Monday 28 November 2022

(ஆசீவக ஊழைப் பற்றி) நியதிவாதம் - தர்மானந்த கோஸம்பி

“மக்கலி கோஸாலன் சம்சாரசுத்திவாதி, அதாவது நியதிவாதி.' அவன் சொல்கிறான்:-




"உயிர் தூய்மையற்று இருப்பதற்கு ஏதும் ஏது இல்லை, காரணம் இல்லை. ஏது இல்லாமலே, காரணம் இல்லாமலே உயிர்கள் தூய்மையற்றவை ஆகின்றன. உயிர்களின் தூய்மைக்கு ஏதும் ஏது இல்லை, காரணம் இல்லை. ஏது இல்லாமலே, காரணம் இல்லாமலே உயிர்கள் தூயவை ஆகின்றன.


தன் அறிவுத் திறமையால் ஒன்றும் உண்டாவதில்லை. பிறனுடைய அறிவுத்திறமையால் ஒன்றும் உண்டாவதில்லை. மனிதனுடைய அறிவாற்றலால் ஒன்றும் உண்டாவதில்லை. (எவனிடமும்) வல்லமை இல்லை. வீரியம் இல்லை, மனித ஆற்றல் இல்லை, மனிதப் பராக்கிரமம் இல்லை. எல்லாப் பொருள்களும், எல்லாப் பிராணிகளும், எல்லா பூதங்களும், எல்லா உயிர்களும் வசமற்று வலிமையற்று வீரியமற்று இருக்கின்றன. அவை நியதி (ஊழ்), சேர்க்கை, இயல்பு ஆகியவற்றினால் நிலைமாறி, ஆறினுள் ஏதாவது ஒரு சாதியில் (கூட்டத்தில்) இருந்து இன்ப துன்பங்களை நுகர்கின்றன.


அறிவாளிகளும் சரி, அறிவிலிகளும் சரி, இருவருமே எண்பத்து நான்கு லட்சம் மகாகற்பங்களாகிய வளையத்தில் சுற்றிச் சுழன்று செல்லத்தான் வேண்டும்; அதன் பிறகுதான் அவர்களின் துன்பம் அழியும். இன்ன சீலத்தினாலே, இன்ன விரதத்தினாலே, இன்ன தவத்தினாலே அல்லது பிரம்மசரியத்தினாலே நான் முதிராத கருமங்களை முதிரச் செய்துவிடுவேன், அல்லது முதிர்ந்த கருமல்களின் பயனை நுகர்ந்து அவற்றை அழித்துவிடுவேன் என்று ஒருவன் பேசினால், அது அவனால் ஆகும் செயலன்று.

இந்தச் சம்சாரத்தில் (உலகில்) இன்பதுன்பங்கள், படிகொண்டு அளக்கும் படியாக இவ்வளவு என்று நிச்சயமாக விதிக்கப்பட்டுள்ளன. அவற்றைக் குறைக்கவோ ஏற்றவோ முற்றும் தள்ளுபடி செய்யவோ முடியாது நூற்கண்டை எறிந்தால் நூல் முழுவதும் பிரியும் வரைக்கும் அது உருளுவதுபோல், அறிவாளிகளும் அறிவிலிகளும் சம்சாரச் சக்கரம் முழுவதையும் சுழன்று முடித்தால் தான் அவர்களின் துன்பம் அழியும்."


(பகவான் புத்தர்)
 

 

No comments:

Post a Comment