருக்காதிருக்கையில், புறவய உண்மையைப் பெறும் வாய்ப்பைப் பற்றி எப்படி பேசலாம் என்று அவர்கள் கேட்கின்றனர். திருத்தப்படும் உண்மைகள் எப்படிப்பட்ட உண்மைகள்?

ஆம், நமக்குத் தெரிந்த விஷயங்கள், அவற்றின் முறைகளைப் பற்றிய மனித ஞானம் முழுவதும் மாற்றமின்றி அப்படியே இருக்கவில்லை என்பது சொல்லாமலேயே அமையும். ஆனால் இது எதைக் குறிக்கிறது? விஷயங்களை அப்படியேயும் எனவே புறவய உண்மையையும் அறிதல் இயலாதது என்பதை இது முற்றிலுமாக குறிக்கவேயில்லை. அறிதல், பிரதிபலிப்பு என்பது ஒரு முறை நடைபெறும் செயல் அல்ல. மாறாக இது ஒரு நிகழ்ச்சிப் போக்கு என்பதையும் அறிதல் என்பது விஷயங்களின் சாராம்சத்தினுள் மனித பகுத்தறிவு உட்புகக்கூடிய ஒரு நீண்ட பாதை என்பதையும் மட்டும்தான் இது குறிக்கிறது; இந்த நீண்ட பாதை, பிரதிபலிக்கக் விஷயங்களின் "வெளிப்புறத்தை" மட்டும் கூடிய, அவற்றின் "மேற்பரப்பில் இருக்கும்" குணாம்சங்கள் மற்றும் உறவுகளைப் பிரதிபலிக்கக் கூடிய மேற்போக்கான ஞானத்திலிருந்து துவங்கி பின்னர் ஆழமான, நேரடியான கவனிப்பிலிருந்து மறைக்கப்பட்ட நியதிகளைக் கண்டறிவதற்கு இட்டுச் செல்கிறது. இவ்வாறாக, எந்த அளவிற்குப் புறவய உண்மையை அடைய முடியும் என்பதைப் பற்றி மட்டுமே இங்கு பேசப்படுகிறது.

முழுமையற்ற, ஒரு தரப்பான (சூட்சுமமான) ஞானத்திலிருந்து மேலும் அதிக முழுமையான, ஆழமான (திட்ட வட்டமான) ஞானத்திற்கான இயக்கத்தை வெளிப்படுத்திக் காட்டுவது பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும் என்ற லெனினுடைய நூலின் இரண்டாவது முக்கியப் போக்காகும். கடந்த காலத்திய விஞ்ஞானத்திலும் கலாச்சாரத்திலும் இருந்த மதிப்புடைய அனைத்தையும் கிரகித்து அவற்றை மேற்கொண்டு வளர்க்க லெனினால் பாதுகாக்கப்படும் முறை, கட்சிக்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் வழிகாட்டுகிறது. மாஹிசத்தின் ருஷ்ய ஆதர வாளர்களுடைய தத்துவஞான நிலையோ (அ.பக்தானவ் மற்றும் அவரையொத்த கருத்துக்களை உடையவர்களும்) காலங்களின் இந்த இணைப்பு இழையை அறுத்து, "புதியதன்' பெயரால் “பழையன” எல்லாவற்றையுமே தூக்கி யெறிந்துவிட வேண்டுமெனக் கோரியது (இந்தப் “பழையதில்” பொருள்முதல்வாதமும் அடங்கும் என்பது கவனிக்கத் தக்கது). இந்தக் கோஷங்கள், இதுவரை இருந்ததிலேயே மிக "புரட்சிகரமான” மிக “பாட்டாளித் தனமான ஆடைகளை அணிந்து இருந்தன: "புதிய பாட்டாளி வர்க்க கலாச்சாரம் வாழ்க”, “கடந்த காலத்திய கலாச்சாரம் முழுவதும் ஒழிக, ஏனெனில் அதைச் சுரண்டும் வர்க்கங்கள்தான் வளர்த்தன”, இத்தியாதி. இந்தக் கோஷங்கள் எதில் போய் முடியும் என்பது நமக்கு இப்போது தெரியும் - மாவோயிச “கலாச்சாரப் புரட்சி" இவற்றை நடைமுறையில் நிறைவேற்றியது.

லெனினிய பிரதிபலிப்பின் தத்துவத்தில் இன்னுமொரு முக்கிய அம்சம் உண்டு. மனிதனின் உணர்ச்சிகளும் சிந்தனைகளும் புறவய உலகிலுள்ள பொருட்களின் வடிவங்கள், மாதிரிகள் என்று லெனின் கூறும் போது இயந்திர ரீதியாக, உயிர்ப்பற்று பொருட்களை நமது சுய உணர்வில் "புகைப்படம்" பிடித்து வைப்பதைக் குறிக்கவில்லை. மனித மூளை புகைப்படச் சுருளோ அல்லது கண்ணாடியோ அல்ல. புறவய உலகை உள்ளது உள்ளபடியே பிரதிபலிக்கும் திறமை, சமூகப் பயிற்சி மற்றும் கல்வியின் விளைவாகவும் சமூக நடைமுறையின் நிகழ்ச்சிப் போக்கிலும்தான் மனிதனிடம் உருவாகிறது. பொருட்களை மனக்கண் முன் கொணரும் திறமையும் கற்பனைத் திறனும் மனிதனிடம் வளர்ச்சியடையாவிடில் இந்தப் பிரதிபலிப்பு இயலாதது. பொருட்களை ஒப்பிடவும் வேறுபடுத்திப் பார்க்கவும், தனியான ஒன்றில் பொதுவானதையும், ஒரே மாதிரியானவற்றில் வேறுபாட்டையும் பார்க்க மனிதனுக்கு மனக் கண்ணால் பார்க்கும் திறமையும் கற்பனைத் திறனும் அவசியம். வேறுவார்த்தைகளில் சொல்வதெனில் பிரதிபலிப்பு என்பது ஒரே நேரத்தில் சுய உணர்வின் ஆக்கபூர்வ வமான படைப்பாற்றல் மிக்க நட வடிக்கையும் ஆகும்.

லெனினுடைய இந்தத் தத்துவஞானக் கருத்தமைப்புகள் அரசியல் போராட்டத்தில் முதலாவதாக புறவய நியதிகளையும் மற்றும் முரண்பாடுகளையும் சரியானபடி பிரதிபலித்து நிர்ணயித்து வெளிப்படுத்துவதிலும் இரண்டாவதாக வளர்ச்சியின் புறவய ரீதியான போக்குகளையும் சமூக வர்க்கங்களின் புறவயத் தேவைகளையும் தெளிவுபடுத்துவதிலும் மூன்றாவதாக “மாபெரும் ஸ்தாபன அமைப்பாளர்களின்” விருப்பத்திற்கும் சித்தத்திற்கும் ஏற்றவாறு இல்லாமல் புறவய நியதிகள் மற்றும் முற்போக்கு வர்க்கங் களின் நலன்கள் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு எதார்த்தத்தை மாற்றுவதற்கான கடமைகளையும் கோஷங்களையும் உருவாக்கு வதிலும் கட்சிக்கு வழிகாட்டின.

லெனின் திருத்தல்வாத தத்துவகர்த்தாக்களிடமிருந்து இயக்க இயல் பொருள்முதல்வாதத்தின் கருத்துநிலைகளை உறுதியாகப் பாதுகாத்து புறவய உண்மையின் மறுப்பை பற்றிய மாஹிச தத்துவஞானத்தை உறுதிப்படுத்தக் கூடியவைகளாக நவீன பௌதீகம், கணிதம் மற்றும் பல விஞ்ஞானங்களிலிருந்து மாஹிசவாதிகள் எடுத்துரைத்த மேற்கோள் எப்படி ஆதாரமற்றவை என்பதை காட் டினார். 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றண்டின் துவக்கத்திலும் நடைபெற்ற முக்கிய இயற்கை விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் பகுப்பாய்வு செய்த லெனின், அவற்றைச் சரிவரப் புரிந்து கொண்டால், அவை மார்க்சிய தத்துவஞானக் கருத்து நிலைகளுக்கு முரண்படாததோடு மட்டுமின்றி மாறக அவற்றை ஊர்ஜிதப்படுத்துவதைத் தெளிவாகக் காண்பித்தார்.

1897ஆம் ஆண்டு மின்னணு கண்டுபிடிக்கப்பட்டது. வியக்கத்தக்க ஒரு விஷயம் வெளிப்பட்டது: இந்த மிகச் சிறு துகள்களின் எடை வேகத்தின் குறைவைப் பொறுத்து குறைந்தது. உடனே பல பௌதீக வல்லுநர்களும் அவர்களையடுத்து மார்க்சை மறுக்க நாட்டம் கொண்டிருந்த 'நவீன தத்துவஞானிகளும்", “பருப்பொருள் மறைகிறது" என்றும் பருப்பொருள் அல்லாத, பொருள் அல்லாத 'சக்தியாக” அது 'மாறுகிறது. என்றும் அறுதியிட்டு கூறத் துவங்கினார்கள்.

1896ஆம் ஆண்டு இயற்கை கதிரியக்கம் கண்டுபிடிக்கப் பட்டது: யுரேனிய அணுக்கரு மற்ற மூலகங்களின் அணுக்களாக பிளவுபட்டது. அணுக்கள் பிளவுபடக் கூடியவை, மாறுபடக் கூடியவை என்பதும் இரசாயன மூலகங்கள் ஒன்று மற்றதாக மாறக்கூடும் என்பதும் தெரிய வந்தது. எல்லாப் பொருட்களின் மூல அடிப்படையும் அணுக்களே என்ற கருத்துக்கள் அடியோடு மாறின. அணுக்களின் ஓரினத்தன்மை, அவற்றின் எளிய அமைப்பு, நிலைப்புத் தன்மை, பிரிக்க இயலாத் தன்மை ஆகியவற்றைப் பற்றிய பௌதீக வல்லுநர்களின் கருத்துக்கள் தகர்ந்து விழுந்தன. அப்போது பௌதீக வல்லுநர்களும் “நவீன தத்துவஞானிகளும்'' பொருள்முதல்வாதம் தகர்ந்து விடும், நமது ஞானம் மாறி வருவதால் அதில் புறவயத்தன்மையுடையது எதுவுமே இல்லை என்றெல்லாம் அறிவித்தனர்.

பொருள்முதல்வாதம் தகர்ந்து விழாது, மாறாக முந்தைய பௌதீகத்தின் எளிமையாக்கப்பட்ட (இயந்திர ரீதியான, இயக்க மறுப்பியல் ரீதியான) கருத்துக்கள்தான் தகர்ந்து விழும், பருப்பொருள் மறையவில்லை. பருப்பொருளை எந்த எல்லை வரை நாம் அறிந்திருந்தோமோ அந்த எல்லைதான் மறைந்துவிட்டது என்று லெனின் அவர்களுக்குப் பதில் அளித்தார்.

19ஆம் - 20ஆம் நூற்றாண்டுகளின் எல்லையில் நடைபெற்ற நவீன இயற்கை விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களைப் பகுப்பாய்வு செய்த லெனின், இயற்கை விஞ்ஞானங்களும் தத்துவஞானமும் ஒன்றிற்கொன்று மாற்றீடாக அமையாமல் ஒன்றையொன்று இட்டு நிரப்பி, செழுமைப்படுத்தி, இயக்க இயல் பொருள்முதல்வாதத்தின் சக்தியையும் உண்மையையும் வெளிப்படுத்தி உலகை அறிந்து மாற்றியமைக்கும் மகத்தான பணியில் நண்பர்களாய்-கூட்டாளிகளாய் செயல் படுகின்றன என்று காட்டினார்.

"பருப்பொருள்” கருத்தினத்தைப் பற்றியும் மற்றும் இயக்க இயல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படை கருத்து நிலைகளைப் பற்றியும் செய்யப்பட்ட ஆழ்ந்த ஆராய்ச்சி, வரலாற்றுப் பொருள்முதல்வாதத் துறையில் லெனினால் முன்னெடுத்து வைக்கப்பட்ட ஒரு பெரும் அடியை முன் நிர்ணயம் செய்தது.

பக்தானல், சமுதாய உணர்வு சமுதாய வாழ்நிலையைச் சார்ந்திருக்கவில்லை, அவையிரண்டும் முற்றிலும் சரிசமமானவை (ஒரே மாதிரியானவை) என்ற ஆய்வுரையின் உதவியால் மார்க்சியத்தைத் "திருத்துவதற்குச்" செய்த முயற்சிகளை லெனின் கண்டித்தார். மனிதர்கள் எதைச் செய்தாலும் அவர்கள் குறிப்பிட்ட லட்சியங்களை, அதாவது திட்டவட்டமான உணர்வால் வழி நடத்தப்பட்டு இயங்குகின்றார்கள்; எனவே உணர்வைப் பொறுத்தமட்டில் சமுதாய வாழ்நிலை முதன்மையானதாகக் கூறுவது தவறானது என்று பக்தானவ் வாதிட்டார்.

மனிதர்கள் செயல்படும் முன் குறிப்பிட்ட லட்சியங்களைத் தங்கள் முன் வைக்கின்றார்கள் என்பது சொல்லாமலேயே அமையும் என்கிறார் லெனின்; ஆனால் முதலாவதாக, இந்த லட்சியங்கள் சமுதாய வாழ்நிலையின் வளர்ச்சிப் போக்குகள் மற்றும் முரண்பாடுகளின் பிரதிபலிப்பாகும், இவை சமுதாய வாழ்நிலையால்தான் ஏற்படுத்தப் படுகின்றன; இரண்டாவதாக, தங்கள் முன் குறிப்பிட்ட லட்சியங்களை வைத்த மக்கள் சமுதாயத்தில் செயல்பட்டாலும், இந்த நடவடிக்கையின் புறவய ரீதியான விளைவுகள், குறிப்பாக பரந்த வரலாற்று தொடர்பில் இவற்றை எடுத்துக் கொண்டால், முன்னர் முன்வைக்கப்பட்ட லட்சியங்களில் இருந்து சாதாரணமாக மாறுபடும். ஏனெனில் தீர்மானகரமான முடிவாக வாழ்நிலையும் அதன் புறவய விதிகளும் வாய்ப்புகளும்தான் இருக்கின்றன, உணர்வு என்பதோ இந்த வாழ்நிலையின் (கிட்டத்தட்ட சரியான) பிரதிபலிப்பு மட்டுமே ஆகும் லெனின் தொடர்ந்து கூறினார்.

வி.இ.லெனின், அ. அ.பக்தானவ் ஆகிய இருவரின் தத்துவஞான நிலைகளில் நிலவிய மாறுபாடு அவர்களது அரசியல் நிலைகளின் மாறுபாட்டை முன் நிர்ணயம் செய்தது. லெனினிய நிலை என்பது சமுதாய வாழ்நிலையின் புறவய ரீதியான போக்குகளையும் உழைக்கும் வர்க்கங்களின் புறவய ரீதியான நலன்களையும் ஆராய்ந்து எதார்த்தத்தை அதன் உள் விதிமுறைகளையொட்டி மாற்றியமைக்கும் ஒரு நிலையாகும்; பக்தானவின் நிலை என்பது செயல்பாட்டின் லட்சியங்களை அகவய ரீதியாக, தன்னிச்சையாக நிர்ணயிக்கக் கூடிய, உழைப்பாளிகளின் புறவய நலன்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாத, வரலாற்றைப் படைக்கும் முக்கிய சக்தியாக மக்கள் திரளினரைக் கருதாது 'மகத்த ஸ்தாபன அமைப்பாளர்களை” அத்தகைய சக்தியாகக் கருதும் நிலையாகும்.

மார்க்சிய தத்துவஞானத்தால் (இயக்க இயல் பொருள்முதல்வாதம் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதம்) மட்டுமே பாட்டாளி வர்க்க புரட்சித் தத்துவத்தின் அடிப்படையாக, அதன் போராட்டத்தின் போர்த்தந்திர மற்றும் நடைமுறைத் தந்திரத்தின் அடித்தளமாக இருக்க இயலும் என்று லெனின் நிரூபித்தார். இந்த லெனினியக் கருத்து நிலை பூர்ஷ்வா சித்தாந்தத்திற்கு எதிராகவும் பல்வேறு சந்தர்ப்பவாத மற்றும் திருத்தல்வாதப் போக்குகளுக்கு எதிராகவும் இன்று நடைபெறும் போராட்டத்திற்குப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

தத்துவஞானம் என்பது நடுநிலைமையானதாக இருக்க முடியாது, இயற்கையாகவே அது வர்க்கத் தன்மையை, கட்சித் தன்மையை உடையது என்று லெனின் நிரூபித்தார். மார்க்சிய தத்துவ ஞானத்தின் முக்கியப் பிரச்சினைகளைப் பற்றிய தத்துவார்த்த ஆராய்ச்சிக்கு முன்போன்றே தொடர்ந்து லெனின் பெரும் முக்கியத்துவம் அளித்து வந்தார். தத்துவஞான ஏடுகள் எனும் அவரது புகழ் பெற்ற படைப்பு இதற்கு சான்றாகும். இந்நூலில் ஹெகல், அரிஸ்டாட்டில், ஃபார்பாஹ் போன்ற தத்துவஞானிகள், விஞ்ஞானிகளின் நூல்களில் இருந்து எடுக்கப்பட்ட ஏராளமான பகுதிகளும் லெனினுடைய குறிப்புகளும் பெரும்பாலும் 1914-1915ஆம் ஆண்டுகளில் அவரால் எழுதப்பட்ட பல சிறு பகுதிகளும் இடம் பெற்றுள்ளன.

தத்துவஞான ஏடுகள் நூலின் முக்கிய உள்ளடக்கத்தை உருவாக்கிய விஷயங்கள், பொருள்முதல்வாத இயக்க இயலைப் பற்றி தனி நூல் ஒன்றை எழுத லெனின் திட்டமிட்டிருந்தார் என்பதற்குச் சான்றாகத் திகழ்கின்றன, ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்தத் திட்டத்தை நிறைவேற்ற அவரால் இயலவில்லை. தத்துவஞான ஏடுகள் நூல் சிறு கூறுகளால் ஆன ஒரு நூல் என்றாலும் கூட, பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும், லெனினுடைய மற்ற பல நூல்கள், கட்டுரைகளுடன் சேர்ந்து மார்க்சிய இயக்க இயலைப் படைப்பாற்றலோடு வளர்க்கும் பாதையில் இந்நூல் ஒரு புதிய அடி என்று உறுதியாகக் கூறும் அளவிற்கு செழிப்பானது.”

(மார்கசிய- லெனினிய அடிப்படைகள்; பக்கம் 167-175)