Thursday 9 May 2013

இயக்கவியல் பொருள்முதல்வாதம்



இயக்கவியல் என்பது மிகமிக முழுமையான, ஆழமான, ஒருதலைபட்சம் இல்லாத
        வடிவத்தில் வளர்ச்சியைப் பற்றி விளக்கி விவரிக்கும் போதனையாகும்,
நிரந்தரமாக வளர்ச்சியுற்ற வண்ணமுள்ள பருப்பொருளை நமக்குப் பிரதிபலித்துக்
காட்டும் மனித அறிவின் சார்புநிலையை வலியுறுத்தும் போதனையாகும்.
 லெனின்- (மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்)

பருப்பொருள்
(Matter)

"இயற்கை என்பது - அதாவது வளர்ச்சி பெற்றுக் கொண்டே
இருக்கும் பருப்பொருள் என்பது - மனிதனுக்கு அப்பால் சுயமாக
இருந்து வருகிறது. இந்த இயற்கையை மனித அறிவு பிரதிபலிக்கிறது"
லெனின்- (மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்)

      பொருள்முதல்வாத கண்ணோட்டம், பருப்பொருளை (Matter)ஆதாரமாகக் கொண்டு ஆராய்கிறது.  இந்தப் பருப்பொருள் என்ற கருத்தாக்கம் காலந்தோறும் வளர்ந்துகொண்டே இருக்கிறது.  பழங்கால பொருள்முதல்வாதிகளின் பருப்பொருள் பற்றிய கருத்தை முதலில் பார்ப்போம்.

        பழங்கால பொருள்முதல்வாத சிந்தனையாளர்கள், பருப்பொருள் என்பதை பிரபஞ்சத்தின் தொடக்கப் புள்ளியாக, அதாவது தொடக்க கட்டுமானப் பொருள் என்பது போல் புரிந்து கொண்டனர். அதனால் இந்தத் தொடக்கத்தை தனிப் பொருளில் கண்டனர். எடுத்துக்காட்டாக, தண்ணீர், காற்று, நெருப்பு போன்றவற்றில் இருந்து இப்பிரபஞ்சம் தோன்றியதாகக் கருதினர்.

        அடுத்த காலகட்டத்திய பொருள்முதல்வாதிகள், பருப்பொருள் என்பதை அணுக்களில் கண்டனர். இந்த அணுக்கள் மிகச்சிறிய துகள்களால் ஆனவை, அதனை பிரிக்கவோ  பிளக்கவோ முடியாது, அவை நிலையாக இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று கருதினர். விஞ்ஞான வளர்ச்சியில் அணுக்கள் பகுபடக் கூடியது என்று அறியப்பட்டது. அணுவைக்காட்டிலும் சிறியதான எலெக்ட்ரான் கண்டுபிடிக்கப்பட்டது.

        பருப்பொருள் என்பது மனிதனது உணர்வுநிலையை சாராது, அதாவது அதனைப் பற்றி மனிதன் சிந்திக்கின்றானா? சிந்திக்கவில்லையா? என்பதைச் சாராது, புறநிலையில் இருப்பதாக நவீனப் பொருள்முதல்வாதமான மார்க்சிய தத்துவம் குறிப்பிடுகிறது.

        பருப்பொருள் என்பதை எந்தவித அடிப்படை தனிமங்களாக மட்டும் சுருக்க இயலாது. பருப்பொருள் என்பது மனிதனுடைய புலனுறுப்பு, புலனறிவு வழியாக புறநிலை எதார்த்தத்தைக் குறிக்கின்ற வகையினம். அந்த எதார்த்தம் மனிதனைச் சாராது புறநிலையில் இருக்கிறது என்று லெனின் கூறுவார். இந்த  விளக்கத்தை நாம் அறிந்திருக்கின்ற பருப்பொருட்களைப் பற்றி மட்டுமல்லாது, எதிர்காலத்தில் கண்டுபிடிக்கக்கூடிய பருப்பொருட்களையும் உள்ளடக்கியே லெனின் கூறியிருக்கிறார். இதனையே பருப்பொருளைப் பற்றிய போதுமான கருத்தாக்கமாகக் கொள்ளலாம்.

        பருப்பொருள் எத்தகைய தனித்தன்மையை பெற்றிருந்தாலும் ஒரு பொது அம்சத்தை கொண்டுள்ளது. அது நமது உணர்வுநிலையைச் சாராமல், புறநிலையில் இருக்கிறது. எந்தவித புதிய பண்புகளைப் பெற்றிருந்தாலும் அவை நமது உணர்வுநிலையிலிருந்து தனித்து புறநிலையில் இருப்பதே பருப்பொருள்.

        இந்த புறநிலையான இயக்கம், நமது புலன் உறுப்புக்களின் மீதான தாக்கத்தின் விளைவாகப் பிரதிபலிக்கிறது. இந்தப் பிரதிபலிப்பில் இவற்றின் பொருளாயதத் தன்மை அடங்கியுள்ளது. அதே நேரத்தில் முந்திய பொருள்முதல்வாதத் தத்துவங்களைப் போலன்றி இயக்கவியல் பொருள்முதல்வாதம் பருப்பொருளை தொட்டு உணரத்தக்க வடிவங்கள், புலன்உறுப்புகளின் மூலம் அறிதல் என்பதாகக் குறுக்கிக் கொள்வதில்லை.

        புலன் உறுப்புகளின் தாக்கம் என்று சொன்னவுடன் தொட்டு உணரத்தக்கது, அதன் வாசனைகளை நுகரக் கூடியது என்பதாக மட்டும் புரிந்து கொள்ளக் கூடாது. குறிப்பிட்ட ஒலியின் அளவில் குறைவானதையும் அதே போல் அதிகமானதையும் செவுப்புலனால் அறிய முடியாது. இருந்தும் இவை நமது சிந்தனையிலிருந்து புறநிலையில் இருப்பதையும், அதனை அறிகின்ற விஞ்ஞானக் கருவிகளைக் கொண்டு நமது உணர்வுகளில் அவை வெளிப்படுத்த முடிகிறது என்பதையும் இயக்கவியல் பொருள்முதல்வாதம் தெரிவிக்கிறது.

பருப்பொருள் எல்லையற்றது, முடிவற்றது, எனவே இன்னமும் நாம் அறியாதவை இருக்கும், ஆனால் அறியப்படமுடியாதவை என்பது கிடையாது

பருப்பொருளும் இயக்கமும்
(Matter and Motion)

"இயக்கம் என்பது பருப்பொருளின் நிலைநிற்புப் பாங்காகும். இயக்கமின்றி
பருப்பொருள் எங்கும் இருந்ததில்லை, இருக்கவும் முடியாது.
...
இயக்கமில்லாத பருப்பொருள், பருப்பொருள் இல்லாத இயக்கம் போலவே
எண்ணிப்பார்க்க இயலாதது. எனவே இயக்கம் பருப்பொருளைப் போலவே
படைக்க முடியாதது மற்றும் அழிக்க முடியாதது, ... அதை மாற்ற
மட்டுமே இயலும்."
                         - எங்கெல்ஸ் (டூரிங்குக்கு மறுப்பு - பக்கம் 89)

      உலகில் காணப்படும் அனைத்தும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. முற்றிலும் இயக்கமோ, மாற்றமோ இல்லாத பொருட்கள் என்று சொல்வதற்கு இவ்வுலகில் ஒன்றும் இல்லை.

        பருப்பொருளின் இருப்பு என்பதே இயக்கத்தில் தான் நிலவுகிறது. இயக்கம் இன்றி பருப்பொருள் இல்லை. அதே போன்று பருப்பொருள் இன்றி இயக்கமும் இல்லை. இயக்கத்திலுள்ள பருப்பொருள் என்பது விசும்பிலும் காலத்திலும் (Space and Time) தவிர்த்து வேறு வழியில் நடைபெறுவதில்லை.

        ஒவ்வொரு பொருளும் தம்முள்ளும் பிறபொருட்களுடனும் இணைந்து செயற்படுவதையே இயக்கம் என்று கூறுகிறோம். இந்த இயக்கம் பார்வைக்கு இயக்கமற்றதாக இருக்கலாம். இயக்கமற்ற அமைதிநிலை என்பது பொருளின் ஒப்பீட்டுத் தன்மையில் தான் காணப்படுகிறது. இந்த அமைதிநிலை இயக்கத்தின்போது பொருட்களின் உறுப்புகள் சமநிலையில் காணப்படுவதால் இந்த இயக்கம் ஒப்பீட்டுத் தன்மையினதான இயக்கமாக கருதப்படுகிறது. இந்த சமநிலையின் குறிப்பிட்ட திட்டவட்டமான நிலையினை அடைந்தவுடன் ஒப்பீட்டு நிலையிலான சமநிலையை முறிந்து, புதிய நிலைக்கு மாற்றம் அடைகிறது. அந்நிலையிலிருந்து அடுத்த நிலைமாற்றம் ஏற்படும் வரை தற்காலிகமாக ஒப்பீட்டு நிலையில் இயக்கமற்றதாகக் காணப்படுகிறது.

        ஒவ்வொரு மாற்றமும் ஒப்பீட்டு நிலையில் திட்டவட்டமான, ஒரு நிலையில் நிலைபெற்று நிகழ்கிறது. இந்நிகழ்வின் ஒப்பீட்டுநிலை குலைகின்றபோதே அடுத்த நிலைக்கு மாறுகிறது. புதிய நிலையிலும், அதே ஒப்பீட்டு நிலையும், சமநிலையும், அதன் முறிவும், புதிய அமைப்பின் தோற்றமும் என மீண்டும் மீண்டும் புதியது தோன்றிய வண்ணம் எல்லையில்லா தொடர்ச்சியாக நிகழ்வுகள் செல்கிறது.

        விசும்பிலும் காலத்திலும் நடைபெறுகின்ற பருப்பொருளின் இயக்கம் என்பது அப்பொருட்களின் மாறுதல் அடைகின்ற வடிவத்தையே குறிப்பிடுகிறது. இந்த மாறுதல் பெறுகின்ற இயக்கமே அப்பொருளின் இருப்பின் நிலையை வெளிப்படுத்துகிறது.

        இன்றைய   விஞ்ஞானக் கருத்துக்களின்படி பருப்பொருளின் இயக்கவடிவங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

விசும்பில் இடம் பெயரும் துகள்களின் இடப்பெயர்ச்சி, இயந்திரவியல் இயக்கம். வெப்பம், நிறை, ஆற்றல் போன்றவை இயற்பியல் இயக்கம். மூலக்கூறுகளின் சேர்ப்பும் பிரிப்பும் வேதியல் இயக்கம். சமூகத்தில் பொருளாதார அமைப்பு முறையில் ஏற்படுகிற மாற்றம் சமூக இயக்கமாகும்.

        மேலே குறிப்பிடுகின்ற குறிப்பிட்ட இயக்கங்களை ஆராய்வது தனித்தனியான விஞ்ஞானப் பிரிவாகும். தத்துவம் அனைத்து விஞ்ஞானங்களையும் உள்ளடக்கி  ஆராய்கிறது. தத்துவத்தை விஞ்ஞானங்களின் விஞ்ஞானம் என்பதற்கு இதுவே காரணமாகும்.

        பருப்பொருளின் இயக்கம் என்பதை மார்க்சிய தத்துவம், அனைத்துவித  விஞ்ஞான இயக்கங்களையும் உட்படுத்திக் கூறுகிறது. இயக்கம் என்பது பருப்பொருளின் பிரிக்க முடியாத பண்பாகும். இந்த இயக்கம், தன் இயல்பில் உள்முரண்பாடோடும், பிறவற்றுடனும் செயல், எதிர்செயல் என்ற தொடர்போடும் நடைபெறுகிறது.

        இயக்க வடிவங்கள் அனைத்தும் கண்டிப்பான உட்தொடர்பும், உட்சார்பும் கொண்டவையாகும். இயக்கத்தில் சிலவடிவங்கள் பிறவடிவங்களின் தோற்றத்துக்குக் காரணமாகின்றன.  பருப்பொருளின் இயக்கத்தின் ஒவ்வொரு வடிவமும் அதற்குரிய தனித்தன்மைக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு வடிவமும் தமது அடுத்த வடிவத்துக்குத் தேவைப்படுவதுடன் இணைந்து தகவமைத்துக் கொள்கிறது. இயக்கத்தை படைத்திட இயலாது, அதே நேரத்தில் அழித்திடவும் முடியாது.

        மனிதன் எண்ணிலடங்கா பொருட்களின் புலப்பாடுகளால் சூழப்பட்டுள்ளான். கண்ணுக்குத் தெரியும் பெரிய நட்சத்திரம் முதல், கண்ணுக்குத் தெரியாத அணுத்துகள் வரையிலான புலப்பாட்டின் தாக்கத்தில் இருக்கிறான்.

        பருப்பொருள் நம்மை சார்ந்து இல்லாமல் இருந்தாலும், நமது உணர்நிலையில்  பிரதிபலிக்கிறது. பிரபஞ்சத்தில் காணப்படும் பருப்பொருள் நமது  உணர்வுநிலையில்  பிரதிபலிக்கிறது என்பதில் தான் அதன் பொருளாயதத் தன்மை அடங்கியுள்ளது.

        சூனியத்திலிருந்து எதுவும் தோன்றுவதில்லை. அதே போல் எந்தப் பருப்பொருளும் எந்த சுவடுமின்றி மறைந்து போவதும் இல்லை என்பதை விஞ்ஞானம் உறுதிப்படுத்துகிறது. ஒன்றுமற்றதிலிருந்து பருப்பொருள் தோன்றவில்லை அதே போல் அது ஒன்றுமற்றதாய் மறைந்திடாமல் மற்றொன்றாய் மாறுகிறது. இவ்வகையில் பருப்பொருளின் அழியும் தன்மையை மறுத்து மாறும் தன்மையை சுட்டுகிறது. இவ்வாறு மார்க்சியத்தின் பருப்பொருள் பற்றிய கண்ணோட்டம், தெய்வீக சக்தியின் குறிக்கீட்டை மறுதலிக்கிறது. கடவுள், ஏதுமற்றதிலிருந்து இந்த பிரபஞ்சத்தை படைத்தார் என்று கூறுகின்ற கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்தை விஞ்ஞான அடிப்படையில் மார்க்சியம் இவ்வகையில் மறுக்கிறது.

        புத்தம்புது விஞ்ஞான கண்டுபிடிப்புகள் பருப்பொருள் பற்றிய அறிவை விரிவாக்கி ஆழப்படுத்தவே செய்கிறது. பருப்பொருளின் கட்டமைப்பு எவ்வகையினதாக இருந்தாலும், அதன் பிரதிபலிப்பு மனிதனுடைய அறிதலில் எவ்வகையான மாற்றம் ஏற்படுத்தினாலும், பருப்பொருள் என்பது புறநிலையிலான எதார்த்தம் என்பதை மறுக்க முடியாது.


விசும்பும் காலமும்
(Space and Time)

"எல்லா வாழ்நிலையின் அடிப்படை வடிவங்களும் விசும்பும்
காலமும் ஆகும். காலத்துக்குப் புறம்பாக வாழ்நிலை என்பது,
விசும்புக்குப் புறம்பான வாழ்நிலை என்பதன் அளவுக்குப்
படுமோசமான அபத்தமாகும்.."
         - எங்கெல்ஸ் (டூரிங்குக்கு மறுப்பு - பக்கம் 79)

பருப்பொருளின் இயக்கம் என்பது விசும்பிலும் காலத்திலும் (Space and Time) நடைபெறுகிறது. விசும்பு என்பது  பருப்பொருளின் இருத்தலையும், மற்ற பொருளுடன் கொண்டுள்ள உறவிலும் வெளிப்படுகிறது. காலம் என்பது பருப்பொருள் இருத்தலின் கால அளவிலும், அடுத்தடுத்து தொடர்கின்ற நிகழ்வின் கால வரிசையிலும் காணப்படுகிறது.

        பொதுவாக பருப்பொருள் நீளம், அகலம், உயரம் கொண்டதாக இருக்கிறது. அந்தப் பரிமாணம் எடுத்துக் கொள்ளும் இடத்தின் அடிப்படையில்தான் அப்பருப்பொருள் விசும்பில் இடம் பெறுகிறது. ஆக பருப்பொருள் இடத்தைத் தவிர வேறு வகையில் தம் இருப்பை  நிலைநிறுத்துவதில்லை. பருப்பொருள் அண்மையிலோ சேய்மையிலோ, இடதோ வலதோ, மேலோ கீழோ, காணப்படுகிற மற்றப் பொருட்களுடன் விசும்பில் இருக்கிறது. அதாவது பருப்பொருளின் தொடர்பென்பது விசும்பில் தான் நிகழ்கிறது.

        பிரபஞ்சத்தில் காணப்படும் பொருட்கள் யாவும்  தம்முள்ளும் பிற பொருட்களோடும் இயக்கத்திலும், மாற்றத்திலும், வளர்ச்சியை பெறுகிறது. இந்த இயக்கங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட தொடர் வரிசையில் நிகழ்கிறது. இந்த தொடர் நிகழ்வுகளினுடைய அளவுகளின் கணக்கீடு காலத்தில் நிகழ்கிறது.

        நிகழ்வுகள் காலத்திலும் விசும்பிலும் நடைபெறுவதால், விசும்பும், காலமும் பருப்பொருள் இருத்தலின் ஒருவகையினதாக வரையறுக்கப்படுகிறது.

        விசும்பின்றி காலமில்லை, காலமின்றி விசும்பில்லை என்ற வகையில் விசும்பும் காலமும் பிரிக்க முடியாத பிணைப்பில் உள்ளது.  விசும்பும் காலமும் பருப்பொருளுடன் தொடர்பும் இணைப்பும் மட்டும் கொண்டிருக்கவில்லை, அவையிரண்டும் பருப்பொருளைச் சார்ந்தும் இருக்கின்றது. அவைகள் பருப்பொருளின் இயக்கத்தாலும் அது மேற்கொள்ளும் வடிவத்தாலும்  நிர்ணயம் செய்யப்படுகின்றன.

        விசும்பும் காலமும் வரம்பற்றது என்பது இதன் அடிப்படைப் பண்பாகும். வெளிப் பார்வைக்கு இவையிரண்டும் வரம்பிற்குட்பட்டதாக தெரிகிறது. விசும்பும் காலமும் வரம்பிற்குட்பட்ட வடிவமாக தென்பட்டாலும், வரம்பற்றவையே ஆகும்.

        ஒரு பொருளுக்கும் மற்ற பொருட்களுக்கும் இடையே உள்ள உறவுகள், அப்பொருட்களைச் சுற்றிலும் நடைபெறும் உறவுகளோடு விசும்பின் உறவுகளாகின்றன. இந்த உறவுகள் எல்லையற்றது. இதன்படி எல்லைக்குட்பட்ட வடிவமாக இருந்துகொண்டே எல்லையற்ற நிலைக்கு விரிந்து சென்று வரம்பற்ற நிலையை வெளிப்படுத்துகிறது.

        இது காலத்துக்கும் பொருந்துகின்றது. குறிப்பிட்ட பொருளின் நிலைப்பாட்டின் தொடக்கமும் இறுதியும் இருக்கிறது. ஆனால் இதன் தொடக்கத்துக்கு முன்பே எண்ணிலடங்கா தொடர்ச்சிகள் இருந்து மறைந்துள்ளன. அதேபோல் குறிப்பிட்ட பொருளின் முடிவுக்கு பின்பும் தொடர்கிறது. ஆக இந்த தொடர் நிகழ்வுக்கு தொடக்கமும் இறுதியும் இல்லை. காலம் என்றென்றும் வரம்பின்றி நிலைத்திருக்கிறது.

        விசும்பிலும் காலத்திலும்  நிகழ்கின்ற மாற்றங்களில் இருந்தே இயற்கை பற்றி மிகவும் நம்பகமான விஞ்ஞான ஆராய்சி நடைபெற்று வருகிறது. பருப்பொருளின் செயற்பாடு அனைத்தும் விசும்பு காலம் என்ற இரண்டிலும் பிணைந்த வடிவில்தான் நடைபெறுகிறது. அதாவது விசும்புக்கும் காலத்துக்கும் இடையேயான உறவு பிரிக்க முடியாத தன்மையினதாகும். அதே போது விசும்பையும் காலத்தையும் பருப்பொருளிலிருந்து பிரிக்க முடியாது. பருப்பொருள் காலத்தில் நிலையானது என்பதோடு விசும்பில் எல்லையில்லாதது. பொருளாயத உலகிற்கு எல்லை என்பதில்லை.

        பருப்பொருள் காலத்தால் நிரந்திரமானது என்று ஏன் செல்லப்படுகிறது என்றால், அது சிதைந்து, ஒன்றுமில் மறைந்து போவதில்லை. அது மற்றொரு பொருளாக மாற்றம் பெறுகிறது. அதாவது பருப்பொருள் ஒன்றுமில்லாததிலிருந்து தோன்றுவதும் இல்லை, ஒன்றுமில்லாமல் மறைந்து போவதும் இல்லை. மாற்றம் என்பது மூலக்கூறுகளின்  சிதைவும் மற்ற புதிய பொருட்களுக்கான மூலக்கூறுகளின் சேர்ப்பையும் குறிக்கிறது.

        இந்த இயக்கவியல் பொருள்முதல்வாதக் கோட்பாட்டை இயற்கை விஞ்ஞானத்தின் புதுப்புது கண்டிபிடிப்புகள் மெய்ப்பித்து வருகின்றன.

உலகின் பொருளாயத ஒற்றுமை
(The material unity of the world)

"உலகின் உண்மையான ஒற்றுமை அதன் பொருளாயதத் தன்மையில்
அமைந்து இருக்கிறது, ஒருசில ஜாலவித்தைச் சொற்றொடர்களால்
இதை நிரூபிப்பிக்கப்படவில்லை, மாறாக தத்துவத்தின் மற்றும் இயற்கை
விஞ்ஞானத்தின் நீண்ட சலிப்பூட்டும் வளர்ச்சியேயாகும்"
                     - எங்கெல்ஸ் (டூரிங்குக்கு மறுப்பு - பக்கம் 67-68)

      பருப்பொருளுக்கு இடையேயான இயக்கங்களின் உறவுகள் பற்றிய அறிவு, பிரபஞ்சத்தின் பொருளாயத ஒற்றுமைக்கான தடத்தை நமக்கு வழங்குகிறது.

        ஆனால் கருத்துமுதல்வாதம் மற்றும் மதக் கண்ணோட்டங்கள் உலகின் ஒருமையை கடவுளின் சித்தத்தின்படி உருவானதாக்க் கூறுகின்றது. இக் கருத்தின்படி இந்தப் பிரஞ்சத்தை கடவுள் படைத்தார், அவரே இதன் அனைத்துவிதமான தொடர்பையும் வளர்ச்சியையும் நிர்ணயித்தார். இந்தக் கண்ணோட்டம் புறநிலை எதார்த்தத்தை மறுக்கவில்லை, இந்த எதார்த்தத்தை கடவுள் என்ற மேலான எதார்த்தத்துடன் ஒப்பிடும்போது இந்தப் பிரபஞ்சம் இரண்டாம் நிலையானதாகக் கருதுகின்றனர்.

இந்தக் கண்ணோட்டத்தின் சிந்தனைப் பள்ளியை சேர்ந்தவர்கள், இந்தியாவில் துவைதம் மற்றும் விசிட்டாத்வைதம் போன்றவர்கள். மேலை நாட்டில் ஹெகல் போன்றவர் இந்த வகையினைச் சேர்ந்த கருத்துமுதல்வாதியாவர்.

        மற்றொரு ஒருமை பேசுபவர்கள் இருக்கின்றனர். அவர்களை இந்தியாவில் அத்வைதிகள் எனப்படுவர். இவர்கள் மேலான பரம்பொருளின் இருப்பே மெய்யான எதார்த்தம். அதன் மாயையான பிரதிபிம்பமே இந்தப் பருப்பொருளாலான பிரபஞ்சம். அந்த பிரம்மமே சத்தியம். இந்தப் பிரபஞ்சம் மித் அதாவது மாயை.

இயற்கைக்கு அப்பாற்பட்ட பரமகருத்து அதாவது பிரம்மம்தான் உலகத்திற்குக் காரணம் என்று அத்வைதம் கருதுகிறது. கணக்கில்லா தோற்றங்களாகக் காட்சியளிக்கும் பிரபஞ்சம் முழுமைக்கும் அடிப்படையாய் இருப்பது இந்த ஒன்றே.  நாம் காணும் அனைத்தும், நாம் உணரும் அனைத்தும் இந்த ஒன்றே. இதனை  ஏகம் சத்  அதாவது அனைத்தும் இந்த ஒன்றே என்று விளக்குகிறது அத்வைதம்.

        நான்  என்னும் உணர்வில் உறைந்துள்ளது ஆத்மா.  நீ  என்று சொல்லும்போதும் அங்கே உறைந்துள்ளதும் அந்த ஆத்மாவே. அந்த நீ யாராக இருந்தாலும், இருப்பதென்பது இந்த ஒரே ஆத்மாவான பிரம்மமே. நீ என்பவற்றில் ஞானியோ, கொலைகாரனோ, ஆடோ, மாடோ, செடியோ, மரமோகூட இருக்கலாம். அனைத்தும் ஒன்றேயான ஆத்மாவே. அதாவது பன்மையாகக் காணும் இவையனைத்தும் பிரம்மத்தின் மாயையான வெளிப்பாடே என்கிறது அத்வைதம். இந்தச் சிந்தனைப் போக்குடைய மேலைய அறிஞர் பெர்கிலி பாதிரியார் ஆவார். இந்தியாவில் ஆதி சங்கரர், ரமணர், விவேகானந்தர் போன்றோராவர்.

        இந்தக் கருத்துமுதல்வாத மற்றும் மதக் கண்ணோட்டங்கள் எதார்த்த உலகைப் பற்றிய அறிவைப் பெறுவதற்கு உதவிடவில்லை. அறியாத ஒன்றிற்கு அறியாத இன்னொன்றை அதாவது கடவுள் சித்தம், பரம்பொருள் (பிரம்மம்) என்ற அறியாத மற்றொன்றை முன்வைக்கிறது.

        மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதம் இந்த புறநிலை - அகநிலை கருத்துமுதல்வாதிகளின் சிந்தனைகளை மறுத்து பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளாயத ஒற்றுமையை மட்டுமே உண்மை என்பதை நிறுவுகிறது. இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் பொருளாயத ஒற்றுமை இயற்கை, சமூகம் பற்றிய விஞ்ஞான வகைப்பட்ட ஒருமையை முன்வைக்கிறது.

        ஒரு பருப்பொருள் எப்படிப்பட்ட தனித்தன்மை பெற்றதாயினும், அது அனைத்துப் பருப்பொருளோடு பொருளாயதத் தன்மையில் இணைந்த ஒரு முழுமையான வெளிப்பாடாகவே மார்க்சியம் பார்க்கிறது.

        அப்பொருள் எவ்வித தனித்தன்மை பெற்றதாயினும், பிரபஞ்சத்தில் காணப்படும் பிற பருப்பொருளோடு பல லட்சம் கோடி இழைகளால் பிணைக்கப்பட்டே காணப்படுகிறது. இந்தப் பிணைப்பு ஒரே முழுமையானதாகவும், வளர்ச்சியின் போக்கை நிர்ணயிக்கக் கூடிய புறநிலை தொடர்புகளோடே காணப்படுகிறது.

        உலகத்தினுடைய ஒற்றுமையின் உண்மையை, அதன் பொருளாயதத் தன்மையிலும் உணர்வுநிலையிலிருந்து சுயேச்சையான புறநிலை இருப்பிலும் இயக்கவியல் பொருள்முதல்வாதம் காண்கிறது.

        அளவற்ற பொருட்கள் மற்றும் புலப்பாடுகளினால் மனிதன் சூழப்பட்டுள்ளான். இவையனைத்தும் குறிப்பிட்ட உறவுநிலையில் காணப்படுகிறது. ஒரு பொருள் மற்றொன்று, அத்துடன் வேறொன்று எனப் பொருட்களிடையே இணைப்பைப் பெற்றுள்ளது. இப்பொருட்கள் அனைத்தும் விசும்பிலும் காலத்திலும் இருக்கின்றன.

        நிகழ்வுகளின் தொடர்வரிசை, அதாவது மற்றவற்றுடன் ஏற்படும் தொடர்ச்சி, நடைபெறும் நிகழ்வுகள் ஆகியவை கால அளவைக் குறிக்கின்றன. உலகில் இயக்கம் என்பது, விசும்பு காலம் ஆகியவற்றின் ஊடே இணைந்தும் பிணைந்தும் ஒற்றுமையாய் நடைபெறுகிறது. விசும்பும், காலமும், பருப்பொருளில் இருந்து பிரித்தறிய முடியாத புறநிலையானது. இவற்றின் இயக்கம் ஒன்றோடொன்று தொடர்புகொண்டு ஒன்றிணைந்து இயங்குகிறது.

        ஒருமைவாதத்தின் உயர்ந்த முரணற்ற ஒரே வடிவம் இயக்கவியல் பொருள்முதல்வாதம் ஆகும். இயற்கை, சமூகம் இத்துடன் மனித உணர்வின் பலவிதமான நிகழ்வுகள் அனைத்தும், வளர்ச்சியடைந்து வருகின்ற பருப்பொருளின் உற்பத்திகளே.

        புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் உலகத்தின் பொருளாயத ஒற்றுமையை உறுதிப்படுத்துகின்றன. உலகத்தின் பொருளாயத ஒற்றுமை என்பது பொருட்கள் மற்றும் நிகழ்வுகளின் இடைத் தொடர்பில் இருக்கிறது. பூமிக்கும் வானத்துக்கும் ஈர்ப்புச் சக்தியின் விசை, சக்தியின் வேறுபட்ட வடிவங்களின் பரிமாற்றம், வேதியல் மூலகங்கள் உருமாற்றம் அடைதல், தாவர உலகத்துக்கும் விலங்கின உலகத்துக்கும் உள்ள ஒற்றுமை, இயற்கைக்கும் சமூகத்திற்கும் இடையேயுள்ள உறவு, ஆகியவற்றை இயக்கவியல் பொருள்முதல்வாதம் அறிந்து கொண்டுள்ளது. எனவே, இயற்கை மற்றும் சமூக சக்திகளை அனுசரித்து அவற்றை மனித சமூகத்திற்குச் சேவை புரிவதை சாத்தியமாக்குகிறது.

உணர்வுநிலை
(Consciousness)

"சமூக வரலாற்றில் செயல்படுவோர் அனைவரும்
உணர்வுநிலையினைக் கைவரப்பெற்று, ஆழ்ந்த சிந்தனை அல்லது
மனவெழுச்சியுடன் திட்டவட்டமான குறிக்கோள்களை நோக்கிச்
செயலாற்றுகிற மனிதர்களாவர். உணர்வுவழியிலான ஒரு நோக்கம்
இல்லாமல், திட்டமிட்ட ஒரு குறிக்கோள் இல்லாமல் சமுதாயத்தில்
எதுவும் நிகழ்வதில்லை."
எங்கெல்ஸ்-(லுத்விக்  ஃபாயர்பாகும் செம்மை ஜெர்மன் தத்துவத்தின் முடிவும்)

      மனிதன், உணர்வுநிலை (Consciousness) என்ற மேலான ஒன்றை பெற்றிருக்கிறான். இந்த உணர்வுநிலையைக் கொண்டே தனது செயற்பாட்டின் குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்கிறான். அடையவேண்டும் என்ற குறிக்கோளை அவன் எதன் அடிப்படையில் உருவாக்கிக் கொள்கிறான் என்பதில்தான் உணர்வுநிலை பற்றி அறிவதில் அனைவருக்கும் நாட்டம் ஏற்படுகிறது.

        இங்கு நாம் இயக்கவியல் பொருள்முதல்வாதம் உணர்வுநிலையின் தோற்றம் எதில் காண்கிறது என்பதை பார்ப்போம்.

        விலங்கினம் தமது உயிர்த் தேவையை நிறைவேற்றுவதற்காக இயற்கையில் கிடைத்திடும் காய், கனிகளைப் தமது கைகளால் பறித்து உண்கிறது. இவ்விலங்கினங்களில் குறிப்பிட்ட வளர்ச்சியடைந்த மனிதக் குரங்குகள் தமக்கு தேவைப்படும் இயற்கைப் பொருட்களை பெறுவதற்கு, கற்கள், நீண்ட குச்சிகள், தடித்த கம்புகளைப் பயன்படுத்தத் தொடங்கின. பின்பு இந்தக் கருவிகளை தம்மைப் பாதுகாப்பதற்குப் பயன்படுத்திக் கொண்டன.

        கைக்கருவிகளைப் பயன்படுத்திக் கொள்ளும் பழக்கம், விலங்கின வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதுவரை இயற்கையோடு நேரடியான தொடர்பில் மட்டும் இருந்த மனித இனம், இதன்பிறகு கருவிகளின் உதவியால் தொடர்பினை வலுப்படுத்திக் கொண்டது. இந்நிலையில் அன்றைய மனித சமூகத்துக்கு கிட்டிய உணவின் அளவுகளின் கூடுதல், அவற்றின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

        இதன் தொடர்ச்சியாக தமக்கு தேவைப்படும், இயற்கைப் பொருட்களின் தன்மைக்கு ஏற்ப தனது கைக்கருவிகளை அமைத்துக் கொள்ளும் மறுவினை நிலையைப் பெற்றன. படிப்படியாக மறுவினை என்ற நிலையில் இருந்து உணர்வுநிலையினை அடைந்தது. அதாவது குறிப்பிட்ட வடிவமைக்கப்பட்ட கைக்கருவிகள் உற்பத்திக் கருவிகளாக மாற்றம் பெற்று, இயற்கையை தமக்கானதாக மாற்றுவதின் நோக்கம் கொண்டதான உணர்வுநிலை செயற்பாடாக படிப்படியான வளர்ச்சியில் மாற்றம் பெற்றது.

        இந்த செயற்பாடு விலங்கினத்திலிருந்து விடுபட்டுக் கொண்டிருக்கும் மனிதக்குரங்கின் நிலையிலிருந்து, மனித இன நிலையினைத் தொட்டன.  இப்படி வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் நிலையில், தொடக்க கால மனித இனம், தமக்கு வேண்டிய பொருளை, தமது கைகருவிகளின் மூலம் அடைகின்ற பொழுது, தமது செயற்பாடு பொருளறிந்த வழியில் உணர்வுபூர்வமானதாக நிகழ்வதை உறுதி செய்தது.

        இவ்வாறு விலங்கினத்திலிருந்து மனிதனாக மாறுகின்ற போது கருவிகளைப் பயன்படுத்திய வழியில் உணர்வுநிலை தோன்றியதாக மார்க்சியம் விவரிக்கிறது.

        மனிதன், உணர்வுநிலையைக் கொண்டே உலகைப் பற்றிய அறிவைப் பெறுகிறான். தம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை உணருகிறான். உணர்வுநிலை என்பது மூளையின் சாதாரணப் பண்பல்ல, பொருளாயத உலகத்தோடு ஏற்படுகின்ற பரஸ்பர செயல்பாடுள்ள மூளையின் பண்பாகும். இவை புறநிலை உலகின் அகநிலைப் பிரதிபலிப்பாகும்.

        எதார்த்த உலகத்தை பிரதிபலிக்கும் தன்மையைப் பெற்றுள்ள மூளையின் திறம் என்பது பருப்பொருளுடன் அதற்குள்ள உறவின் கால வளர்ச்சியின் விளைபயனேயாகும்.

        புறநிலையின் பிரதிபலிப்பு என்பதை அகநிலையில் அப்படியே படியும் பிம்பமாகப் புரிந்து கொள்ளக் கூடாது. கல்வியின் தெளிவு, படைப்புத் திறமை ஆகியவை ஒரு நபர் பெற்றிருக்கவில்லை என்றால் இப்பிரதிபலிப்பு சரியானதாக இருக்காது. அந்த நபருக்கு பொருட்களை ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் கண்டுணருவதற்கு படைப்புத் திறமை அவசியமானதாகும். இவற்றில் காணப்படும் குறைபாடு பிரதிபலிப்பில் பிரதிபலிக்கவே செய்யும்

        தன்னைச் சுற்றி நடைபெறுவதை நோக்கியபோது தோன்றும் விழிப்புநிலையே உணர்வுநிலையின் தன்மையைக் காட்டுகிறது. மனிதன் தனது சொந்த வாழ்நிலையில், தனது இருத்தலை உணர்ந்து, வெளியுலகில் இருந்து தன்னைப் பிரித்துக் கொண்டு அதன்மீது தன்னுடைய செயற்பாட்டை தீர்மானிக்கும் போது உணர்வுநிலை தோன்றுகிறது.

        இந்த விழிப்பு என்ற பிரதிபலிப்பின் பண்பு மனிதனிடத்தில் மட்டுமே காணக்கூடியதாகும். அதனால்தான் மனிதன் சமூகத்தில் செயல்படுபவனாகவும் அதனை மாற்றுபவனாகவும் இருக்கிறான்.

        நினைவற்ற நிலையில் இருப்பவன் அல்லது ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பவன் அவனது பக்கத்தில் நிகழ்வனவற்றை உணராது உணர்வற்றவனாகவே இருப்பான். புறநிலையிலிருந்து எந்த தூண்டுதலையும் பெறாததால் அவனிடம் உணர்வுநிலையோ எண்ணங்களோ உண்டாவதில்லை.  ஆனால் தெருவில் நடந்துகொண்டிருக்கும்போது பக்கத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் அந்த நபர் தமது செவிகளால் அதனை உணருகிறார். அந்த நபருக்கு துப்பாக்கியின் வெடித்தல் என்பது வெறும் சத்தமாக மட்டும் அறிந்து கொள்ளப்படுவதில்லை. சாலையில் ஏற்பட்ட இந்த துப்பாக்கியின் சத்தத்தை தன் செவியால் உணர்ந்தவுடன், தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு பாதுகாப்பான இடத்தைத் தேடி ஒளிந்து கொள்கிறான். இந்த துப்பாக்கிச் சண்டை யாருக்கு இடையே நிகழ்கிறது. இதனோடு அண்மையில் ஏற்பட்ட இது போன்ற துப்பாக்கிச் சண்டைகள், அது பற்றிய நினைவுகள் போன்றவற்றின் துணையோடு -விழிப்புணர்வோடு -உணர்வுநிலையோடு செயற்படுகிறான். ஆக புலனுணர்வுகளால் உணராத போது மனிதனிடம் சிந்தனைகள் தோன்றுவதில்லை புலனுணர்வு, புலனறிவு, கருத்தாக்கங்கள் ஆகியவை தோன்றி செழுமைப்படுத்துவதின் மூலமே சிந்தனைகள் தோன்றுகின்றன.

        மனிதனது உணர்வுநிலையை எதார்த்த உலகின் நேரடிப் பிரதிபலிப்பாக புரிந்து கொள்ளக் கூடாது. மனிதனது ஒப்பீட்டுத் தன்மையும் இதில் அடங்கியிருக்கிறது. பொருள் உற்பத்தி, பகிர்வு, வினியோகம் போன்ற உற்பத்தி உறவுகளின் சார்பில், சமூகம் பற்றிய உணர்வுநிலை தோன்றுகிறது.

        மனிதன் தனது குறிக்கோள்களை தமது உணர்வுநிலையினால் நிர்ணயிக்கிறான், இந்த உணர்வுநிலையினதான விழிப்புணர்வு என்பது அவன் ஈடுபடுகின்ற உற்பத்தியின்போது ஏற்படுகின்ற உற்பத்தி உறவுகளால் உருவாகிறது. கருத்தாக்கம் என்பது அந்தந்த காலத்திய உற்பத்தி சக்திகளை பயன்படுத்தும்போது மனிதர்களிடையே ஏற்படுகிற உற்பத்தி உறவுகளால்தான்  தோற்றம் பெறுகிறது. இதனைக் கடந்த காலத்தை ஆராயும்போதும், எதிர்காலத்தை முன்னோக்கி பார்க்கின்றபோதும் அறிந்து கொள்ள முடிகிறது.

உயர்வாக ஒழுங்கமைக்கப்பட்ட பருப்பொருளின் பண்பே உணர்வுநிலை. அதாவது புறநிலையான பருப்பொருளின் இயக்கவியல் வகைப்பட்ட பொருளாயத்தின் பிரதிபலிப்பே உணர்வுநிலை. இதன் துணையோடு மனிதன் எதார்த்த உலகத்தை அறிவதோடு மாற்றுவதற்கான செயற்பாட்டையும் அமைத்துக்கொள்கிறான்.

அறிவுத் தோற்றுவாய்
(Origin of knowledge)

"நமக்கு வெளியே பொருட்கள் இருக்கின்றன. நம் புலனறிவுக்
காட்சிகளும் கருத்துக்களும் அவற்றின் பிம்பங்கள். இந்த
பிம்பங்களைச் சரிபார்த்தலை, உண்மையான மற்றும் போலியான
பிம்பங்களுக்கு இடையில் வேறுபடுத்திக் காண்பதை
நடைமுறை நிறைவேற்றுகிறது."
லெனின் -(பொருள்முதுல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்)

உலகை அறிந்து கொள்ள முடியுமா?  மனிதனின் சிந்தனை உண்மையை அறிந்து கொள்ளும் திறமையினை பெற்றுள்ளதா? இவை தத்துவத் தேடலில் முக்கியமான கேள்விகளாகும்.

இக்கேள்விகளுக்கு நேர்மறையான பதிலை இயக்கவியல் பொருள்முதல்வாதம் அளிக்கிறது. உலகை அறிந்துகொள்ள முடியும். மனிதனது  அறிவு புறநிலை உண்மையை சரியாக பிரதிபலிக்கிறது என்று இயக்கவியல் பொருள்முதல்வாதம் கூறுகிறது.

மனிதனைச் சுற்றியுள்ள உலகமே அவனது அறிதலுக்கான தோற்றுவாயாகும். இந்தப் புறநிலைமைகள் மனிதனிடம் தாக்கம் செலுத்துகிறது. இந்த தாக்கத்தை மனிதன் சோதித்து பார்த்து அறிந்து கொள்கிறான். சோதித்ததில் தவறானவற்றை சரிப்படுத்துகிறான், சரியானவற்றில் தொடர்கிறான்

அறிதல் என்பது எளிமையான பிரதிபலிப்பல்ல. அது ஒரு சிக்கலான நிகழ்வாகும். முழுமையற்றதில் இருந்து துல்லியமானதை நோக்கியும், அறியாமையில் இருந்து அறிவை நோக்கியும் பயணித்து உண்மையை அடைகிறது.

மனித அறிதலின் நோக்கம் நடைமுறையேயாகும். உலகின் வளர்ச்சியின்  விதிகளைப் புரிந்து கொள்வது, தன்னுடைய நடைமுறையில் அந்த அறிதலின் விளைவைப் பயன்படுத்திக் கொள்வதற்கேயாகும்.

அறிதல் என்பது மூளையில், எதார்தத்தினுடைய பருப்பொருட்கள் மற்றும் புலப்பாடுகளின்  பிரதிபலிப்பேயாகும். இவை புறநிலை உலகின் அகநிலைப் பிரதிபலிப்பாகும்.

அறிதல் என்பது மூளையின் தனிப்பட்ட செயல் அல்ல. பொருளாயத உலகுடன் பரஸ்பர வினையினால் உருவான மூளையின் செயற்பாடாகும். மனிதன் சுற்றியுள்ள உலகத்தை எந்தளவுக்கு மாற்றக் கற்றுக் கொண்டானோ அந்தளவுக்கு அவனது அறிவு வளர்ச்சி பெறுகிறது.

மனித அறிதல், சமூக வளர்ச்சியின் விளைவாகவும், மனிதன் தன்னைச் சுற்றியுள்ள உலகத்தை மாற்றி அமைத்திடும்போது ஏற்படும் பயனுமாகும். உலகம் எல்லையற்றது, அதனால் மனிதனது அறிதலும் முடிவற்றது.

அறிதல் செயற்பாடு இரண்டு நிலைகளில் நடைபெறுகிறது. 1.புலனுணர்ச்சி (Sensation), 2.புலனறிவு (Perception).

பொருளாயத உலகைப் பற்றி, தொட்டறியக் கூடிய உறுப்புகளின் மூலம் தெரிந்து கொள்வதை இந்த புலனுணர்ச்சி குறிக்கிறது. புலனுணர்ச்சியால்  கிடைக்கப்ப பெற்றவைகள், சொந்த அனுபவத்தால் அதாவது நடைமுறையால் பலமுறை சோதித்து சரிபடுத்தப்படுகிறது. இதன் அடிப்படையில் இயக்கவியல் பொருள்முதல்வாதம் எதார்த்தத்தை புலனுணர்ச்சிகள் சரியாகப்  பிரதிபலிக்கின்றன என்ற முடிவிற்கு வருகிறது.

அறிதலின் இரண்டாம் நிலை புலனறிவு ஆகும். இது சிக்கல் நிறைந்த அறிதல் முறையாகும். ஒரு பொருளைப் பற்றி, ஒவ்வொரு புலனுறுப்புகளும் தனித்தனியான தன்மைகளை மட்டுமே தருகின்றன. இவற்றை ஒரு முழுமையான ஒன்றாகத் திரட்டுகின்ற செயற்பாடே புலனறிவு எனப்படும்.

புலனறிவு, தனித்தனி புலனுணர்வால் அறிந்தவற்றை திட்டவட்டமான ஒன்றாய் அறிந்திட உதவுகிறது. அதாவது புலன்களால் அறியப்பட்டவைகளை ஒன்றாக்கித் தொகுத்து முழுமையாகப் பிரதிபலித்துக் காட்டுகிறது.


மனிதனின் அறிதல் உணர்வுக் கட்டத்திலேயே நின்றுவிடுவதில்லை. உணரப்பட்டவைகளில் இருந்து எண்ணம், சிந்தனை, கருத்தாக்கங்கள் தோன்றுகிறது.

புலனுறுப்பால் அறியப்பட்டவைகளை மீண்டும் மீண்டும் தோன்றச் செய்கிறது. அவ்வாறு தோற்றம் பெறுவதே எண்ணம் எனப்படுகிறது. அதாவது நினைவில் வைத்துள்ள பொருட்களின் தோற்றங்களை ஒப்பிட்டு, சீர்தூக்கி, பகுத்தாராய்ந்து பொதுமைப்படுத்தப்படுவதே எண்ணம் என்று அழைக்கப்படுகிறது.

புலனுறுப்புகளால் அறியப்பட்ட விவரங்கள் பகுத்தாராயப்பெற்ற எண்ணங்களால் சிந்தனை உருவாகிறது.

சமூகத்துக்கும், மொழிக்கும் அப்பால் சிந்தனை தோன்ற முடியாது. புலன்களால் திரட்டப்பட்ட  விவரங்கள் மொழியின் வழியிலேயே பொதுமைப்படுத்தப்பட்டு எண்ணமாக, சிந்தனையாக மாற்றப்படுகிறது. மொழி இல்லாது போனால் பொதுமைப்படுத்துகிற நிகழ்வை நிறைவேற்ற முடியாது. இவ்வகையில் சிந்தனையும் மொழியும் இணைந்திருக்கின்றன.

தொலைக்காட்சிச் செய்தியில் இந்த ஆண்டு மழை பெய்ய வாய்ப்பு குறைவு என்று கூறப்படுவதை வீட்டில் இருந்தவாறு ஒருவன் கேட்கிறான். இந்த மழையைப் பற்றி  பிறரிடம் பேசவும் செய்கிறான். ஆனால் மழையோ, மழையினால் உண்டான மண்வாசனையோ, அதன் குளிர்ச்சியோ அவனிடத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, என்றாலும் எதுபற்றி பேசப்படுகிறது என்பதை அவன் புரிந்து கொள்கிறான். இங்கு குறிப்பிடுகின்ற மழை என்ற சொல் எப்படி அவனிடம் தாக்கத்தை ஏற்படுத்தி சிந்தனையை தோற்றுவிக்கிறது என்று ஆராய்ந்து பார்ப்போம்.

மக்கள் பல ஆயிரமாண்டுகளாக வரலாற்றில் தமது நடைமுறையில் மழையைப் பலமுறை பார்த்து இதைப் பற்றி ஒரு கருத்தாக்கத்தை பெற்று இது மழை என்ற சொல்லோடு இணைத்துப் புரிந்துவைத்துள்ளனர். மொழியைக் கற்கும் போது நமக்கு முன்னர் வாழ்ந்த தலைமுறைகளால் சேகரித்து வைக்கப்பட்ட அறிவை மொழியின் வழியில் பெறுகிறோம்.

புலனறிவு, எண்ணங்கள், சிந்தனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் கருத்தாக்கம் (Concept)  உருவாகிறது. இந்தக் கருத்தாக்கத்தின் உள்ளடக்கத்தை துல்லியமான வடிவத்தில் கற்பனை செய்து பார்க்க முடியாது. எடுத்துக்காட்டாக ஒரு மாமரம் என்பதைக் கற்பனையில் கொண்டுவர முடியும். ஆனால் மரம் என்பதைக் கற்பனையில் பார்க்க முடியாது. ஆனால் அவற்றைப் புரிந்து கொள்ள முடியும். அவற்றைப் பற்றிய கருத்தாக்கத்தை உருவாக்க முடியும்.

கருத்தாக்கத்தை, புலனறிவு, எண்ணம், சிந்தனை ஆகியவற்றின் மொத்தம் என்று எளிமையாகப் புரிந்து கொள்ளக்கூடாது. அது  சிக்கலான, நீடித்த செயல் முறையின் விளைவாகும். ஏராளமான தனித்தனி நிகழ்ச்சிகள் பொதுவான, முக்கியமான, அவசியமான புறநிலைத் தொடர்புகளால் உருவாகின்றன.

புலனுறுப்புகள் சரியான தகவல்களை அளிக்கின்றனவா? புறநிலையில் இருந்து பெறுகின்ற தகவல்களைக் புரிந்து கொள்ளும்போது திரிபுகள் சாத்தியமா?

அறிதல் நிகழ்முறையின்படி பெறுகின்ற அறிவு நடைமுறையில் மெய்ப்பிக்கப்பட்ட பிறகுதான் உண்மை என்று முடிவெடுக்கப்படுகிறது. பெற்ற அறிவைக் கொண்டு செயல்படும்போது நடைமுறையில் பொருத்த மற்றது உண்மைக்கு மாறானதாகிறது, பொருத்தமானது உண்மையாகிறது.

உண்மையைப் பற்றிய மார்க்சியக் கோட்பாடு
(The Marxist Theory of Truth)

"பொருள்முதல்வாதிக்கும், கருத்துமுதல்வாதத் தத்துவஞான
ஆதரவாளருக்கும் இடையில் அடிப்படையான வேறுபாடு
பொருள்முதல்வாதி புலனுணர்ச்சி, புலனறிவுக்காட்சி,
கருத்து மற்றும் பொதுவாக மனிதனுடைய உணர்வுநிலை
புறநிலையான எதார்த்தத்தின் பிம்பம் என்று கருதுகிறார்கள்
என்ற உண்மையில் அடங்கியிருக்கிறது. நம்முடைய
உணர்வுநிலையினால் பிரதிக்கப்படுகின்ற இப்புறநிலை எதார்த்தத்தின்
இயக்கமே உலகம். கருத்துக்கள், புனறிவுக் காட்சிகள்,
இதரவற்றின் இயக்கத்துடன் எனக்கு வெளியே இருக்கின்ற
பருப்பொருளின் இயக்கம் பொருந்துகிறது"
லெனின் - (பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்)

விஞ்ஞான அறிதலின் நோக்கமே உண்மையை புரிந்து செயற்படுவதற்கே ஆகும். இங்கு உண்மை என்பதை முழுமுதலான அதாவது  நிரந்தரமான உண்மை என்று எதையும் குறிப்பிடவில்லை. நிரந்தர, அறுதியான, புனிதமான, மாறாத உண்மை என்ற ஒன்று எங்கும் கிடையாது.

அப்படி என்றால் மார்க்சியம் உண்மை என்று எதைக் குறிப்பிடுகிறது.
               
புறநிலை எதார்த்தத்தை பிழையின்றி சரியாக பிரதிபலித்தல், புறநிலையில் இருக்கின்றபடியே கருத்தாக்கமாக உணர்வில் மீண்டும் உண்டாக்குதல் என்பதே உண்மையாகும். அதாவது எதார்த்தத்துடன் பொருந்துகின்ற புறநிலை உலகத்தைப் பற்றிய அறிவே உண்மை என்று இயக்கவியல் பொருள்முதல்வாதம் கூறுகிறது.

இதனை வேறுவிதமாக் கூறினால், புறநிலையாக இருக்கும் எதார்த்தத்தை, உணர்வில் கருத்தாக்கமாக பிரதிபலிப்பதே உண்மை எனப்படுகிறது.

இந்த உண்மை என்பது நமக்கு புறநிலையாக, நம்மைச் சார்ந்திராமல் சுயேச்சையாக இருக்கிறது. அதனால்தான் உண்மையினை புறநிலை உண்மை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

புறநிலை எதார்த்தம் மாறாமல் இருப்பதில்லை, அதனால் புறநிலை உண்மை என்பதும் மாறாதிருப்பதில்லை.

புறநிலை உண்மையை எவ்வாறு மனிதன் அறிந்து கொள்கிறான்? மனிதனின் எண்ணங்கள், சிந்தனைகள், கருத்தாக்கங்கள் புறநிலையை முழுமையாக வெளிப்படுத்துகிறதா? அரைகுறையாக வெளிப்படுத்துகிறதா?

இதற்கான விடையை அறுதி உண்மை, ஒப்பீட்டு உண்மை என்ற வகைப்பிரிவு நமக்கு பதில் அளிக்கிறது.

அறிதலின் வளர்ச்சி நிகழ்முறையில் ஏற்கெனவே அறிந்தவற்றுக்கும், இனிமேல் அறியப்போகிறவற்றுக்கும் இடையே உள்ள வேறுபாட்டின் வழியில் அறுதி உண்மை என்பதையும், ஒப்பீட்டு உண்மை என்பதையும் அறிந்து கொள்ளலாம். அறிதலின் மட்டத்தில் சரிப்படுத்த முடியாத அதாவது மாற்ற முடியாத நிலைக்கும், மாற்றம் ஏற்படப் போவதற்கும் அதாவது மாறிக் கொண்டிருப்பதற்கும் இடையேயுள்ள தொடர்பின் அடிப்படையில் உண்மையானது, அறுதியானது மற்றும் ஒப்பீடானது என்று வகைப்படுத்தப்படுகிறது.

அறுதி உண்மை என்பது எதார்த்தத்தின் முற்றிலும் முழுமையான உள்ளடகத்தின் பிரதிபலிப்பாகும். எதார்த்தத்தின்  சில தன்மைகளையும், அவற்றுக்கிடையே இருக்கின்ற உறவுகளையும் சரியாகப் பிரதிபலிப்பதால் அது அறுதியானது. இந்த அறுதி உண்மையை எதிர்காலத்தில் நிராகரிக்கவும் முடியாது.

                ஓப்பீட்டு உண்மை என்பது நிறைவற்றது,  முழுநிறைவைப் பெற்றிராத அரைகுறையானது, கிட்டத்தட்ட சரியானது. கிட்டத்தட்ட சரியானது என்று கூறுவதின் பொருள், அது இன்னும் நிறைவற்றதாக இருப்பதனாலாகும். மேலும் துல்லியப்படுத்தி திருத்தப்பட்டு நிறைவாக்கப்படுவதற்கு, வரலாற்று வழியிலும், கால வரம்புக்கு உட்பட்ட தன்மையிலும் அதற்கு அவகாசம் தேவைப்படுகிறது.

இப்படிச் சொல்வதால், ஒப்பீட்டு உண்மையை அறுதி உண்மைக்கு எதிராக திருப்பிவிடக் கூடாது. குறையான அறிவிலிருந்தே துல்லியமான அறிவை நோக்கிய முன்னேற்றம் நடைபெறுகிறது. அறுதி உண்மையின் பயணத்தில் ஒரு கட்டமே ஒப்பீட்டு உண்மை.

அறிவு என்பதை எதார்த்தத்தோடு பொருந்துவதையே இயக்கவியல் பொருள்முதல்வாதம் சுட்டுகிறது. எதார்த்தம் மாறுதல் அடைகின்றபோது அதைப் பற்றிய அறிவும் அதற்கு ஏற்ப மாற்றம் அடையும். உண்மை என்பது சூக்குமமானதாக இருப்பதில்லை, எப்போதும் அது தூலமானதே.

சுற்றியுள்ள எதார்த்தம் முடிவற்றது, இடையறாத இயக்கத்திலும் வளர்ச்சியிலும் காணப்படுகிறது. ஒப்பீட்டு உண்மைகளின் மொத்தத்தின் செல்வழியில் அறுதி உண்மையை நோக்கி இடையறாத, முடிவற்ற நெருக்கத்தின் செயல் முறையாக அறிதல் நிகழ்முறை நடைபெறுகிறது.

இந்த அடிப்படையில், தயாரான, நிலையான, முழுமையான, எல்லா நிலைகளிலும் சரியான, இறுதியான முடிவை வழங்க எந்த சித்தாந்தத்தினாலும் முடியாது என்கிறது இயக்கவியல் பொருள்முதல்வாதம். ஆனால் மனிதனின் அறிதலின் வாய்ப்புகள் வரம்பற்றதும், அறிதல் என்பது முடிவின்றி தொடர்ந்து செல்லும் செயல்முறையாகவும் பார்க்கிறது.

அந்தந்த வரலாற்றுக் கட்டத்தில் வளர்ச்சியடைந்துள்ள உற்பத்திச் சக்திகளின் அளவே மனிதர்களின் அறிவை தீர்மானிக்கிறது, எதார்த்த உலகம் மாறிக் கொண்டே இருப்பதனால் அறிவை முடிவற்றது என்கிறது இயக்கவியல் பொருள்முதல்வாதம்.

மனிதர்களின் நடைமுறை என்பது பொருள் உற்பத்தி நிகழ்வுகளைக் குறிக்கிறது. இதனோடே சமூக அரசியல், வர்க்கங்களின் தோற்றம் மாற்றம் ஆகியவை நிகழ்கிறது. மனிதர்களின் சமூக நடைமுறையே அறிதலின் தொடக்கப் புள்ளியாகவும் அடிப்படையாகவும் இருக்கிறது. அதவாது உற்பத்திச் செயற்பாடுகளின் காரணமாகவே அறிதலின் தோற்றமும் மாற்றமும் நிகழ்கிறது.

அறிதல் என்ற நிகழ்ச்சிப் போக்கு சிக்கலும், முரண்பாடும் கொண்டதாகும். அதனால் மனித அறிவு எதார்த்தத்திலிருந்து விலகுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.

நடைமுறையையும், தத்துவத்தையும் இணைத்தே பார்க்க வேண்டும். ஏனென்றால் தத்துவம் சமூக நடைமுறையில் இருந்து தோன்றுகிறது, வளர்கிறது. பின்பு அதுவே சமூகத்தை மாற்றியமைக்கும் வலுவான சக்தியாக உருப்பெறுகிறது. சமூகத்தில் பலகாலமாக காணப்படும் பின்தங்கிய நிலைமைகளை தூக்கியெறிவதற்கும், புதிய சமூகத்தைத் தோற்றுவிக்கவும் - தேவைப்படும் நடைமுறையையும், செயல்படுத்தும் கருவிகளையும் தத்துவம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

6 comments:

  1. தோழர் அருமை,

    மாரிசுகாரன் போர்த் ஐ சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் உள்வாங்குகிறேன்.


    அனைத்து பதிவுகளும் பயனுள்ளவை, கம்யூனிஸ்ட்களுக்கு இப்பதிவுகள் ஒரு புத்தாக்கம் தரும்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அது போன்ற பல நூல்களைப் படித்து எனது புரிதலையும் சேர்த்து எழுதுகிறேன். அவ்வளவே எனது பணி

      Delete
  2. தோழர் இயக்கவியல் பொருள்முதல்வாதம் எளிமையாக தந்துள்ளிர்கள். உங்கள் படைப்புகள் எங்களைப் போன்ற இளம் வளரும் மாக்சியவாதிகளுக்கு எளிய மாக்சிய கையேடாக விளங்குகிறது. இதில் உணர்வுநிலை, இயக்கவியல், இயக்கவியல் வகையினங்கள் பற்றிய விளக்கங்கள் மிக அருமை. உங்கள் பணி சிறக்க எங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இதில் வெளியிடப்பட்ட கட்டுரை நான் வெளியிட இருக்கும் நூலின் பகுதி தான். இந்த கட்டுரையில் ஏற்படுகின்ற புரியாப் பகுதியை குறிப்பிட்டால் அதற்கு விளக்கம் கொடுக்க முயற்சிக்கிறேன்

      Delete
  3. இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்பது ஒரு தத்துவக் கண்ணோட்டமாகும், இது பொருளின் முக்கியத்துவத்தை இருத்தலின் அடிப்படையாகவும், பிரபஞ்சத்தின் வளர்ச்சி மற்றும் பரிணாமத்திற்கு உந்து சக்தியாகவும் வலியுறுத்துகிறது. இந்த முன்னோக்கு பொருள்முதல்வாதத்தின் பரந்த கட்டமைப்பில் வேரூன்றியுள்ளது, இது பொருள் உலகம் அடிப்படையானது என்றும் அனைத்து நிகழ்வுகளும் இறுதியில் இயற்பியல் செயல்முறைகளால் விளக்கப்படலாம் என்றும் வலியுறுத்துகிறது.

    இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் படி, பொருள் நிலையானது அல்ல, ஆனால் நிலையான இயக்கம் மற்றும் மாற்றம். பொருள் அடிப்படைக் கூறுகளுக்குக் குறைக்கப்படாது என்பதை இது அங்கீகரிக்கிறது, ஏனெனில் எப்போதும் புதிய பண்புகள் மற்றும் அம்சங்கள் கண்டறியப்படலாம். பொருளின் புறநிலை யதார்த்தம் மனித உணர்வு மற்றும் உணர்விலிருந்து சுயாதீனமாக உள்ளது.

    இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் ஒரு முக்கிய அம்சம் பிரதிபலிப்பு என்ற கருத்து. நமது உணர்வு உறுப்புகளில் பொருள் உலகின் தாக்கம் நாம் உணரும் மற்றும் புரிந்துகொள்ளும் பிரதிபலிப்புகளை உருவாக்குகிறது. இந்த பிரதிபலிப்புகளில் நாம் சந்திக்கும் பொருள்கள் மற்றும் நிகழ்வுகளின் பொருள் அடங்கும். இருப்பினும், முந்தைய பொருள்முதல்வாத தத்துவங்களைப் போலல்லாமல், இயக்கவியல் பொருள்முதல்வாதம் வெறும் பொருள்களை புலன்கள் மூலம் அறியப்படும் உறுதியான வடிவங்களாகக் கருதுவதைத் தாண்டியது. இந்த புறநிலை இருப்புகளைப் புரிந்துகொள்ளவும் வெளிப்படுத்தவும் அறிவியலின் அறிவியல் கருவிகள் நமக்கு உதவும் என்று அது அறிவுறுத்துகிறது.

    பொருளின் எல்லையற்ற தன்மை இயக்கவியல் பொருள்முதல்வாதத்திலும் வலியுறுத்தப்படுகிறது. பிரபஞ்சம் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி நமக்குத் தெரியாத பல விஷயங்கள் இன்னும் உள்ளன என்பதை இது ஒப்புக்கொள்கிறது. இருப்பினும், இந்த அறியப்படாத அம்சங்கள் இயல்பாகவே அறிய முடியாதவை என்றும், தொடர்ந்து அறிவியல் ஆய்வு மற்றும் புரிதல் அவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டலாம் என்றும் வலியுறுத்துகிறது.

    இயக்கவியல் பொருள்முதல்வாதம் பரந்த மார்க்சிய தத்துவத்துடன் ஒத்துப்போகிறது, இது சடவாதத்தையும் யதார்த்தத்தின் புறநிலை தன்மையையும் வலியுறுத்துகிறது. இது இலட்சியவாதத்தை நிராகரிக்கிறது மற்றும் மனித சமூகம் மற்றும் வரலாற்றை வடிவமைப்பதில் பொருள் நிலைமைகளின் முதன்மையை வாதிடுகிறது.

    ReplyDelete
  4. பொருள் மற்றும் இயக்கத்தின் கருப்பொருள் மார்க்சிய தத்துவத்தின் மைய அம்சமாகும், இது இரண்டிற்கும் இடையே உள்ள பிரிக்க முடியாத தொடர்பை வலியுறுத்துகிறது. எங்கெல்ஸ், டூரிங்கிற்கு தனது மறுப்பில், பொருளுடன் தொடர்புடைய இயக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறார். இயக்கம் இல்லாமல் பொருள் இருக்க முடியாது என்று அவர் வாதிடுகிறார், அதே போல், பொருள் இல்லாமல் இயக்கம் இருக்க முடியாது.

    இந்த கண்ணோட்டத்தின்படி, உலகில் உள்ள அனைத்தும் இயக்கம் மற்றும் மாற்றம் நிலையில் உள்ளன. பொருள் இயக்கத்தில் மட்டுமே உள்ளது, மேலும் இயக்கமே பொருளின் இன்றியமையாத பண்பு. ஒரு பொருள் பார்வைக்கு அசையாததாகத் தோன்றினாலும், அது ஒப்பீட்டளவில் சமநிலை நிலையில் உள்ளது, மேலும் ஏதேனும் மாற்றம் அல்லது மாற்றம் ஒரு புதிய இயக்க நிலையைக் குறிக்கிறது.

    இடப்பெயர்ச்சி, வெப்பம், இரசாயன எதிர்வினைகள் மற்றும் சமூக இயக்கங்கள் போன்ற பல்வேறு வகையான இயக்கங்கள் பற்றிய ஆய்வு தனி அறிவியல் துறைகளாக அணுகப்படுகிறது. இருப்பினும், தத்துவம் அனைத்து விஞ்ஞானங்களையும் உள்ளடக்கியது மற்றும் ஆய்வு செய்கிறது, அதை "அறிவியல் அறிவியல்" ஆக்குகிறது. மார்க்சிய தத்துவம் உட்பட தத்துவம், அனைத்து வகையான அறிவியல் இயக்கங்களையும் புரிந்து கொள்ளவும், பகுப்பாய்வு செய்யவும் முயல்கிறது.

    பொருளின் இயக்கம் பொருளின் உள்ளார்ந்த சொத்தாகக் காணப்படுகிறது, இது மற்ற நிறுவனங்களுடனான செயல்கள் மற்றும் எதிர்வினைகள் மூலம் நடைபெறுகிறது. இந்த இயக்கங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவை மற்றும் ஒன்றோடொன்று சார்ந்து, வெவ்வேறு வடிவங்களை உருவாக்கி, அடுத்தடுத்த வடிவங்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கின்றன. இயக்கத்தை உருவாக்கவோ அழிக்கவோ முடியாது; இது ஒரு தொடர்ச்சியான செயல்முறை.

    விஷயம் மனித உணர்விலிருந்து சுயாதீனமாக இருந்தாலும், அது நம் நனவில் பிரதிபலிக்கிறது. பொருள் உலகத்தைப் பற்றிய நமது கருத்தும் புரிதலும் பொருளின் புறநிலை யதார்த்தத்தால் பாதிக்கப்படுகிறது. பொருள் மாற்றங்களுக்கு உள்ளாகலாம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் நமது அறிவை விரிவுபடுத்தலாம் என்றாலும், அது மனித அறிவாற்றலிலிருந்து சுயாதீனமாக இருக்கும் ஒரு புறநிலை யதார்த்தமாகவே உள்ளது.

    மார்க்சிய தத்துவம், தெய்வீக சக்தியின் கருத்தை நிராகரித்து, பிரபஞ்சத்தின் பொருள் அடிப்படையை உறுதிப்படுத்துகிறது, கடவுள் பிரபஞ்சத்தை ஒன்றுமில்லாமல் படைத்தார் என்ற நேர்மறைவாத பார்வையையும் சவால் செய்கிறது. பொருளின் நிலைத்தன்மையை மறுத்து, மாற்றத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதன் மூலம், பொருள் ஒன்றுமில்லாத நிலையில் இருந்து வெளிப்படுவதில்லை அல்லது ஒன்றுமில்லாத நிலையில் மறைந்து வேறொன்றாக மாறாது என்று வலியுறுத்துகிறது.

    சுருக்கமாக, மார்க்சிய தத்துவத்தில் பொருள் மற்றும் இயக்கத்தின் கருப்பொருள் இரண்டிற்கும் இடையே உள்ள பிரிக்க முடியாத தொடர்பை எடுத்துக்காட்டுகிறது. பொருள் இயக்கத்தில் உள்ளது, மற்றும் இயக்கம் என்பது பொருளின் உள்ளார்ந்த சொத்து. இயக்கத்தின் பல்வேறு வடிவங்களின் ஆய்வு தனித்தனி அறிவியல் துறைகளாக அணுகப்படுகிறது, ஆனால் தத்துவம் அவை அனைத்தையும் உள்ளடக்கி ஆய்வு செய்கிறது. பொருள் என்பது மனித நனவில் பிரதிபலிக்கும் ஒரு புறநிலை யதார்த்தமாகும், மேலும் அதன் இருப்பு மற்றும் பண்புகள் மனித அறிவாற்றலைச் சார்ந்தது அல்ல.

    ReplyDelete