Saturday 31 March 2018

முக்தியும் இந்தியக் கருத்துமுதல்வாதமும் - தேவிபிரசாத் சட்டோபாத்யாய


நமது தத்துவவாதிகளுக்குள்ளே ஒளிவு மறைவின்றிப் பேசும் கருத்துமுதல்வாதிகள்தான் விடுதலையைப் பற்றிய முரண்பாடற்ற ஒரு கருத்தை உருவாக்குவதில் வெற்றி கண்டவர்கள். அறிவின் தோற்றமும் இயல்பும் பற்றிய பண்டையச் சாத்திரங்களையும் இருத்தல் - உயிர் வாழ்தல் அதன் இயல்பு முதலியன பற்றிய பண்டைச் சாத்திரங்களையும் ஏற்றுக் கொண்டு வகுத்துக் கொண்ட நிலைக்கு முற்றிலும் பொருத்தமான கருத்தே அது. இந்த நிலை அடிப்படையில் எதிர்மறைத் தன்மை கொண்ட ஒன்று. இயற்கையைப் புரிந்து கொண்டு அதன் மூலம் இயற்கையை வென்று வசப்படுத்து வதற்கு மாறாக, இயற்கையின் நிஜத்தன்மையைக் குழிதோண்டிப் புதைப்பதிலேயே ஆர்வம் கொண்டது அந்தக் கொள்கை. ஆகவே, அவர்கள் விடுதலை பற்றிக் கொண்ட கருத்தும் சாராம்சத்தில் எதிர்மறையாகி விடுகிறது.

சொல்லளவில் உள்ள நுட்பங்களை உதறிவிட்டுப் பார்த்தால், நிஜமாகவே இல்லாத பந்தத்திலிருந்து விடுதலை பெறுதல் என்பதே அதன் பொருளாகிறது. பெளதீகமான இயற்கையில் தொடர்பும் பற்றுமின்றி, ஆத்மா என்று அவர்கள் கூறும் உணர்வும் பிறவும் இயற்கைக்குச் சிக்காமல் தப்பிப் பிழைப்பதே அது. இந்தப் பந்தமும் சிக்கலும் இயற்கையைப் போலவே இல்லாதவையே - அதாவது பொய்யானவை என்றும் கூறுகிறார்கள். பந்தமும் பாசமும் வெறும் போலியானவையும் பொய்யானவையும் தான். இவை அறியாமையால் உண்டானவை. அறிவு வந்தவுடன் அகன்று விடுகின்றன. இது ஒரு புதிர்போல் இருக்குமே என நினைத்து ஒரு உதாரணத்தால் விளக்கவும் முனைகின்றனர்.

நீண்ட கனவுக்குப் பின் விழித்தெழுவது போல் என்பதே அது. அவர்கள் நிலைக்கேற்ப - அவர்கள் கூறுவது மற்றொன்றும் உண்டு. கனவு என்ற உதாரணத்தைக்கூட அப்படியே உள்ளது. உள்ளவாறு ஏற்றுவிடக் கூடாது. விழிப்பில் ஏற்படும். அநுபவங்களையும் கனவைப் போலவே புரிந்துகொள்ள வேண்டுமாம் நாம், ஆகவே, விழிப்பு நிலையும் தற்காலிகமான பொருள் உடையது, அவ்வளவு தான் (அதுவும் பொய்யாம்). மிகவும் தீவிரமான எதிர் மறையாய் இருக்கும் அவர்களுடைய விடுதலை பற்றிய கருத்தும் சாதாரணமான பாஷை யால் விளக்கமுடியாத ஒன்று ஆகிவிடுகிறது. அதற்குச் சார்பான துணை ஏதாவது உண்டு என்றால் அது ஒரு வகை ரகசிய வாதம் ஆகிறது அவ்வளவுதான்.

விடுதலை பற்றிய கருத்தை ஏற்கும் நிலையில் கண்முன் உள்ள உலகத்தை மாற்றியமைக்கும் திட்டங்களோ ஆலோசனைகளோ அர்த்தமற்றவை ஆகின்றன. அதேபோல், சமுதாயத்தில் உழைப்பவர் களும், உழைக்காதவர்களும் - அடிப்படையில் உழைக்கும் வர்க்க மாகவும், உழைக்காமல் சும்மாவே காலந்தள்ளும் வர்க்கமாகவும் இருப்பதை மாற்றும் எண்ணங்களும் அர்த்தமற்று போய்விடுகின்றன. கடைசியில் அவையெல்லாம் பயணற்ற பேச்சுக்கள் என்று பண்டையச் சாத்திரம் கூறி அர்த்தமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுகின்றன. இவற்றிற்கு அவர்கள் கொள்ளும் அர்த்தம் இவையாவும் அவ்வப் போது உலகத்தில் உள்ள - வெறும் பேச்சுக்கு மட்டுமே பயன்படும் ஸம் விருதி ஸத்யம் - வியாவஹாரிக ஸத்யம் என்பதுதான். யதார்த்தத்தில் அதாவது பரம் ஸத்தியப் பார்வையில் பொய்யும் நிஜம் அல்லாதவையுமே, இப்படி உலக நிலையான உண்மையைக் குறுக்கிவிட்டுக் கருத்துமுல் வாதிகள் மிகவும் உயர்ந்த விஷயங் களையும் கூறுகிறார்கள். அத்வைத வேதாந்தத்தை உபதேசிப்பவர்களில் மிகவும் புகழ்பெற்ற பலர் உள்ளத்தை உருக்கும் செய்யுள்களைச் செய்திருக்கிறார்கள்.

மாஹாயாளிகள் அனைவரையும் விஞ்சுகிறார்கள். இந்த தாராளமான உபதேசத்தில் அவர்கள் அன்பும் கருணையும் பற்றி ஏராளமாகப் பேசுகிறார்கள். உலகில் உள்ள - புழு பூச்சி உட்பட எல்லா உயிர்களுக்கும் விடுதலை தருவதாகச் சூள் உரைக்கிறார்கள். மைத்ரீ, கருணா - அன்பும் நட்பும் தயையும் என்பதே அவர்கள் பாடும் பல்லவியாக அமைகிறது. இப்படிச் சூள் உரைப்பது கூட மிக உயர்ந்த ஞானத்தைப் பெறுவ வதற்கான பயிற்சிதான். இந்த ஞானத்தை அடைவதன் விளைவும் பயனும் என்ன தெரியுமா ? உலகம் முழுதும் - அதில் வாழும் அனைத்தும் வெறும் மனத்தோற்றமே தவிர நிஜமில்லை என்பதுதான். முன்னர் செய்து கொண்ட பிரதிக்ஞை - உயிர் வாழும் அனைத்தையும் விடுதலை பெறச் செய்யும் சூளுரை எதில் முடிகிறது ? நிஜமான உலகத்தில் துயரங்களுடன் வாழும் உயிர்களின் இருத்தல் - வாழ்தல் என்பதன் உண்மையான அர்த்தத்தையே அழித்து விடுவதில் முடிகிறது. ஏமாந்து போய் பிரமை கொண்டு நிற்கும் முட்டாள் களுக்குத்தான், அந்த அறிவிலிகளுக்குத்தான் அநுப வரீதியான செயல்கள் மிக்க வாழ்வில் அர்த்தம் காணமுடியும். அநுபவ உலகத்தை அறவே இல்லையென்று ஒதுக்காத வரை பரம் ஸத்தியத்தை அறிந்துணர இயலாது. ஆகவே, நிஜமான விடுதலை பெறுவதும் இல்லை. இருப்பதைவிட மேலான நலம் கொண்ட உலகத்தைப் படைத்தல் என்பதற்கு, ஒரு வெறும் மாயத் தோற்றம் என்ற எல்லைக்குட்பட்டுத்தான் அர்த்தம் இருக்க முடியும். இந்த மாயத்தை - வெறும் பிரமையான தோற்றத்தை அகற்றிவிட்டால் அதன் பிறகு முன்னேற்றி நன்கு வளர்ப்பதற்கு உலகம் எங்கே இருக்கும்?

ஆகவே, இயற்கையுலகத்தின் விஷயங்களில் தலையிட்டு உழல்வதற்குப் பதிலாக - வாழ முயல்வதற்குப் பதிலாகக் கருத்து முதல் வாதிக்கு அர்த்தமுள்ளதாகப்படுவது, தனது மனப்பாங்கை அவ்வாறு மாற்றிக் கொள்ளவதே ஆகிறது. ஆனால் தான் என்ற விஷயத்திற்கு புறப்பொருள் பற்றிய புதியதான தொடக்கம் என்பதன்று இதன் பொருள். ஏனென்றால் - புறப்பொருள் என்பது எங்கும் எப்போதும் இல்லை. விடுதலை என்பது ஒரு வகை உள்நோக்கிய பார்வையை - தன்னைத் தானே உட்புகுந்து பார்க்கும் நிலையைக் கொள்வது என்றே பொருள் படுகிறது. அந்த நிலையில், தான் என்பது வெறும் தானாகவே ஆகிவிடுகிறது. தன்னைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்று ஆகிவிடுகிறது. இன்னும் சரியாகச் சொல்வதானால் இந்தத் தான் என்ற தனக்கு விடுதலை என்றுகூட ஏதும் கிடையாது. தானே அதாவது ஆத்மாவேதான் மோக்ஷம் என்று ஆகிறது.

இதை வேதாந்திகள், பிரம்மத்தை அறிபவன் பிரம்மமே ஆகிவிடுகிறான் என்று கூறுவர். மேலும் தான் என்ற ஆத்மா எல்லா வற்றிற்கும் வெறும் சாட்சி மட்டுமே ஆகிறது. எதற்கு அது சாட்சி? அதுதான் எதையுமே பார்ப்பதில்லையே! இந்த ஞான நிலையில் சாட்சியான ஆத்மாவைத் தவிர அது பார்ப்பதற்கு வேறு எதுவுமே கிடையாது. (இதுதான் கைவல்யம்) தானான ஆத்மாவை தவிர வேறு எதுவுமே - காண, கேட்க, துய்க்க, சுவைக்க எதுவுமே கிடையாதாம்; கேவலம் என்பற்கு மட்டுமே' என்பதுதான் பொருள் (கேவலமான தன்மை - கைவல்யம்). இதுதான் சுத்தமான ஞானம் - அதை அறிதல் என்றும் கூறுகிறார்கள், அது ஞானமயமான ஆனந்தம் என்றும் கொள்கிறார்கள். அதிலும் இந்த ஞானம் என்ற அறிதலைத் தவிர அறிவதற்கு வேறு எதுவும் இல்லை; அத்வைதத்தைப் போற்றி புகழும் தற்காலத்து அறிஞர் ஒருவர்,' கூறுகிறார்; "இந்தப் பேரின்பத்தை அடைதல் இந்த வகையில் காணும்போது, முன்பே எய்தியிருந்ததை எய்துதல் என்பதுதான்; இந்த ஞானத்தை - ஞான சாரத்தை நம் பார்வையிலிருந்து மறைத்துக்கொண்டிருக்கும் திரையை அகற்றுவதே இது.

இந்த உருவாக்கத்தைக் கூட ஓர் அளவுக்குமேல் அதிகமாகக் கொண்டு விடக்கூடாது. திரையுமில்லை; ஒன்றுமில்லை. வக்கரித்துக் கொண்டு திரிந்துவிட்ட கற்பனையின் படைப்பே திரை. அதை அகற்றுதல் என்பது, விவரித்து விளக்க முடியாத வகையில் சாத்திரங்கள் கூறும் பெருஞ்சோதியை உலக வழக்கில் குறிப்பிடும் வகையில்தான் இந்த உருவம்; திரையகற்றல் என்பதன் பொருள் உலகத் தொடர்பான அனைத்தையும் இல்லை என மறுத்தல் என்பதே; இதை அவர்கள் உலக வழக்கில், ''மோக்ஷம் என்பது முன்பே எய்தியிருப்பதை எய்தல் என்றும் ஏற்கனவே தள்ளியதைத் தள்ளுதல்" என்றும் கூறுவர்.

ஒருவன் ஏதோ மனம் கலங்கிய நிலையில், தன் கழுத்தில் இருக்கும் அணியை, அது எங்கோ தொலைந்து போய்விட்டதாக நினைத்துக் கொண்டு துயரத்துடன் அதைத் தேடுகிறான்; திடீரென்று கழுத்தைத் தொட்டபோது அணி கழுத்திலேயே இருப்பது தெரிந்து விடுகிறது; உடனே மகிழ்கிறான்; உண்மையை கண்டதும் துயரம் அகன்று விடுகிறது; ஏதோ தொலைந்தது கிடைத்து விட்டதாகவே மகிழ்கிறான்; ஆனால் உண்மை என்ன? எற்கெனவே இருப்பதை மீண்டும் கண்டு கொண்டதுதானே இது! தான் பெற்றிருப்பதையே மீண்டும் பெறுவதுதானே இது? மற்றொருவன் ஒரு மலர் மாலையைப் பாம்பென்று பிரமையால் எண்ணி அஞ்சுகிறான்; பாம்பில்லையென்று தெரிந்து கொண்டதும் அச்சம் அகன்று விடுகிறது; பிரமை நீங்கியதால் அச்சமும் நீங்குகிறது; இது ஏற்கனவே ஒதுக்கியதை மீண்டும் ஒதுக்குவது; விலக்கியதை மீண்டும் விலக்குதல்; இல்லாத தை இல்லை எனக் கொள்வதுதான் இது; மோக்ஷமும் இப்படித்தான்; பிரம்மத்தை அறிந்து அடைதலே அது; பிரம்மம் சாசுவதமாகவே தன்னைத் தானே பெற்றுத்தான் இருக்கிறது: தற்காலிகமான மாயையால் உலகம் என்ற பிரமையால், ஏதோ இழந்துவிட்டதைப் போல் அதைத் தேட வேண்டி இருக்கிறது; அதே போலத்தான் அநுபவத்தில் உள்ள உலகத்தை விலக்குவதும், அது வெறும் மாயத் தோற்றம்தான்; ஆகவே, ஏற்கனவே அது இல்லையென்று நீக்கப் பட்டதுதான்; மோக்ஷ நிலையில் அது நீங்குவதும் அப்படித்தான்; முன்பே இல்லாத ஒன்று இல்லாமற்போகிறது அவ்வளவுதான்.

இவ்வாறு விடுதலை என்ற பிரச்சனையை தலை சுற்றும் சாத்திர உச்சிக்குக் கொண்டு செல்வதும், அதுதான் தூய இருத்தல் கைவல்யம் என்ற பேரின்பம் என்று ஆகிவிடுகிறது.
….
மேலே கூறயவற்றின் முக்கியமான சாரம் இதுதான்; உலகம் ஒரு மாயம்; இந்த மாயம் அறவே இல்லாமற்போவதே மோக்ஷம்; கருத்துமுதல்வாதிகள் அனைவருமே சாத்திரங்களைக் காட்டிப் பயமுறுத்துவது இதுதான். இதுதான் விடுதலையைச் சரியாகப் புரிந்து கொள்வதாம்; இதை அவர்கள் சொல்லும் வகை பயமும் வியப்பும் தருவதுடன் சில சமயம் உணர்ச்சிக் கொந்தளிப்பும் இருக்கும். அவர்கள் கூறுவதன் உள்ளடக்கமான விஷயம் பயமும் தரும்; ஊக்கத்தையும் தளரச் செய்து விடும் ; உலகத்திற்காகவோ உலகம் பற்றியதாகவோ செய்வதற்கு எதுவுமே இல்லை. தத்துவ சிந்தனையுடன் உலகினிடம் வெறுப்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். உலகம் வெறும் பொய்; வக்கரித்துத் திரிந்து போன மனம் படைத்தபொய்யே அது.

இப்படி உலகத்தைப் பற்றி வெளிப்படையாகவே காட்டும் அசிரத்தையின் மறுபுறம் இந்த உலகத்தை அப்படியே எதிலும் தலையிடாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற வாதமும் இருக்கிறது. நிஜமான ஆண்களும் பெண்களும் சமுதாயத்தில் இந்தச் சோம்பேறி களைக் கொழுக்க வைப்பதற்காகவே மட்டும் உழைத்து ஓடாக வேண்டும் என்பதற்காகவே உலகம் பொய் என்ற சாக்குப் போக்கும் சமாதானமும் யாவும் எப்போதும் முன்பு இருந்தபடியே இருப்பதே சட்டம் என்று பேசுவதும் வேண்டியதாயிற்று; ஏனெனில், இதுவே வர்ணாசிரம முறைச் சமுதாயத்தின் இயல்பான கொத்தடிமைத் தனம்.

இதை அரசியல் வகையில் காப்பாற்றியவர்களான - மனு முதலிய சட்டம் இயற்றியவர்கள், விடுதலை பற்றிய இந்தக் கொள்கை சமுதாயத்தில் நன்கு பயன்படுமென்று எளிதில் கண்டு கொள்ள முடிந்தது; இந்த எண்ணத்தை எல்லாருக்கும் ஊட்டி வளர்த்துவிட்டால் பாமர மக்கள் அனைவரையும் சர்வதிகாரத்திற்கும் கொடுங்கோன்மைக்கும் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் வறுமைக்கு இரையாக்கவும், இதை அவர்கள் தலை நிமிர்ந்து ஏன் என்று கேட்டுத் தடுக்காத வகையில் அடக்கியும் ஆளலாம் என்று நம்பினார்கள்; அவர்கள் தத்துவ சாத்திரம் கூற வந்தவர்கள் அல்லர்; ஆயினும் மனு முதலியவர்கள் கருத்துமுதல் வாதிகளின் இந்த மோக்ஷக் கொள்கையையே உயர்த்தி உரத்த குரலில் கூறுகிறார்கள்.' மனுகூறுவது: "பல தர்மங்களைக் கூறியுள்ளோம்; அவற்றில் மிகச் சிறந்ததும், மிக உயர்ந்த ஆனந்தத்தை மனிதர்க்குத் தர வல்லதும் எது ? ஆத்ம ஞானமே அவற்றுள் மிகச் சிறந்தது; நற்பயன் தருவது; அதுவே மனிதன் பெறத்தக்க கல்வி யறிவுகளில் மிக உயர்ந்தது ; அதனால்தான் மனிதன் மரணமற்ற அம்ருத நிலையை எய்த இயலும்; ஆத்மாவுக்காகவே எல்லாவற்றையும் செய்பவனும் அனைத்துப் பொருள்களிலும் ஆத்மாவைக் காண்பவனும் ஆத்மாவிலேயே அனைத்தும் இருப்பதைக் காண்பவனும் மிக உயர்ந்த ஆற்றல் உடையவனாகிறான்.
(இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும்
அழிந்தனவும் - பக்கம் 636 – 639 & 642 - 643)



No comments:

Post a Comment