Sunday 4 December 2022

 ஆசீவகம் பற்றி உமா சக்கரவர்த்தி:-



“கி.மு. 6வது நூற்றாண்டில் மிகவும் தாக்கம் ஏற்படுத்திய கோட்பாடாக ஆசீவகர்களின் கோட்பாடு இருந்தது. மேலே குறிப்பிட்ட ஆறு தத்துவவாதிகளில் மூவரின் எண்ணங்களில் குறிப்பிடப்பட்ட ஆசீவக கோட்பாட்டின் மையக் கருத்தாக நியதி அல்லது விதி என்ற கொள்கை மீதான நம்பிக்கை இருக்கிறது. ஆசீவகத்தின் முழக்கமான 'ந- அத்தி புரிஸ்சாகரே' என்ற முழக்கத்தில் இதனைத் தொகுத்துக் கூறலாம்; மனித முயற்சிகள் பயனற்றவை என்று இதற்கு அர்த்தம்.

ஆழ்ந்த வெறுப்புணர்வு, ஒருவரின் விதியை கட்டுப்படுத்துவது அல்லது உருவமைப்பது என்பதில் மனிதனின் பயனற்ற தன்மை ஆகியவற்றை இந்தத் தத்துவத்தின் மேலாதிக்க குரல் பிரதிபலிக்கிறது. புதிய அடுக்கமைப்பு சமூகத்தில் உள்ள சில பகுதி மக்கள் மற்றும் தனிமனிதர்களின் கட்டுப்பாட்டிற்கு வெளியே மனிதனின் தலைவிதி உருவமைக்கப்படுகிறது என்று கருதப்பட்டது; புதிய அடுக்கமைப்பு சமூகத்தில், சமூகமோ, அரசரோ அல்லது வேறு எந்த நிறுவனமோ, அநீதி, ஒடுக்குமுறை, அரசியல் மற்றும் பொருளாதாரச் சுரண்டல் ஆகியவற்றிற்கு எதிராகப் பாதுகாப்பை வழங்க முடியாது. எனவே, ஆசீவக தத்துவத்தின் தன்மையாக உள்ள, பயனற்ற தன்மை தொடர்பான ஆழமான உணர்வு ஆச்சரியம் அளிக்கவில்லை.

மக்காளி கோசலாவின் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளோடு பயனற்ற தன்மை தொடர்பான ஆழமான உணர்வு

தொடர்புடையதாக இருக்கலாம்; மக்காளி கோசலாவின் பெயர் ஆசீவகக் கோட்பாடுகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டது. ஓர் ஆதாரத்தின்படி, மக்காளி ஓர் ஓடுகாலி அடிமை: சிறிது எண்ணெயை கைத்தவறி சிந்தியதால், எஜமானரின் கோபத்திற்குப் பயந்து, எஜமானரின் பிடியிலிருந்து தப்பி ஓடிவந்தவர்.  எல்லாவித சாகச முயற்சிகளிலும் தொடர் தோல்வி அடைந்த பிறகு, எருது ஜோடிகளை வாங்குவதில் வெற்றி பெற்றது தொடர்பான மற்றொரு நிகழ்வு மக்காளியோடு தொடர்புடையது (தனது சொந்தப் பண்ணையை அமைப்பதற்கான முன்நிபந்தனையாக எருது வாங்குவது இருந்தது; மற்றவர்களுக்காக உழைப்பது என்ற தளையிலிருந்து வெளிவர விரும்பும் ஒவ்வொருவரின் கனவாக இது இருந்தது) ஒரு நாள் எருதுகள் அறுத்துக்கொண்டு சென்றதில், அவை விபத்தில் கொல்லப்பட்டன. தலைவிதியின் சக்தி, விருப்பமின்மையின் அவசியம், நடவடிக்கையின்மையின் நன்மை ஆகியவற்றின்மீது நீண்ட உபதேசங்களை பிறகு மக்காளி கூறினார்.

இந்தக் கதையை ஆசீவக இனத்தின் தலைவரோடு பாஷாம் தொடர்புபடுத்தி, தனது பயிர்கள் அல்லது மந்தையின் இழப்பினால் வறுமையாக்கப்பட்ட விவசாயியின் கதறலை ஒத்ததாய் இதை இணைக்கிறார். இது போன்றே, புத்தரின் மற்றொரு சமகாலத்தவரான புராணா காஸாபாவும் தப்பி ஓடி வந்த அடிமை என்று விவரிக்கப்படுகிறார்; அவரது ஆசிரியத் தொழில் அவமானத்தில் முடிந்ததாகக் கூறப்படுகிறது; அதற்குப் பிறகு அவர் தற்கொலை செய்து கொண்டார்.

பொருளியல் சூழ்நிலைகளின் நிச்சயமின்மையும், ஒரு தனி மனிதனின் இருப்பில் அவற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதில் உள்ள அதன் போதாக்குறையும் இந்தக் கதைகளின் பொதுவான அம்சமாகும்.

நல்லவற்றிற்கும், தீங்கானவற்றிற்கும் இடையேயும், கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், சித்திரவதையாளர்கள் ஆகியோருக்கும். பிச்சை இடுபவர்கள், இதர நற்காரியங்களை செய்வோர் ஆகியோருக்கும் இடையேயும் எந்த வேறுபடுத்தல்களும் புத்தரின் சமகாலத்தவர்களான இந்த மூவரின் போதனைகளில் இருக்க வில்லை என்பது கூடுதலான முக்கியத்துவம் உடையது.

மக்காளி கோசலா கூறுவதாவது:

"வாழும் மனிதர்களின் பாவங்களுக்கு காரணங் களோ, அடிப்படையோ கிடையாது; காரணம் அல்லது அடிப்படை இல்லாமல் அவை தூய்மையாக மாறுகின்றன... ஒருவரின் எதிர்காலப் பிறப்புகளைப் பாதிக்கும் ஒருவராலோ, இதரர்களாலோ செய்யப்படும் செயல்கள் எதுவுமில்லை, இந்த வாழ்வில் ஒருவரது தலைவிதியைப் பாதிக்கும் மனித நடவடிக்கை, வலிமை, வீரம், மனித சகிப்புத்தன்மை அல்லது மனித சக்தி எதுவும் இல்லை. சுவாசம் பெற்றுள்ள எல்லா மனித உயிர்களுக்கும், பிறந்த எல்லாவற்றிற்கும், உயிர் உள்ள எல்லாவற்றிற்கும் சக்தி எதுவும் கிடையாது; தலைவிதியால் அவை வளர்க்கப்படுகின்றன... முதிராத கர்மாவை பழுக்க வைப்பது என்பதே கிடையாது; ஒழுக்கமான நடத்தையால், விரதங்களால், தவங்களால் அல்லது கற்பால் ஏற்கெனவே பழுக்க வைக்கப்பட்ட கர்மாவை காலிசெய்ய முடியாது; வீசியெறி யப்பட்ட நூல் பந்து போலவே, அதன் முழு நீளத்திற்கு விரியும்; எனவே முட்டாளும், புத்திசாலியும் தங்களது போக்கில் சென்று, துயரின் முடிவிற்கு வருவர்"

 கீழ்க்காணும்படி கூறும்போது, புராணா காஸணாபா மேலும் நேரடியாகக் கூறுகிறார்.

"ஒரு செயலைச் செய்பவரோ, செய்ய வைப்பவரோ, வாழ்க்கையை அழிப்பவரோ, திருடரோ, கன்னக்கோல் வைப்பவரோ, கொள்ளையரோ, நெடுஞ்சாலைக் கொள்ளையரோ, கலப்படக்காரரோ, பொய்யுரைப்பவரோ எந்தப் பாவமும் செய்யவில்லை. படுகொலை செய்தோ, முடமாக்கியோ, சித்திரவதை செய்தோ, படுகொலை செய்ய வைத்தோ, முடமாக்க வைத்தோ, சித்திரவதை செய்ய வைத்தோ, கங்கையின் தெற்குக் கரையில் இறங்குபவர், எந்தப் பாவமும் செய்யவில்லை; பாவம் அவரை அணுகுவதில்லை. அதே போன்றே, கங்கையின் வடக்கு கரையில் சென்றால், பிச்சை இட்டாலோ, யாகம் செய்தாலோ, அவருக்கு எந்தப் புண்ணியமும் வராது; புண்ணியம் அவரை அணுகாது'

 

பாகுதா காச்சாயனா ஒருபடி மேலே செல்கிறார்:

 

"எந்த மனிதரும் கொல்வதில்லை; கொல்ல வைப்ப தில்லை; கேட்பதில்லை; கேட்க வைப்பதில்லை; அறிவு தில்லை; அறிய வைப்பதில்லை. ஒரு மனிதன் மற்றவரின் தலையை கூர்மையான சுத்தி மூலம் வெட்டினாலும், அவரது உயிரைப் போக்கவில்லை; கத்தி வெட்டு ஏழு மூலகங்களுக்கு இடையே கடப்பதால் அவ்வாறு இருக்கிறது”

கூட்டாக, இந்த மூன்று தத்துவவாதிகளும் பிற்காலத்திய ஆசீவகத்தோடு தொடர்பு கொண்டுள்ளனர்; நீதிநெறி நடவடிக்கையின் பயனற்ற தன்மை என்ற ஆசீவக கோட்பாட்டின் முக்கியமான அம்சத்தை இது சுட்டிக்காட்டுகிறது.

ஒடுக்கு முறையும், மனிதர்கள் மீதான கொடுங்கோன்மையான கட்டுப்பாடும் அதிகமாக நிலவும் ஒரு சமூகத்தில், நீதிநெறியானது என்றும், அதர்மமானது என்றும் நடவடிக்கைகளை வகைப்படுத்துவது அர்த்தமற்றவையாகத் தோன்றுகின்றன. பலவிதமானவர்களுக்கும், வலிமையற்றவர்களுக்கும், மாற்ற திறனற்றதாக சூழ்நிலை தோன்றும்; அவர்களது நிலையை ஏற்கும் இந்த நிலைக்கு கொடுங்கோன்மையான அரசரும், நீதியின் தடுமாற்றங்களும் இருப்பது முக்கியமானது. பாவமும், குற்ற உணர்வும் மனித முயற்சி மீது நம்பிக்கை இருப்பவர்களிடம்தான் பதிவுகளை ஏற்படுத்தும்; ஒருவரின் தலை விதிக்கு உருக்கொடுக்க உண்மையான திறன் பெற்றவர்களிடம் தான் அத்தகைய பதிவு இருக்கும். ஒருவரது ஆக்கபூர்வ சூழ்நிலைகளை மாற்றுவதற்கான சாத்தியம் இல்லாத போது, தனிமனிதருக்கு வெளியே உள்ள கட்டுப்பாட்டு சக்திகளிடம் முழுமையாக அடிபணிவதன் மூலம் சமூக யதார்த்தத்தின் துயரத்தை தணிக்கும் வழியாக நியதியின் தப்ப முடியாத சக்தி உருவாக்கப்பட்டது.”

(பௌத்தத்தின் சமூக ததத்துவமும் சமத்துவமின்மைப் பிரச்சினையும்
அலைகள் வெளியீட்டகம்
-பக்கம் 23-26)

No comments:

Post a Comment