Tuesday 29 November 2022

ஆசீவகர்களின் தமிழ் நாட்டு வருகை - முனைவர் ர.விஜயலட்சுமி:-

 


“ஆசீவகர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள், இவர்களால் எங்கும் குறித்து வைக்கப்படவில்லை. இவர்களைப்பற்றி இன்று நாம் அறிந்து கொள்வதெல்லாம், பிறசமயத்தினர் இவர்களைக் கண்டித்துக்கூறும் பகுதிகள் வாயிலாகவே தெரியவருகின்றன.

இவர்கள் தமிழ் நாட்டிற்கு முதலில் எப்பொழுது வந்தனர் என்பது பற்றித் தெளிவான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும் இவர்கள் மௌரியர் காலத்தில் இலங்கையில் வாழ்ந்திருக்கின்றனர் என்பதைத் தேவநம்பியதீசனின் பாட்டனாரான பந்துகாபயன் “ஆசீவ கர்களுக்கு உறைவிடம்" (ajivikanam geham) ஒன்றை அநுராத புரத்தில் அமைத்திருந்தான் என்று மகாவமிசம் கூறுவதிலிருந்து அறியக் கூடியதாக இருக்கின்றது. அசோகன் காலத்தில் (கி.மு 270.) ஆசீவகர்கள் இந்திய நாட்டில் செல்வாக்குடையோராய் விளங்கியதை அவன் கல்வெட்டுகள் எடுத்துக் கூறுகின்றன. அசோகனின் தந்தையான பிந்துசாரன் காலத்திலேயே ஆசீவகர்கள் அரசனின் ஆதரவு பெற்றிருந்தனர்.

ஆசீவக சங்கங்கள் பௌத்தர்கள், சைனர்கள் போல் ஆங்காங்கு வேரூன்றியிருந்தனர். அசோகன் காலத்தில்,' கயாவிற்குப் பதினைந்து மைல் தொலைவிலுள்ள பாராபர் மலையில்27 (Barādar Hill) ஆசீவகர்களுக்கு நன்கொடை அளித்த செய்தி நான்கு குகைகளிற் குறிக்கப்பட்டுள்ளது.

வடநாட்டிற் செல்வாக்குற்றிருந்த ஆசீவகர்கள் குறிப்பாகத் தமிழ் நாட்டிற்கு எப்போது வந்தனர் என்பது பற்றித் திடமாகக்கூற முடியவில்லை, சந்திர குப்தமன்னனுட்பட பத்திரபாகுமுனி தலைமையில் சைனர்கள் சிரவணபெல்கோலாவிற்கு வந்தது போலவும், அசோக தூதர்கள் பெருமளவில் தமிழ் நாட்டிற்கு வந்தது போன்றும், ஆசீவகத்துறவிகள் தமிழ்நாட்டிற்குக் குழுவாக வந்தமைபற்றி எங்கும் அறிய முடியவில்லை. ஆனால் இந்திய இலக்கியங்கள் கூறும் செய்திகளின்படி ஆசீவகர்கள் வரலாற்றை நோக்கின் அவர்கள் வடநாட்டை விடத் தென்னாட்டில் மிக்க செல்வாக்குடன் வாழ்ந் திருக்கின்றார்கள் என்பது தெரியவருகின்றது.”

(தமிழகத்தில் ஆசீவகர்கள்- பக்கம்:30)

“ஊகத்தால் எழும் முடிவுகளை அடித்துக்கூறி விட்டால் மட்டும் போதாது. அவை குறுகிய காலத்துள் ஆட்டம் கண்டுவிடும். அப்போது உண்மைநிலை, ஊகம் எனும் போர்வையினின்றும் வெளிக் கொணரப்பட்டுவிடும்.”

(தமிழகத்தில் ஆசீவகர்கள்- பக்கம்:16)

No comments:

Post a Comment