Sunday 26 August 2018

உழைப்பு


இயந்திரமோ, கச்சாப்பொருளோ தானாகவே எதையும் உற்பத்தி செய்திட முடியாது. அதில், மனிதனது உழைப்பு நடவடிக்கை செலுத்தும் போதுதான் உற்பத்தி நடைபெறுகிறது. உழைப்பு என்பது இயற்கையிடமிருந்து கிடைக்கும் பொருட்களை, மனிதத் தேவைகளை நிறைவு செய்ய முற்படும் நடவடிக்கையாகும்.

மனிதயினம் தமக்குத் தேவையான வாழ்க்கைச் சானதங்களை உற்பத்திச் செய்துகொள்கிறது, இதுவே விலங்கினத்திடமிருந்து மனிதயினத்தைப் பிரித்துக் காட்டுவதாக இருக்கிறது.

உழைப்பு ஒருவகையில் மனிதனையே படைத்தது எனலாம். மனிதன் உழைப்பில் ஈடுபடும்போது திறமையும் தேர்ச்சியும் பெறுகிறான். உழைப்பு செற்பாட்டில் புதுப்புது மேம்பாட்டை புகுத்துகிறான்.

உழைப்பைப் பற்றி மார்க்ஸ்  மூலதனத்தில்  எழுதுகிறார்:-
உழைப்பு என்பது, முதலாவதாக, மனிதனும் இயற்கையும் பங்குபெறுகிற, மனிதன் தனக்கும் இயற்கைக்கும் இடையிலான பொருளாயதப் பிரதிச் செயல்களைத் தானாகவே தொடங்கி, முறைப்படுத்தி கட்டுப்படுத்துகிற நிகழ்முறையாகும். மனிதன் இயற்கையின் சக்திகளில் தானும் ஒருவன் என்ற முறையில் தன்னையே இயற்கைக்கு எதிராக நிறுத்திக் கொள்கிறான். இயற்கையின் உற்பத்திகளைத் தன் சொந்தத் தேவைகளுக்குத் தகவமைந்த வடிவத்தில் தனதாக்கி கொள்ளும் பொருட்டு, தோளையும், காலையும், தலையையும், கையையும் அதாவது தன் உடலின் இயற்கைச் சக்திகளை இயங்கச் செய்கிறான். புறவுலகின் மீது இவ்வாறு செயல்பட்டு, அதனை மாற்றுவதன் மூலம் அவன் அதே நேரத்தில் தனது தன்மையையும் மாற்றிக் கொள்கிறான்.

..... முழுக்க முழுக்க மனிதனுக்கே உரியதான உழைப்பு வடிவத்தையே நாம் மனத்தில் கொண்டுள்ளோம். ஒரு நெசவாளரின் செயல்முறைகளை ஒத்தவற்றை சிலந்தி செய்திடுகிறது. கட்டக் கலைஞர்கள் பலரும் வெட்கித் தலைகுனியும் படி தேனீ, தேன் கூட்டை அமைத்திடுகிறது. ஆனால், கட்டடக் கலைஞர் தன் கட்டட அமைப்பை எதார்த்தத்தில் எழுப்பு முன்பே மனத்தில் எழுப்பிக் கொண்டு விடுகிறார், படுமோசமான கட்டடக் கலைஞரையும் தலைசிறந்த தேனீயிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவது இதுவே.

உழைப்பு நிகழ்முறை ஒவ்வொன்றின் முடிவிலும் கிடைக்கும் விளைவு, அந்நிகழ்முறையின் தொடக்கத்திலேயே உழைப்பாளியின் மனத்தில் இருந்ததுதான். அவர் தாம் வேலை செய்கிற மூலப் பொருளில் வடிவ மாற்றத்தை உண்டாக்குவதோடு தமது குறிக்கோளையும் நிறைவேற்றிக் கொள்கிறார்.

இந்தக் குறிக்கோள் அவரது வேலை முறையின் நெறியை நிர்ணயிக்கிறது. அவர் இக் குறிக்கோளுக்குத் தமது சித்தத்தைக் கீழ்ப்படுத்திக் கொண்டாக வேண்டும். இப்படிக் கீழ்ப்படுத்துவது கண நேரத்துக்கு மட்டுமான செயலன்று. உடல் உறுப்புகளை வருத்திக் கொள்வதன்னியில், வேலையின் போது ஆரம்பம் முதல் கடைசி வரை உழைப்பாளியின் சித்தம் அவரது குறிக்கோளுக்குத் தொடர்ந்து இசைவாயிருப்பதையும் நிகழ்முறை அவசியமாக்குகிறது, வேலையில் உன்னிப்பாய் கவனம் செலுத்த வேண்டும் என்பது இதன் பொருள்.
(மூலதனம் தொகுதி 1 பக்கம் 244-245)

No comments:

Post a Comment